விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கனிமவளக் கொள்ளையை தடுக்க தவறிய வட்டாட்சியர் உள்ளிட்ட ஏழு அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இ.குமாரலிங்கபுரம் ஜவுளி பூங்கா அமையவுள்ள இடத்திற்கு அருகில் பெரிய கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் விவசாய பயன்பட்டிற்கு களிமண் எடுக்க அனுமதி பெற்றுக்கொண்டு சுமார் 20 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி கிராவல் மண்ணை கொள்ளையடித்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனுக்கு புகார் கிடைத்துள்ளதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளார். ஆனாலும் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஆட்சியர் தனி குழு மூலமாக அப்பகுதியில் நடத்திய ஆய்வில் அங்கு பெரிய அளவில் கனிமவள கொள்ளை நடந்துள்ளதும்,
அதற்கு வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் உடந்தையாக இருந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கனிம வள கொள்ளையை தடுக்க தவறியதாக சாத்தூர் வட்டாட்சியர் ராமநாதன் 4 வருவாய் துறை அதிகாரிகள், நீர்வளத்துறை உதவி பொறியாளர் மற்றும் வேளாண்மை துறை உதவி வேளாண் அலுவலர் உள்ளிட்ட 7 அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாசி மாத பூஜைகள் நாளை தொடங்குகின்றன. இதை முன்னிட்டு சபரிமலை கோயில் நடை இன்று பிப்12 மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரூ ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்தார். இன்று வேறு பூஜைகள் எதுவும் நடைபெறாது.
நாளை அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், நெய்யபிஷேகம், உஷபூஜை உள்பட வழக்கமான பூஜைகள் தொடங்கும். இரவில் படி பூஜையும் நடைபெறும். வரும் 17ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும்.
கேரளா வனப்பகுதியில் தற்போது கடும் வெயில் வாட்டில் எடுத்து வரும் நிலையே பம்பை சபரிமலையில் வெயில் மிக அதிக அளவில் இருந்தது இதனால் சபரிமலை வரும் பக்தர்கள் வாகனங்களை தொடர்ந்து பம்பையில் நிறுத்தவும் பம்பையில் நீராடவும் குடிநீர் வசதி மருத்துவ வசதி உட்பட மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தேவர்சம்போடு செய்து கொடுத்துள்ளது மேலும் பக்தர்களுக்கு ஐந்து நாட்களிலும் அன்னதானம் வழங்கப்படும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சபரிமலை பம்பை பகுதியில் நிலவும் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண குள்ளார் அணைகுல்லார் அணைஇன்று (12) திறக்கப்பட்டது.இதனால் பம்பா நதியில் நீர் மட்டம் ஐந்து சென்டிமீட்டர் வரை உயரக்கூடும்.
பத்தனம்திட்டா – சபரிமலை கும்பமாச பூஜையின் ஒரு பகுதியாக பம்பாவில் போதுமான நீர் மட்டத்தை உறுதி செய்வதற்காக, கக்காடு சீதாத்தோடில் உள்ள கே.எஸ்.இ.பி (அணை பாதுகாப்பு பிரிவு) நிர்வாகப் பொறியாளருக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ். பிரேம்கிருஷ்ணன் அனுமதி அளித்துள்ளார்.
பிப்ரவரி 17 ஆம் தேதி வரை தினமும் 20,000 கன மீட்டர் தண்ணீர் திறந்து விடப்படும். பம்பா நதியில் நீர் மட்டம் ஐந்து சென்டிமீட்டர் வரை உயரக்கூடும்.
உசிலம்பட்டி அருகே சுமார் 35 ஆண்டுகளுக்கு பின்பு ஆண்டிச்சாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயககனூர் ஊராட்சிக்குட்பட்ட நோட்டம்பட்டியில் சுமார் 35 ஆண்டுகளுக்கு பின்பு கோவில் புனரமைப்பு செய்து ஆண்டிச்சாமி க்கு கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு யாகங்கள் செய்தனர். அதனைத் தொடர்ந்து , மதுரை யதிராஜன் தலைமையில் சிவாச்சாரியர்கள் கோவில் கருவறையில் உள்ள ஆண்டிச்சாமிக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.
