
மயிலாடுதுறையில் தருமபுரம் அதீனத்தால் கட்டித் தரப்பட்ட மகப்பேறு மருத்துவமனை இடத்தை அபகரிக்க சதி நடப்பதாக இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தால் கட்டித் தரப்பட்ட மகப்பேறு மருத்துவமனை இடிக்கப்படாது என்ற நகராட்சி ஆணையரின் கடிதத்தை தொடர்ந்து, உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அறிவித்தார்.
மயிலாடுதுறை, சின்னக்கடை வீதியில் பொதுமக்களின் மருத்துவ வசதிக்காக, தருமபுரம் ஆதீனம் சார்பில் இலவச மருத்துவமனை கட்ட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, 24வது குருமஹா சன்னிதானம் சண்முகதேசிக சுவாமிகள், 1943ல் அப்போதைய கவர்னரை அழைத்து பூமி பூஜை செய்தார். கட்டுமான பணிகள் முடிந்து, 25வது குருமஹா சன்னிதானம், 1951ல் இலவச மருத்துவ சேவையை துவக்கி வைத்தார். மயிலாடுதுறை நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் அதிகளவில் சிகிச்சை பெற்றனர். முக்கியமாக மகப்பேறு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர், நகராட்சி நிர்வாகத்திடம் மருத்துவமனை ஒப்படைக்கப்பட்டு, 25 ஆண்டுகளுக்கு மேல் பராமரிக்கப்பட்டு வந்தது. கட்டடம் சிதிலமடைந்ததை அடுத்து கூறைநாடு பகுதியில் நகர ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு, அங்கு இடமாற்றம் செய்யப்பட்டது. சண்முக தேசிக சுவாமிகள் இலவச மருத்துவமனை கட்டடம் மூடப்பட்டு பயன்பாடு இல்லாமல் இருந்து வருகிறது.
உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தினால் அந்த கட்டடம் பழுதடைந்தது. இதனையடுத்து அந்த கட்டடத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தருமபுரம் ஆதினத்தின் 27 வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்யா சுவாமிகள் சார்பில் நகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கு பதில் வராத நிலையில் அந்த கட்டடத்தை இடிக்கப் போவதாக தகவல் வந்தது. இதனையடுத்து முன்னார் அமைத்த நினைவு அமைப்பை சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து காப்போம். என ஆதினம் கூறியிருந்தார்.
இதன் பிறகு அந்தக் கட்டடம் இடிக்கப்படுவது நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது, கட்டடத்தை நகராட்சி நிர்வாகம் இடிக்கப்போவதாக தகவல் வெளியானதால் தருமை ஆதீனம் கோபம் அடைந்தார். இலவச மருத்துவமனையை இடிப்பதை கண்டித்து, ”உயிர் போகும் வரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்,” என, நேற்று தருமபுரம் ஆதீனம் நேற்று அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று மகப்பேறு மருத்துவமனை இடிக்கப்படாது என்ற நகராட்சி ஆணையரின் கடிதத்தை தொடர்ந்து, உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அறிவித்தார்.
முன்னதாக, மயிலாடுதுறையில் பழமையான இலவச மகப்பேறு மருத்துவமனையை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தருமை ஆதீனம் உண்ணாவிரத அறிவிப்பு வெளியிட்டார். முன்னோர்கள் கட்டிய இலவச மகப்பேறு மருத்துவமனையை சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து காப்பேன் என்றார் தருமை ஆதீனம் 24ஆவது சந்நிதானத்தால் அடிக்கல் நாட்டப்பட்டு 25ஆவது சந்நிதானத்தால் திறக்கப்பட்ட மருத்துவமனையை இடிக்க எதிா்ப்பு தெரிவித்தார்.
தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டிக்கொடுக்கப்பட்ட மருத்துவமனை அரசின் வசம் முன்னதாகவே ஒப்படைக்கப்பட்டது. தற்போது பழைய கட்டிடத்தில் மருத்துவமனை செயல்படாத நிலையில் அதனை இடித்து புதிய கட்டிடம் கட்ட அரசு முயற்சிப்பதாக தகவல் வெளியானது. முன்னோா்கள் நினைவாக உள்ள பழமையான கட்டிடத்தை இடிக்கக் கூடாது என தருமபுரம் ஆதீனம் 27ஆவது சந்நிதானம் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், தருமபுரம் ஆதீனத்தின் குரலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாஜக., முன்னாள் மாநிலத் தலைவர் கு.அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டதாவது…
மயிலாடுதுறையில், தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில், கடந்த 1951- ஆம் ஆண்டு அன்றைய சென்னை மாகாண முதல்வர் திரு. குமாரசாமிராஜா அவர்களால் திறந்து வைக்கப்பட்ட மருத்துவமனை, கடந்த சுமார் 60 ஆண்டுகளாக, ஆதீனம் சார்பாக, பொதுமக்களுக்கு இலவச மருத்துவச் சிகிச்சை வழங்கி வந்துள்ளது. பின்னர், நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, நகராட்சி இலவச மகப்பேறு மருத்துவமனையாகச் செயல்பட்டு வந்திருக்கிறது.
இந்த நிலையில், மயிலாடுதுறை நகராட்சியின் பராமரிப்பின்மை காரணமாக, கடந்த சுமார் ஏழு ஆண்டுகளாகச் செயல்படாமல் இருந்த மருத்துவமனையில் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம், பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி புதிய குப்பை நுண்ணுயிர் கிடங்கை, நகராட்சி நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. தற்போது நுண்ணுயிர் கிடங்கும் செயல்படாமல், குப்பைகள் குவிந்து அப்பகுதியே சுகாதார சீர்கேடாகக் காணப்படுகிறது.
