Home Blog Page 148

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

500x300 1834293 voterlist - 2026
#image_title

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 01.01.2025-ஆம்
நாளினைத் தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம், 2025-க்கான பணிகள் நடைபெற உள்ளது.

இதற்காக, மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (29.10.2024) வெளியிடப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 27,03,835.

இதில் ஆண் வாக்காளர்கள்: 13,28,854 பெண் வாக்காளர்கள்: 13,74,690, மூன்றாம் பாலின் வாக்காளர்கள்: 291.

வாக்காளர் பட்டியலில் புதிதாக பதிவு செய்வதற்கு மற்றும் ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு முகவரி மாற்றம் செய்வதற்கு படிவம்-6, இந்திய கடவுச்சீட்டு வைத்திருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பதிவு செய்வதற்கு படிவம்-6A, வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பதற்கு படிவம் 6B. ஏற்கனவே பதிவு செய்துள்ள பெயரினை நீக்கம் செய்வதற்கு அல்லது வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் சேர்ப்பு குறித்து ஆட்சேபணை தெரிவிக்க படிவம்-7, வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கும், தொகுதி மற்றும் முகவரி மாற்றம் செய்வதற்கும், நகல் அட்டை பெறுவதற்கும், படிவம்-8-இல் விண்ணப்பங்கள் அளிக்க வேண்டும்.

ஜனவரி 1, 2025 -அன்று அல்லது அதற்கு முன்பே 18 வயது பூர்த்தி அடைந்த வாக்குச்சாவடி பகுதியில் சாதாராணமாக வசித்து வரும் இந்திய குடிமக்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.

29.10.2024 முதல் 28.11.2024 வரை அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி மையங்கள் / வட்டாட்சியர் அலுவலகங்கள் / மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து நேரடியாக அளிக்கலாம் அல்லது https://voters.eci.gov.in என்ற இணையதள முகவரி மூலமாக விண்ணப்பிக்கலாம்.

கைப்பேசியில் வாக்காளர் உதவி எண் என்ற செயலி (Voters Helpline Mobile App) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

16.11.2024 (சனிக்கிழமை), 17.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 23.11.2024 (சனிக்கிழமை), 24.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நான்கு நாட்களில், வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது..

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவத்துடன் வயது மற்றும் முகவரிக்கான ஆதாரங்களை இணைக்க வேண்டும். மேலும் ,விவரம் மற்றும் தகவலுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய இலவச தொலைபேசி எண் 1950.

பெறப்படும் விண்ணப்பப் படிவங்கள் மீது உரிய விசாரணைகள் மேற்கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் 06.01.2025- அன்று .

சிவகங்கையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.

சிவகங்கை மாவட்டம், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலினை அங்கீகரிக்கப்பட்ட
அனைத்து அரசியல் கட்சிப்பிரமுகர்கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், வெளியிட்டார்.

இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரைப்படி, 27.03.2024-ஐ தகுதி நாளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம், 2024-க்கான ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியலினை, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், வெளியிட்டு தெரிவிக்கையில்,

இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரைப்படி, ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் வாக்குச்சாவடி மையம் விரிவுபடுத்துதல் தொடர்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரமுகர்களின் ஆலோசனை மற்றும் பொதுமக்களின் ஆலோசனை பெற்று அதனடிப்படையில்,
இந்திய தேர்தல் ஆணையம் வழிகாட்டுதலின்படி திட்டப்பணிகள் மேற்
கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தகுதி நாளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் வரைவு வாக்காளர்
பட்டியலை இன்று வெளியிடப்படுகின்றன.

சிவகங்கை மாவட்டத்தில் 27.03.2024 அன்று சிறப்பு சுருக்கத் திருத்தம் 2024 இறுதி வாக்காளர் பட்டியலின் படி 5,83,171 ஆண் வாக்காளர்களும், 6,05,159 பெண் வாக்காளர்களும், 55 மூன்றாம் பாலினம் வாக்காளர்களும் ஆக மொத்தம் 11,88,385 வாக்காளர்கள் இருந்தனர்.

28.03.2024 முதல் 08.10.2024 வரை மொத்தம் 28,496 மனுக்கள் பெறப்பட்டு இதில் 26,185 மனுக்கள் அனுமதிக்கப்பட்டு 2,311 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

 28.03.2024 முதல் 08.10.2024 வரை தொடர் திருத்தத்தில் 12,744 ஆண் வாக்காளர்களும், 13,424 பெண் வாக்காளர்களும், 17 மூன்றாம் பாலினம் வாக்காளர்களும் ஆக மொத்தம் 26,185 வாக்காளர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இத்திருத்தத்தின்போது 1,191 ஆண் வாக்காளர்களும் 1,119 பெண் வாக்காளர்களும் மற்றும் 01 மூன்றாம் பாலினம் வாக்காளர்களும் ஆக மொத்தம் 2,311 வாக்காளர்கள் பட்டியலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 அதன்படி, 184-காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் 1,55,833 ஆண் வாக்காளர்களும், 1,61,179 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 52 வாக்காளர்களும் என மொத்தம் 3,17,064 வாக்காளர்களும், 185-திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 1,46,191 ஆண் வாக்காளர்களும்1,52,472பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 03 வாக்காளர்களும் என மொத்தம் 2,98,666 வாக்காளர்களும்,
186-சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் 1,47,545ஆண் வாக்காளர்களும், 1,53,078 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 01 வாக்காளர்களும் என மொத்தம் 3,00,624 வாக்காளர்களும், 187-மானாமதுரை (தனி) சட்டமன்றத் தொகுதியில் 1,38,467 ஆண் வாக்காளர்களும், 1,43,430 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 04 வாக்காளர்களும் என மொத்தம் 2,81,901 வாக்காளர்களும் என நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் சேர்த்து, 5,88,036 ஆண் வாக்காளர்களும், 6,10,159 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 60 வாக்காளர்களும் என ஆகமொத்தம் 11,98,255 வாக்காளர்கள் உள்ளனர்.

மேலும், சிவகங்கை மாவட்டத்தில் மறுசீரமைப்புக்கு முன்னர் 1357 வாக்குச்சாவடிகள் இருந்தன. மறுசீரமைப்புக்கு பின் 184-காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் 348 வாக்குசாவடிகளும், 185-திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 335 வாக்குசாவடிகளும், 186-சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் 356 வாக்குசாவடிகளும், 187-மானாமதுரை (தனி) சட்டமன்றத் தொகுதியில் 325 வாக்குசாவடிகளும் என மொத்தம் 1364 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்காளர் பட்டியில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பதிவுகளைத் திருத்தம் செய்தல் ஆகிய பணிகள் தொடர்பாக 29.10.2024 முதல் 28.11.2024 வரை மனுக்கள் பெறப்படும். மனுக்களை அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் நேரடியாகவோ அல்லது https://voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ அளிக்கலாம்.

மேலும், 16.11.2024, 17.11.2024, 23.11.2024 மற்றும் 24.11.2024 ஆகிய நாட்களில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெறும் வகையில் சிறப்பு முகாம்களும் நடைபெறும். பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பதிவுகளை சரிபார்த்துக் கொள்ளவும், புதிய வாக்காளர்கள் இருப்பின் பெயர் சேர்க்கவும், திருத்தங்கள் இருப்பின் திருத்தம் செய்யவும். தங்களது குடும்பத்தில் காலஞ்சென்ற நபர்கள் பட்டியலில் இடம் பெற்றிருப்பின் அவர்களது பெயர்களை நீக்கவும் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சிவகங்கை மாவட்டத் தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித், தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.செல்வசுரபி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) முத்துக்கழுவன், தனி வட்டாட்சியர் (தேர்தல்) அ.மேசியாதாஸ், அனைத்து வட்டாட்சியர்கள், அனைத்து நகராட்சி ஆணையாளர்கள், துணை வட்டாட்சியர் (தேர்தல்), அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப்பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து  கொண்டனர்.

சோழவந்தான் பகுதி சிவாலயங்களில் பிரதோஷ விழா!

chozhavanthan temple - 2026

சோழவந்தான் மற்றும் தென்கரை, திருவேடகம், மன்னாடிமங்கலம், பேட்டை மேலக்கால் ஆகிய ஊர்களில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா நடைபெற்றது தீபாவளிக்கு முன்பு வரக்கூடிய பிரதோஷ விழா என்பதால் சிவ பக்தர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

சோழவந்தான் பிரளையநாத சுவாமி கோவிலில் பிரதோஷ விழாவை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால் தயிர் உட்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது இதைத்தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகம் சிறப்பு அர்ச்சனை நடைபெற்று சுவாமியும் அம்பாளும் ரிஷபவாகனத்தில் கோவிலை சுற்றி வலம் வந்தனர்.

இதில் எம் விஎம் குழும தலைவர் மணி முத்தையா, கவுன்சிலர்கள் வள்ளி மயில், மருது பாண்டியன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலிலும், மன்னாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலிலும், தென்கரை மூலநாத சுவாமி கோவிலிலும், பேட்டை அருணாசலேஸ்வரர் கோவிலிலும் மேலக்கால் ஈஸ்வரன் கோவிலிலும் பிரதோஷ விழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

தீபாவளி பற்றி காஞ்சி மஹா பெரியவர் சொன்னவை!

kanchi maha periyava - 2026
#image_title

மஹா பெரியவா தீபாவளி பத்தி சொன்னதை ஞாபகப்படுத்திண்டா அதைவிட வேறே என்ன தீபாவளி ஸ்வீட்? அந்த மாதிரி ஞான சாகரத்துடைய குரலை இன்னொரு தடவை எப்போ கேட்கப்போறோம்? கேளுங்கோ அவர் சொல்றதை:

”தீபாவளி க்ருஷ்ண பரமாத்மா நரகாஸுரனைக் கொன்றதால் ஏற்பட்ட பண்டிகை. கங்கையோ பரமேச்வர ஸம்பந்தமுள்ளது. யமுனைதான் கிருஷ்ணனுடைய நதி. ‘யமுனா தீர விஹாரி’ என்றே அவரைச் சொல்கி றோம். அதனால் தீபாவளியில் கங்கா ஸ்நானம் என்று ஏன் விசேஷம் னு உனக்கு தோண்றதா?

பெரியவா ஒருவரைக் கேட்டார். அவர் பேசாமல் தலையை அசைத்து கை கட்டி பெரியவாள் மேலே பேச காத்திருந்தார்.

”தீபாவளிக்கு நாம் எல்லோரும் கங்கா ஸ்நானம் பண்ணுகிறோமென்றால் அதற்குக் காரண புருஷரான கிருஷ்ணர் அன்றைக்குக் காவேரி ஸ்நானம் பண்ணினார் என்று நீ கேள்விப் பட்டிருக்கியோ?” .

“இல்லை. பெரியவாள்தான் சொல்லி அநுக்ரஹம் செய்ய வேணும்”
”உங்களில் வேறு எவருக்காவது அந்தக் கதை தெரியுமா?”
யாரும் பதில் சொல்லலை. .
பண்டிதராகத் தோன்றிய ஒருவர்: “ஸ்ரீமத் பாகவதத்தில் நரகாஸுர வதத்தைச் சொல்லியிருக்கும் இடத்தில், அதற்கு தீபாவளி, கங்கை, காவேரி ஆகிய எந்த ஸம்பந்தமுமே சொல்லியிருக்கவில்லை” னு தான் எனக்கு படறது ”என்றார்.

