சென்னை: தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டார். இதில், அதிமுகவின் ரவீந்திரநாத் 4,99,354 வாக்குகள் பெற்றார். காங்கிரசின் இளங்கோவன் 4,23,035 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், தேனி தொகுதியை சேர்ந்த மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். அதில், தேனி தொகுதியில் மக்களவைத் தேர்தல் நடைபெற்ற போது, வாக்குகளைப் பெற மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இதனை அதிமுகவினர் திட்டமிட்டு அரங்கேற்றி உள்ளனர். எனினும் இதனை தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை.
தேனி தொகுதியில் பணப்பட்டுவாடா செய்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. எனவே ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனு விரைவில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, தனி நீதிபதி முன் விசாரணைக்கு வரும் என்று கூறப் படுகிறது.
முன்னதாக, திமுக.,வினர் பரவலாக அனைத்துத் தொகுதியிலும் பணப் பட்டுவாடா செய்தனர். சிதம்பரம் தொகுதியில் அக்கூட்டணியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக பணம் விநியோகம் செய்யச் சென்ற போது அக்கட்சியின் நிர்வாகி கார் பிடிபட்டது. கனிமொழி போட்டியிட்ட தூத்துக்குடி தொகுதி உள்பட, பல்வேறு தொகுதிகளில் பணம் புகுந்து விளையாடியது.
வேலூர் தொகுதியில் மட்டும் திமுக., பொருளாளர் மகன் போட்டியிட்டதால், வெளிப்படையாக பண விநியோகம் நடைபெற்றதை தேர்தல் ஆணையம் கண்டறிந்து, தேர்தலை ரத்து செய்தது. .
இந்நிலையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய அளவில், தேர்தல் ஆணைய அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் அதிக அளவிலான பணம் கோடிக்கணக்கில் பிடிபட்டது தமிழ்நாடு தான் என்பதால், தமிழகத்தில் நடந்த மக்களவைத் தேர்தலையே ரத்து செய்ய வேண்டும் என்றும், பணப் பட்டுவாடா நடைபெறாத வகையில் ஒட்டுமொத்தமாக கண்காணிப்பு ஏற்பாடுகளைச் செய்து, தமிழகத்தில் மட்டும் நாடாளுமன்றத் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுப்பப் பட்டு வருகின்றன.



