Home Blog Page 5678

பா.ஜ.க. மாநில பொ.செ. சரவணபெருமாள் மறைவு: பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல்

21/02/2017
இரங்கல் செய்தி
பா.ஜ.க.வின் மாநில பொதுச்செயலாளர் திரு. சரவணபெருமாள் அவர்கள் மறைவு – இரங்கல் செய்தி
மாண்புமிகு மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைதுறை மற்றும் கப்பல்துறை இணையமச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்களின் பத்திரிக்கை செய்தி
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பா.ஜ.க.வின் வளர்சிக்காகவும், தேசிய சிந்தனை மேலோங்குவதற்காகவும் உழைத்த பா.ஜ.க.வின் மாநில பொதுச்செயலாளர் திரு. சரவணபெருமாள் அவர்கள் சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் இன்று (21/02/2017) காலை ஈசனடி சேர்ந்தார்.
தூத்துக்குடி நகரத்தில் செல்வமிக்க குடும்பத்தில் பிறந்து, குடும்பத்தின் மேன்மைக்காக வியாபாரத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டும், பா.ஜ.க.வின் கட்சிப் பணியையும் தொய்வில்லாமல் செய்துவந்த திரு சரவண பெருமாள் அவர்கள்  1995ஆம் ஆண்டு முதல் ஒரு முழுநேர ஊழியரைப் போல கட்சிப்பணி ஆற்றி வந்தார். கட்சியின் பல்வேறு பொறுப்பை திறம்பட  வகித்து மாநிலத்தின் பொதுச்செயலாளராக உயர்ந்தார். குடும்பத்தில் ஒரே ஆண் வாரிசான அவருக்கு திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் பெரும் முயற்சி செய்த போதெல்லாம் கட்சிப் பணிக்கு அது தடையாக இருக்கும் என்று திருமணமே செய்துகொள்ளாமல் கட்சிக்காக முழுநேரமும் உழைத்து வந்தார்.
திரு. சரவணபெருமாள் அவர்கள் மிகச் சிறந்த சிவ பக்தர். அன்றாடம் பூஜை புனஸ்காரம் செய்யும் பழக்கம் உள்ளவர். தனது உடல்நிலை சர்க்கரை நோயினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு காலில் பல விரல்கள் அகற்றப்பட்ட போதும் விடாப்பிடியாக கட்சிப் பணியை தொடர்ந்தார். அகில இந்திய தலைவர் திரு. அமித் ஷா அவர்கள், அகில இந்திய பொதுச் செயலாளர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பல தலைவர்கள் அவரை சற்று ஓய்வெடுக்க வற்புறுத்திய போதும் கட்சிப் பணியை ஒதுக்கித் தள்ள அவரது மனம் இடம் கொடுக்கவில்லை.
     இரண்டு மாதங்களுக்கு முன்பாக மஞ்சள்காமாலை நோயினால் பாதிக்கப்பட்டிருந்த போது சிறிது நாள் ஓய்வெடுங்கள் என்று கட்சியின் அனைத்து தலைவர்களும் அறிவுறுத்திய போதும் தனது உடல்நிலையை பெரிதாகக் கொள்ளாமல் பெரம்பலூரில் நடைபெற்ற தமிழக பா.ஜ.க பயிற்சி முகாம் மற்றும் செயற்குழு பணிக்காக 6 நாட்கள் அங்கேயே தங்கி பணிப்புரிந்தார்கள். அவரது அரசியல் வாழ்வில் எந்த ஒரு பொழுதிலும் தன்னை முன்னிறுதிக்கொள்ள தயங்கியவர். அப்பழுக்கற்ற அரசியல்வாதிக்கு இலக்கணமாகவும், எந்த ஒரு நிலையிலும் கட்சியை தன் குடும்பத்திற்காக சிறிதும் பயன்படுத்தாத பண்பாளராகவும் திகழ்ந்தவர்.
     தமிழ்நாட்டின் அனைத்துப் பிரச்சனைகளையும் முழுமையாக அலசி ஆராய்ந்து புத்திபூர்வமான தெளிவினை கொடுக்கும் வல்லமை பொருந்தியவர். இப்படி பல சிறப்பு இயல்புகளை தன்னகத்தே கொண்டு விளங்கிய திரு. சரவணபெருமாள் அவர்களுடைய இழப்பு, தேசிய சிந்தனையும், தமிழ் உணர்வும் கொண்ட நம் அனைவருக்கும் பேரிழப்பாகும். கீதையில் சொல்லப்படுவது போல எதிரிகள் இல்லா மனிதனாக கடைசிவரை வாழ்ந்து மறைந்திருக்கிறார். இந்நேரத்தில் அன்னாருடைய ஆன்மா நற்கதி அடையவும், அவரது இழப்பை தாங்கும் மன வலிமையை அவரது குடும்பத்தாருக்கு இறைவன் அளித்திடவும் எனது பிரார்த்தனைகள்.
–    பொன். இராதாகிருஷ்ணன்

ஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு: அமைச்சர் காமராஜ்

தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்._
_சென்னையில் நடந்த ஆய்வு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்மார்ட் அட்டை வடிவிலான ரேஷன் கார்டுக்கு ஆதார் எண் அவசியம் என்பதால், பொதுமக்கள், தாங்கள் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை கண்டிப்பாக இணைத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இதுவரை 5.65 கோடி பேர் குடும்ப அட்டையில் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர் என்று கூறிய அவர், 5 லட்சத்து 41 ஆயிரம் போலி ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தமிழகத்தில் உணவுப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக 951 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அமைச்சர் கூறினார்._

அம்மா திட்டங்களின் பெயர்களை  அரசுத் திட்டங்கள் என்று மாற்ற ராமதாஸ் கோரிக்கை

சென்னை:
அம்மா திட்டங்களின் பெயர்களை அரசுத் திட்டங்கள் என பெயர் மாற்ற வேண்டும் என பாமக., நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்…
அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக கடந்த வாரம் பொறுப்பேற்றுக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, நேற்று முதலமைச்சர் அலுவலகத்திற்கு சென்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பிறகு 5 புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார். முதல்வர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வுகள் இந்திய அரசியலலமைப்புச் சட்டத்தையும், மாண்புகளையும் அவமதிக்கும் செயலாகும்.
முதலமைச்சர் அலுவலகத்தில், வருவாய்க்கு மீறி சொத்துக் குவித்த வழக்கில் தண்டிக்கப்பட்டவரான மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்களைத் தூவி மரியாதை செய்திருக்கிறார். தொடர்ந்து புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்ட பழனிச்சாமி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் தமது அரசு செயல்படும், ஜெயலலிதா காட்டும் வளர்ச்சிப் பாதையில் செயல்படும் என்று இரு முறை அழுத்தம் கொடுத்து கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி, உழைக்கும் மகளிருக்கு  இரு சக்கர ஊர்தி வாங்க மானியம் வழங்கும் திட்டத்திற்கு, புரட்சித்தலைவி அம்மாவின் நினைவாக  ‘அம்மா இருசக்கர வாகனம் திட்டம்’ எனப் பெயரிடப்படும் என்றும் முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
 தமிழ்நாட்டில் 8 கோடி மக்களை ஆட்சி செய்யும் அரசு அரசியலமைப்பு சட்டப்படி செயல்பட வேண்டும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பும் ஆகும். அவ்வாறு செயல்படுவதற்கு பதிலாக, மக்களின் பணத்தை கொள்ளையடித்து சொத்துக்களைக் குவித்த வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவரை முன்னிறுத்தி, அவரது பாதையில் அரசு செயல்படும் என்று அறிவிப்பதோ, அரசுத் திட்டங்களுக்கு குற்றவாளியான ஜெயலலிதாவின் பெயரைச் சூட்டுவதோ ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
தமிழக முதலமைச்சருக்கும், அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் ஜெயலலிதா எவ்வளவு பெரிய தியாகியாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்காக அவர்கள் தங்கள்  கட்சி நிகழ்வுகளில்  ஜெயலலிதாவுக்கு எத்தகைய  மரியாதை வேண்டுமானாலும் செலுத்தலாம்; ஜெயலலிதாவின் நினைவாக தங்களை வருத்திக் கொண்டு எதை வேண்டுமானாலும் செய்யலாம். அது அவர்களின் உரிமை. அது பற்றி எவரும் கேள்வி எழுப்ப முடியாது.
ஆனால், முதலமைச்சர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் ஊழல் குற்றவாளியின் படத்தை வைப்பதும், அதற்கு மலர் தூவி மரியாதை செய்வதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இது வாக்களித்த மக்களுக்கு மட்டுமின்றி, ஆட்சி அதிகாரத்தை வழிநடத்தும் அரசியலமைப்பு சட்டத்திற்கும் இழைக்கப்படும் அவமானம் ஆகும். முதலமைச்சராகவும், அமைச்சராகவும் பதவியேற்பவர்கள் அனைவரும் ‘‘சட்டப்படி அமைக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பின் பால் உண்மையான நம்பிக்கையும், மாறாப்பற்றும் கொண்டிருப்பேன். இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழு முதல் ஆட்சியையும், ஒருமையையும் நிலைநிறுத்துவேன்’’ என்று தான் உறுதியேற்கிறார்கள். அதன்படி ஆட்சியாளர்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டுதலில் தான் ஆட்சி செய்ய வேண்டும். அதை விடுத்து ஜெயலலிதா காட்டும் பாதையில் செயல்படப் போவதாக கூறுவது ஏற்றுக்கொண்ட உறுதிமொழிக்கு எதிரானது அல்லவா? அனைத்து ஜனநாயக அமைப்புகளும் மதிக்கப்பட வேண்டிய அரசியலமைப்புச் சட்டம் என்ற புனித ஆவணத்தின் இடத்தில் ஓர் ஊழல் குற்றவாளியை வைத்துப்பார்ப்பதை எப்படி அனுமதிக்க முடியும்?
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது அரசியலமைப்பு சட்டம் தொடங்கி ஜனநாயக நெறிமுறைகள் வரை அனைத்தும் காலில் போட்டு மிதிக்கப்பட்டன. எங்கும் அம்மா… எதிலும் அம்மா என்பது தான் எழுதப்படாத சட்டமாக இருந்தது. எனினும், ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா தப்புக் கணக்கின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்ற ஒரே காரணத்திற்காக இதையெல்லாம்  தமிழகம் சகித்துக் கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், ஊழல் வழக்கில் மீண்டும் உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட பிறகும் ஜெயலலிதா தான் தமிழகத்தின் வழிகாட்டி என்ற தோற்றத்தை ஏற்படுத்துவது மன்னிக்க முடியாத குற்றமாகும். ஒருபுறம் இக்குற்றத்தை இழைக்கும் ஆட்சியாளர்கள், இன்னொருபுறம் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா கட்டளைக்கு பணிந்து செயல்படுகின்றனர். இத்தகைய சட்ட மீறல்கள் தொடர்வதை இனியும் அனுமதிக்கக்கூடாது.
எனவே, ஊழல் குற்றவாளியின் பெயரில் செயல்படுத்தப்படும் அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம், அம்மா உப்பு, அம்மா விதைகள், அம்மா சிமெண்டு,  அம்மா முகாம் திட்டம், அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம், அம்மா சிறு வணிக கடன் திட்டம், அம்மா திரையரங்குகள், அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம்,அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனைத் திட்டம், அம்மா திட்டம், அம்மா ஆரோக்கிய திட்டம், அம்மா பூங்காக்கள், அம்மா உடற்பயிற்சி நிலையம் உள்ளிட்டத்  திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு அரசின் பெயரில் செயல்படுத்தப்பட வேண்டும். கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் நினைவிடம் மூடப்பட வேண்டும். திரையரங்குகளில் ஜெயலலிதா இறுதி ஊர்வலம் குறித்த செய்தித் தொகுப்பு ஒளிபரப்பப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
இதற்கெல்லாம் மேலாக தமிழக முதல்வரை ஆளுனர் அழைத்து, ஊழல் குற்றவாளியின் பெயரில் ஆட்சி நடத்துவதை விடுத்து, அரசியல் சட்டத்தின் பெயரால் ஆட்சி நடத்தும்படி அறிவுறுத்த வேண்டும். அவ்வாறு செயல்பட மறுத்தால் மீது அரசியலமைப்புச் சட்டப்படி ஆளுனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான ஸ்டாலின் மனு: நாளை விசாரணை

