விஜய் நலத்திட்ட உதவி எனும் பெயரில் இலவசங்களைக் கொடுப்பது முறையா?

Published:

sarkar banner - 2026

பொதுவாக… இலவசங்களுக்கு எதிரானவன் நான். அரசின் இலவசங்களைப் பெறுவதில் எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. தேவைகள் அதிகம் இல்லாத ஒரு தனி மனிதன் என்ற காரணத்தாலும் இருக்கலாம்!

ஆனால்… இந்த இலவசங்கள் குறித்த சர்ச்சை இப்போது எழுந்துள்ளதால்… சில கேள்விகள்!

அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக இலவசங்கள் அறிவிப்பது… மிக்ஸி, கிரைண்டர், ஃபேன், டிவி, லேப்டாப், சைக்கிள் இப்படி பொருள்கள் வழங்குவது… இலவச வேஷ்டி சேலை வழங்குவது எல்லாமே… பட்ஜெட்டில் ஏறிவிடும்.

இன்று இலவச பொருள்கள் குறிப்பாக மின் சாதனப் பொருள்கள் காயலான் கடைக்கு வந்தாச்சு. பலவும் வெளி மாநிலங்களில் குறைந்த விலைக்கு விற்கப் பட்டுள்ளன. சைக்கிள்கள் வேறு நபர்களுக்கு விற்கப் பட்டுள்ளன. சொல்லப்போனால்.. சாராயம் குடிக்க மகன் அல்லது மகளின் தந்தையே அவற்றை விற்பனை செய்த கொடுமைகளும் நடந்துள்ளன. டிவி.,க்கள் பல இப்போது சமாதியாகிவிட்டன.

இவை எல்லாமே, ஒருவனின் சுயமரியாதையை சீண்டிப் பார்ப்பவைதான்!

இலவச அரிசி, மானிய சர்க்கரை, பருப்பு என ரேஷன் கடைகளை எடுத்துக் கொண்டால்… ஒரு ரேஷன் கடையில் சுமார் ஆயிரம் குடும்ப அட்டைகள் கணக்குக்கு எடுத்துக் கொண்டால்… 20 ஆயிரம் கிலோ அரிசி. அதற்கு ஒரு கிலோ ரூ. 5க்கு வாங்கிக் கொண்டிருந்தார்கள். மீதம் மானியம். அந்த ரூ.5ஐயும் நீக்கி, ஒரு லட்சம் ரூபாய் ஒரு கடைக்கு என்று எடுத்துக் கொண்டால்.. ஒரு அதிகாரியின் மாதச் சம்பளத்தை கட் செய்தால் போதுமானது… விலையை ஈடுகட்டி விடலாம். என்ன கணக்கோ… ஆயிரம் குடும்பங்களின் ஓட்டு ‘இலவச அரிசி’ வழங்கியவருக்கு வந்துவிடுகிறது.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

திட்டம் அவர்கள் போடுவது. பணம் என்னவோ அனைவரின் ஒட்டுமொத்த வரிப்பணம்தான்!

இது போல் குடும்ப அட்டைதாரர், ஏழைகளுக்கான உணவுப் பங்கீடு.. இதோட இலவசங்கள் நிறுத்தப் படுவது… கலர் அட்டைகளுக்கு இது இதுன்னு பிரிக்கப்பட்டு உணவுப் பொருள்கள் விநியோகம் செய்யப் படுவது…. எல்லாமே மக்கள் நலத் திட்டம். ஆனா… மிக்ஸி கிரைண்டர்லாம்.. ரொம்ப ஓவர்!

இதுல அடிக்கிற கொள்ளைய கண்டுக்கினுதான்…மத்திய அரசு நேரடி மானியத் திட்டத்தை வலியுறுத்துது… யாருக்கு போய்ச் சேரணுமோ அவங்களுக்கு மட்டும் மானியம் போனா போதும். இப்படி இடைத் தரகுங்கள்லாம் பணத்தை கொள்ளையடிக்க ஏன் விடணும்னு யோசிச்ச மத்திய அரசின் திட்டத்தையே நீங்க கேலி செய்யுறீங்க.. மிஸ்டர் விஜய்! எல்லாம் ஆதார் கார்டும் மின் ஆளுமையும் வந்ததால ஏற்பட்ட மாற்றங்கள்.. !