தருமபுரம் ஆதீனம் சார்பாக, தாங்கள் உருவாக்கிய மருத்துவமனையை, மீண்டும் ஆதீனமே பராமரித்து நடத்த, நகராட்சிக்குக் கடிதம் எழுதியும், நகராட்சி சார்பில் எந்த பதிலும் அளிக்காமல், கடந்த 2023 ஆம் ஆண்டு, மருத்துவமனை கட்டிடத்தை இடிக்கவிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இதற்கு, தருமபுரம் ஆதீனம் மற்றும் தமிழக பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பேசாமல் இருந்த மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம், தற்போது மீண்டும் மருத்துவமனை கட்டிடத்தை இடிக்கவிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. வணக்கத்திற்குரிய தருமபுரம் ஆதீனம் அவர்கள், இதனைக் கண்டித்து, சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
பொதுமக்கள் நலனுக்காக, தருமபுரம் ஆதீனம் தொடங்கிய இலவச மருத்துவமனையைக் கைப்பற்றி, அரசின் கையாலாகாத்தனத்தால் இன்று அதன் நோக்கத்தையே சிதைத்து, குப்பைமேடாக ஆக்கி வைத்திருக்கிறது மயிலாடுதுறை நகராட்சி.
முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்களே. உங்களுக்குக் குப்பைமேடு அமைக்க வேண்டுமென்றால், உங்கள் கட்சிக்காரர்கள் ஆக்கிரமித்து வைத்திருக்கும் அரசு புறம்போக்கு நிலங்களை மீட்டு, அதில் அமைத்துக் கொள்ள வேண்டும். தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான இடத்தில் அமைந்திருக்கும் மருத்துவமனைக் கட்டிடத்தை இடித்துவிட்டு, அதில் குப்பைமேடு அமைக்க முடிவெடுத்திருப்பது, உங்கள் அரசின் வழிப்பறி.
திமுக அரசு, கோவில் சொத்துக்களையும், ஆதீன சொத்துக்களையும் அத்துமீறி ஆக்கிரமிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறேன். மயிலாடுதுறை இலவச மருத்துவமனை அமைந்திருக்கும் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான இடத்தை, உடனடியாக தருமபுரம் ஆதீனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான மருத்துவமனை நிலத்தை நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிக்கும் முயற்சி என்று, இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கண்டனம் வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது…
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சுமார் 2 ஏக்கர் நிலத்தில் 1951ம் ஆண்டு மருத்துவமனை திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நாளைடைவில் இந்த மருத்துவமனையை நகராட்சி நிர்வாகம் நடத்தி வந்தது. பின்னாளில் மயிலாடுதுறை நகராட்சியின் பராமரிப்பின்மை காரணமாக அந்த மருத்துவமனை மூடப்பட்டு மயிலாடுதுறை நகராட்சி குப்பை பிரிக்கும் கூடமாக மாற்றப்பட்டது. பொதுமக்கள் எதிர்ப்பை தொடர்ந்து குப்பை பிரிக்கும் கூடமும் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் தருமபுரம் ஆதீனம் சார்பில் மேற்படி இடத்தில் மருத்துவமனையை புதுப்பித்து ஆதீனம் சார்பில் நடத்த அனுமதி கோரப்பட்டது ஆனால் தமிழக அரசு அனுமதி அளிக்காமல் நகராட்சி நிர்வாகம் பேரில் மடத்தின் இடத்தை ஆக்கிரமிக்க கைப்பற்ற முயற்சிகள் மேற்கொண்டு வந்தது.
2023 ஆம் ஆண்டு அந்தக் கட்டடத்தை இடிக்கப் போவதாக நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வழங்கியது அப்போதே தருமபுரம் ஆதீனம் அவர்கள் அதனை எதிர்த்து கடும் கண்டனங்களை பதிவு செய்த பின்பு அந்த முயற்சியை தமிழக அரசு கைவிட்டது.
தற்போது மீண்டும் அந்த இடத்தில் மயிலாடுதுறை நகராட்சி சார்பில் கட்டிட பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு முயன்று வருகிறது. இந்நிலையில் நேற்று தருமபுரம் ஆதீனம் அவர்கள் மிகுந்த மன வேதனையோடு ஆதீனத்திற்கு சொந்தமான அந்த இடத்தை கைப்பற்ற முயற்சித்தால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். இது தமிழக மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் இந்து விரோத தமிழக அரசு இந்து ஆலயங்களை இடிப்பதிலும் இந்து மடங்களுக்கு சொந்தமான இடங்களை கைப்பற்றுவதிலுமே முனைப்பாக இருந்து வருகிறது.
ஆன்மீகப் பணிகளை மேற்கொண்டு வரும் மடாதிபதிகளே கூட போராடும் அளவிற்கு தமிழக அரசு இந்து மத நிறுவனங்களை அதன் சொத்துக்களை அபகரிக்க முயற்சித்து வருவது கடும் கண்டனத்திற்குரியதாகும்.
தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான மேற்படி இரண்டு ஏக்கர் நிலத்தை ஆதீனத்திடமே ஒப்படைத்து அங்கு தருமபுரம் ஆதின நிர்வாகம் சார்பில் மருத்துவமனை செயல்பட தமிழக அரசு உரிய அனுமதி வழங்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது நகராட்சி நிர்வாகம் என்ற பெயரில் தர்மபுரம் ஆதீன இடத்தை அபகரிக்க முயற்சி செய்தால் தருமபுரம் ஆதீனம் அவர்கள் நடத்தும் அறப்போர் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள இந்துக்களை ஒன்று திரட்டி இந்து முன்னணி உறுதுணையாக நிற்கும் என தெரிவித்துக் கொள்கிறேன்





