புலி வருது புலி வருது என்று பூனையைப் பார்த்து விட்டு கத்திக் கொண்டே ஓட்டம் பிடித்த விமான நிலைய ஊழியரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காட்டுப் பூனை ஒன்று தான், ஹைதராபாத் சம்ஷாபாத் விமான நிலைய ஊழியரை இப்படி வியர்க்க விறுவிறுக்க பிடறி தெறிக்க ஓட வைத்தது. பூனையைப் பார்த்து விட்டு, சிறுத்தைப் புலி என்று எண்ணி ஊழியர் அப்படி ஓட்டம் ஓட்டமாக ஓடினாராம்!
புலி குறித்த செய்தி கிடைத்த உடனே வனத்துறை அதிகாரிகள் மற்றும் வன விலங்கு சரணாலய ஊழியர்கள் களத்தில் இறங்கினர். 3 மணி நேரம் சல்லடை போட்டுத் தேடி, போராடி அதனை சிறைப் பிடித்தனர்.
ஆனால் அது புலியல்ல. காட்டுப் பூனை என்று அதிகாரிகள் கண்டறிந்த பின்னரே… அனைவருக்கும் அப்பாடா என்று உயிர் வந்தது.
சம்ஷாபாத் விமான நிலைய ஏரோ டவர்ஸ் அருகில் நடந்த இந்தச் சம்பவம் ஊடகங்களில் பெரும் சுவாரஸ்யமாக பகிரப் பட்டது.