மஹா பெரியவா: “பாகவதத்திலே இல்லாவிட்டாலும் புராணந்தரங்களில் (வேறு புராணங்களில்) இந்த ஸமாசாரங்கள் இருக்கு. ராமாயண, பாரத, பாகவதா திகளில் வால்மீகியும், வியாஸரும், சுகப்ரம்மமும் சொல்லாமல் விட்ட அநேக விஷயங்கள் வேறு புராணங்களிலும், உப புராணங்களிலும், ஸ்தல புராணங்களிலும் வருகிறது. கதைப் போக்கு, கதா பாத்திரங்களுடைய குண விசேஷம், லோகத்துக்கு இதனால் கிடைக்கிற உபதேசம் என்று எப்படிப் பார்த்தாலும் இவை பெரும்பாலும் இதுக்கு எல்லாம் மூலம் ராமாயண, பாரத, பாகவதாதிகள் தான். அதனாலே மூலக்ரந்தத்துக்கு முரணாக இல்லாத வரைக்கும் இப்படிப்பட்ட கூடுதலான ஸமாசாரங் களையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்”

“நரகாஸுரனை பகவான் ஸம்ஹாரம் பண்ணினவுடன் பூமாதேவி வந்து அவரிடம் பிரார்த்தித்துக் கொண்டதாக பாகவதத்தில் வருகிறதோல்லியோ” ?

.பண்டிதர்: “ஆமாம் பெரியவா. வருகிறது, நரகன் அபஹரித்திருந்த இந்திரனுடைய குடையையும், (இந்திரனின் தாயாரான) அதிதியின் குண்டலங் களையும் பூமாதேவிதான் கொண்டு வந்து பகவானிடம் அர்ப்பணித்தாள் என்று வருகிறது. அப்போது அவள் செய்த ஒரு ஸ்தோத்திரமும் இருக்கிறது. ஆனால் இது பொதுப்படையான ஸ்துதியாக இருக்கிறதே தவிர, நரகனின் ஞாபகார்த்தமாகத் தீபாவளி கொண்டாடப்பட வேண்டும் என்று அவள் வரம் கேட்டதாக இல்லை. நரகா ஸுரனுடைய பிள்ளை பகதத்தனை பகவான் தான் ரக்ஷிக் க வேண்டும் என்று பூமாதேவி ஒப்புக் கொடுத்ததாகவும் சொல்லி இருக்கு ”

மஹா பெரியவா: “வாலியை ராமர் ஸம்ஹாரம் பண்ணினவுடன் அவன், பிள்ளை அங்கதனை அவருடைய guardianship லேயே விட்ட மாதிரி”
அது ஸரி; நரகாஸுரனே இப்படி, தான் வதமான தினத்தை லோகமெல்லாம் பண்டிகையாகக் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதா கவும் இன்னொரு version (கதாபேதம்) கேள்விப்பட் டிருக்கிறாயோல்லியோ?
”“கேட்டிருக்கிறேன் பெரியவா ”
மஹா பெரியவா: “எனக்கென்னவோ நரகாசுரனுடைய அம்மாவான பூமாதேவி இப்படி வரம் கேட்டாள் என்பது தான் ரொம்ப விஸேஷமாக மனஸில் படுகிறது. பகவானு டைய ஹஸ்தத்தால் மரணமடைந்து அவருக்குள்ளேயே ஐக்கியமாகிற ஸ்டேஜில் இருக்கும் ஒருத்தனுக்கு நல்லறிவு உண்டாகி இம்மாதிரி வேண்டிக் கொள்வதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால் ஒரு பெற்ற தாய் புத்ர சோகத்தில் வயிறெரியாமல், பரம துக்கமான ஸமயத்தில், நம் பிள்ளை போனாலும் பரவா இல்லை, அவன் போனதற்காகவே, லோகத்தில் ஸமஸ்த ஜனங்களும் ஸந்தோஷமாக விழா கொண்டாட வேண்டும் என்று வேண்டிக் கொண்டாளென்றால் அதுதான் நெஞ்சைத் தொடுகிற மாதிரி இருக்கிறது. பொறுமைக்கு பூமாதேவி என்பது இங்கேதான் நிரூபணமாகிறது. அந்தத் தாயாருடைய தியாக சக்தியினால்தான் தேசம் பூராவிலும் வேறெந்தப் பண்டிகைக்குமில்லாத பிராதான்யம் (முதன்மை) தீபாவளிக்கே ஏற்பட்டிருக்கிறது என்று தான் எனக்கு தோண்றது . அது தான் என் அபிப்ராயம்”

”மஹா பெரியவா கிருஷ்ணன் காவேரி ஸ்நானம் பண்ணிய விஷயம் சொல்லணும்:”

மஹா பெரியவா: “ ஏற்கனவே உங்களில் ஒருத்தர் கங்கா ஸ்நான ஸம்பந்தத்தைச் சொல்லு’னு கேட்டார். நான் காவேரி ஸ்நானத்தைப் பற்றிச் சொல்கிறேனென் றால், “ஸ்வாமிகளுக்கு நாம் கேட்ட விஷ்யம் தெரியாது” என்று நினைச்சுக்க மாட்டாரா? அதனால், கங்கா ஸ்நானம், காவேரி ஸ்நானம் எல்லாவற்றையும் பற்றிச் சொல்கிறேன்”
“இவர் (பண்டிதர்) பாகவதத்திலே வந்தால்தான் ஒப்புக் கொள்வேன்” என்று சொல்வாரே. ஆகவே நான் அதோடு வேறு கதைகளையும் போட்டுப் பிசைந்து அவியலாகத்
தான் சொல்லப் போகிறேன்.
காவேரி மகாத்மியத்தைப் பற்றி ஸ்காந்தம், ஆக்நேய புராணம், பிரம்ம வைவர்த்த புராணம் முதலானதுகளில் இருக்கிறது. அதிலொன்றில் துலா காவேரி மஹிமை யைச் சொல்கிற இடத்தில் தான் தீபாவளிக் கதை வருகிறது. சுகருக்கு பாகவதத்தை உபதேசித்த அதே வியாஸாசாரியாள்தான் இந்த எல்லாப் புராணங்க ளையும் கொடுத்திருக்கிறார்”

ஒரு பக்தை: “நரகாஸுர வதக்கதையைக்கூடப் பெரியவாள் வாயாலே கேட்கணும்”

மஹா பெரியவா: “எல்லாக் கதையும்தான்! ஏதோ இப்போது எனக்கு நினைவு வருகிற வரைக்கும் சொல்கிறேன்”
”கங்கையோடு காவேரிக்கு ஸம்பந்தம் இருக்கு. தீபாவளி அன்னிக்கு ஒரு நாள் மட்டும் எல்லா வெந்நீ ரிலும் அருணோதயதிலிருந்து ஸுர்யோதயம் வரை ஒரு முஹூர்த்தம் – அதாவது இரண்டு நாழிகை – கங்கை இருக்கிறாளென்றால், துலா மாஸம் முழுக்கவே அருணோத யத்தில் ஆரம்பித்து ப்ராதக்காலம் முடிகிறவரை, அதாவது ஸுர்யன் உதித்து ஆறு நாழிகை வரை காவேரியில் கங்கை உள்பட ஸகல தீர்த்தங்களும் இருக்கு.

தீபாவளியன்னிக்கி நாம் அருணோதயத்தில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு கங்கா ஸ்மரணத் தோடு வெந்நீர் ஸ்நானம் பண்ணணும். அப்புறம் ஸுர்யோதயமானபின், ஆனால் ஆறு நாழிகைக்குள் (2 hrs 24 mins), பச்சை ஜலத்தில் இன்னொரு ஸ்நானம் பண்ணனும் . இந்த ஸ்நானத்தின் போது துலா காவேரி யை ஸ்மரித்துக்கொண்டு பண்ணணும். முதல் ஸ்நானத்தில் நரகாஸுரன், பூமாதேவி, ஸத்யபாமா, கிருஷ்ணர் எல்லார் நினைவும் வரும். இரண்டாம் ஸ்நானத்தில் பரமேஸ்வரன் நினைவும் வந்துவிடும்.

இந்தப் புண்ய ஸ்மரணம்தான் பெரிய ஸ்நானம். உள்ளே இருக்கிற அழுக்கையெல்லாம் அகற்றி ஜீவனைக் குளிப் பாட்டிப் பரிசுத்தி பண்ணுவது அதுதான். ‘கோவிந்தேதி ஸதா ஸ்நானம்’ என்கிறது இது தான். இப்படிச் சொன்ன தால் வெளியே இருக்கிற கங்கா, காவேரியெல்லாம் அவசியமில்லை, பிரயோஜனமில்லை என்று அர்த்தம் பண்ணிக்கொண்டு விடக்கூடாது.

அந்த கோவிந்தனேதான் நம்மிடம் கருணையோடு நமக்கு கங்கா ஸ்நானத்தைக் கொடுத்து, தானே காவேரி ஸ்நானம் பண்ணிக் காட்டியிருக்கிறான். அவனுடைய ஸ்மரணத்தோடு இப்படி ஸ்நானம் பண்ணினால் அது உள்ளத்துக்கு ஸ்நானம் என்பது மட்டுமில்லை, உள்ளத்துக்குப் புது வஸ்திர அலங்காரம், மதுரமான பக்ஷணம் எல்லாமும் அதுவேதான்!

தீபாவளியன்று யமனுக்குத் தர்ப்பணம் பண்ண வேண்டுமென்று சொல்லியிருக்கிறது. வட தேசத்தில் தீபாவளிக்கு முதல் நாள் ‘யம தீபம்’ என்றே போடுகிறார்கள்.

இது துலா மாஸம். (அதாவது ஐப்பசி). இந்த மாஸம் பூராவும் தினமும் அருணோதயத்திலிருந்து உதயாதி ஆறு நாழிகை (2 மணி 24 நிமிஷம்) வரை அறுபத்தாறு கோடி புண்ய தீர்த்தங்களும் காவேரியில் வாஸம் செய்கின்றன.

தீபாவளி அன்னிக்கி காலம்பற குளிக்கிற வெந்நீரில் லக்ஷ்மியும், கங்கையும் வஸிக்கும்படி செய்துவிட்டால் குளிர் விட்டு போய்டும்.பயமே இல்லை. லக்ஷ்மியும் கங்கையும் வேண்டாம் என்று யாருமே நினைக்க மாட்டார்கள். இதனால் ஸகல ஜனங்களுக்கும், பண்டிகை என்ற ஸந்தோஷத்துடன் புண்ணியம் என்பதும் கிடைக்கும்’ என்று கங்கா தேவி நினைத்தாள். இதனால்தான் அந்த ஸ்நானத்துக்கு கங்கா ஸ்நானம் என்றே பேர் ஏற்பட்டது.

ஒவ்வொருத்தர் அகத்திலேயும் கிணற்றடியில், பாத்ரூமில் மொண்டு விட்டுக் கொண்டு ஸ்நானம் பண்ணுகிறவர்களும் கிழக்குப் பார்க்கவே பண்ண வேண்டும். பொதுவாக எந்தக் கர்மாவுக்குமே எடுத்தது கிழக்கு திசை தான்.

தீபாவளி ஸ்நானம் செய்ய முதலில் தலையில் எண்ணையால் 7 பொட்டு வைத்து பிறகு வலது துடையிலும் 7 பொட்டு வைத்துக்கொண்டு பிறகு அந்த எண்ணையை வழித்து கீழ்கண்ட ஸ்லோகத்துடன் தலையில் வைத்துக்கொண்டு ஸ்நானம் செய்வது வழக்கம்.

