Home Blog Page 198

மீண்டும் ‘மனதின் குரல்’: ஜரூராகத் தயாராகும் மோடி!

manadhinkural - 2026
#image_title

பிரதமர் நரேந்திர மோடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு தனது கருத்துக்களை எடுத்துரைத்து, உரையாற்றி வருகிறார். மோடி பிரதமராக இருந்த இந்த பத்து ஆண்டுகளில் நூறு எபிசோட்கடந்து இந்த நிகழ்ச்சி வானொலி, தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியைக் கேட்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம் என்பதால், வானொலிக்கு விளம்பர வருவாய் இந்த நிகழ்ச்சியின் மூலம் அதிகரித்தது. 

இதனிடையே, நாடாளுமன்றத் தேர்தல் நன்னடத்தை விதிகள் காரணமாக கடந்த 3 மாதங்களாக இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை இல்லாமல், நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தற்போது, மோடி 3-வது முறையாக மீண்டும் பிரதமராகப் பதவியேற்றுள்ளார். இந்த நிலையில் மனதின் குரல் நிகழ்ச்சி மீண்டும் ஒலிபரப்பாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “தேர்தல் காரணமாக சில மாத இடைவெளிக்குப் பிறகு மனதின் குரல் நிகழ்ச்சி மீண்டும் தொடங்க உள்ளது என்பதைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மாத நிகழ்ச்சி வருகிற 30-ந் தேதி நடைபெறும். அனைவரும் உங்கள் யோசனைகளை பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியின் 110வது பகுதி, கடந்த பிப்ரவரி 25-ல் கடைசியாக ஒலிபரப்பப்பட்டது. மூன்று மாத இடைவெளிக்குப் பின், தற்போது ஜூன் மாத இறுதி ஞாயிற்றுக் கிழமையில், மீண்டும் மனதின் குரல் ஒலிபரப்பாகவுள்ளது குறிப்பிடத் தக்கது. 

பிரதமர் மோடியின் முந்தைய 110வது மனதின் குரல் நிகழ்ச்சியின் சுட்டி… 

ஆசிரியர்களின் வருமான வரி குறைக்கப்பட வேண்டும்: அயோத்தி கூட்டத்தில் தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

desiya asiriyar sangam kandasamy in meeting - 2026

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் தேசிய ஆசிரியர் சங்கம் (தமிழ்நாடு) இணைந்துள்ள அகில பாரதீய ராஷ்டிரிய சைக்ஷிக் மஹா சங்கம்(ABRSM) தேசிய செயற்குழுக் கூட்டம் ஜூன் 15,16,17 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தேசிய ஆசிரியர் சங்கம் – தமிழ்நாடு சார்பில் மாநிலத் தலைவர் திரிலோகசந்திரன், பொதுச் செயலாளர் மு‌‌.கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாடு முழுவதும் இருந்து அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, கடந்த கால செயல்பாடுகள்,
வருங்கால நிகழ்வுகள் குறித்து விவாதித்தனர் .

இந்தக் கூட்டத்தில், தேசிய ஆசிரியர் சங்கம் – தமிழ்நாடு
சார்பில், அதன் பொதுச்செயலாளர் மு.கந்தசாமி கலந்து கொண்டு பேசிய போது, ஆசிரியர் மற்றும் மாணவர் நலம் சார்ந்த கீழ்க்காணும் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

அகில பாரதீய ராஷ்ட்ரீய சைக்ஷிக் மஹாசங்கம் – ABRSM தேசிய செயற்குழுக் கூட்டத்தில், தேசிய ஆசிரியர் சங்கம்- தமிழ்நாடு வலியுறுத்திய கோரிக்கைகள்:

1) நாடு முழுவதும் தேசிய / பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு கடைசி ஊதியத்தில் 50% கிடைக்கும் பழைய ஓய்வூதியம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்

2) ஆசிரியர் மாணவர் விகிதம் 1:25 என உள்ளவாறு அனைத்து நிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களும் முறையான நியமனமாக கால முறை ஊதியத்தில் மட்டுமே செய்யப்பட வேண்டும். (தரமான சமமான கல்வித்தரம் உறுதி செய்திட).

3) ஆசிரியர்கள் ஆண்டுதோறும் வருமான வரியாக, பெரும் தொகை செலுத்தி வருவது மிக அதிருப்தி அளிக்கிறது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு, வருமான வரி விகிதங்கள் குறைக்கப்பட வேண்டும் அல்லது தனி வருமான வரி விகித அட்டவணை வழங்கப்பட வேண்டும்.

4) அனைத்து நடுநிலை உயர்நிலைப் பள்ளிகளிலும் NCC அமைப்பு செயல்பட வேண்டும்.

5) NMMS தேர்வில் வெற்றி பெற்று பரிசுத்தொகை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையும் பரிசுத்தொகையும் இரு மடங்காக அதிகரிக்கப்பட வேண்டும்.

6)1-8. வகுப்பு போதிக்கும் அனைத்து வகை ஆசிரியர்களும் பதவி உயர்வு பெறுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி பெற வேண்டும் என்ற வகையில் விவாதப் பொருளாகி உள்ள NCTE NOTIFICATION RTE சட்டம் நிறைவேற்றப்பட்ட 23-8-2010 க்கு முன் பணியேற்ற ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்ற அறிவிப்பாணை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7) 23-8-2010 இல் RTE சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் தமிழ்நாட்டில் ஆசிரியர் பணி நியமனத்திற்கு TET தேர்வு கட்டாயம் என 16-11- 2012 இல் தான் முறையான அறிவிப்பு வழங்கப்பட்டதை கருத்தில் கொண்டு இடைப்பட்ட காலத்தில் பணி நியமனம் பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கும் தவிர்ப்பாணை வழங்கப்பட்டது போலும், கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் 2013 வரை நியமிக்கப்பட்டவர்களை பணி வரன்முறை படுத்தியது போல தமிழ்நாட்டில் பணிபுரியும் சிறுபான்மையற்ற ஆசிரியர்களை பணி வரன்முறை படுத்தி 1500ஆசிரியர்கள் பணிப்பாதுகாப்பு மற்றும் உரிய ஊதியம் உள்ளிட்ட இதர சலுகைகள் பெறவும் NCTE ஐ வலியுறுத்தி தவிர்ப்பாணை பெற வேண்டும்.

8) தமிழ்நாட்டின் பிற மாநில எல்லைப்புற மாநிலங்களில் பயிலும் மாணவர்கள் கல்வி வேலைவாய்ப்புகளில் பயன்பெறும் வகையில் மும்மொழிக் கொள்கை (அவர்கள் விரும்பும் தாய்மொழி) ஏற்கப்பட வேண்டும். – ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன.

இந்தக் கூட்டத்தில், 1. சங்க அமைப்பை க்ளஸ்டர் CLUSTER அளவில் கொண்டு செல்வது தலையாய பணியாக இருக்க வேண்டும்,

2 NEP 2020 ஐ அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்த வேண்டும்,

3. ஆசிரியர்கள் முன் மாதிரியாக நடந்து கொண்டு சமூக பிரச்னைகளை தீர்க்கப்பாடுபடுவதன் மூலம் மாணவர்களை மேற்படி பணியில் ஈடுபடுத்த முடியும் என்ற வகையில் பணியாற்ற வேண்டும்,

4. ஆசிரியர்கள் சார்ந்த பிரச்சனைகளில் தீர்வு காண மத்திய அரசை தேசிய அமைப்பும் அந்தந்த மாநில அரசுகளை மாநில அமைப்புகளும் வலியுறுத்த வேண்டும் – எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்திற்கு தேசிய துணைத் தலைவர் மகேந்திர குமார் தலைமை தாங்கினார். அமைப்புச் செயலாளர் மகேந்திர கபூர் , இணை அமைப்பு செயலாளர் லட்சுமண் பொதுச்செயலாளர் சிவானந்த சிந்தன்கரே ஆகியோர் வழிநடத்தினர்.

ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழா; பால்குடம், அக்னிச் சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா பக்தர்கள் பால்குடம் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன்!

சோழவந்தான் ஜெனகைமாரியம்மன்கோவில் மிகவும் பிரசித்திபெற்றது.இக்கோவிலில் கடந்த 10 தேதி வைகாசிபெருந்திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதில் இருந்து தினசரி அம்மன்புறப்பாடு நடைபெற்றது. இதில் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான பால்குடம் அக்னிச்சட்டி எடுக்கும் திருவிழா இன்று நடந்தது.இதில் பக்தர்கள் வைகை ஆற்றுக்கு சென்று பூஜை செய்து பால்குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்து அங்கிருந்து கோவில் முன்பு உள்ள மூன்றுமாத கொடிக்கம்பத்தைச் சுற்றி நான்கு ரத வீதி வலம் வந்து நேர்த்திகடனை செலுத்தினார்கள்.இந்த விழா நேற்றுஇரவு முதல் பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து வந்தனர்.

நேர்த்திக் கடனுக்காக உருவபொம்மை, ஆயிரங்கண்பானை, 21அக்னிச்சட்டி, கரும்பு தொட்டில் குழந்தை எடுத்து வருதல், கரும்புள்ளி செம்புள்ளி குத்தி வருதல், அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

அண்டை மாநிலங்களில் இருந்தும் மற்றும் பலமாவட்டங்களில் இருந்து பக்தர்கள் ஆயிரக்கணக்கான பேர்வருகை புரிந்து திருவிழாவை கண்டுகளித்து அம்மனை தரிசித்தனர்.

இவ்விழாவை முன்னிட்டு முத்துமுருகா அறக்கட்டளை தலைவர் வக்கீல் சிவக்குமார் ஏற்பாட்டில் பக்தர்கள் வசதிக்காக அதி நவீன மின்ஒளியில் வைகை ஆற்றில் மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து பக்தர்கள் குளிப்பதற்கு பல இடங்களில் குழாய் வசதி செய்திருந்தனர். இந்த வசதியை ஏற்படுத்தி இருந்த அறக்கட்டளை நிர்வாகத்தினரை பக்தர்கள் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

அரசன் சண்முகனார் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள்மாணவர் சங்கம்.உட்பட பல்வேறு அமைப்பில் இருந்து நீர்,மோர் வழங்கினார்கள்.எம்விஎம் குழுமத் தலைவர் மணிமுத்தையா, வார்டு கவுன்சிலர்கள் வள்ளிமயில், டாக்டர் மருதுபாண்டியன் மற்றும் முத்து குமரன் நகை மாளிகை இருளப்பன் ராஜா அன்னதானம் வழங்கினார்கள். இதே போல் பல இடங்களில் அன்னதானம் வழங்கினார்கள்.

சோழவந்தான் பேரூராட்சி சார்பாக பேரூராட்சித் தலைவர் ஜெயராமன், செயல் அலுவலர் செல்வகுமார்,சுகாதாரப் பணி ஆய்வாளர் சூரியகுமார்,துணைத்தலைவர் லதாகண்ணன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உட்பட பணியாளர்கள் வைகைஆற்றை சுத்தம் செய்து கூடுதலாக மின்விளக்கு,குடிநீர்வசதி, கழிப்பறைவசதி செய்திருந்தனர்.

இதேபோல் முள்ளிப்பள்ளம் ஊராட்சி மற்றும் தென்கரை ஊராட்சி பகுதிகளில் பக்தர்கள் வசதிக்காக வைகை ஆற்றில் இறங்கும் பகுதியில் பாதைகள் அனைத்திலும் சுத்தம் செய்யப்பட்டு கூடுதலாக மின்விளக்கு வசதிகள் செய்திருந்தனர்.

பக்தர்கள் செல்லக்கூடிய இடங்களில் டிராக்டரகளில் வாட்டர் டேங்க் அமைத்து ரோடுகளில் தண்ணீர் தெளித்து வெயில் தாக்கத்தை தனித்து பக்தர்களுக்கு குளிர்ச்சி ஏற்படுத்தினர்.

மாலை அம்மன் வைகை ஆற்றுக்கு சென்று அங்கு அபிஷேகம் நடைபெறும்.இரவு வைகை ஆற்றில் இருந்து பூப்பல்லக்கில் அம்மன் பவனி வந்து கோவிலை அடையும்.

சமயநல்லூர் டிஎஸ்பி ஆனந்தராஜ்,சோழவந்தான் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர்,என்சிசி மாணவர்கள்,சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

கச்சைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் ஆகியோர் முகாம் அமைத்திருந்தனர்.

நேற்று எட்டாம் நாள் மண்டபம் முன்னிட்டு சோழவந்தான் நாடக நடிகர் சங்க கிராமிய கலைக்குழுவின் சார்பாக கிராமிய தெம்மாங்கு பாட்டு கச்சேரி நடந்தது சீனிவாச பிரபு தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் எம் கே முருகேசன் முன்னிலை வகித்தார்.

டி ஆர் மகாலிங்கம் பேரன் டி ஆர் எம் எஸ் ராஜேஷ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சோழவந்தான் நாடக நடிகர் சங்க கிராமிய கலை குழுவின் தலைவர் சிவசுப்பிரமணியன் வரவேற்றார்.

நாளை மாலை மந்தைகளம் மைதானத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் செயல் அலுவலர் இளமதி தலைமையில் பணியாளர்கள் பூபதி வசந்த் கவிதா பெருமாள் உள்ளிட்ட பணியாளர்கள் செய்திருந்தனர். கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் பூஜைகள் செய்தனர்.

மதுரையில் லட்சுமி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா!

மதுரையில் அருள்மிகு லட்சுமி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது.

மதுரை மகாலட்சுமி நகர் குடியிருப்பு பகுதியில், உள்ள அருள்மிகு லட்சுமி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.

முன்னதாக, முதல் காலையாக பூஜை கடந்த 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு துவங்கி,
வாஸ்து சாந்தி மிருதச கிரகணம் வேதிகா அர்ச்சனை மண்டப பூஜை உள்ளிட்ட
வைகளோடு துவங்கியது.

இதனைத் தொடர்ந்து, யாக கால பூஜைகள் விநாயகர் பூஜை, விஷாந்த சந்த பூஜை ,
வேதிகா அர்ச்சனை, மண்டப பூஜை உள்ளிட்டவை இரண்டாம் நாள் நடைபெற்றது. பின்னர், நான்கு காலை யாகசால பூஜைகள் நடைபெற்றது.

யாகசாலை பூஜையில் விழா குழுவினர் உட்பட அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு மனமுறுக வேண்டினர். நான்கு கால யாகசாலை பூஜைக்கு பிறகு யாக குண்டத்தில் வைக்கப்பட்ட புனித நீர் கலசங்கள் சிறப்பு அபிஷேகத்திற்கு பிறகு , யாகசலையில் இருந்து கோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அருள்மிகு லட்சுமி விநாயகர் கோவிலுடைய விமானத்திற்கு மகா அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது.