பின்பு, பால்,சந்தனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதில், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு ஆண்டிச்சாமி சாமியை தரிசனம் செய்து வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து, அன்னதானம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
கருப்பட்டி கருப்பண்ணசாமி கோயில் கும்பாபிஷேகம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஐய்யனார் ஸ்ரீ கருப்பண்ணசாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் காலயாக பூஜை தொடங்கியது தொடர்ந்து அய்யனார் கருப்பண்ண சாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது
அதனை தொடர்ந்து சனிக்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜையும் மாலை மூன்றாம் கால யாக பூஜையும் நடைபெற்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கருப்பட்டி இரும்பாடி நாச்சிகுளம் அம்மச்சியாபுரம் கணேசபுரம் பொம்மன் பட்டி பாலகிருஷ்ணாபுரம் சாலாச்சிபுரம் ஆகிய சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை கருப்பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்
மதுரை கோயில்களில் சோமவார பிரதோஷம்:
மதுரை மாவட்டத்தில் உள்ள சிவன் ஆலயங்களில், சோமவாரம் பிரதோஷம் நடைபெற்றது.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், இம்மையில் நன்மை தருவார், பழைய சொக்கநாதர் கோவில், தெப்பக்குளம் முக்தீஸ்வரர், மதுரை அண்ணாநகர், வரசித்தி விநாயகர், மதுரை யாணைக்குழாய் முத்துமாரியம்மன், ஜெ. ஜெ. நகர் வர சக்தி விநாயகர், திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர், மதுரை அண்ணாநகர் வைகை காலனி, வைகை விநாயகர், மதுரை ஆவின் பால விநாயகர், திருவேடகம் ஏடகநாதர், தென்கரை மூல நாதர் கோயில்களில் பிரதோஷ பூஜைகள் நடைபெற்றது.
மதுரை விசாக நட்சத்திர ஸ்தலமாக விளங்கும், பிரளயநாதர் சிவன் ஆலயத்தில், நரசிம்மர், சனீஸ்வர லிங்கம், நந்திகேஷ்வரர், சுவாமிக்கு, சிறப்பு அபிஷேக, செய்யப்பட்டது. இதில், தொழிலதிபர் எம். வி. எம். மணி, கவுன்சிலர் எம். மருது பாண்டியன், கோயில் செயல் அலுவலர் ச. இளமதி, கணக்கர் சி. பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கோயில் சார்பில், பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
மஞ்சமலை சுவாமி திருவிழா பிடிமண் கொடுக்கும் நிகழ்ச்சியில் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், வலையபட்டி கிராமத்தில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளஸ்ரீ மஞ்சமலை சுவாமி கோவில் திருவிழா கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்றது தற்போது, திருவிழாவிற்கான பிடி மண் கொடுக்கும் நிகழ்ச்சி வலையபட்டி ஜமீன்தார் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம். எல் .ஏ. கலந்து கொண்டார். இதை காண்பதற்காக 5000க்கும் மேற்பட்டோர் லந்து கொண்டனர். முகூர்தகால் ஊன்றும் பணி நடைபெறும் என, வலையபட்டி அரசம்பட்டி | லக்கம்பட்டி சல்லி கோடங்கிபட்டி வ.புதுார் ஆகிய ஐந்து ஊர் கிராம பொதுமக்கள் தெரிவித்தனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழாவினை முன்னிட்டு இரவு ஒரே நேரத்தில் முருகன், தெய்வானையுடன் இரண்டு உற்சவர்கள் எழுந்தருளுகின்றனர். ஆண்டுக்கு ஒரு முறை (முருகன் – தெய்வானை) இரண்டு உற்சவர்கள் வீதி உலா வரும் அரிய காட்சிகள் பக்தர்களை பரவசப்படுத்தின.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் பௌர்ணமியுடன் கூடிய பூச நாளில் வரும் தை பூச திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாகும்.