”அஸ்வத்தாமா பலிர் வ்யாஸ, ஹனுமான்ச விபீஷண ஸுகன்ச பரசுராமஸ்ச ஸப்தைதே சிரஞ்சீவிந: தைலே லக்ஷ்மி ஜலே கங்கா|தீபாவளி தினே வசேது|அலக்ஷ்மி பரிகாரார்த்தம்|அப்யஞ்கணம் ஆசரேது”

யம தர்ப்பணம்பண்ணும்போது சொல்லல்வேண்டிய மந்திரம்;
1 யமம் தர்ப்பயாமி
2 தர்மராஜம் தர்ப்பயாமி
3 ம்ருத்யும் தர்ப்பயாமி
4 அந்தகம் தர்ப்பயாமி
5 வைவஸ்வதம் தர்ப்பயாமி
6 காலம் தர்ப்பயாமி
7 ஸர்வ பூத க்ஷயம் தர்ப்பயாமி
8 ஔதும்பரம் தர்ப்பயாமி
9 தத்னம் தர்ப்பயாமி
10 நீலம் தர்ப்பயாமி
11 பரமேஷ்டிம் தர்ப்பயாமி
12 வ்ருகோதரம் தர்ப்பயாமி
13 சித்ரம் தர்ப்பயாமி
14 சித்ரகுப்தம் தர்ப்பயாமி

தீபாவளி அன்னிக்கு இதை ஞாபகம் வைச்சுக் கோங்கோ:
பகவான், பரம்பொருளை பற்றிய நினைவு ஒன்றுதான் எல்லோரையும் சேர்ந்து வாழ வைக்க கூடியது …மதமும், பக்தியும் எல்லோரும் ஒன்றாக வாழ்ந்து சந்தோஷமாக இருபதற்காக மட்டுமே ஏற்பட்டவை .ஒருவரை ஒருவர் அடித்து கொண்டு துன்பப்பட அல்ல. பக்திதான் நம் எல்லோரையும் இணைத்து வைக்கும் பெரிய சக்தி.. வடக்கே காசியில் இருந்து தெற்கே உள்ள ராமேஸ் வரத்துக்கும்,தெற்கேயிருந்து வடக்கே உள்ள ஷேத்தி ரங்களுக்கும் ஜனங்கள் தரிசனம் செய்ய போய்க் கொண்டே இருக்கிறார்கள். இன்றுவரை எத்தனை மாறுதல்கள் ஏற்பட்டும் அப்பழக்கம் மாத்திரம் விட்டு போகவில்லை ..பாஷை ராஜ்ய எல்லைகள் இதர பழக்க வழக்கங்கள் மாறினாலும் இந்த அடிப்படையில்தான் சகலவித ஜனங்களும் மற்ற எல்லாவற்றையும் மறந்து ஒன்று சேருகிறார்கள் .அழிவற்ற ஒரே வஸ்துவால் ஏற்படும் இந்த உண்மையான ஒற்றுமை அழியவே அழியாது.
பக்திக்கு ஆதாரம் அன்பு. ஆண்டவன் கருணைக் கடல்.அந்த அன்புக்கு கட்டுப்படாத ஜீவராசியே கிடையாது .அது போல் பக்தனின் அன்புக்கு கட்டுப்படாத ஆண்டவன் இல்லை.அன்பின் சக்தி மகத்தானது.அன்பு அன்பை வளர்க்கும் . நமது பாரத தேச மக்கள் அனைவருமே அன்பு என்னும் வெள்ளத்தில் மூழ்க வேண்டும்.அதற்கு உள்ளங்கள் தூய்மையாக இருக்கவேண்டும் .தர்மம் செழித்தால் உள்ளம் சுத்தி பெற்றுவிடும் ..நமது வேதம்தான் தர்மத்தின் இருப்பிடம் .அது அநாதியானது.உலகத்துக்கே பொதுவான பொக்கி ஷம்.அது நாடு பூராவும் முழங்க வேண்டும்.தர்ம சிந்தை யும்,தெய்வ வழிபாடும் கருணை உள்ளமும் நம் பாரத நாட்டின் சிறப்பான அம்சங்கள்.ஒற்றுமையை வளர்க்க வேண்டுமானால் இவற்றை வளர்க்க வேண்டும்.
இது உலகம் பூராவுக்கும் பொருந்தும் .அன்பில் விளைவது தான் உண்மையான சாந்தி. ஒவ்வொருவருக் கும் மனசாந்தி ஏற்பட்டு விட்டால் உலகில் அமைதி தானாக நிலைத்து விடும்.முதலில் வேற்றுமை உண்டு என்ற அறியாமை விலக வேண்டும். இந்த இருள் நீங்கி ஒளி பிறக்க வேண்டும் என்று பிரார்த்தித்து கொண்டு இந்த தீபாவளி அன்று மங்கள ஸ்நானம் செய்வோமாக”

++++
உங்கள் எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

நடிகர் விஜய்யும் திராவிட மீடியாவும்!

main stream media news - 2026

மீடியாவில் “Expose” எனும் வார்த்தை அடிக்கடி பயன்படும். பிரஸ்மீட், இண்டர்வியூக்களில் கிடுக்கிப்பிடி கேள்வி கேட்டு, எதிராளியை திணறடிப்பது, அதன் மூலம் அவரது இமேஜை சரிப்பது தான் Expose.

தமிழகத்தில் இதை திராவிட மீடியா எப்படி பயன்படுத்துகிறது? என்பதற்கு சில உதாரணங்களை சொல்லலாம்.

2019-20-ல் கொரோனா காலகட்டத்தில் தான் அண்ணாமலை என்ற பெயர் வெளியே தெரிய ஆரம்பிக்கிறது. அவர் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற செய்தி வந்தவுடன், அனைத்து மீடியாவிலும் அவருடைய பேட்டிகள் தொடர்ச்சியாக வந்தன.

இத்தனைக்கும் அப்போது Lockdown காலகட்டம் என்பதால் அதில் பெரும் பாலான பேட்டிகள், zoom call ல் எடுத்த பேட்டிகள். அண்ணாமலையிடம் எல்லாவிதமான கேள்வி களும் கேட்கப்பட்டன. அப்போதிலிருந்து அவரை பாலோ செய்வதால், அனைத்து பேட்டிகளையும் நான் பார்த்திருக்கிறேன். அவரும் சலிக்காமல் பதில் சொன்னார். அந்த பேட்டி களில் அண்ணாமலை தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், அவரது நிலைப்பாட்டை புரிந்து கொண்டு, அவரை Target செய்ய ஆரம்பித்தது திராவிட IT wing.
இந்த விஷயம் அப்போது புரியவில்லை.

அதற்கு பிறகான தொடர்ச்சியான செயல்பாடுகளை இணைத்துப் பார்த்தால் இது தெளிவாக புரியும்.

அதே 2019-20 காலகட்டத்தில் தான் உதயநிதி முதல்முறையாக நேரடி அரசியலுக்கு உள்ளே வருகிறார். அன்றிலிருந்து இன்று வரை உதயநிதி கொடுத்த interview க்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
press meet வேறு. Interview வேறு. நான் குறிப்பிடுவது Interview மட்டுமே. சினிமாவில் நடிக்கும் போது ஹீரோவாக, தயாரிப்பாளராக அவர் கொடுத்த இண்டர்வியூக் களை விடவும் குறைவு தான். இத்தனைக்கும் உதயநிதி MLA வாகி, 2 துறைகளுக்கு அமைச்சராகி, இன்று துணை முதல்வராகவும் ஆகி விட்டார். ஆனாலும் இன்று வரை உதயநிதியிடம் ஒரு கடினமான கேள்வி கூட கேட்கப்பட்டதில்லை. அது தான் திராவிட மீடியாவின் சூட்சமம்.

ஏனெனில் அண்ணாமலையை மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக “Expose” செய்ய வேண்டும் என்பதே Media வின் Target. அவர் press meet ல் பேசுவதை வைத்து தான் அவர் மீதான narrative வை build செய்கிறது திராவிட IT wing.

அதே சமயம் உதயநிதியிடம் ஒரு கடினமான கேள்வி கூட கேட்டு விடாமல் அவரை பாதுகாக்கும் வேலையை செய்வதும் அதே மீடியா தான். அப்படியே சில கேள்விகள் வந்தாலும், உதயநிதி சொல்வது தான் பதில்.
அதற்கு சமீபத்திய உதாரணம் “Mike வேலை செய்யலை, சரியாத்தான் பாடினாங்க” என்று பச்சைப் பொய் சொன்னார் உதயநிதி. ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாகப்பாடினார்கள் என்று உதயநிதியிடம் எதிர்கேள்வி கேட்கக்கூட எந்த மீடியாவுக்கும் தைரியம் இல்லை. திமுகவை எதிர்ப்பவர்களை expose செய்யத் துடிக்கும் மீடியா, உதயநிதி எந்தக் காரணம் கொண்டும் expose ஆகி விடக்கூடாது என்று திட்டம் போட்டு வேலை செய்யும்.

எந்தக்காரணம் கொண்டும் ஸ்டாலின், உதயநிதி, மற்ற தலைவர்களின் incompetence வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்வது தான் திராவிட மீடியாவின் வேலை.

அண்ணாமலையிடமும், சீமானிடமும் சீறிப்பாய்ந்து கேள்வி கேட்டு சரிக்கு சரி மல்லுகட்டும் மீடியா, உதயநிதியிடம் பம்மி பதுங்கும். ஸ்டாலினிடம் லிஸ்டில் இருக்கும் கேள்விகளை மட்டும் கேட்கும். மற்ற துறை அமைச்சர்களிடமும் அப்படித்தான். அவர்கள் சொல்வது தான் பதில். அதில் எதிர்கேள்வி என்பதே கிடையாது. அவர்கள் சொல்லும் பதில் தவறாக இருந்தாலும் கண்டுகொள்ளப்படாது.

திமுகவை எதிர்ப்பவர்கள் அனைவரையுமே ஜோக்கர் போல சித்தரிப்பார்கள். அதிமுக ஆட்சியில் இருந்த அமைச்சர்கள் செல்லூர் ராஜு, வளர்மதி, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டவர்கள் எப்படி joker ஆக்கப்பட்டார் கள் என்பதை யோசித்துப் பாருங்கள்.

செய்தி சானல்களில் வரும் news card களில் இடம் பெறும் போட்டோக்கள் வரை நம்மை influence செய்வதற்கு பயன் படுத்துகிறார்கள். திமுகவை சேர்ந்தவர்கள் என்றால் Hero போல போட்டோ இருக்கும். அதுவே எதிர்முகாம் என்றால் வேண்டுமென்றே தவறான போட்டோவை பயன்படுத்துவார்கள். அதுதான் திராவிட மீடியாவின் agenda.

திமுக தலைவர்கள் திராவிட மீடியாவை எப்படி லெஃப்ட் ஹாண்டில் deal செய்கிறார்கள் என்பதற்கு இன்னொரு சிறிய உதாரணம் சொல்கிறேன்.

சென்ற வருடம் மழைக்காலத்திற்கு முன்னர் “4000 கோடி செலவு செய்திருக்கிறோம், மழை வந்தால் ஒரு சொட்டு கூட தண்ணீர் தேங்காது” என ஸ்டாலின், உதயநிதி, அமைச்சர்கள், மேயர் வரை ஒருவர் பாக்கியில்லாமல் சொன்னது நினைவு இருக்கலாம். ஆனால் மழை வந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
மொத்த தமிழ்நாடும் 4000 கோடி என்னாச்சு? என்று கேள்வி கேட்டது. அதற்கு முறையாக பதில் சொல்ல வேண்டிய உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என். நேரு என்ன செய்தார்? தெரியுமா. நேராக கலைஞர் செய்திகள் சானலில் அமர்ந்து ஒரு பேட்டி கொடுத்தார். அதில் 4000 கோடியில் 42% மட்டுமே பணிகள் முடிந்திருக்கிறது என்று சொல்லிவிட்டு போனார். அடுத்த நாள் திராவிட மீடியா மீண்டும் அதே 4000 கோடி பற்றி கேட்க, “அதெல்லாம் ஏற்கனவே சொல்லியாச்சு, போய் பார்த்துக்குங்க” என்று கலைஞர் டிவி பேட்டியை கைகாட்டிவிட்டுச் சென்றார். அவ்வளவு தான். அன்றோடு 4000 கோடிக்கும் சமாதி கட்டப்பட்டது.