சென்னை:
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தில், அவைத்தலைவர் மேற்கொண்ட முடிவினை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு நாளை காலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தில், அவைத்தலைவர் முடிவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., வழக்கு தொடர்ந்துள்ளது. ஸ்டாலின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்று விசாரணை நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீதிபதிகள் இந்த மனுவை நாளை ( 22 ம் தேதி) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

தி.மு.க., செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு விவரம்:

ஜெயலலிதா மறைவுக்கு பின், முதல்வர் பதவிக்கு பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டார். அ.தி.மு.க., தற்காலிக பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த சசிகலா, சட்டசபை, அ.தி.மு.க., தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, முதல்வர் பதவியிலிருந்து பன்னீர்செல்வம், ராஜினாமா செய்தார். பின் அவர், தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் பெறப்பட்டதாக, பகிரங்கமாக புகார் தெரிவித்தார். ஆட்சி அமைக்க அழைக்கும் படி, கவர்னரிடம் சசிகலா உரிமை கோரினார். அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்துாரில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். அதனால், அவருக்கு தகுதியிழப்பு ஏற்பட்டது.அதனால், சட்டசபை அ.தி.மு.க., தலைவராக, பழனிசாமியை தேர்ந்தெடுத்து, ஆட்சி அமைக்க உரிமை கோரப்பட்டது. முதல்வராக, பிப்., 16ல், பழனிசாமி பதவியேற்றார். 15 நாட்களுக்குள், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, அவகாசம் வழங்கப்பட்டது.