தொடர்ந்து, பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கின்ற அடிப்பட்டையில் இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதில், பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, ஆன்றோர்கள் சான்றோர்கள் பொதுமக்கள் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆளுநரை உணர்ச்சி மயமாக்கிய ஒரு நூல் வெளியீட்டு விழா!

book release governor gazulu lakshmi narasu - 2026

வழக்குரைஞர், திரு ஜெகன்னாதன் அவர்கள் எழுதியுள்ள “First Native voice of Madras – Gazulu Lakshminarasu Chetty” என்ற நூலின் வெளியீட்டு விழா

இன்று 17.06.2024 மாலை சரியாக ஆறு மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சி என்றால் என்ன என யோசிக்கிறீர்களா? நமது நண்பர் வழக்குரைஞர், திரு ஜெகன்னாதன் அவர்கள் எழுதியுள்ள “First Native voice of Madras – Gazulu Lakshminarasu Chetty” என்ற நூலின் வெளியீட்டு விழாவைத்தான் சொல்கிறேன்.

எனக்கும் அழைப்பு வந்திருந்தது. எனவே நானும் சென்றிருந்த்டேன். இந்தப் புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என ஜெகன்னாத் கேட்டிருந்தார். எனவே நான் அதனை தமிழில் மொழி பெயர்த்திருந்தேன். அதனால்தான் எனக்கும் அழைப்பு வந்திருந்தது என நினைத்தேன்.

காஜுலு பற்றிய வீடியோ

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னர் SMaRT நிறுவனத்திலிருந்து ஒருவர் இன்று வெளியாக உள்ள நூலுக்கும் அவர்கள் நிறுவனத்திற்கும் உள்ள தொடர்பு பற்றிப் பேசினார். அதன் பின்னர் காஜுலு லக்ஷ்மிநரசு செட்டி அவர்கள் பற்றிய ஆங்கில வீடியோ ஒன்று ஒலிபரப்பப்பட்டது. இதன் தமிழ் வெர்சனும் தயாரித்தால் நல்லது. நான் அதனை மொழிபெயர்த்துத்து, டப்பிங் செய்து தருகிறேன். (ஜெகன்னத் மற்றும் குமரேசன் இருவரும் கவனிக்க)

வரவேற்புரையும் ஜெகன்னாத் அவர்களின் உரையும்

சரியாக மாலை ஆறு மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. CSIS-இன் (Centre for South Indian Studies – CSIS) திரு குமரேசன் அவர்கள் வந்தோரை வரவேற்றார். அவருக்குப் பின்னர் விருந்தினர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. பிறகு ஜெகன்னாத் ஆங்கிலத்தில் உரையாற்றினார். பிறகு மேகலாயா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நீதியரசர் எஸ்.வைத்யநாதன் அவர்கள் பேசினார். அவரது உரையின் முதல் பகுதி நூல்கள் படிக்கவேண்டியதன் அவசியம் பற்றி இருந்தது. வழக்குரைஞர் ஜெகன்னாத் அவர்களின் நூலுக்கு நீதியரசர் ஒரு அழகான முன்னுரையையும் எழுதியிருக்கிறார்.

நான்கு நூலகள் வெளியீடு

இதன் பின்னர் நான்கு நூல்கள் வெளியிடப்பட்டன. மூன்று நூல்கள் சுமார் 160 பக்க அளவிலானவை. காஜுலு லக்ஷ்மிநரசு செட்டி அவர்களைப் பற்றிய வழக்குரைஞரி ஜெகன்னாத் எழுதிய ஆங்கில நூல், மற்ற இரண்டு நூலகள் இந்த நூலின் தெலுகு மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புகள். நான்காவது நூல் அளவில் பெரியது. திரு ஜெகன்னாத் அவர்கள் திரட்டிய பல்வேறு ஆவணங்கள் அடங்கியது.  அதன் பின்னர் ஆளுநர் திரு ரவி அவர்கள் பேசினார்.

ஆளுநர் உரை

இந்த நூலின் பொருளடக்கம், ஆளுநருக்கு மிகவும் பிடித்தமானது. நேற்றுதான் ஆளுநர் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் “ஜம்பூத்வீபப் பிரகடனம்” பற்றிய நிகழ்ச்சியை நடத்தவேண்டும் எனச் சொல்லியிருந்தார். இன்று அவரது உரை வாஞ்சிநாதனை நினைவுபடுத்துவதோடு தொடங்கியது. தமிழகப் பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில் தமிழகத்தின் சுதந்திரப்போர் வரலாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டிருக்கிறது என்பதை மிகவும் ஆணித்தரமாகச் சொன்னார்.

கம்பனி ஆட்சியில் இந்தியாவில் கல்வியின் நிலை

திரு ஜெகன்னாத் இந்த நூலை மிகவும் சுருக்கமாக எழுதியிருப்பதாக நினைக்கிறேன் என ஆளுநர் சொன்னார். பள்ளிக்கூடத்திற்கே போகாத இராபர்ட் கால்டுவெல் எவ்வாறு டாக்டர் பட்டம் வாங்கினார் என எனக்குப் புரியவில்லை எனச்சொன்னார். ஆங்கிலேயர்களின் கல்வி முறை மெட்ராஸ் பிரசிடென்சியில் அறிமுகப் படுத்தப்படுவதற்கு முன்னர் தமிழகத்தில் ஏராளமான பள்ளிகள் இருந்தனர்; அதில் படிக்கும் மாணவர்களுக்கு எந்தவிதமான கட்டணமும் கிடையாது; ஆசிரியர்களுக்கும் எந்த விதமான சம்பளமும் கிடையாது; ஆசிரியர்களின் வாழ்க்கைக்குத் தேவையானவாற்றை சமூகம் பார்த்துக்கொள்ளும். அதற்கென 30% நிலங்கள் நிலவரியின்றி ஒதுக்கப்பட்டிருந்தன. அதனை 5% எனக் குறைத்தது அன்றைய கம்பனி அரசு; இதனால் நமது பள்ளிகள் குறைந்து ஆங்கிலேயர்கள் தொடங்கிய கல்வி நிறுவனங்கள் வேர்விடத் தொடங்கின – என ஆளுநர் சொன்னார்.

தென் ஆற்காடு மாவட்டத்தில் மட்டும் 6000க்கும் மேல் பள்ளிகளும் 69 உயர் கல்வி நிறுவங்களும் இருந்தன. அதில் சுமார் 1000 பிராமணர்களும் 4500 சூத்திரர்களும் படித்தனர் – என்ற தகவலியயும் சொன்னார். இந்தத் தகவல்கள் எல்லாம் நமது ஆவணக் காப்பகத்தில் உள்ளன எனவும் சொன்னார்.

பிராமண எதிர்ப்பு ஏன்?

இந்திய வழி கல்வியை அழிக்கவேண்டுமானால் அதனைப் போதிக்கும் பிராமணர்களை ஒழிக்கவேண்டும் என ஆங்கிலேயர்கள் நினைத்தார்கள். அதே சிந்தனை 20ஆம் நூற்றாண்டில் திராவிட இயக்கங்ககளால் வேறு விதத்தில் சொல்லப்பட்டது – எனவும் ஆளுநர் சொன்னார்.

