ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் இன்று பரபரப்புடன் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது அவர் கே.பி.முனுசாமி அதிமுக நிர்வாகி சீட் பெற பணம் கேட்டதாக புகார் அளித்தார். அது போல் வரும் சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட தன்னிடம் ரூ 1 கோடி பேரம் பேசிய ஆடியோவையும் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ளார்.
அந்த ஆடியோவில் பேசும் நபர் அண்ணே வணக்கம் நான் கிருஷ்ணமூர்த்தி என்கிறார். அதற்கு எதிர்முனையில் பேசும் நபர் கே.பி. முனுசாமி என ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார்.சொல்லுமா என்கிறார். அதற்கு எதிர்முனையில் பேசிய நபர் 50 ரெடி செய்துவிட்டேன். அதை 11 மணிக்கு கொடுத்துவிடுகிறேன். மீதமுள்ள 50ஐ மாலைக்குள் ரெடி செய்கிறேன், தற்போது முதல் 50 பணத்தை எங்கே கொண்டு வரட்டும் என கேட்டார். அதற்கு முனுசாமி என சொல்லப்படும் நபரோ நான் என் மகனை அனுப்புகிறேன். அவரிடம் கொடுத்துவிடு என்கிறார்.
இந்த ஆடியோவை கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களுக்கு போட்டு காண்பித்தார். மேலும் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில் கே.பி. முனுசாமி ஓபிஎஸ் கட்சிக்கு என்ன செய்தார் என கேட்கிறார். ஆனால் இந்த ஆடியோ மூலம் கே.பி .முனுசாமி பணத்திற்காகவும் அவரது குடும்பத்திற்காகவும் மட்டுமே உழைப்பவர் என தெரியவந்துவிட்டது. இதை தொண்டர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால்தான் நான் இந்த ஆடியோவை வெளியிட்டேன். அவர் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லாவிட்டால் அவர் குறித்த வீடியோவையும் வெளியிடுவேன், அது போல் தங்கமணி, வேலுமணி குறித்த வீடியோவையும் வெளியிடுவேன் என தெரிவித்துள்ளார். எனினும் இந்த ஆடியோவின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்படவில்லை.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி விளக்கம் அளித்துள்ள கே.பி.முனுசாமி, “கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டது எனது குரல்தான்” என கூறியுள்ளார். ஆனால் தேர்தல் செலவுக்காக கடனாக பணம் கேட்டதை தவறாக திரித்து கூறுவதாகவும், ஆடியோ, வீடியோ எதை வெளியிட்டாலும் பயப்படப் போவதில்லை என்றும் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவு அரசியல் அரங்கில் தொடர்ந்து பேசும்பொருளாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் கட்சி தலைமைக்காக சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ள நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி எடப்பாடி பழனிசாமி அறிவித்த வேட்பாளர் தென்னரசு போட்டியிடுகிறார்.
தேர்தல் முடியும்வரை இரு தரப்பினரும் அமைதியாக இருப்பார்கள் என்று தொண்டர்கள் நினைத்தனர். ஆனால் இரு தரப்பினரும் தொடர்ந்து கருத்து மோதலில் ஈடுபடுகின்றனர். சமீபத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசாரம் செய்வது தொடர்பாக, எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் கே.பி.முனுசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்தார். சாதாரண தொண்டன் போன்று ஓ.பன்னீர்செல்வத்தால் உண்மையாக உழைக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இன்று செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள கே.பி.முனுசாமி மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறியதுடன், அவர் தொடர்பான ஒரு ஆடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இனி அடுத்து என்ன நிகழப்போகின்றது என அரசியல் பிரமுகர்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.