இந்த ஆண்டிற்கான தைப்பூச விழா , லட்சகணக்கான பக்தர்கள் வருகையால் வெகு விமர்ச்சியாக கொண்டாடப்படுகிறது. தை பூச விழாவையொட்டி, திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இருந்து மலை அடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் கோவிலுக்கு மேள தாளங்கள் முழங்க பூஜை பொருட்கள் எடுத்து ஊர்வலமாககொண்டு செல்லப்படுகிறது.
பழனியாண்டவருக்கு ராஜ அலங்காரம்:
இதனை தொடர்ந்து பழனியாண்டவருக்கு உகந்த பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான பால், பன்னீர், தயிர், திருமஞ்சனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு விசேஷ அபிஷோ ஆராதனையுடன் பூஜை நடைபெற்றது. இதனையடுத்து, பழனியாண்டவருக்குகண்கொள்ளாக் காட்சியாக ராஜ அலங்காரம் செய்யப்பட்டது.
பழனியாண்டவர் சந்நிதியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பய பக்தியுடன் பழனியாண்டவரை வழிபட்டனர். 2 முருகன், தெய்வானையுடன் உற்சவர் 2 முருகப்பெருமான் தைப்பூச திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக இரவு. 630 மணிக்கு திருப்பரங்குன்றம் சன்னதியில் புறப்பட்டு ஒரே நேரத்தில் 2 முருகன் தெய்வானையுடன் உற்சவர்கள் 2 முருகப்பெருமான் எழுந்தருளுகின்றனர்.
அதாவது, சுப்பிரமணியசுவாமி தெய்வானை அம்பாளும், முத்துக்குமார சுவாமி தெய்வானை அம்பாளுமாக ஒரேநேரத்தில் எழுந்தருளி நகர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
இவ்வாறு ஆண்டிற்கு ஒரு முறை ஒரே நேரத்தில் 2 முருகப்பெருமான், 2 தெய்வானைஎழுந்தருளுவது என்பது திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் தைப்பூச திருவிழாவின் தனி சிறப்பாக இருந்து வருகிறது.
மதுரை மாவட்ட கோயில்களில் தைபூசத்தையொட்டி, முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி, அழகர் கோவில் பழமுதிர் சோலை முருகன் கோயில், மதுரை ஆவின் சாத்தமங்கலம் பால விநாயகர் ஆலயம், மதுரை பாண்டி கோயில் ஜெ. ஜெ. நகர் வர சக்தி விநாயகர், மதுரை தாசில்தார் நகர் வரசித்தி விநாயகர், மதுரை அண்ணாநகர், வைகை காலனி வைகை விநாயகர், வைகை காலனி கிழக்கு சக்தி மாரியம்மன், மதுரை தாசில்தார் நகர் சௌபாக்கிய விநாயகர் ஆலயங்களில், பக்தர்களால், முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கரிக்கப்பட்டு, அர்ச்சணைகள், பிரசாதம் வழங்கப்பட்டது.
சௌபாக்கிய விநாயகர் கோவிலில், கோயில் நிர்வாகம் சார்பில், பிரசாதங்களை, கோயில் நிர்வாகிகள் வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் செய்தனர்.
வேல்முருகன் கோயிலில் தை பூசம்:
மதுரை மாவட்டம், பாலமேட்டில் கஜேந்திரன் வளாகத்தில், அமைந்துள்ள ஸ்ரீ வேல்முருகன் கோவிலில் தைப்பூசம் 52 வது ஆண்டு விழாவை முன்னிட்டு, பாலமேடு பழனி பாதயாத்திரை குழு குருநாதர் பாலமேடு பேரூராட்சி முன்னாள் தலைவர் கஜேந்திரன் தலைமையில் சாதுக்களுக்கு வேஷ்டி ,பழம் வழங்கி அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக , காவடி எடுத்து ஊர்வலம் மாக வந்தனர். இதில், முருக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .
கொண்டையம்பட்டி வயித்துமலை சித்தன் சிவசுப்பிரமணியன் கோவிலில் தைப்பூச விழா!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி கிராமத்தில் வயித்து மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வயியித்துமலை சித்தன் சிவசுப்பிரமணியன் திருக்கோவிலில் 16ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழா நடைபெற்றது
திருவிழாவை முன்னிட்டு கடந்த நாலாம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பறவை காவடி பால்குடம் இளநீர் காவடி எடுக்கும் நிகழ்ச்சி காலை 10 மணிக்கு கொண்டையம்பட்டி மந்தை திடலில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து ஐந்து கிலோமீட்டர் தூரம் உள்ள வயித்துமலை அடிவாரத்தில் உள்ள வயித்துமலை சித்தன் சிவசுப்பிரமணியன் திருக்கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றனர்
வழிநெடுக கிராம மக்கள் சர்பத் மோர் இளநீர் தர்பூசணி உள்ளிட்ட குளிர் பானங்கள் மற்றும் பழங்களை பொதுமக்களுக்கு வழங்கி தாகத்தை தனித்தனர் சுமார் ஒரு மணி நேர பாதயாத்திரைக்குப் பின்பு வயித்து மலை அடிவார கோவிலுக்கு வந்தடைந்த பக்தர்கள் சிவசுப்பிரமணியனுக்கு பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
ஊர்வலத்தில் பெண்கள் இளநீர் காவடி எடுத்தும் வேல் காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் குழந்தைகள் சாமியாடி ஊர்வலமாக சென்றனர் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
தைப்பூச விழாவை தொடங்கி வைத்தவர்கள் மதியழகன் ஆர் கே பி குமார் முனியாண்டி சேகர் முருகன் மற்றும் பால்குட நிகழ்ச்சியை தொடங்கி வைத்தவர்கள் முருகானந்தம் அனு மற்றும் முத்துராமலிங்கம் மாணிக்கம் சாந்தி மற்றும் பால்பாண்டி சுந்தரமூர்த்தி உள்பட விழா குழுவினர் செய்திருந்தனர்
விருதுநகர் அருகே கள்ளத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்ததாக போலீஸ் ஒருவரை கைது செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய மற்றொருவரும் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் இரு சக்கர வாகனத்தில் வருவதாக விருதுநகர் மாவட்ட காவல்துறைக்கு தகவல் வந்தது. அதன் பேரில் சாத்தூர்- விருதுநகர் 4 வழிச் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடு பட்டனர்.
இந்நிலையில், பட்டம்புதூர் பகுதியில் மது போதையில் இருவர் சந்தேகப்படும்படி உள்ளதாக கிராம மக்கள் வச்சகாரப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் அங்கு சென்றனர். போலீசைக் கண்டதும், ஒருவர் இரு சக்கர வாகனத்தில் தப்பியுள்ளார்.
மற்றொருவரைப் பிடித்து விசாரித்ததில், அவர், கூமாபட்டியைச் சேர்ந்த தனுஷ்கொடி எனவும், விருதுநகர் ஆயுதப்படையில் காவலராக பணி புரிவதும் தெரிய வந்தது. மேலும், அவரிடமிருந்து கள்ளத் துப்பாக்கி மற்றும் 5 குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