இவ்வாறு ஆளுநர் மீண்டும் ஒரு முறை உண்மையைச் சொல்லி, உள்ளதைச் சொல்லி ஆளும், திராவிட மாடல் எனச் சொல்லிக்கொள்ளும் அரசுக்கு இன்றைய நிகழ்ச்சியில் ஒரு சவால் விடுத்திருக்கிறார்.

இனி நூலைப் பற்றி

இந்த நூல் சுமார் இரண்டு ஆண்டுகள் ஆய்விற்குப் பின்னர் எழுதப்பட்டிருக்கிறது. தமிழக ஆவணக்காப்பகம், கன்னிமாரா நூலகம், இங்கிலாந்து தலைமை நூலகம் போன்ற பல நூலகங்களில் இருந்து ஆவணங்கள் திரட்டப்பட்டு நூல் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு வரலாற்று நூல். 1885ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி, இங்கிலாந்து பாராளுமன்றம் மூலமாக நமது உரிமைகளைப் பெற வேண்டும் என நினைத்ததாகக் கூறுவார்கள். அதற்காக அவர்கள் பல மனுக்களை அனுப்பியதாகக் கூறுவார்கள். அனேகமாக அவர்களுக்கு இவ்வாறு செய்து உரிமைகளைப் பெற முடியும் என்ற நம்பிக்கை காஜுலு லக்ஷ்மிநரசு செட்டி வர்களின் நடவடிக்கைகளைப் பார்த்து ஏற்பட்டிருக்கவேண்டும். உங்களுக்கு நான் சொல்வதில் நம்பிக்கை இல்லை என்றால் நூலை வாங்கிப் படித்துப் பாருங்கள். விலை ரூ 200/-.

 

வீரன் வாஞ்சிநாதன் 113வது நினைவு நாள்: சமூக ஆர்வலர்கள் சிரத்தாஞ்சலி!

vanchinathan statue garlanding in sengottai - 2026

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் பஸ் நிலையத்துக்கு அருகே அமைந்துள்ள வீரன் வாஞ்சிநாதன் சிலைக்கு அவரது 113வது நினைவு தினத்தை முன்னிட்டு, தேசிய சிந்தனைப் பேரவை (தென்காசி) சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது

செங்கோட்டை முத்துசாமி பூங்காவில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் 113-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து பஸ் நிலையம் அருகே உள்ள வாஞ்சிநாதன் சிலைக்கு மாலை  அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, அவரது சிலைக்கு வாஞ்சிநாதனின் தம்பி மகன் ஹரிஹரசுப்பிரமணியன், அவரது மகன் வாஞ்சி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

இதில் தியாகிகள் வாரிசுகள் ஓட்டபிடாரம் மாடசாமி வாரிசு உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, நகராட்சி மேலாளர் கண்ணன் மற்றும் நகராட்சி சுகாதார மேற்பார்வை யாளர்கள், பணியாளர்கள், கோதையம்மாள் தியாகி வாரிசு கைலாசநாதன், சாவடி சொக்கலிங்கம்பிள்ளை வாரிசு செண்பக குற்றாலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க. சார்பில் நகர செயலாளர் வக்கீல் வெங்கடேசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது. இதில் நகர்மன்ற தலைவர் ராமலெட்சுமி, தலைமை நிலைய பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எம்.ரஹீம் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க. சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் பொய்கை மாரியப்பன், நகர செயலாளர் அவர் என் கணேசன், மாவட்ட பிரிவு நிர்வாகிகள் ஞானராஜ், ஜாகீர் உசேன், கவுன்சிலர்கள் முத்துபாண்டி, ஜெகன் உள்பட பலர் கலந்த கொண்ட னர். 

பா.ஜனதா சார்பில் நகர தலைவர் வேம்புராஜ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி சார்பில் நகர தலைவர் ராமர் தலைமையில் மரியாதை செலுத்தப் பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் நகர தலைவர் ஜோதிலிங்கம், ஆதிமூலம், ராஜீவ்காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் மகளிரணியினர் உள்பட பலர் ஊர்வலமாக வந்து, வாஞ்சி சிலைக்கு மாலை அணிவித்தனர்.

இதேபோல் தேசிய சிந்தனை பேரவை, ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் வாஞ்சிநாதன் சிலைக்கு மாலை அணிவித்து சிரத்தாஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, நாள் முழுதும் வாஞ்சி சிலைக்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் சார்பில் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஆளுநரின் அஞ்சலி

தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி வாஞ்சிநாதனின் தியாகம் குறித்து தமது சமூகத் தளப் பதிவில் குறிப்பிட்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தியிருந்தார். அவரது பதிவில், மாபெரும் சுதந்திர போராட்ட வீரர் திரு வாஞ்சிநாதனை அவர் உயிர் நீத்த நாளில் தேசம் ஆழ்ந்த நன்றியுடனும் பெருமையுடனும் நினைவுகூர்கிறது. சொந்த ஊர் மக்களுக்கு எதிரான ஆங்கிலேயர்களின் சொல்லொணா அட்டூழியங்களை தன்னால் தாங்க முடியாதபோது, ​​வாஞ்சிநாதன் காலனித்துவ சக்திக்கு சவால் விடுத்து, திருநெல்வேலியின் அடக்குமுறை மாவட்ட ஆட்சியர் ராபர்ட் ஆஷை படுகொலை செய்தார். எதிரி படைகளால் சூழப்பட்டபோது, ​​ஆங்கிலேயர்கள் தன்னை பிடித்து காவலில் எடுத்து விடாதபடி தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். அவரது தனியாத துணிச்சல், தேச சுதந்திரம் மீதான காதல் மற்றும் நாட்டுக்கான அவரது உச்சபட்ச தியாகம் ஆகியவை ஏராளமான இளைஞர்களை சுதந்திரத்துக்கான போராட்டத்தில் சேரத் தூண்டி, இறுதியில் நமது சுதந்திரத்துக்கும் வழிவகுத்தது – என்று குறிப்பிட்டிருந்தார்.

திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயிலில் ஆனி பிரமோத்ஸவ கொடியேற்றம்!

thiruthangal nindranarayana perumal brammotsav - 2026

108 திவ்ய தேசங்களில் விருதுநகர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தங்கல், ஸ்ரீநின்ற நாராயணப்பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பல்வேறு நேர்ச்சை செலுத்தி வழிபாடு நடத்தினர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல்லில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, பிரசித்தி பெற்ற வைணவ கோவிலான ஸ்ரீநின்ற நாராயணப்பெருமாள் கோவில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருத்தங்கல் ஸ்ரீநின்ற நாராயணப்பெருமாள் கோவிலில் ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாள் – ஸ்ரீசெங்கமலத் தாயார் எழுந்தருளி அருள் புரிகின்றனர்.

இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி பிரம்மோற்சவம் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான ஆனி பிரம்மோற்சவம் திருவிழா 17ம் தேதி (திங்கள் கிழமை) காலை, கருட கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பிரம்மோற்சவம் திருவிழாவை முன்னிட்டு தினமும் இரவு, ஸ்ரீநின்ற நாராயணப்பெருமாள் – ஸ்ரீசெங்கமலத் தாயார் சுவாமிகள் சூரிய பிரபை, சந்திர பிரபை, சிம்மம், சேஷம், கருடன், அன்னம் வாகனங்களில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்கள்.