விஜய்காந்த், எடப்பாடி, சீமான், அண்ணாமலை, ரஜினி என திமுகவுக்கு எதிராக இருப்பவர்களிடம் தமிழக மீடியா எப்படி நடந்து கொண்டது? என்பதை யோசித்துப் பாருங்கள். திமுகவுக்கு எதிராக இருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக விஜய்காந்தை காமெடியன் ஆக்கினார்கள். வடிவேலு எனும் காமெடியனை ஹீரோவாக்கினார்கள். கட்சி ஆரம்பிக்கிறேன் என்று சொன்ன ரஜினியை எப்படி round கட்டினார்கள் என்று அனைவரும் அறிவார்கள். அதாவது நல்லவனை கெட்டவனாக காட்டும். கெட்டவனை உத்தமனாக காட்டும். புத்திசாலியை முட்டாளாகவும், வடிகட்டிய முட்டாளை அறிவாளியாக வும் காட்டுவது தான் திராவிட மீடியாவின் வேலை.

சரி விஜய் பெயரை முதலில் எழுதிவிட்டு, ஏன் இத்தனையும் சொல்ல வேண்டும் என்றால்,….

விஜய் அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்து, கட்சி ஆரம்பித்து, கொடி வெளியிட்டு, மாநாட்டுக்கு தேதி அறிவித்து, மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டார். அரசியல் வருகையின் போதே அவர் திமுகவுக்கு எதிரி என்பது முடிவாகிவிட்டது. கட்சி ஆரம்பித்து பல மாதங்கள் ஆன போதும், இதுவரை விஜய்யிடம் திராவிட மீடியா மைக்கை நீட்டியதே இல்லை. அவர் வீட்டின் முன் நின்றதில்லை. அவர் ஏர்போர்ட் செல்லும் போது துரத்தியதில்லை. கட்சி ஆரம்பித்த பிறகு சில பொது நிகழ்ச்சிகளிலும் விஜய் கலந்து கொண்டார். அங்கு கூட விஜய் பக்கத்தில் கூட மீடியா போகவில்லை. விஜய் மீடியாவை சந்திக்க வில்லை என்ற முணுமுணுப்பு கூட மீடியாவில் இல்லை.

ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்றவுடன் வளைத்து வளைத்து கேள்வி கேட்ட மீடியா, அண்ணாமலை அரசியலுக்கு வருகிறேன் என்றவுடன் துரத்தி, துரத்தி பேட்டி எடுத்த மீடியா, விஜய் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லி 6 மாதம் ஆன பின்னும் கூட இன்னும் அவரிடம் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை என்ற விஷயம் புரிகிறதா?..

விஜய் மாநாடு முடிந்த பிறகு அதைப் பற்றிய பாசிட்டிவ் செய்திகள் மட்டுமே வருவதை பார்த்தீர்களா?

அப்படியானால் திராவிட மீடியாவின் பரிசுத்த ஆதரவு விஜய்க்கு இருக்கிறது என்று அர்த்தம். எந்தக் காரணம் கொண்டும் விஜய் expose ஆகிவிடக் கூடாது என்று விஜய் தரப்பும், திராவிட மீடியாவும் தீயாக வேலை செய்திருக்கிறது. இனி மேலும் செய்யும். என்னுடைய கணிப்பு சரியாக இருந்தால் இன்னும் சில தினங்களில் தமிழின் முன்னணி ஊடகத்தில் விஜய் பேட்டி வெளியாகும். அதிலும் விஜய்யின் Hero image நன்றாக நிலை நிறுத்தப்படும்.

திமுகவை நேரடியாக எதிர்த்த மற்றவர்களுக்கு நடப்பதையும், திமுக தலைவர்களுக்கு நடப்பதையும், விஜய்க்கு நடப்பதையும் ஒப்பிட்டு புரிந்து கொண்டால் நான் சொல்வது புரியும்.

இதைப்புரிந்து கொண்டால் விஜய்யின் அரசியல் பயணம் குறித்த அடுத்த கட்டுரையை உங்களால் relate செய்து கொள்ள முடியும். நான் சொல்லி யிருப்பது அனைத்தும் உங்கள் கண் முன்னால் நடந்த சம்பவங்கள் தான். அவை அனைத்தையும் சேர்த்துப் பார்த்தால் மட்டுமே, நம்மைச் சுற்றியிருக்கும் மாயவலை நம் கண்ணுக்கு புலப்படும்.

இதுதான் திராவிட மீடியாவின் narrative.

மக்களே இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள்.
இங்கு இருப்பவை அனைத்தும் Red light Media தான்.

இவர்களுக்கு தேவை காசு மட்டுமே. நாட்டின் மதிப்போ, முன்னேற்றமோ, மக்கள் நலமோ, எதுவும் ஒரு பொருட்டு அல்ல.

தமிழ் நாட்டு மக்கள் இப்போது விழித்துக் கொள்ளவில்லை என்றால் இனி எப்போதும் தமிழ் நாட்டிற்கு விடிவு இல்லை.

தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

திராவிடம் என்னும் நரகாசுரனை அடியோடு அழித்து ஒழிப்போம் என்று சபதம் ஏற்போம். தீப ஒளி ஏற்றுவோம்!!!

  • சமூகத் தளத்தில் வைரலான பகிர்வு

அடுத்தடுத்த ஜாக்பாட்… நம் தமிழகத்துக்கு!

ge electronic india - 2026
#image_title

— ஜெய்ஹிந்த் ஸ்ரீராம் —

ரஃபேல் விமானங்களில் பயன் படுத்தப்படும் சாப்ஃரான் நிறுவன தயாரிப்பு இஞ்சின் களை நம் இந்தியாவில், தமிழகத்தில் தயாரிக்க இருக்கிறார்கள். இதற்காக 120 தகுதி வாய்ந்த இஞ்சினியர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இவர்களே நம் இந்திய சொந்த தயாரிப்பு #AMCA, மற்றும் புதியதாக உருவாக்கப்பட உள்ள தேஜாஸ் இரட்டை இஞ்சின் விமானங்களிலும் பங்கேற்க கூடும் என்கிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க நேற்றைய தினம் நம் இந்திய அரசு தரப்பில் இலகு ரக ஒற்றை இஞ்சின் தேஜாஸ் விமானங்களுக்கான 91 அமெரிக்க ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் இஞ்சின் வழங்குவதில் ஏற்படும் காலதாமத்திற்கு அபராதம் விதித்து அதிரடித்திருக்கிறார்கள். இது உலக அளவில் இந்த துறை சார்ந்த பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் F404, F414 இஞ்சின்கள் தான் தேஜாஸ் mk1A பயன்படுத்த இருக்கிறார்கள். இதற்கான ஒப்பந்தம் 2021வாக்கில் இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தப் படி 2023 ஏப்ரல் மாதத்தில் டெலிவரி செய்து இருக்க வேண்டும். ஆனால் நிறுவனத்தின் சார்பில் 2024 செப்டம்பர் மாதத்தில் வழங்கி விடுவதாக வேண்டுகோள் விடுத்த நிலையில் தற்சமயம் இதனை அடுத்த ஆண்டு ஏப்ரலில் வழங்க அனுமதிக்க வேண்டிட….. இம்முறை இதற்கு அபராதம் விதித்து அதிரடித்திருக்கிறார்கள் நம் தரப்பில்.

(இதன் பின்னணியில் உள்ள வர்த்தக அரசியல் வேறுவிதமானது….)

இதற்கு நிறுவன தரப்பில் F404 இஞ்சின் உதிரி பாகங்கள் சில தென் கொரியாவில் இருந்து உரிய நேரத்தில் வரவில்லை என்பதால் காலத் தாமதம் என்கிறார்கள். மாற்று ஏற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக சொல்லி இருக்கிறார்கள்.

இந்நிலையில் நம் அரசு தரப்பில்… இம்முறை உரிய நேரத்தில் ஒப்பந்தந்தை முடித்து கொடுக்க வேண்டும் அல்லது என்னென்ன உதிரி பாகங்கள் தேவையோ அதனை இந்தியாவில் உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும் என தீர்த்து சொல்லி இருக்கிறார்கள்.

ஆக…. கூடிய விரைவில் இந்த நிறுவனத்தின்… அமெரிக்க ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை நம் இந்தியாவில் ஏற்படுத்தும் கட்டாயத்தில் அவர்கள் இருக்கிறார்கள். இது ஒன்றும் புதிதல்ல அவர்களுக்கு… ஏற்கனவே நம் இந்திய டாட்டா குழுமத்தோடு இணைந்து இந்த ஆலை அமைத்து உதிரி பாகங்கள் உற்பத்தி செய்து கொண்டு வருகிறார்கள். ஆனால் அது ஹெலிகாப்டருக்கான உதிரி பாகங்கள்.

இதே ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் F414 இஞ்சினையும் நாம் கேட்டு ஒப்பந்தம் செய்து இருக்கிறோம் என்பதை நன்றாக கவனித்தில் கொள்ளுங்கள்.

ஏன் இப்படி ஆலாய் பறந்து கொண்டு இருக்கிறோம் நாம்…. நம்மால் சுயமாக ஓர் விமான இஞ்சினை உற்பத்தி செய்து விட முடியாதா …… என்பவர்களுக்கு.,??

யார் சொன்னது நாம் சொந்தமாக உற்பத்தி செய்யவில்லை என்று….. நமக்கு சொந்தமான #GTRE யில்… அதாவது நம் இந்திய அரசின் கீழ் கேஸ் டர்பைன் ரிசர்ச் எஸ்டாபிள்ஷ்மென்ட் நிறுவனத்தின் சார்பில் காவேரி எனப் பெயரிடப்பட்ட இஞ்சினை சொந்தமாக டிசைன் செய்து உற்பத்தி செய்து இருக்கிறோம்.
பலரும் இந்த இடத்தில் நாம் உற்பத்தி செய்துள்ள காவேரி இஞ்சின், அதி இயங்கு திறனில் தனது பிளேடுகள் வெப்பத்தின் அளவு காரணமாக உருக்குலைந்து விடுவதாக நினைத்து கொண்டு இருக்கிறார்கள். அது தவறு. அதெல்லாம் முன்பு ஒரு காலத்தில்……. தற்சமயம் அட்டகாசமாக இயங்குகிறது. பல்வேறு கட்ட சோதனைகளை எல்லாம் வெற்றி கொண்டு இருக்கிறது. கடைசி கட்டமாக ரஷ்யா வரை கொண்டு சென்று பரிசோதனை செய்து பார்த்திருக்கிறார்கள். அற்பதமாக இயங்கு திறனில் இருக்கும் இது நாம் எதிர்பார்க்கும் 120 கிலோ நியுட்டன் ட்ராக் த்ரஸ்டை வெளிப்படுத்தும் அளவிற்கு எட்டவில்லை என்பது தான் ஒரேகுறை. 98kN வரை மட்டுமே வெளிப்படுத்துகிறது.

சரி இத்திட்டம் தோல்வியா…. என்பவர்களுக்கு, தற்சமயம் நாம் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் பெறவுள்ள F404 அல்லது F414 இஞ்சின் சக்தி முறையே 85kN மற்றும் 95kN மட்டுமே கொடுக்கும் என்பதை ஒப்பிட்டு பார்த்தால் போதும் விஷயம் நன்றாக விளங்கிவிடும்.

அப்படி என்றால் நாம் சாதித்து இருக்கிறோமா என்பவர்களுக்கு…. நாம் நமது காவேரி இஞ்சின் செயல்திறனை விமான பறத்தல் சோதனையில் ஈடுபடுத்தி ஆய்வு செய்து பரிசோதனைகளை எல்லாம் செய்து பார்க்கும் அளவிற்கு போதுமான கால அவகாசம் இல்லை என்பதால் தான் வெளியே இருந்து வாங்குகிறோம். தவிர குறைந்த பட்சம் பத்து ஆண்டுகள் பிடிக்கும் சமாச்சாரம் இது,ஏகப்பட்ட பொருட்செலவும் தேவைப்படும் விஷயமாக இருக்கிறது என்பதால் கொஞ்சம் பின் தங்குகிறோம்.