எனவே, அவரிடம் மேலும் போலீசார் விசாரணை நடத்தினர்.அதில், விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட விழுப்புரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை, சிறைக்கு அழைத்து செல்லும் போது, தனக்கு அவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், நகைகளை விற்க வேண்டும் என சுரேஷ் அழைத்ததால் சென்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தப்பியோடிய சுரேசையைம் போலீசார் கைது செய்தனர். மேலும், இதுகுறித்து பூசாரிப்பட்டியைச் சேர்ந்த இராமசாமி என்பவர் கொடுத்த புகாரின் பேரில், வச்சக்காரப்பட்டி காவல் நிலைய போலீசார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நாளைக்கே- “மாநில அரசின் நிர்வாக முடிவுகளில் தலையிட உச்சநீதிமன்றத்துக்கு அனுமதி இல்லை”-
“தமிழகம் தொடர்பான பிரச்னைகளில் உச்சநீதி மன்றம் தாமாக முன்வந்து (Suo Motto) ஏதேனும் எடுத்தால் அதற்குத் தமிழக அரசின் முன் அனுமதியைப் பெற வேண்டும்”-
“ஆளுநர் என்பவர் எவ்வாறு மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசின் மசோதாக்களில் கை எழுத்துப் போட மட்டுமே அதிகாரம் உள்ளவரோ அதே போன்று உச்சநீதி மன்றமும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களுக்கு ஆதரவாக தீர்ப்பளிக்கும் அதிகாரம் மட்டுமே கொண்டது”-
“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினர் மீது எவ்வளவு கடுமையான கிரிமினல் குற்றச்சாட்டோ சிவில் குற்றச்சாட்டோ பதிவானாலும் அதன் மீது தீர்ப்பளிக்கும் உரிமை சபாநாயகருக்கு மட்டுமே உள்ளது – கீழமை நீதிமன்றங்கள் முதல் உச்ச நீதி மன்றம் வரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பான வழக்குகளில் தலையிட முடியாது – சபாநாயகர் கூறும் தீர்ப்பே இறுதியானது”…
இப்படி விதம் விதமாக தீர்மானங்களை போட்டு – அதற்கு ஆளுநரும் கையெழுத்துப் போட்டு – உச்ச நீதிமன்ற நீதிபதிக்கே அனுப்பினாலும் அனுப்புவார்கள்!
உடனே உச்சநீதிமன்றம் தலையிட்டு இப்படி எல்லாம் தீர்மானம் போட மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா?- என்று அட்டர்னி ஜெனரலிடம் கருத்துக் கேட்கும்!
அட்டர்னி ஜெனரல் – “இந்த மாதிரி எல்லாம் தீர்மானம் போட அதிகாரம் ஏதும் மாநில அரசுக்கு இல்லை”- என்று கருத்து தெரிவிப்பார்.
உடனே மாநில அரசு – “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் என்பதே ஆகப் பெரிய உரிமைகளும் அதிகாரங்களும் பெற்ற அமைப்பு. அதன் முடிவுகளுக்கு இசைவு தெரிவிப்பதை தவிர உச்சநீதி மன்றத்துக்கு வேறு வழியில்லை!”
“ஆளுநர் என்பவர் மாநில சட்டமன்றம் இயற்றும் சட்டங்களுக்கு கை எழுத்துப் போட்டு அனுப்பும் போஸ்ட் மேன் என்றால் அதன் மீது ஒப்புதல் முத்திரை குத்தும் போஸ்ட் மாஸ்டர் போன்றதுதான் உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட எல்லா நீதிமன்றமும்!”- இப்படி ஒரு வாதத்தை “மக்கள் ஜனநாயக” வக்கீல்களை நியமித்து மாநில அரசு முன்வைக்கும்!
இதைக் கேட்டுவிட்டு உச்சநீதி மன்ற நீதிபதிகள் கொண்ட “பெஞ்ச்” ஒன்று அமைக்கப்படும்.
” மாநில அரசுக்கு இப்படி எல்லாம் தீர்மானம் இயற்ற அதிகாரம் இல்லை – தனது அதிகார வரம்பை மாநில அரசு மீறியுள்ளது”- என்று பெஞ்ச் நீதிபதிகள் தீர்ப்பளிப்பார்கள்.
அதிலும் 3 பேர் இப்படி- 2 பேர் வேறு மாதிரி என்று தீர்ப்பளிப்பார்கள்.
இப்படியே மாறி மாறி விளையாடிக் கொண்டு இருப்பார்கள்.
நாமும் பொழுது போவதற்கு சுவாரஸ்யமாக இதை எல்லாம் வேடிக்கை பார்ப்போம்!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மலை அடிவார கோயிலில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஆண்கள் மட்டும் பங்கேற்கும் கோயில் குருபூஜை விழா நடந்தது.
