
தமிழ் திரையுலகில் அடுத்தடுத்து நிகழும் பிரபலங்கள் மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை இரண்டு கலைஞர்கள் மறைந்தார்கள். சனிக்கிழமை ஒருவர்.தொடர்ந்து இன்றும் ஒருவர் மறைவுசெய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு திரையுலகை உச்சத்திற்கு கொண்டு சென்றவர் இயக்குனர் நடிகர் கே.விஸ்வநாத். சங்கராபரணம் படம் மூலம் பல சாதனைகள் நிகழ்த்தியவர். கமலஹாசனின் நடனத்திறமையை சலங்கை ஒலியில் முழுமையாக கலை நயம் மாறாமல் வெளிப்படுத்தியவர். தாதாசாகேப் பால்கே விருது பெற்றவர். தமிழில் நடிகராகவும் முத்திரை பதித்தவர் கே.விஸ்வநாத்.
இவர் மறைவு செய்தி பெரிய சோகத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் நெல்லை சீமையில் பிரபலமான நடிகர் ஒருவர் மரணம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.

பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த நலிவடைந்த கிராமியக் கலைஞரான நெல்லை தங்கராஜ் மை அவ்வளவு சீக்கிரம் மறந்து விடமுடியாது.படத்தில் இவரை காட்சிப்படுத்திய கால அளவு குறைவு என்றாலும் நெஞ்சை பதரவைக்கும் அளவுக்கு அவரது நடிப்பு எதார்த்தமாக இருந்தது.அவரது நடிப்பு ஒரு நல்ல அறிமுகமாக அமைந்தது. தமுஎகச அமைப்பு “நாட்டுப்புற கலைச்சுடர்” விருதை அவருக்கு வழங்க முடிவு செய்த போது தகவல் தெரிவிக்க அவரிடம் அலைபேசி கூட இல்லை. நேரில் சென்ற தமுஎகச மாநிலத் தலைவர்களில் ஒருவரான நாறும்பூநாதன் அவர் வீட்டிற்குச் சென்ற போது மின்சார வசதியில்லா குடிசை வீடு என்ற நிலையை அறிந்தார்.
நெல்லை மாவட்ட ஆட்சியரின் உதவியோடு தமுஎகச முயற்சியில் அவருக்கு ஒரு வீடு கட்டித்தரப்பட்டது. பாவம் ஒரு வருடம் கூட அவரால் அந்த வசந்தத்தை அனுபவிக்க முடியவில்லை. வெள்ளிக்கிழமை மறைந்து விட்டார்.
நள்ளிரவிலும் தூக்கம் வராமல் தவித்த விழிகளை தன் வசீகரிக்கும் குரலால் தாலாட்டு பாடி துயிலுரங்க வைத்தவர் பின்னணி பாடகி வாணி ஜெயராம் . என அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்ட போது எழுதி பத்து நாட்கள் கூட முடியவில்லை. அந்த விருதைப் பெறுவதற்குள் அவர் மறைந்து விட்டார்.
இந்த மூவரின் மறைவு நெஞ்சை விட்டு நீங்காத நிலையில் இன்று பிரபல திரைப்பட இயக்குனரும், நகைச்சுவை நடிகருமான டி.பி.கஜேந்திரன்(68) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள இல்லத்தில் இன்று காலமானார்.

இயக்குநராக மட்டுமின்றி 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடிகராகவும் முத்திரை பதித்தவர் டி.பி.கஜேந்திரன். பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன், உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார்.
நேற்று முன்தினம் இருவர் நேற்று பாடகி வாணிஜெயராம் உயிரிழந்த நிலையில் இன்று இயக்குனர் டி.பி.கஜேந்திரன் மறைவால் திரையுலகினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.