இதற்கு தீர்வு தான் என்ன….???

செயல் திறன் நிரூபிக்கப்பட்ட இஞ்சின் ரகங்களை தேர்வு செய்து இங்கு நம் இந்திய தேசத்திலேயே உற்பத்தி செய்ய… தொழில் நுட்ப பண்புகளை பகிர்ந்து கொள்ளும் நிறுவனங்களோடு கூட்டு சேர நம்மவர்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

இதன் வீர்யம் நம்மில் பலருக்கு சரியாக புரியவில்லை.

இந்த உலகிலேயே எதிர் எதிர் நிறுவனங்களாக உள்ளவர்களை ஓரே குடையின் கீழ் கொண்டு வருவதற்கு சமமாக…. அமெரிக்காவின் புகழ் பெற்ற போயிங் நிறுவனத்தையும்… ஐரோப்பிய நாடுகளின் பெயர் போன ஏர்பஸ் நிறுவனங்களையும் நம் இந்திய டாட்டா குழுமம் ஒப்பந்தம் மூலம் இங்கு நம் இந்திய தேசத்தில் ஆலை அமைத்து….. தொழிற்சாலை ஏற்படுத்தி உற்பத்தியை தொடங்கி இருக்கிறார்கள்.

இது தான்….
இதனை தான்…
இரண்டு நாட்களுக்கு முன்பு நம் பாரதப் பிரதமர் குஜராத் மாநிலத்தில் வதோதராவில் உள்ள டாட்டா அன்வாஸ்டு சிஸ்டம் லிமிடெட் (#TASL) மூலம் ஏர்பஸ் நிறுவன C-295 விமானங்களை ராணுவ பயன்பாட்டிற்கென ஸ்பெயின் அதிபர் ப்ஃடுரோ சான்சேவுடன் இணைந்து உற்பத்தியை தொடங்கி வைத்தார்.

56 விமானங்களில் 16 மட்டுமே அங்கிருந்து வரும் மீதியுள்ள நாற்பதும் இங்கு இந்த ஆலையில் இருந்து 2026 ஆண்டு வாக்கில் ஒவ்வொரு கட்டமாக வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்பஸ் பயணிகள் விமானங்களுக்கும் பெயர் பெற்ற நிறுவனம். நாளையே இது பயணிகள் விமானங்கள் உற்பத்தி நோக்கி நகரும் என்பதில் சந்தேகமில்லை.

இது வெளிப்பார்வைக்கு…
மேற்சொன்ன விமானங்களின் உதிரி பாகங்கள் 23%முதல் 31% வரையில் ஹைதராபாத் அருகில் தொழில்நுட்ப கூடத்தில் தயாரிக்க இருக்கிறார்கள். அதுபோலவே நம் தமிழகத்தில் சென்னையில் ரஃபேல் விமானங்களின் இஞ்சினான சாப்ஃரான் நிறுவன தயாரிப்பு இஞ்சின்களை இங்கேயே லைசென்ஸ் பெற்று உற்பத்தி செய்ய இருக்கிறார்கள்.

பார்ப்பதற்கு ஆங்காங்கே பரவலாக வைத்து உற்பத்தி செய்ய செலவு பிடிக்கும் விஷயமாக இருக்கிறதே என்றால்…..அது தான் இல்லை. ஒரே இடத்தில் முடக்குவதற்கு பதிலாக பரவலாக வைத்திருப்பதிலும் விஷயம் இருக்கிறது. பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் இதில் அடங்கும். அதேசமயம் பலதரப்பட்ட வேலை வாய்ப்புகளை அதிகரிக்க முடியும்.

போக்குவரத்திற்கு தான்…. புதிதாக உருவாக்கப்பட்டுவரும் சென்னையில் இருந்து பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை பயன் படுத்தி போகிறார்கள். நீங்கள் நினைப்பது போல அது பெங்களூரோடு முடிந்துவிடப் போவதில்லை. அது பெங்களூரை தொட்டு மும்பை வரை… இன்னமும் சரியாக சொல்வதென்றால் குஜராத் மாநிலத்தின் ஓர் துறைமுகம் வரையில் அமைக்க இருக்கிறார்கள். அந்நாளைய மெட்ராஸ் பாம்பே கிராண்ட் ட்ரங்க் ரோடு போல… இது நம் இந்திய பொருளாதார வளர்ச்சியில் ஓர் அங்கமாக மாறும்.

அத்தோடு முடிந்திடும் விஷயம் இல்லை….

இது… மேற்சொன்ன திட்டமிடல் #INSTC ஓர் பாகமாக மாறிட கூடும் என்கிறார்கள். அது என்ன INSTC , இன்டர்நேஷனல் நார்த் சௌத் டிரான்ஸ்போர்ட் என்கிற புதிய பாதையில் ரஷ்யாவில் இருந்து ஈரானிய மார்க்கத்தில் நிலம் நீர் வழியாக நிலக்கரியை குஜராத் துறைமுகத்தில் இறக்குமதி செய்து சமீபத்திய சாத்தித்து காட்டினார்களே …..அதே சமாச்சாரம் தான்.

அதனை….. அந்த துறைமுகத்தில் இருந்து… மேற்கில் இருந்து கிழக்காக… சென்னை துறைமுகம் வரைக்கும் அதி நவீன சாலை வசதிகளை ஏற்படுத்த இருக்கிறார்கள். இதே சாலையில் விமானங்களின் உதிரி பாகங்கள் முதற்கொண்டு பலவும் வெகு சுலபமாக பயணிக்க இருக்கின்றது.

ஓர் புள்ளி விவர ஆய்வறிக்கை சொல்கிறது., இன்றைய தேதியில் இந்த உலகில் படு வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றாக இந்திய விமானத் துறை விளங்கும் என்கிறார்கள் அவர்கள்.இது உச்ச கட்டமாக 67% வளர்ச்சி காணும் துறையாக மாறிடப்போகிறது என மதிப்பீடு செய்து இருக்கிறார்கள்.

அடுத்து வரவிருக்கும் ஐந்து ஆண்டுகளில் நம் நிலப்பரப்பின் அடையாளமே மாறப் போகிறது. மிகப்பெரியதொரு வர்த்தக வாய்ப்பு அதனால் ஏற்படக்கூடிய மாற்றங்களை நம்மில் பலரும் அவதானிக்கவே முடியாமல் தவறிவிடுகிறார்கள். காரணமும் யாவரும் அறிந்ததே.

ஜெனரல் எலக்ட்ரிக் மட்டுமல்ல ஜெனரல் அட்டாமிக்ஸ் என்கிற ஓர் நிறுவனமும் இருக்கிறது.

இவர்கள் தான் இந்த உலகின் அதி உன்னதமான ஆளில்லா உளவு விமானமான MQ-9 ரீப்பரை உற்பத்தி செய்பவர்கள்.
நாம் தற்சமயம் இந்த உளவு விமானங்களை வாங்கி பயன் படுத்தி கொண்டு வருகிறோம். இதிலேயே ஆயுதங்களை பொருத்தி தாக்குதல் நடத்திடவும் முடியும். செய்தும் இருக்கிறார்கள் அமெரிக்கர்கள். மத்திய கிழக்கு நாடுகளில் பலரையும் இப்படி இந்த முறையில் போட்டுத் தள்ளியும் இருக்கிறது.

இவற்றை நம் தமிழகத்தில் சென்னையில் உள்ள ஒரு ஸ்டாட்டப் கம்பெனி ஒன்று உற்பத்தி செய்து அசத்தி இருக்கிறார்கள். அதேபோன்று சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனம் சொந்தமாக செயற்கைக்கோள் ஏவு வாகனத்தை விண்ணில் ஏவி அசரடித்து இருக்கிறார்கள். கிட்டத்தட்ட இது போலான 16 நிறுவனங்கள் அடையாளம் காணப் பட்டு அவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் மத்திய அரசு முனைப்பு காட்டி வருகின்றனர் என்பதையும் கூடுதல் தகவலாக கவனத்தில் கொள்ளவும்.

கூடிய விரைவில் நாம் வேறோர் தளத்தில் நம் இந்திய தேசத்தை நிச்சயம் காண்போம்.

தீபாவளி அன்று ‘கங்கா ஸ்நானம் ஆச்சா’ என ஏன் கேட்கிறோம்?

diwali in ayodhya - 2026
#image_title

இனிய காலை வணக்கம் ராவண சம்ஹாரம் கழிந்து ராமர், சீதை மற்றும் வீபீஷணன், சுக்ரீவ அனுமன் சமேதராக அயோத்தி மாநகரம் திரும்பும் நிகழ்ச்சியை தீபாவளி திருநாளாக வட இந்திய மாநிலங்களில் ஒரு பண்டிகையாக வெகு உற்சாகத்தோடு கொண்டாடுவார்கள்,

— ராமலிங்கம் கிருஷ்ணா —

தெரிந்த புராணம்… தெரியாத கதை!


உலகில் பவித்திரமானது, பரிசுத்தமானது என்று எதனைக் குறிப்பிட்டாலும், கங்கைதான் முதலில் நம் நினைவுக்கு வரும். அசுத்தமான இடத்தில்கூட கங்கையைத் தெளித்தால், அந்த இடம் பரிசுத்தமானதாகிவிடும் என்பது சாஸ்திர நம்பிக்கை. எந்த பூஜையிலும் முதலில் ஒரு கலசத்தில் நீர் எடுத்து, அதில் கங்கையை ஆவாகனம் செய்து, அந்தத் தீர்த்தத்தால் பூஜை செய்யும் இடத்தையும், பூஜா திரவியங்களையும் புனிதப்படுத்திக் கொள்வது சாஸ்திர முறை.

இந்துவாகப் பிறந்தவர்கள் இறக்கும்தறுவாயில், கங்கா ஜலத்தை வாயில் ஊற்றி, அவர்களது பாவங்களை நீக்கிப் புனிதர்களாக இறைவனடி சேர வழிவகுக்கும் சடங்கும் உள்ளது. இத்தகைய புனித கங்கை, பாவங்களைப் போக்கும் பவித்திரதேவி மட்டுமல்ல, ஞானத்தை தரவல்ல சக்தியும் அவள்தான் என்கின்றன சாஸ்திரங்கள்!

தீபாவளித் திருநாளில், உலகிலுள்ள எல்லா நீர் நிலைகளிலும் புனித கங்கை ஆவாஹித்து இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. நரகாசுரன் அழிந்த துலா மாத சதூர்த்தசியில் நரகாசுரனைப் புனிதப்படுத்தி அவனுக்கு மோட்சமளிக்க, பகவான் ஸ்ரீகிருஷ்ணன் தன் சங்கு தீர்த்தத்தில் கங்கையை வரவழைத்தார். அப்போது அவர் சங்கல்பப்படி உலகிலுள்ள எல்லா நீர்பரப்பிலும் கங்கை அந்தர்யாமியாக வியாபித்தாள். அதனால் நரக சதுர்த்தசியன்று ஸ்நானம் செய்வதை, ‘கங்கா ஸ்நானம் ஆயிற்றா?” என்று சம்பிரதாயமாகக் கேட்கிறோம்.

இந்துக்களின் இல்லங்கள்தோறும் பூஜை அறையில் கண்டிப்பாக ஓரிரண்டு கங்கைச் செம்புகள் இருக்கும். (அப்படி இல்லாவிட்டால் அவசியம் அது இருக்கும் படி செய்ய வேண்டும்). அது வீட்டின் புனிதத்துக்கும், தோஷங்கள் நீங்குவதற்கும், குறைகள் தீர்வதற்கும் வீட்டிலிருக்க வேண்டிய அவசியமான செல்வம். அந்தப் புனித கங்கையின் தோற்றம், ஓட்டம், தேக்கம், சங்கமம் ஆகியன குறித்த தெரியாத கதையை இங்கே தெரிந்துகொள்வோம்.