தேவதானம் மேற்கு தொடர்ச்சி அடிவாரம் முகவூர் தெற்கு தெருவில் வனப்பேச்சி அம்மன் கோயில் உள்ளது. முகவூரில் பல்வேறு சமூகத்தினர் வசித்தாலும் ஹிந்து நாடார் குடும்பத்தில் உள்ள ஆண்களின் அருமை குறித்து பெண்களுக்கும், பெண்களின் அருமை குறித்து ஆண்களுக்கும் உணர்த்தும் விதமாகவும் பல்வேறு குடும்ப பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதமாகவும் வனப்பேச்சி அம்மன் அருள்வாக்கு கூறியதால் பல தலைமுறைகளாக இவ்வழிபாட்டை மேற்கொள்கின்றனர்.
ஆண்களுக்கென பிரத்தியேக கோயிலாக உள்ள இங்கு விழாவின் முதல் நாளான நேற்று முன்தினம் மதியம் பெண்களை மட்டும் ஊரில் விட்டுவிட்டு சிறுவர்கள் இளைஞர்கள் என அனைத்து ஆண்களும் 4000 கிலோ அரிசி மளிகை பொருள் காய்கறிகளுடன் வனப்பேச்சி அம்மன் கோயில் வளாகத்திற்கு வந்தனர்.
ஆண்கள் வெளியேறியதும் பெண்கள் ஊரில் நுழையும் 12 பொது பாதைகளையும் மூடினர். அலைபேசி, கண்காணிப்பு கேமரா உபயோகம் கூடாது. கதவை பூட்டக்கூடாது போன்ற கட்டுப்பாடுகளுடன் வனப்பேச்சி அம்மனை வழிபாடு செய்து பாரம்பரிய விளையாட்டுகளுடன் இரவு முழுவதும் துாங்காமல் விழா கொண்டாடினர்.
ஆண்கள் மலையடிவார கோயிலில் சிறிய குடில்கள் அமைத்து தங்குவதுடன் இரவு முழுவதும் இளைஞர்கள் சிறுவர்கள் என அனைவரும் சேர்ந்து உணவு சமைத்து மொத்தமாக சுவாமிக்கு படையல் இட்டனர்.
பின் குடில்களில் போடப்பட்ட இலைகளில் படையல் உணவை அனைவருக்கும் பகிர்ந்த பின் சிறப்பு வழிபாடு அரோகரா கோஷம் எழுப்பியதும் தாங்கள் கொண்டு வந்த பாத்திரங்களில் அன்னப்பிரசாதத்தை எடுத்துக்கொண்டு நேற்று ஊர் திரும்பினர்.
எல்லையில் காத்திருந்த பெண்களிடம் பிரசாதத்தை காட்டிய பின் ஊருக்குள் அனுமதிக்கப்பட்டு அத்துடன் விழா நிறைவடைந்தது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இத்திருவிழாவால் அப்பகுதி விழாக்கோலமாக காணப்பட்டது.
‘பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் இலவச காட்டன் வேட்டி சேலை திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஊழல் செய்து கொண்டிருக்கிறார் அமைச்சர் கமிஷன் காந்தி” என தமிழக பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ஊழல் அமைச்சர் கமிஷன் காந்தி, உடனடியாகப் பதவி விலக வேண்டும்!
பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் இலவச காட்டன் வேட்டி சேலை திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஊழல் செய்து கொண்டிருக்கிறார் அமைச்சர் கமிஷன் காந்தி. கடந்த ஆண்டு, வேட்டி நெசவு செய்யப் பயன்படுத்தப்படும் கிலோ ₹320 வரை விற்கப்படும் பருத்தி நூலைக் குறைவாகவும், அதில் பாதி விலையான ₹160க்கே கிடைக்கும் பாலியஸ்டர் நூலை அதிகமாகவும் வாங்கி வேட்டி தயாரித்து மக்களை ஏமாற்றியதை, தமிழக பாஜக சார்பாக, கோவையில் உள்ள ஜவுளி ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு செய்து, மக்களுக்கு கொடுத்த வேட்டியில் 78 சதவீதம் பாலியஸ்டர், வெறும் 22 சதவீதம் மட்டுமே காட்டன் என்பதைக் கண்டறிந்து, உற்பத்திச் செலவில் மிகப்பெரிய அளவில் ஊழல் செய்திருப்பதை வெளிப்படுத்தினோம்.