ஆனி பிரம்மோற்சவம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆனி தேரோட்டம் நிகழ்ச்சி வரும் 25ம் தேதி (செவ்வாய் கிழமை) காலை நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் நிர்வாகிகள் மற்றும் நிகழ்ச்சி உபயதாரர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

ஞானானந்த தபோவனத்தில் மஹா கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் தரிசனம்!

kumbabishekam tapovanam - 2026

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள ஸ்ரீ ஞானானந்த தபோவனத்தில்  ஜூன் 16 ஞாயிற்றுக் கிழமை அன்று மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

ஸ்ரீ ஞானானந்த தபோவனத்தில் அமைந்திருக்கும்  ஸத்குரு ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகளின் அதிஷ்டான அருளாலயம்,  மணி மண்டபம், ராஜகோபுரம், மூர்த்திகள் சந்நிதி ஆகியவற்றுக்கு ஆகம மற்றும் வைதீக முறைப்படி  நடைபெற்ற இந்த மஹாகும்பாபிஷேக வைபவத்தில், தமிழகம் மற்றும் கர்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும், தபோவனத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்றார்கள். 

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பணிகள் கடந்த ஓராண்டாக தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தன. ஒவ்வொரு சந்நிதிக்கும் பாலாலயம் ஆகி, சந்நிதிகள், மணிமண்டபம், அதிஷ்டான அருளாலயம், ராஜகோபுரம் ஆகியவற்றுக்கு வண்ணமிடல், ஓவியங்கள் புதுப் பொலிவு பெறும் வகையில் வண்ணம் தீட்டுதல், சுதைச் சிற்பங்களை சரிசெய்தல், மண்டபங்கள் இவற்றில் பராமரிப்புப் பணிகள் செய்தல் என தபோவன வளாகத்தில் திருப்பணிகள் நடைபெற்றன. 

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், அவர்களுக்குத் தேவையான தங்கும் வசதிகள், உணவுக் கூடம், வைதீகர்கள் தங்கும் இடங்கள், உணவுச்சாலைகள் என புதிதாக ஏற்படுத்தப் பட்டன. 

இதை அடுத்து கும்பாபிஷேக விழாவுக்கான தொடக்கமாக பந்தல்கால் நடப்பட்டு, ஜூன் 12ம் தேதி  யாகசாலை பூஜைகள் தொடங்கின. அன்று, கும்பாபிஷேகத்துக்கான அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, யஜமான சங்கல்பம், கோ பூஜை, மஹா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மஹாலக்ஷ்மி ஹோமம், வாஸ்து சாந்தி, ம்ருத் சங்க்ரஹணம், பிரவேசபலி ஆகியவை நடைபெற்றன. ஜூன் 13ம் தேதி மாலை தொடங்கி, அடுத்த மூன்று நாட்களிலும் இரு வேளைகளிலும் இரு காலமாக, ஆறு கால பூஜைகள் நடைபெற்றன. 

ஜூன் 16 ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 4 மணிக்கு  ஆறாம் கால யாகசாலை  சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிஷ்டானம், மணிமண்டபம், மூர்த்திகள், ராஜகோபுர யாகசாலைகளில் விசேஷ மூல மந்த்ர ஹோம த்ரவ்யாஹுதி, நவாவரண பூஜை ஆகியவை முடிந்து, மங்கள பூர்ணாஹுதி, யாத்ராதானம் ஆகியவை முடிந்து, காலை 6.15க்கு மேள தாளம் வேத கோஷம் முழங்க கடம் புறப்பாடு ஆனது. பின்னர் ராஜகோபுரம் மற்றும் மூர்த்திகள் சந்நிதிகளில் ஆகம முறைப்படியும்,  ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகளின் அதிஷ்டான அருளாலயம், மணிமண்டபம் ஆகியவற்றில் வைதீக முறைப்படியும் பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு, புனித நன்னீர் தெளிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் ஆனது. 

கும்பாபிஷேக விழாவில் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்றார்கள். ஹைதராபாத் வேத பவனத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாச, ஸ்ரீராம கணபாடிகள் உள்ளிட்ட வேத பண்டிதர்கள்,   யாகசாலை பூஜைகளை சிறப்பாக நடத்தி வைத்தார்கள். கும்பாபிஷேகம் குறித்த சிறப்பான தகவல்களுடன் நேரலை வர்ணனையை சுதா சேஷய்யன் செய்திருந்தார். 

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, ஜூன் 12ம் தேதி முதல் ஜூன் 16ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கும், தபோவனத்தைச் சுற்றி அமைந்துள்ள கிராம மக்களுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டு, தொடர் அன்னதானங்கள் நடைபெற்றன. இவற்றில் ஒவ்வொரு வேளையும் ஆயிரக்கணக்கில் மக்கள் பங்கேற்று ஸ்வாமி பிரசாதம் ஏற்றுக் கொண்டனர். விழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில், தினமும் விரிவான அன்னதானம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இலவச மருத்துவ முகாம், நீர் மோர்ப் பந்தல் ஆகியவையும் சிறப்பாக ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை தபோவன அறக்கட்டளையின் செயலாளர்  கே.அமர்நாத், தலைவர் விஜயராகவன், பொருளாளர் டாக்டர் ரமணி உள்ளிட்ட அறங்காவலர்கள் குழுவினர் சிறப்பாகச் செய்திருந்தனர். பெருமளவில் கூட்டம் கூடி அசம்பாவிதம் ஏதும் நடைபெறாத வகையில், ஒவ்வொரு பகுதிக்கும் இத்தனை பேர் தான் என முன்னதாக திட்டமிட்டு, நான்கு இடங்களில் பகுதி பகுதியாக பக்தர்கள் பிரித்து அமர வைக்கப் பட்டனர். தபோவன தன்னார்வலர்கள் பலர் இந்தப் பணியைச் சிறப்பாகச் செய்தார்கள். 

T20-WC 2024: லீக் சுற்றில் தேறியவையும் அதிர்ச்சி அளித்த அணிகளும்!

t20 worldcup - 2026
#image_title

டி20 உலகக் கோப்பை ஆட்டங்கள் – லீக் சுற்று – 10 ஜூன் முதல் 15 ஜூன் வரை

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

அட்டவணை
(15 ஜூன் வரை)

குரூப் Aகுரூப் Bகுரூப் Cகுரூப் D
இந்தியா – 7 அமெரிக்கா ஐக்கிய நாடுகள் – 5 கனடா – 3 பாகிஸ்தான் 2 அயர்லாந்து 1  ஆஸ்திரேலியா 8 இங்கிலாந்து 5 ஸ்காட்லாந்து 5 நமீபியா 2 ஓமன் 0  ஆப்கானிஸ்தான் 6 மேற்கு இந்தியத் தீவுகள் 6 நியூசிலாந்து 2 உகாண்டா 2 பாபுவா நியூகினியா 0    தென் ஆப்பிரிக்கா 8 வங்கதேசம் 4 நெதர்லாந்து 2 நேபாளம் 1  இலங்கை 1

          11.06.2024 அன்று நியூயார்க்கில் கனடா (106/7) பாகிஸ்தான் (17.3 ஓவரில் 107/3) அணிகளுக்கிடையே நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          12.06.2024 அன்று ப்ளோரொடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெற இருந்த நேபால், இலங்கை அணிகளுக்கான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. அதே நாள் மேற்கு இந்தியத்தீவுகளில் உள்ள நார்த் சவுண்ட் மைதானத்தில் நடைபெற்றா நமீபியா (72) ஆஸ்திரேலியா (5.4 ஓவரில் 74/1) அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில்  ஆஸ்திரேலியா அணி 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. அன்றையதினம் நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் நியூயார்க் மைதானத்தில் அமெரிக்கா (110/8) இந்திய (111/3) அணிகள் மோதின. அதில் இந்திய அணி 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இந்தியா அமெரிக்க அணிகளின் ஆட்டம்