ஸ்ரீமன் நாராயணனின் நாபியில் பிரம்மன் தோன்றினான். அவன் அண்ட சராசரங் களையும், சகல எல்லா ஜீவராசிகளையும் சிருஷ்டித்தான். அதன்பின்பு, தன்னைப் படைத்த நாராயணனுக்குப் பாத பூஜை செய்ய பவித்திரமான கலசம் ஒன்றைப் படைத்து, அதில் தன் தவ சக்தியால் உருவான பவித்ர நீரை நிரப்பினான்.

அதற்கு கங்கா எனப் பெயரிட்டு, அதனை பகவான் நாராயணனின் பாத கமலங்களில் சேர்த்தான். கங்காதேவி என்ற அந்தப் பவித்ர நீர்த்தாரை விஷ்ணு பாதத்தில் சேர்ந்து, அவரது பத்தினியானாள். அவள் பகவான் விஷ்ணுவின் சேவையிலேயே தன்னை அர்ப்பணித்துக் கொண்டாள். அவள் தோன்றிய இடம்தான் ‘கங்கோத்ரி’.

அப்போது பூவுலகில் ரகுவம்ஸத்தில் பகீரதன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். ஸ்ரீராமனின் மூதாதையர்களில் ஒருவன் பகீரதன். இவன் காலத்தில், தேசத்தில் கடும் பஞ்சமும் வறட்சியும் ஏற்பட்டன. அந்தக் கால கட்டத்தில் ஒரு சாபத்தால் மடிந்து சாம்பலான தன் மூதாதையர்கள் அஸ்தியைக் கரைத்து, அவர்களுக்கு நற்கதியை உண்டாக்கித் தரவும், நாட்டின் வறட்சி நீங்கவும் பகீரதன் விரும்பினான்.

அதற்காக, பவித்திரமான கங்கையை பூமிக்குக் கொண்டு வர முயன்றான். எனவே, ஸ்ரீமன் நாராயணனைக் குறித்து ஒற்றைக் காலில் நின்று கடும் தவம் மேற் கொண்டான். அதன் பலனாக நாராயணன் பிரத்யட்சமானார். அவரிடம், விஷ்ணு பாதத்தில் பணி புரியும் கங்கா மாதாவை, கங்கோத்ரியிலிருந்து புறப்பட்டு இமயத்தின் சிகரங்கள் வழியே ஓடி, பூமியைக் குளிரச் செய்து, தன் மூதாதையர் அஸ்தியைக் கடலில் கரைக்கும் இடத்தில் அவள் சங்கமம் ஆகும்படி அருள்பாலிக்க, பகீரதன் வரம் கேட்டான். நாராயணனும் தந்தருளினார்.

புனித கங்கை ஆகாச கங்கையாக, அதிவேகமாக புறப்பட்டாள். இமயத்தைத் தாண்டி அவள் பூமியில் இறங்கும்போது அவள் வேகத்தைத் தணிக்காவிட்டால், நாடு நகரமெல்லாம் மூழ்கிவிடும் என்று பகீரதன் பயந்தான். அவள் வேகத்தைத் தடுக்க வல்லவர், சிவபெருமான் ஒருவரே என்றுணர்ந்து, சிவனைக் குறித்துத் தன் தவத்தைத் தொடங்கினான் பகீரதன்.

உலகைக் காக்க ஈஸ்வரன் தோன்றி, தன் சடையை விரித்து, கங்கையை அதில் தாங்கி, அவள் வேகத்தைத் தடுத்து, பூவுலகில் பாயச் செய்தார். (சிவனார் கங்கையைத் தலையில் தரித்தமையால், கங்கையையும் சிவ பத்தினி என்று சிலர் தவறாகக் குறிப்பிடுவதுண்டு. கங்கா அஷ்டோத்திரத்தில் கங்கையை விஷ்ணு பத்னி என்றும், சிவ சோதரி என்றும்தான் குறிப்பிடப்பட்டுள்ளது).

விஷ்ணு பாதத்தில் இருந்து புறப்பட்ட கங்கை, முதலில் நந்த பிராயக் என்றும், பிறகு சிவனை தரிசித்துத் தாண்டிய இடத்தில் ருத்ர ப்ராயக் என்றும் பெயர் பெற்று, பகீரதன் கங்கையை தரிசித்த இடத்தில் பாகீரதி என்று பெயர் பெற்றாள். பகீரதனிடம் கங்காதேவி, ”தான் எப்படிச் செல்ல வேண்டுமென்றும், எந்த மார்க்க மாகத் தன் தாரைகள் ஓட வேண்டும்?” என்றும் கேட்டாள். பகீரதன் தன் தேரில் ஏறி, ‘தாயே! நான் முன்னே வழிகாட்டிச் செல்கிறேன். என்னைப் பின்தொடருங்கள்’ என்று கூறிவிட்டு, வாயு வேகத்தில் புறப்பட்டான்.

கங்காதேவியும் பின்தொடர்ந்தாள். பல காதங்கள் வந்த பின்பு, திடீரென பகீரதன் திரும்பிப் பார்த்தான். கங்கை அவன் பின்னே வரவில்லை. ரதத்தின் வேகத்துக்குக் கங்கையால் ஓடி வர முடியவில்லை போலும் என்று நினைத்து, சிறிது நேரம் காத்திருந்தான் பகீரதன். அப்போதும் கங்கை வரவில்லை. எனவே, தேரைத் திருப்பிக் கொண்டு, வந்த வழியே சென்றான். சிறிது தூரம் சென்றதும், அவன் கண்ட காட்சி அவனைத் திகைப்பில் ஆழ்த்தியது.

ஆம், கங்கை ஏழு பிரிவாகப் பிரிந்து, மீண்டும் ஒன்றாக ஒரே இடத்தில், ஒரு தீவு போன்ற பகுதியை உருவாக்கிக் கொண்டிருந்தாள். காரணம், அங்கே சப்த ரிஷிகள் எனப்படும் ஏழு மகரிஷிகளும் தவம் புரிந்து கொண்டிருந்தனர். அவர்களது தவத்துக்கும் ஞானத்துக்கும் கட்டுப்பட்டு, அவர்களின் பாதங்களை வருடிக்கொண்டு, அங்கே தானும் தவம் புரிந்து கொண்டிருந்தாள் ஞான கங்கை. அந்த இடம்தான் இன்று ரிஷிகேஷ், ஹரித்வார் ஆகிய புண்ணிய க்ஷேத்திரங்களாக விளங்குகின்றன. கங்கை ஏழாகப் பிரிந்து, மீண்டும் இணைந்த நிலையை இன்றும் ஹரித்வாரின் பூமி அமைப்பைக் குறிக்கும் செயற்கைக்கோள் படங்களில் காணலாம்.

சப்த ரிஷிகளுக்கான ஆலயமும் ஹரித்வாரில் உள்ளது. சப்த ரிஷிகளைத் தாண்டிச் செல்லும்போது, அவர்களைத் தரிசித்து ஆசி பெறாமல் சென்றது தவறு என்று பகீரதனுக்குப் புரிந்தது. தன் தவத்துக்கு இரங்கி பூமிக்கு வந்த கங்கை தன்னைவிட உயர்ந்த தபஸ்விகளின் தரிசனத்துக்காகத் தங்கிவிட்டாள் என்பதை யும் உணர்ந்தான் பகீரதன். சப்த ரிஷிகளை யும் வணங்கி, பூஜித்து, அவர்கள் அனுமதி யுடன் கங்கையை தன்னுடன் வரும்படி வேண்டினான். இப்போது கங்கை முன்னே செல்ல, அவள் செல்ல விரும்பிய வழியில் ரதத்தைச் செலுத்தினான் பகீரதன்.

இன்றைய அலஹாபாத் பகுதிக்கு வரும் போது, யமுனையையும் சரஸ்வதியையும் தன்னோடு சேர்த்துக்கொண்டு திரிவேணி சங்கமமாகி, அங்கிருந்து தொடர்ந்து புண்ணிய க்ஷேத்திரமான காசி மண்ணை நனைத்து, சிவபூஜை செய்து தன் பயணத்தைத் தொடங்கினாள் கங்கை.

இன்றைய பீகாரின் மத்தியப் பகுதியைத் தாண்டும்போது, கங்கா தேவி தன் ஓட்டத்தில் ஒரு திருப்பத்தை உண்டாக்கினாள். பீகாரிலுள்ள பாகல்பூர் என்ற ஊருக்கு அருகில், சுல்தான்கஞ்ச் என்னுமிடத்தில் தென்கிழக்காக ஓடிக் கொண்டிருந்த கங்கை திடீரென திசை திரும்பி, மீண்டும் இமயத்தை நோக்கி வடக்கு திசையாக ஓட ஆரம்பித்தாள். இதனால் உத்தரவாகினி என்ற பெயர் பெற்றாள். அப்போதும் பகீரதன் தன் முயற்சியில் தளராமல், சிவபெருமானையும் கங்கையும் பிரார்த்தித்து, தான் பெற்ற வரத்தின்படி வங்கக்கடல் வரை வரும்படி கங்கையை அழைத்தான்.

அப்போது சிவ பெருமான் தோன்றி, எல்லா யுகங்களிலும் கங்கை உத்தரவாகினியாகத் திரும்பிய இடத்திலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள், பரிசுத்தமான கங்கையை பூஜித்து, காவடிகளில் சுமந்து செல்வார்கள். அவர்கள் பல காத தூரம் நடந்து சென்று, தேவ்கர் எனும் இடத்திலுள்ள சுயம்பு லிங்கமான வைத்தியநாதருக்கு அந்த நீரை அபிஷேகம் செய்து, புண்ணியம் பெறுவார்கள் என்று கங்கைக்கு ஒரு வரமளித்தார்.

ச்ராவண மாதத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் இன்றும் சுல்தான்கஞ்ச் என்ற இடத்திலிருந்து காவடிகளில் கங்கையைச் சுமந்துகொண்டு, சுமார் 110 கி.மீட்டர் கால்நடையாகச் சென்று, அங்குள்ள சுயம்பு லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது, பக்தி பரவசமான காட்சி. தேவ்கர் வைத்தியநாதர் ஆலயம் ஜோதிர்லிங்க ஆலயங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அதிசயத்தையும் நிகழ்த்திவிட்டு, பகீரதன் விருப்பப்படி மீண்டும் தென்கிழக்குத் திசையில் ஓடி, வங்கக் கடலில் சங்கமமானாள் புனித கங்கை. பூமி குளிர்ந்தது. பகீரதன் மூதாதையர்களின் அஸ்தியை கங்கையில் கரைத்து, அவர்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளை முடித்தான்!

கட்சி மேடையில் விஜய்! நடிப்பைத் தவிர வேறு உண்டா?

actor vijay - 2026
#image_title

— ஆர். வி. ஆர்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சமீபத்தில் தனது முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டி அருகே நடத்தியது.

மாநாட்டு மேடையில் விஜய் பேசிய தோரணையும், ஏற்றி ஏற்றி இறக்கிய அவரது குரலும் அவர் வசனம் பேசினார் என்று அறிவித்தன. பேசும்போது அடிக்கடி இரு கைகளை இரண்டு பக்கமும் விரித்து, ஒரு விரல் அல்லது இரண்டு விரல்களை உயர்த்தி, இடுப்பில் இரு கைகளை வைத்தபடி சில ஸ்டைலான போஸ்கள் காண்பித்தார். கூடுதலான எஃபெக்ட் இருக்கட்டும் என்று அவ்வப்போது அவர் ஆங்கில வாக்கியங்களை உரத்துப் பேசினார். மொத்தத்தில் விஜய் ஒரு அனுபவ நடிகராகத் தென்பட்டார்.