2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி, தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அதிகாரிகள் தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் என்னை சந்தித்து இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விளக்கங்களை கேட்டறிந்தனர். மேலும், அதிகாரிகள் கேட்டதற்கிணங்க, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட வேட்டி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரகத்தில் ஜூலை 13ஆம் தேதி ஒப்படைக்கப்பட்டது.
தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம், இந்த ஊழல் புகார் தொடர்பாக இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?
இந்த ஆண்டும், பொங்கல் தொகுப்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வேட்டியில், வழக்கமாகப் பயன்படுத்தி வந்த பருத்தி நூலின் அளவைக் குறைத்து விட்டு, விலை குறைவான பாலியஸ்டர் நூலைப் பயன்படுத்தி ஊழல் செய்திருக்கிறார்கள்.
இதனை அடுத்து, தமிழக அரசு கைத்தறித் துறையின் இயக்குனரான, ஐஏஎஸ் அதிகாரி சண்முகசுந்தரம், தரப்பரிசோதனையில் தெரிவு செய்யப்படாத சுமார் 20 லட்சம் வேட்டிகளை, அந்தந்த கூட்டுறவு சங்கங்களுக்கே திருப்பி அனுப்பி, அதே எண்ணிக்கையில், நிர்ணயிக்கப்பட்ட தரத்திலான வேட்டிகளை, அரசு கொள்முதல் கிடங்குக்கு அனுப்பி வைக்கக் கூறி, கடந்த டிசம்பர் 3, 2024 அன்று குறிப்பாணை அனுப்பியிருக்கிறார்.
கூட்டுறவு சங்கங்கள் தரமான வேட்டிகளை அனுப்ப எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மீண்டும், கடந்த 06ம் தேதி , நிர்ணயிக்கப்பட்ட தரத்திலான வேட்டிகளை அரசு கொள்முதல் கிடங்குக்கு அனுப்பவில்லை என்றால், இழப்பீடு நடவடிக்கை எடுப்பதோடு, எதிர்காலத்தில் இந்த சங்கங்களுக்கு உற்பத்தி திட்டம் வழங்கப்பட மாட்டாது என்பதையும் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், கூட்டுறவு சங்கங்கள் என்ற பெயரில், தனது பினாமி நிறுவனங்கள் மூலம் மக்கள் பணத்தை நூதனமாகக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அமைச்சர் காந்தி, தான் செய்யும் ஊழலுக்கு, ஐஏஎஸ் அதிகாரி சண்முகசுந்தரம் தடையாக இருக்கிறார் என்பது தெரிந்ததும், அடுத்த இரண்டு நாட்களில், அவரை கைத்தறித் துறையில் இருந்து பணிமாற்றம் செய்திருக்கிறார்கள்.
கைத்தறித் துறையில் நடக்கும் மெகா ஊழலைக், கடந்த ஆண்டே கண்டுபிடித்துக் கூறியும், முதல்வர் அவரைத் தொடர்ந்து அதே துறையில் அமைச்சராக நீடிக்கச் செய்கிறார் என்றால், அமைச்சர் செய்யும் ஊழலின் பங்கு, முதல்வருக்கும் செல்கிறது என்பதுதானே பொருள்? தனது பணியை சரியாகச் செய்து, ஊழல் நடப்பதை வெளிக்கொண்டு வந்த அரசு அதிகாரியை, இரண்டு நாட்களிலேயே பணிமாற்றம் செய்திருப்பது அதைத்தானே உறுதிப்படுத்துகிறது? இப்படி ஒரு ஆட்சி நடத்த அசிங்கமாக இல்லையா?
ஒவ்வோர் ஆண்டும், ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகளில் கொள்ளையடிக்கும் அமைச்சர் காந்தி, இனியும் கைத்தறித் துறை அமைச்சராக நீடிக்கக் கூடாது. உடனடியாக, அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.
வரும் 2026 ஆம் ஆண்டு, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.