          இந்தியாவில் எப்படி இடது புறத்தில் வாகனம் ஓட்டுவது அபூர்வமானதோ அது போல் பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு கிரிக்கெட் அந்நியமாக இருக்கலாம். இருப்பினும், மோனாங்க் படேலின் ஆட்கள் பாகிஸ்தானுக்கு எதிராக மிகப்பெரிய கட்டத்தில் நினைத்துப் பார்க்க முடியாததைச் செய்ததால், 2024 டி 20 உலகக் கோப்பையில் ரோஹித் ஷர்மாவின் டீம் இந்தியாவுக்கு எதிராக இணை ஹோஸ்ட்கள் சிறப்பாக ஆடுவார்கள் என்று அமெரிக்காவின் ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்கள் எதிர்பார்த்தனர். இந்தியா மற்றும் ‘மினி இந்தியா’ மோதலாகக் கூறப்படும், ஐசிசி நிகழ்வின் போட்டி எண்.25 இன் முடிவு, பெரிய மாற்றத்தைத் தரவில்லை.

          வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காத்திருக்கும் நிலையில், அர்ஷ்தீப் சிங், நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் அமெரிக்காவிற்கு (அமெரிக்கா) எதிரான தனது முதல் ஓவரிலேயே வரலாற்றை எழுதுவதன் மூலம் பவர்பிளேயில் முக்கியத்துவம் பெற்றார். 2024 டி20 உலகக் கோப்பை போட்டி எண்.25ல் ரோஹித் ஷர்மாவின் டீம் இந்தியாவுக்கான தாக்குதலைத் துவக்கி, ஐசிசி உலக டி20யின் முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் பெற்றார். ஷயான் ஜஹாங்கீருக்கு கோல்டன் டக் கொடுத்த பிறகு, வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் தனது முதல் ஓவரை ஆண்ட்ரீஸ் கௌஸின் விக்கெட்டில் முடித்தார். கேப்டன் மோனாங்க் படேலின் சேவையை தவறவிட்டதால், மாபெரும் வெற்றியை தங்கள் வசம் வைத்திருந்த அமெரிக்கா, இந்தியாவுக்கு எதிராக குறைந்த பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்தது.

          டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு இந்தியரின் சிறந்த எண்ணிக்கையைப் பதிவுசெய்து, வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் பும்ராவுடன் இணைந்து ரோஹித்தின் ஆட்கள் அமெரிக்காவை 20 ஓவர்களில் 110-8 என்று கட்டுப்படுத்த உதவினார். 110 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு மும்பையில் பிறந்த வேகப்பந்து வீச்சாளர் சவுரப் நேத்ரவல்கர், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் விலைமதிப்பற்ற விக்கட்டுகளால் அதிர்ச்சியைத் தந்தார். வேகப்பந்து வீச்சாளர் நேத்ரவல்கர், குறைந்த ஸ்கோரை சந்தித்த கோஹ்லிக்கு கோல்டன் டக் கொடுத்தார்.

          குரூப் ஏ பிரிவில் இந்தியாவை முதலிடத்தில் அமர்த்த சூர்யகுமார் யாதவ் ரிஷப் பந்துடன் இணைந்தார், முதல் தரவரிசை பேட்டர் ஆட்டத்தை மாற்றியமைக்கும் அரை சதத்தை எட்டினார். நியூ யார்க்கில் இந்தியா அதிக வெற்றிகரமான ரன் சேஸிங்கை நிறைவு செய்ததால், நம்பர்.1 டி20ஐ பேட்டர் தனது ஐந்தாவது அரை சதத்தை அடித்தார். சூர்யகுமார் (ஆட்டமிழக்காமல் 50), ஷிவம் துபே (ஆட்டமிழக்காமல் 31) ஜோடி 18.2 ஓவரில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்காவை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா நுழைந்துள்ளது.

          டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் அமெரிக்கா மோதலைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே: (1) டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா நுழைந்துள்ளது. (2) குரூப் ஏ பிரிவில் இந்திய அணி மட்டும் எந்த ஆட்டத்திலும் தோற்கடிக்கப்படவில்லை. (3) சூர்யகுமார் யாதவ் 5வது அரைசதத்தை விளாச, இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்காவை வீழ்த்தியது. (4) 15வது ஓவரில் அமெரிக்க அணி குறைவான ஓவர் வீசியதற்காக 5 பெனால்டி ரன்களைப் பெற்றது. (5) 12ஆவது ஓவரில் சௌரப் நேத்ரவல்கரால் சூர்யகுமார் வீழ்த்தப்பட்டார். (6) சூர்யகுமார் 10 ஓவரில் இந்தியாவை 47-3 என உயர்த்தினார். (7) அலி கான் 7வது ஓவரில் ரிஷப் பந்தை (18) சிறப்பாக வீழ்த்தினார். (8) ரோஹித் சர்மாவை மலிவாக நீக்கினார் நேத்ராவல்கர். (9) விராட் கோலிக்கு நேத்ராவல்கர் கோல்டன் டக் அதாவது தங்க வாத்து வழங்கினார். (10) அர்ஷ்தீப் சிங் உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்காக சிறந்த பந்துவீச்சைப் (4/9) பதிவு செய்தார். (11) 20 ஓவர்களில் அமெரிக்கா 110-8 ரன்கள் எடுத்தது. (12) ஹர்திக் ஆபத்தான ஆண்டர்சனை நீக்கினார்.  (13) நிதிஷ் குமாரின் கேமியோவை முடிக்க முகமது சிராஜ் ஒரு கண்மூடித்தனமான பந்துவீசினார். (14) ஜெயிண்ட்கிலர்ஸ் அமெரிக்கா 12 ஓவர்களில் 59-4 ரன்களை எட்டியது. (15) அமெரிக்கா இந்தியாவிற்கு எதிராக குறைந்த பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்தது. (16) டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் அர்ஷ்தீப். (17) நியூயார்க்கில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். (18) அமெரிக்க அணியில் ஐந்து பேர் இந்தியாவில் பிறந்தவர்கள். (19) அமெரிக்க நட்சத்திரம் ஹர்மீத் சிங், ராகுல் டிராவிட் கண்காணிப்பில் ஐபிஎல் போட்டியில் விளையாடினார்.

          13.06.2024 அன்று மூன்று ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் தரௌபா மைதானத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் (149/9) நியூசிலாந்து (136/9) அணிகளுக்கு இடையில் நடைபெற்றது அதில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது ஆட்டம் கிங்க்ஸ்டன் மைதானத்தில் வங்கதேசம் (159/5) நெதர்லாந்து (134/8) அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஆட்டத்தில்   வங்கதேசம் 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

மேற்கு இந்தியத்தீவுகளில் உள்ள நார்த் சவுண்ட் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஓமான் (47) அணியை இங்கிலாந்து (3.1 ஓவரில் 50/2) அணி 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. அன்றைய தினம் நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் தரௌபாவில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் பாப்புவா நியூ கினியா (95) அணியை  ஆஃப்கானிஸ்தான் (15.1 ஓவரில் 101/3) அணி 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          14.06.2024 அன்று ப்ளோரிடா, லாடர்ஹில் மைதானத்தில் அமெரிக்க அயர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. அன்று நடந்த இரண்டாவது ஆட்டம் கிங்க்ஸ்டன் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா (115/7) நேபாளம் (114/7) அணிகளுக்கு இடையே நடந்தது. அந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வென்றது. அன்றைய தினமே தரௌபாவில் நடந்த ஆட்டத்தில் உகாண்டா (40) நியூசிலாந்து (5.2 ஓவரில் 41/1) அணியிடம்  9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் மிக மோசமான தொல்வியச் சந்தித்தது.