விஜய் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆக ஆசைப்படுகிறார் என்பது மேலும் புரிந்தது. வேறு எதையும் அவரது மாநாட்டுப் பேச்சு பெரிதாக வெளிப்படுத்தவில்லை – சில கட்சிகளுக்குக் கிலியையும் சில கட்சிகளுக்குக் புதிய கூட்டணி ஆசையையும் கொடுத்தார் என்பதைத் தவிர.

இரண்டு சக்திகளை விஜய் தனக்கு அரசியல் எதிரிகள் என்று மாநாட்டில் சொன்னார். ஒன்றை, ‘பிளவுவாத சக்திகள்’ என்று குறிப்பிட்டார். இன்னொன்றை, ‘கரப்ஷன் கபடதாரிகள்’ என்று பெயரிட்டார். பாஜக-வையும் தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் திமுக-வையும் தான் அவர் மனதில் வைத்து அப்படிப் பேசியிருக்க முடியும்.

பாஜக-வை நினைத்து விஜய் நீட்டி முழக்கி எதையெல்லாமோ தொட்டுப் பேசியது இது: “பிளவு சக்திகள் – அதாவது மத, சாதி, இனம், மொழி, பாலினம், ஏழை, பணக்காரன்னு சூழ்ச்சி செய்து பிரித்து ஆளும் பிளவுவாத அரசியல் சித்தாந்தம் நமக்கு ஒரு எதிரி”.

திமுக-வை ஒரு எதிரியாக வைத்து விஜய் பேசியது இது: “ஊழல் மலிந்த அரசியல் கலாசாரம் நமது இரண்டாவது எதிரி….. கருத்தியல் பேசி கொள்கை நாடகம் போடும், கலாசார பாதுகாப்பு வேஷமும் போடும், முகமூடி அணிந்த கரப்ஷன் கபடதாரிகள் தான் இப்ப நம்ம கூடவே இருந்து நம்மளை ஆண்டுகிட்டு இருக்காங்க.”

அவர் அறியாமலே விஜய் பாஜக-வுக்கு ஒரு நற்சான்றிதழ் கொடுத்துவிட்டார். அதாவது, மத்தியில் பத்தாண்டுகளாக ஆட்சி செய்யும் பாஜக-வின் ஆட்சியின் மீது அவர் ஊழல் குற்றச்சாட்டு சொல்லவில்லை. காரணம், அப்படி எதையும் அவரால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. பாஜக-வை ஒரு ‘பிளவுவாத சக்தி’ என்று மட்டும் ஏதோ சொல்லி வைத்தார். அதற்கு என்ன அர்த்தம் என்று அவருக்கே தெரியாது.

நிர்வாகத்தில் ஊழலைக் கண்டும் காணாமல் இருக்கும் கட்சிகளாக பாரதத்தில் பல அரசியல் கட்சிகள் உள்ளன. அவற்றில் ஒன்றாக திமுக-வைப் பார்த்தார் விஜய் என்று அவர் பேச்சு காண்பிக்கிறது. இதனால் மட்டும் விஜய் தூய்மையான அரசியல் தலைவராக, மக்கள் நலனை முக்கியமாக மனதில் நிறுத்திப் பணி செய்யும் கட்சித் தலைவராக, உருவெடுப்பார் என்பது சிறிதும் நிச்சயமல்ல.

ஏறக் குறைய நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் சொல்வதைத்தான் விஜய்யும் சொல்கிறார் – அதே நாடகத்தனத்துடன், ஆனால் உக்கிரம் குறைந்து, சற்று கௌரவமான வார்த்தைகளில். அவர்கள் இருவரும் வெளிப்படைத் தன்மை அற்றவர்கள் தான்.

எம். ஜி. ஆர் மற்றும் ஆந்திராவின் என். டி. ராம ராவ், இருவரையும் முன்னுதாரணங்களாகச் சொல்லியும் விஜய் தனது மாநாட்டில் பேசினார். ஆனால் அவர்கள் கதை வேறு.

எம். ஜி. ஆரைப் பொறுத்தவரை, அவர் திமுக-வில் பல வருடங்கள் இருந்தார். அப்போது அவர் திமுக-வின் முக்கிய அரசியல் முகமாகவும் விளங்கினார். அவரைப் பிரதானமாக வைத்து திமுக தேர்தலில் வாங்கிய ஓட்டுக்கள் ஏராளம்.

எம். ஜி. ஆர் திமுக-விலிருந்து விலக்கப்பட்டு அதிமுக-வை ஆரம்பித்த போது, திமுக-வில் இருந்த பல தலைவர்கள் அதிமுக-விற்கு வந்தனர். எம். ஜி. ஆர் ஓட்டுக்களும் அதிமுக-வுக்கு மாறி திமுக-வுக்குப் பெரிய இழப்பைத் தந்தன. விஜய் நிலைமை அப்படியானது அல்ல. அந்த அளவுக்கான பாதிப்பை விஜய் திமுக-வுக்குக் கொடுத்து அவரும் ஆட்சிக்கு வருவது இன்றைய தமிழகத்தில் சாத்தியமாகத் தெரியவில்லை.

இன்னொன்று. திறமையை, தன்னலமற்ற சேவை மனப்பான்மையை, நாட்டுக்காக அல்லது மாநிலத்துக்காக ஈர்க்கும் முகமாக, தலைமைப் பண்புள்ளவராக, விஜய் தென்படவில்லை. மேடையில் நின்று ஏற்ற இறக்கத்துடன் டயலாக் டெலிவரி செய்யும் ஒரு கலைஞராக மட்டுமே அவர் தென்படுகிறார். சில சினிமாக் கதைகளில் காணப்படும் பெரிய ஓட்டைகளும் அவரது மாநாட்டுப் பேச்சில் இருந்தன.

நடிப்புத் தொழிலில் வரும் வருமானத்தை இழந்து விஜய் அரசியலுக்கு வருகிறார் என்பதால் மட்டும் அவர் ஒரு நல்ல, நேர்மையான, திறமையான, நாட்டு நலனில் அக்கறை கொண்ட, தலைவராக இருப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதற்கு மாறான அறிகுறிகள்தான் அவரிடம் தெரிகின்றன.

விஜய் கட்சி மாநாட்டிற்கு இரண்டரை லட்சம் பேர் வந்திருக்கலாம் என்கிறார்களே – அவர் அரசியலில் பெரிய சக்தியாக, ஆட்சியைப் பிடிக்கும் சக்தியாக, வந்துவிடுவாரோ, என்று யாரும் அச்சப்பட அவசியமில்லை.

ஒரு புறம் முப்பத்தி இரண்டு வருடமாக சினிமாவில் நடித்த விஜய் தன் ரசிகர்களைப் பிரதானமாக வைத்து இப்போது அரசியலுக்கு வந்திருக்கிறார். இன்னொரு புறம், முப்பத்தி ஆறாவது வயதில் தனது ஐ. பி. எஸ் வேலையை விட்டுவிட்டு அண்ணாமலை என்னும் இளைஞர் மோடியால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்து, பாஜக-வில் சேர்ந்து, மளமளவென்று தமிழக மக்களைத் தொடர்ந்து ஈர்த்து வருகிறார் – வயதும் வற்றாத முனைப்பும் அசாத்தியத் திறமையும் அர்ப்பணிப்பும் அவர் பக்கம் இருக்கின்றன.

விஜய்யை மீறி எதிர்காலத் தமிழக அரசியலில் நல்லது நடக்க நாம் நம்பிக்கை வைக்கலாம்.

Author: R Veera Raghavan, Advocate, Chennai 
(veera.rvr@gmail.com)
https://rvr-india.blogspot.com

உள்ளம் கவர்ந்த ஆயுர்வேத கண்காட்சி!

ayurveda expo sengottai - 2026
#image_title

இன்று போற்றுதலுக்குரிய ஒரு நாள். ஐப்பசி த்ரயோதசி. சாக்ஷ௱த் ஶ்ரீ தன்வந்தரி பகவான் இந்த பிரபஞ்சம் காக்க அவதரித்த புண்ணிய தினம். இந்த தன்வந்தரி ஜெயந்தியை தேசிய ஆயுர்வேத தினமாக நமது மத்திய அரசு அறிவித்து ஒவ்வோர் ஆண்டும் ஒரு தனி Theme ஐ அறிவித்து அதன்படி நாங்கள் கொண்டாடி வருகிறோம். 

இந்த ஆண்டு நமது கிராமத்தில் அமைந்துள்ள ‘குருகுல்’ பள்ளியில் 9வது தேசிய ஆயுர்வேத தினம் கொண்டாடப் படுகிறது என்பதனை வினயபூர்வம் தெரிவித்துக் கொள்கிறேன். 5 ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான நமது மண்ணின் மருத்துவ முறைகளை ஆவணப்படுத்தி வெகுஜனங்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தியுள்ளோம். அறுவை சிகிச்சையின் தந்தை என போற்றப்படும் சுஸ்ருதர் வடிவமைத்த அறுவை சிகிச்சைக் கருவிகளின் மாதிரிகளை பிரயாசைப்பட்டு வடிவமைத்து காட்சிப் படுத்தியுள்ளோம். அனைவரும் வந்து பார்வையிடவும் இந்த நாளை எங்களுடன் இணைந்து கொண்டாடவும் பணிவுடன் அழைக்கிறோம்… என்று, அழைப்பு விடுத்து தகவல் அளித்திருந்தார் மூத்த நண்பரும் ஆயுர்வேத மருத்துவருமான டாக்டர் ஹரிஹரன். டாக்டர் சுப்ரஜா, டாக்டர் பிரசன்னா தேவி ஆகியோரும் பங்கேற்க, இந்த ஆயுர்வேத மருத்துவ முகாம், விழிப்பு உணர்வு நிகழ்ச்சி, ஆயுர்வேத கண்காட்சி நடத்தபடுவதாக தகவல் அளித்திருந்தார். 

இன்று காலை அந்த முகாமுக்குச் சென்று பார்த்து வந்தேன். ஏற்கெனவே இங்கே செங்கோட்டையில் நூலக கட்டடத்திலும், இன்னும் ஓரிரு இடங்களிலும் இதே போன்ற ஆயுர்வேத மருத்துவ கண்காட்சியை டாக்டர் ஹரிஹரன் நடத்தியிருக்கிறார். வெறும் ஒரு அரசு ஆயுர்வேத மருந்தக மருத்துவராக நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பது, அப்படியே நேரத்தைப் போக்குவது என்று இல்லாமல்,  இவர் செய்து வரும் அரும்பணிகளில் முக்கியமானது மூலிகைத் தோட்டம் ஒன்றை பராமரித்து வருவது. அடுத்து இது போன்ற விழிப்பு உணர்வு ஊட்டும் தகவல்களுடன் கண்காட்சிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை சுய முயற்சியில் தயாராக எப்போதும் வைத்திருப்பது…

90களின் முற்பகுதியில் நான் திருச்சியில் என் கல்லூரிப் படிப்பில் இருந்த காலத்தில், விடுமுறைக்கு இங்கே ஊருக்கு வரும்போது இளையோர் நட்பு வட்டத்தில் இருந்தார் டாக்டர் ஹரிஹரன். அப்போது அவரும் மணமாகாத இளைஞர்.  நான்  திருச்சி தென்னூரில் அந்நாளைய சம்மர்ஹவுஸுக்கு அருகில் இருந்த ஆயுர்வேத மையத்தில் மருந்துகள் தயாரிப்பதையும், அரிஷ்டங்களுக்கு பெரிய உருளியில் சக்கரைப் பாகைப் போட்டுக் காய்ச்சுவதையும் வேடிக்கை பார்ப்பேன். அந்நாளில் தான் அடுத்த வீட்டுக்காரரான லட்சுமணன் மாமா மூலம்,  எஸ்.வி. ராதாகிருஷ்ண சாஸ்திரி அவர்களுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது.  எனவே ஆயுர்வேதத்தில் ஈடுபாடு இருந்தது. அந்தப் பழக்கத்தில் டாக்டர் ஹரிஹரனுடன் கூடுதல் ஈர்ப்போடு பேசிக் கொண்டிருப்பேன். பின்னாளில் கல்லூரிப் படிப்பு முடிந்து ஆயுர்வேத நிறுவனம் ஒன்றில் மெடிக்கல் ரெப்பாகவும் பணி செய்தேன். 