நூறு நாள் வேலைத் திட்டத்துல எத்தனை முறைகேடு நடந்துதுன்னு நீங்க ஃபீல்டுல இறங்கி பார்த்திருந்தா… வயிறு எரிஞ்சிருக்கும்! நீங்க உண்மையான நாட்டுப் பற்றாளனா இருந்திருந்தா?! ஏழைப் பங்காளனா இருந்திருந்தா..!?

ALSO READ:  விஜயின் வெற்றி - அதிர்ஷ்டமா? ஆளுமையா?

ஆனா… ஏழைங்களுக்கு உண்மையாவே போய்ச் சேர வேண்டிய, அவர்களுக்கு கைதூக்கி விட வேண்டியத எல்லாம் விட்டுட்டு… இப்படி கொளுத்தணும் எரிக்கணும்னு எதையோ தூண்டி விடுறது… நீங்க ஒரு அரசியல் ஃபார்முலாவுல வேலை செய்யிறீங்கன்னு தெளிவா தெரியவெச்சிருக்கு இல்லியா?! பிறகு எதிர்க்கட்சி அரசியல் செய்யாமலா இருப்பாங்க…! சொல்லுங்க..?! சினிமா கலை வேறு, நிஜம் வேறுன்னு சொல்லிக்கலாம்…! ஆனா உங்க வேலையெல்லாம் சினிமா கலை மாதிரியா இருக்கு!?

***
இலவசங்களை குறை கூறும் அல்லது, தீயிட்டுக் கொளுத்தச் சொல்லும் சர்கார் விஜய், ஏன் நலத்திட்ட உதவிகள் என இலவசங்களை அவ்வப்போது வழங்கவேண்டும்! அவற்றை கொளுத்தி விடச் சொல்லலாமே!

ஒரு நடிகர் இலவசங்களை வழங்குவதே… பின்னாளில் அரசியலுக்கு வருவதற்கான முதலீடுதான் என்பது விரல் சூப்பும் பாப்பாவுக்கே தெரியும்! உண்மையில் உதவும் உள்ளமாக இருந்தால், ஊர் பேர் தெரியாமல், தன்னை நாடி வரும் ஏழைகளுக்கு விளம்பரம் இல்லாமல் உதவி செய்துவிடுவார்!

இப்போது நலத்திட்ட உதவிகள் என்ற போர்வையில் கொடுத்த இலவசப் பொருள்களை தீயிட்டுக் கொளுத்தலமா?!

(டாக்டர்) அனிதா வூட்டுக்கு அதிகாலை நிலா வெளிச்சத்தில் ஓடோடிப் போய் செக் கொடுத்துட்டு வந்ததா போட்டோல்லாம் போட்டோமே! அந்த செக்கை அல்லது பொருள்களை பிடுங்கி தீயிட்டுக் கொளுத்திடலாமா?! இன்னும் எத்தனை அரசியல் ஸ்டண்ட் அடிச்சிருப்பீங்க… மிஸ்டர் விஜய்? செத்தவங்க வீட்டு உதவுறோம்னு அதிமுக., திமுக., காரன் போறான்னா.. அவன் கட்சி அரசியலுக்கு உதவும்னு போறான்..?! நீங்க உங்க ரசிகர் மன்றததின் நபர்களுக்கு மட்டும் உதவுறதோட நிறுத்தியிருந்தா… இந்தக் கேள்வியே இல்ல! ஆனா அதிமுக., திமுக., காரங்களுக்கு போட்டி போட்டுக்கிட்டு… பொண அரசியலை நீங்களும்தான் இலவசம் உதவிங்கிற பேர்ல செய்யிறீங்க…! அது உங்க உள்மனசுல உறைக்கவே இல்லியா மிஸ்டர் விஜய்!

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

இன்றைய நலத்திட்ட உதவிகளுக்கான போட்டோ செஷன்தான்… நாளைய இலவச திட்டங்களுக்கான அடிப்படையே என்பது இன்னுமா உங்களுக்கு புரியல..?!

சரின்னு சொல்லுங்க.. நானே ஒரு கதை எழுதி… நடிகர் / அரசியல் / நேர்மை / நாணயம் எல்லாத்தையும் புகுத்தி.. என் வாழ்க்கைக் கதையையே கொஞ்சம் மேக்கப் பண்ணி திரைக்கதையாக்கி கொடுத்துடறேன்…!

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img