          15.06. 2024 அன்று மூன்று ஆட்டங்கள் நடந்தன. முதலாவது ஆட்டம் நியூயார்க்கில் இந்திய கனடிய அணிகளுக்கிடையே நடைபெற இருந்தது. ஆனால் மழையால் கைவிடப்பட்டது – இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.  இரண்டாவது ஆட்டம் வட சவுண்ட் மைதானத்தில் இங்கிலாந்து (122/5) நமீபியா (84/3) அணிகளுக்கு இடையே நடந்தது. இங்கிலாந்து அணி  டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. மூன்றாவது ஆட்டம் க்ரோஸ் ஐலெட் மைதானத்தில் ஸ்காட்லாந்து (180/5), ஆஸ்திரேலியா (19.4 ஓவரில் 186/5) அணிகளுக்கு இடையே நடந்தது. இதில்  ஆஸ்திரேலிய அணி 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

சூப்பர் 8 நிலைக்கு முன்னேறிய அணிகள்

குரூப் A பிரிவில் இந்தியா மற்றும் அமெரிக்க அணிகள் முன்னேறியுள்ளன.

குரூப் B பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து  அணிகள் முன்னேறியுள்ளன.

குரூப் C பிரிவில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள்  அணிகள் முன்னேறியுள்ளன.

குரூப் D பிரிவில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் முன்னேறியுள்ளன. இன்று 16.06.2024, இரண்டு ஆட்டங்கள் இந்தப் பிரிவில் நடக்கவுள்ளன.

சூப்பர் 8

 குரூப் 1குரூப் 2
Aஇந்தியாஅமெரிக்கா
Bஆஸ்திரேலியாஇங்கிலாந்து
Cஆஃப்கானிஸ்தான்மேற்கு இந்தியத் தீவுகள்
Dவங்கதேசம்தென் ஆப்பிரிக்கா

தமிழகத்தில் பாஜக பூஜ்யம் தொட்டதற்கு அண்ணாமலை காரணமா?

annamalai bjp tn leader - 2026

— ஆர். வி. ஆர்

2024 லோக் சபா தேர்தலில் பாஜக தமிழகத்தில் அதிமுக-வுடனான கூட்டணியைத் தக்கவைத்துக் கொள்ளாமல் போனது பற்றிப் பலரும் விவாதிக்கிறார்கள். அந்த விவாதத்தின் மையம், பாஜக-வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை.

தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் முன்னதாகத் தங்கள் கூட்டணியை முறித்துக் கொண்டதால், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், பாஜக தலைமையில் ஒரு கூட்டணியுமாக இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியை எதிர்கொண்டன, அதோடு தங்களுக்குள் ஒன்றை ஒன்றும் எதிர்த்தன. இதன் விளைவாக, தமிழ்நாட்டில் 39, பாண்டிச்சேரியில் ஒன்று, ஆக 40 லோக் சபா தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றது. இங்கு அதிமுக மற்றும் பாஜக கூட்டணிகளுக்குக் கிடைத்த இடங்கள் பூஜ்யம்.

இந்தத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி அமைந்திருந்தால், அக் கட்சிகளின் இப்போதைய கூட்டணிக் கட்சிகள் மற்றதும் அதிமுக-பாஜகவோடு சேர்ந்திருந்தால், அவர்களுக்கு என்ன பலன் கிடைத்திருக்கும்? குறைந்த பட்சம், தமிழகத்தின் 13 தொகுதிகளில் அவர்களின் கூட்டணி நிச்சயம் வென்றிருக்கும், திமுக கூட்டணி தோற்றிருக்கும். ஏனென்றால், அந்த 13 தொகுதிகளில் இப்போது அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் தனித்தனியாகப் பெற்ற ஓட்டுகளின் கூட்டு எண்ணிக்கை, திமுக கூட்டணி வேட்பாளர்கள் அங்கு ஜெயித்து வாங்கிய ஓட்டுகளை விட அதிகம்.

சென்ற இரண்டு தேர்தல்கள் போல இல்லாமல், லோக் சபாவில் பெரும்பான்மையைக் குறிக்கும் 272 தொகுதிகளை இந்த முறை பாஜக தனியாக எட்டவில்லை. இப்போது அது வென்றிருப்பது 240 தொகுதிகள் தான். பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் கூட்டாகப் பெரும்பான்மை இலக்கைச் சற்றுத் தாண்டின. அவைகள் 293 இடங்களில் வென்று, பாஜக-வின் நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆகி இருக்கிறார். தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி அமைந்து அதற்கு 13 இடங்கள் கிடைத்திருந்தால், பாஜக-வுக்கு அது இன்னும் பலமாகும்.

மக்களவையில் பாஜக-வுக்குக் கூட்டணிக் கட்சிகளினால் கூடுதல் பலம் கிடைக்காமல் போனதற்கு, தமிழகத்தில் அண்ணாமலையின் அரசியல் அணுகுமுறைதான் காரணமா? மொத்தத்தில் இது பாஜக-வுக்கு நஷ்டமா? இதுதான் கேள்வி.

ஒரு கருத்து இது. அதிமுக பலமுறை திமுக-வைத் தோற்கடித்துத் தமிழகத்தில் ஆட்சி அமைத்த கட்சி. அது பாஜக-வை விட மாநிலத்தில் பெரிய கட்சி. அதிமுக-வின் தலைமையில் பாஜக ஒரு கூட்டணியில் இருக்கும்போது, அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் வந்தால் பாஜக-தான் அதிமுக-வுக்கு விட்டுக் கொடுத்து அனுசரித்துப் போகவேண்டும்.

இந்தக் கருத்தை விரிவாக்கி இன்னும் தெளிவாக ஒரு உதாரணத்தோடு சொல்லலாம். அதாவது, தமிழக காங்கிரஸ் கட்சி திமுக-விடம் எப்படிப் பணிவாக, பவ்யமாக நடந்துகொண்டு, அவ்வப்போது திமுக தலைவர் மனம் குளிரப் பேசி, தேர்தல் சமயத்தில் திமுக-விடம் அழுது கெஞ்சிக் கூடியவரை அதிகத் தொகுதிகள் பெற்று சமாதானப் படுகிறதோ, அது போல் பாஜக-வும் அதிமுக-விடம் நடந்து கொள்ள வேண்டும். அப்படி நடந்திருந்தால், இந்த லோக் சபா தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணிக்குத் தமிழகத்தில் 13 இடங்களாவது கிடைத்து, அதில் பாஜக-வுக்கும் இரண்டோ மூன்றோ கிடைத்திருக்குமே?