அப்போது ஒரு புத்தகம் எனக்குக் கிடைத்தது. கொடுத்தவர் யார் என்று நினைவில்லை.  ஸ்ரீராம தேசிகன் தமிழில் மொழியாக்கி அளித்திருந்த புத்தகம். ‘சரக சம்ஹிதை’ என்பது. அதற்கு எம்.ஜி.ஆர். உதவி செய்து அரசின் சார்பில் அந்தப் புத்தகத்தைப் போட்டிருந்தார்கள். ஆச்சரியமான அம்சம்.  அந்தப் புத்தகத்தில் சரகர் கொடுத்திருந்த அறுவை சிகிச்சைக் கருவிகளுக்கான விளக்கப்படங்கள் வரைபடங்களாக இருக்கும். இன்று நாம் ஆங்கில மருத்துவ முறையில் எவ்வளவோ நுணுக்கமான கருவிகள் கொண்டு அறுவை சிகிச்சைக்களை மேற்கொள்வதைப் பார்க்கிறோம். ஆனாலும் அக்காலத்தே சரகர் கொடுத்திருந்த கருவிகள் மிகச் சிறப்பானவைதான்! 

இன்று டாக்டர் ஹரிஹரன் அந்தக் கருவிகளை ஒவ்வொன்றாக எடுத்து விளக்கினார், எது எதற்கு பயன்படுத்துவோம் என்று! வெறுமனே வரைபடங்களைக் கொண்டு, மக்களுக்கு விழிப்பு உணர்வு ஊட்ட வேண்டும் என்பதற்காக, அந்தக் கால அறுவை சிகிச்சைக் கருவிகளை, இங்கே செங்கோட்டையில் தோசைக்கல், சங்கிலி உள்ளிட்ட இரும்பு சாதனங்கள் செய்யும் ரமேஷைக் கொண்டு சிறப்பான வகையில் வடிவமைத்துச் செய்து பத்திரமாக வைத்திருக்கிறார். அவற்றை அவர்  எடுத்துக் காட்டியபோது, பிரமிப்பாக இருந்தது. உடன் அவற்றைச் செய்த ரமேஷும் இருந்தார். அவரைப் பாராட்டினேன். (போட்டோவில் உள்ளவர்) 

மூலிகைகளை அழகாக பிரித்துப் பிரித்து பெயர் எழுதி தொகுத்து வைத்திருக்கிறார். ஆயுர்வேதத்தில் முக்கியமான சிகிச்சை முறை பஞ்சகர்மா சிகிச்சை என்பது. அதற்கான மினியேச்சர் ஒன்று தயார் செய்து வைத்திருந்தார். (பார்க்க படம்).  அஷ்ட சூரணத்துக்கான பொருள்கள் எட்டு குடுவைகளில் சமையலறை அடுக்கு டப்பா போல வைத்து அழகாக காட்சிப் படுத்தியிருந்தார். 

ஆயுர்வேத மருத்துவத்தின் தந்தை எனப்படும் தன்வந்த்ரி பகவானின் விக்ரஹம் ஒன்றும், அருகே சிறிய வடிவில் சுஸ்ருதர், வாக்படர், சரகர் ஆகியோரின் சிலைகளையும் வைத்து வணங்கத்தக்க ரிஷிகளின் நினைவுகளை வருவோருக்குச் சொல்லிக் கொண்டிருந்தார். இவர்களில் வாக்படர் எப்படி தனது எழுத்தில் மருத்துவத்தினூடே சாஸ்திரங்களையும் புகுத்தியிருக்கிறார் என்பதை சில ஸ்லோகங்களால் விளக்கினார். பிரமிப்பாக இருந்தது. 

பள்ளி மாணவர்களும் உள்ளூர்க்காரர்கள் சிலரும் வந்து பார்த்து, ஆயுர்வேத மூலிகைகளின் சிறப்பைப் புரிந்து கொண்டார்கள் என்று தோன்றியது. ஊரூருக்கு இப்படி சிலர் விழ்ப்பு உணர்வு ஏற்படுத்த முனைந்து உழைத்தால், நம் பாரம்பரிய மருத்துவத்தின் சிறப்பு நிச்சயம் மக்களிடம் ஆட்சி செலுத்தும். 

அன்பன்

செங்கோட்டை ஸ்ரீராம்

தீபாவளி மலர்கள்… ஓர் அனுபவம்!

deepavali malars - 2026
#image_title

தீபாவளி வரும் முன்னே… தீபாவளி மலர்கள் வரும் அதன் முன்னே… – என்றுதான் இருக்கும் ஓர் எழுத்தாளன் அல்லது இதழாளனின் வாழ்வில்! நாளை எப்படியோ தெரியாது! இன்றளவும் அச்சு இதழ்கள் உயிர்ப்புடன் உலவும் சூழலில், இந்தப் பழமொழியிடையிட்ட புதுமொழிக்கு ஒன்றும் குறைவு வந்துவிடாதுதான்! 

என் முதல் தீபாவளி மலர் அனுபவம் 2000 ஆவது ஆண்டில். அப்போது நான் விஜயபாரதம் வார இதழில் உதவி ஆசிரியராக இருந்தேன். இப்போது போல் டெஸ்க் ஒர்க் என்று மட்டும் இருந்துவிடாமல், எழுத்தாளர்களை நேரில் சந்தித்து, விவரத்தைக் கூறி, இயன்றால் கையெழுத்துப் பிரதியை நேரில் பெற்று, அல்லது உடன் அமர்ந்து எழுதி, டேப்பில் ஒலிப்பதிவு செய்து என்று மெனக்கடல் அதிகம் இருந்தது. இமெயில்களும் வாட்ஸ்அப் வஸ்தாதுகளும் முழுதாய் முடக்கியிராத முன் தொழில்நுட்பக் காலம்தான்! இரவு பகலாய் அலுவலகத்திலேயே இருந்திருப்போம். பல நாட்கள் கூட்டாஞ்சோறுதான்! தூக்கக் கலக்கத்தினூடே பிழை திருத்தி,  பக்க வடிவமைப்பைச் சீர்செய்து, ஃபார்ம் போட்டு, ஒவ்வொரு ஃபார்மாக அச்சுக்கு அனுப்பி, இண்டெக்ஸ், விளம்பரதாரர் இண்டெக்ஸ் எல்லாம் போட்டு, கடைசி ஃபாரம் அச்சுக்கு அனுப்பி, ஏதோ ஒரு நிம்மதியுடன் ஓரிரு நாள் அமைதி பெற்று, இதழ் கைக்கு வரும்போது பெரு மகிழ்ச்சி தாண்டவமாடும்!  அப்படி மூன்று வருடம். பின்னும் மஞ்சரி இதழில் ஒற்றை ஆளாய் மூன்று தீபாவளி மலர்களைக் கொண்டு வந்தேன். அது ஒரு சுகமான சுமை! பின்னாளில் விகடன் மலர்த் தயாரிப்புக் குழுவில் இருந்து, ஒரு பகுதியை மட்டும் தயார் செய்தளித்த திருப்தி!  2010ல் தினமணி தீபாவளி மலரைத் தயாரித்தேன் என்றாலும், உதவிக்கு பலர். எழுத்தாளர்களுடன் தொடர்பு கொள்ளவும் கட்டுரைகள் அளிக்கவும் நிருபர்களும் பலர். எனவே அவ்வளவாக கடும் உடல்  மெனக்கெடல் இல்லைதான்! அடுத்து ஒரு வருடம்… அத்தோடு சரி! தீபாவளி மலர் தயாரிக்கும் வாய்ப்புகள் அமையவில்லை!  

என்றாலும் மலர்களில் எழுதும் வாய்ப்புகள் மட்டும் வருடந்தோறும் வந்துவிடுகின்றன. எழுத்தாளர்களையும் வாசகர்களையும் மகிழ்விக்கும் ஊடகத்தானாகவே இருந்துவிட்டதால், ஊடாகத் தனியே மகிழ்ச்சியெதையும் அமைத்துக் கொண்டதில்லை! இந்த வருடமும் இரு மலர்களில் எழுதும் வாய்ப்பு. வழக்கம்போல் என் தாய் வீடான விஜயபாரதத்திலும், குரு இல்லமான கலைமகளிலும்!  

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் இந்த வருடம் நூறாண்டை நோக்கி வீறு நடை போடுகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சங்கத்தின் பணிகள், மூத்த ஸ்வயம்சேவர்கள், கார்யகர்த்தர்களின் அனுபவங்கள் என்று பேசிப் பார்த்துப் பெற்ற அனுபவங்களின் தொகுப்பு இந்த வருட விஜயபாரதம் தீபாவளிச் சிறப்பிதழில் 6 பக்கங்களில் வந்துள்ளது!  

அண்மையில் மூத்த நண்பரும் கலைமகள் ஆசிரியருமான கீழாம்பூர் அவர்கள், இதழின் பதிப்பாளர் பி.டி. ராஜன், சாஸ்த்ரா பல்கலை டீன் ஆக இருந்து பணி ஓய்வு பெற்ற பேராசிரியர் ரகுநாதன் ஆகியோருடன் நெல்லைக்கு வந்தார். அவர்களை அழைத்துக் கொண்டு காலையில் ஆழ்வார்திருநகரி ஸ்ரீ பாஷ்யகாரர் எனும் ஸ்ரீராமானுஜர் திருக்கோயில், பெருங்குளம் செங்கோல் ஆதீனம், அருகே உள்ள சிவாலயம், மாலையில் வ.வே.சு ஐயர் அமைத்த சேரன்மகாதேவி பாரத்வாஜ ஆஸ்ரமம் ஆகியவற்றுக்கு சென்று வந்தேன். அந்த அனுபவங்களைத் தொகுத்து, ‘கலைமகள் ஆசிரியருடன் ஒரு நாள்’ என்ற தலைப்பில் 4 பக்க கட்டுரையாக எழுதிக் கொடுத்தேன். வாய்ப்பு அமையப் பெற்றவர்கள் படித்து அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்! 

அன்பன் 

செங்கோட்டை ஸ்ரீராம்

முடுவார்பட்டி காளியம்மன் கோவில் 48ஆம் நாள் மண்டல பூஜை!

mandala poojai in mooduvarpatti kalliamman temple - 2026
#image_title

முடுவார்பட்டி கிராமத்தில் ஶ்ரீ காளியம்மன் கோவில் 48ஆம் நாள் மண்டல பூஜை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தேவேந்திர குல வேளாளர் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஶ்ரீ காளியம்மன் திருக்கோவில் 48ஆம் நாள் மண்டல அபிஷேக விழா நடைபெற்றது.

இதில் பல்வேறு யாகபூஜைகளை தொடர்ந்து யாகசாலையில் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடாகி புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோவிலை சுற்றி வலம் வந்து கோவில் கருவறையில் அமைந்துள்ள காளியம்மன் மீது புனித நீர் ஊற்றப்பட்டு 48வது நாள் மண்டல பூஜையும் 108 சங்காபிஷேகமும் நடைபெற்றது.

இதில் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை தேவேந்திர குல வேளாளர் உறவின்முறை மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.