திமுக-வின் விரலை சமர்த்தாகப் பிடித்துக் கொண்ட காங்கிரஸ் கட்சிக்குத் தமிழ்நாட்டில் இந்தத் தேர்தலில் 9 தொகுதிகளில் வெற்றி, ஆனால் அதிமுக-வின் கையை விட்ட அசட்டு பாஜக-வுக்கு மாநிலத்தில பூஜ்யம் என்றாகி விட்டதே? இந்த ரீதியில் ஒரு கருத்து நிலவுகிறது.

இந்தக் கருத்தின் இன்னொரு பக்கம் இது. அதிமுக-விடம் தமிழக பாஜக இணக்கமாக, பதவிசாக, பணிவாக நடக்கவில்லை என்றால் அதற்கு அர்த்தம்: தமிழக பாஜக-வின் தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் அப்படி நடக்கவில்லை என்று அர்த்தம். பிரச்சனை இங்குதான் இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி எம். ஜி. ஆர் இல்லை, ஜெயலலிதாவுமில்லை. மக்கள் செல்வாக்கு மிகுந்த எம். ஜி. ஆர் மறைந்த பின்னர், ஜெயலலிதா தனக்கென ஒரு மக்கள் செல்வாக்கை ஏற்படுத்தி வைத்திருந்தார். அந்த இரு தலைவர்களும் அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்தைக் கட்சித் தொண்டர்கள் மனதில் பதிய வைத்திருந்தார்கள்.

பழனிசாமிக்கு, சொல்லும்படியாக மக்கள் செல்வாக்கு இல்லை. எம். ஜி. ஆர், ஜெயலலிதா இருவரும் தலைமை ஏற்ற அதிமுக-வின் இன்றைய தலைவராகப் பழனிசாமி இருப்பதால், கட்சியின் சின்னம் இரட்டை இலைக்காக, அந்தக் கட்சியின் தொண்டர்கள் அவர்மீது பேருக்கு ஒரு மரியாதை வைத்திருக்கிறார்கள், அவ்வளவுதான்.

பாஜக-வைப் பொறுத்தவரை, தமிழகத்தில் முன்பிருந்த அதன் தலைவர்களை விட மிக அதிக மக்கள் செல்வாக்கைக் குறுகிய காலத்தில் பெற்றவர் அதன் இப்போதைய தலைவர் அண்ணாமலை. பாஜக-வின் ஏறுமுகம் அண்ணாமலை. அதிமுக-வின் இறங்குமுகம் எடப்பாடி பழனிசாமி.

திமுக என்கிற தீய அரசியல் சக்தியிடம் சாதாரண மக்கள் பொதுவாக அஞ்சிப் பணிந்து, கிடைப்பதை வாங்கி, அக்கட்சியை ஆதரிக்கிறார்கள். அந்தத் தீய சக்தியை நேருக்கு நேர் பார்த்துப் போராடி அடக்கி வைக்கும் ஆற்றல் அண்ணாமலைக்கு உண்டு என்ற நம்பிக்கை சாதாரண மக்களிடம் பெருகி வருகிறது. இதனால் அண்ணாமலைக்கான மக்கள் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

இதுவரை ஆளும் கட்சியாக இல்லாத பாஜக-வுக்குத் தமிழகத்தில் ஆதரவு கூடி வருகிறது என்றால், பாஜக யாரை எதிர்க்கிறது, எந்தக் கட்சியை ஆட்சியில் இருந்து இறக்கவல்லது, என்று மக்கள் பார்த்து ஆதரிக்கிறார்கள் என்று அர்த்தம்.

பாஜக-வுடன் கூட்டணியில் தொடர்ந்தால், அண்ணாமலையின் தனிப்பட்ட மக்கள் செல்வாக்கால் சொற்பமான தனது மக்கள் செல்வாக்கு இன்னும் சரியும், தனது கட்சிக்குள் தன்னுடைய மதிப்பும் குறையும் என்று கணக்கிட்டார் எடப்பாடி. அதனால் தனது சுயநலத்துக்காக, தனது அரசியல் கெத்து சிறிது காலம் நீடிக்க, அதிமுக-பாஜக உறவு முறிவதற்கு வழி வகுத்தார் எடப்பாடி. அது நடந்தது.

அதிமுக-விடம் பணிவும் பயமும் காட்டி, பேருக்குக் கட்சித் தலைவராக இருப்பதை அண்ணாமலை விரும்பவில்லை. தமிழகத்தில் அதிமுக-வைச் சாராமல் பாஜக-வை வளர்க்கும் தெம்பும் திராணியும் தலைமைப் பண்புகளும் அவரிடம் இருக்கின்றன. கட்சியின் அகில இந்தியத் தலைமையும் இந்த நிதர்சனத்தை அங்கீகரித்திருக்கிறது. அது இன்னும் முக்கியம்.

2019-ல், தமிழகத்தில் பாஜக-வின் ஓட்டு சதவிகிதம் 3.6 சதவிகிதம் இருந்தது. இந்த லோக் சபா தேர்தலில் அதிமுக கூட்டணி இல்லாமல், திமுக-வையும் எதிர்த்து நின்று, அது தனது ஓட்டு சதவிகிதத்தை 11.2 என்று உயர்த்திக் காண்பித்தது. இந்தத் தேர்தலில் திமுக-வுக்கு ஓட்டு சதவிகிதம் சுமார் 6 குறைந்து, இப்போது 27 சதவிகிதம் என்று ஆகி இருக்கிறது.

பாஜக-வின் ஓட்டு சதவிகிதம் மூன்று மடங்குக்கு மேல் வளர்ந்திருக்கிறது. இதை இப்போது ஊர்ஜிதப் படுத்திக் கொண்டதால் அந்தக் கட்சியின் மதிப்பு-மரியாதை மற்ற கட்சியினரிடமும் மக்களிடமும் உடனே கூடி இருக்கிறது. அண்ணாமலைக்கு, பாஜக தொண்டர்களுக்கு, இது இன்னும் உத்வேகம் அளித்துக் கட்சி மேலும் தனியாக வலுப்பெற உதவும். இந்த நிலையைத் தள்ளிப்போடாமல் இப்போதே – அண்ணாமலையின் 40 வயதிலேயே – அடைந்திருப்பது நல்லது. நீண்ட வளர்ச்சிப் பயணத்திற்கும் காலம் வேண்டுமே?

தமிழகத்தில் தொகுதிகள் குறைந்தாலும் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, மக்களவைத் தேவைகளை நாம் வேறுவகையில் பார்த்துக் கொள்ளலாம், என்று எண்ணி, அண்ணாமலையின் வீரியத் தலைமையை உணர்ந்து அவருக்குத் துணை நின்றார் பிரதமர் மோடி. எல்லாவற்றையும் கணக்கிட்டு, சில தருணங்களில் தைரிய முடிவு அவசியம் என்று மோடிக்கும் தோன்றியது.

தமிழக பாஜக சீராக விரைவாக வளர்ச்சி பெறுவதற்கு அண்ணாமலையின் அணுகுமுறை சரி என்று கட்சியின் தலைமை நம்புகிறது, அது அண்ணாமலைக்கும் தெரியும்.

கட்சித் தலைமையின் ஒப்புதலோடு, ஆதரவோடு, தமிழக பாஜக-வை வழி நடத்தும் அண்ணாமலையைத் தனியாக யார் எதில் பெரிதாகக் குறை சொல்ல முடியும்? பொழுது போகாதவர்கள் கணினி விளையாட்டுக்கள் விளையாடலாமே?

Author: R Veera Raghavan, Advocate, Chennai
(veera.rvr@gmail.com)