ஆனால், 18ம் தேதியே, சட்டசபையின் சிறப்பு கூட்டம்,காலை, 11:௦௦ மணிக்கு துவங்கியது. சென்னை, காமராஜர் சாலையில், என் கார் நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டது. இதனால், சட்டசபையை நோக்கி நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.சட்டசபை துவங்கியதும், ரகசிய வாக்கெடுப்பு நடத்தும்படி, தி.மு.க., மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களும், பன்னீர்செல்வமும் கோரிக்கை விடுத்தனர்.

‘எம்.எல்.ஏ.,க்களை சட்டவிரோத காவலில் வைத்ததால், அவர்கள் சுதந்திரமாக ஓட்டளிக்க வேண்டும் என்றால் ரகசிய வாக்கெடுப்பு ஒன்றே வழி’ என, வலியுறுத்தப்பட்டது; அதை, சபாநாயகர் மறுத்தார். சட்டசபையை, பிற்பகல், 1:00 மணிக்கு தள்ளி வைத்தார். வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவிடாமல் தடுக்கும் வகையில், போலீஸ் படையினர் அங்கு வந்தனர். பகல், 1:00 மணிக்கு சட்டசபை துவங்கியதும், தி.மு.க., உறுப்பினர்களை வெளியே அனுப்பும்படி, சபை காவலர்கள் மற்றும் சபை காவலர்கள் சீருடையில் இருந்த போலீசாருக்கு, சபாநாயகர் உத்தரவிட்டார்.

பின், சபையை, 3:00 மணிக்கு தள்ளிவைத்தார். சபாநாயகரின் உத்தரவை சாதகமாக எடுத்து, கூடுதல் போலீஸ் ஆணையர் சேஷசாயி தலைமையில், எங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களை, போலீசார் தாக்கினர். அப்போது, சபையில் சபாநாயகர் இல்லை.சபை விதிகளை பின்பற்றாமல், என்னையும் வெளியேற்றினர். போலீசார், முரட்டுத்தனமாக அணுகினர்; என் சட்டை கிழிக்கப்பட்டது. கடைசியில், தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் வெளியேற்றினர். சபாநாயகர் செயல்பட்டதை கண்டித்து, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

கவர்னரை சந்தித்து முறையிட்டோம். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாமல், முதல்வர் பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்தது. முதல்வருக்கு ஆதரவாக, 122 ஓட்டுகளும், எதிராக, 11 ஓட்டுகளும் விழுந்ததாக அறிவிக்கப்பட்டது. சபாநாயகரின் இந்த அறிவிப்பு, சட்டவிரோதமானது; சபை விதிகளை மீறியது.
எனவே, நம்பிக்கை தீர்மானத்தின் மீதான முடிவுக்கு தடை விதிக்க வேண்டும்; முதல்வர் என்ற முறையில் கொள்கை முடிவெடுக்க, பழனிசாமிக்கு தடை விதிக்க வேண்டும். கவர்னரின் செயலர், தலைமை செயலர், தேர்தல் ஆணைய அதிகாரி மேற்பார்வையில் மீண்டும் ரகசிய நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும்; சபாநாயகரின் முடிவு செல்லாது என உத்தரவிட வேண்டும்.

என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று காலை, தாற்காலிக தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷ், நீதிபதி மகாதேவன் அடங்கிய, ‘முதல் பெஞ்ச்’ முன், மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, இந்த மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரினார். அதற்கு, நீதிபதிகள், ‘மனு தாக்கல் செய்யுங்கள்; நாளை விசாரிக்கிறோம்’ என்றனர். தற்போது, இந்த வழக்கு நாளை புதன்கிழமை விசாரிக்கப்படவுள்ளது.

 

பயமுறுத்தும் எண் 13 பற்றி தெரிந்துகொள்வோமே

வெளிநாட்டினரைப் பொறுத்தவரை 13 ஒதுக்கப்பட வேண்டிய நம்பர்.

அத்துடன் வெள்ளிக்கிழமையும் சேர்ந்தால் அலறுவார்கள்.

இதற்கு என்னென்னவோ காரணங்கள் கூறுகிறார்கள்.

நம்பர் 13 எப்படியெல்லாம் வெளிநாட்டினரை பாடுபடுத்துகிறது என்று பாருங்களேன்..

ஒரு வெள்ளிக்கிழமை 13ம் தேதிதான் இயேசு பெருமான் சிலுவை யில் அறையப்பட்டார் என்கிறது வரலாறு.

இதேபோல் இன்னொரு 13ம் தேதியும் வெள்ளிக்கிழமையும் சேர்ந்த தினத்தில்தான் ஆதாமும் ஏவாளும் சபிக்கப்பட்ட பழத்தை சாப்பிட்டார்களாம்.

ஸ்காட்லாந்து விமான நிலை யத்தில் 13 என்ற எண்ணை பயன்படுத்துவதேயில்லை. மாறாக 12க்குப் பிறகு 12பி என்றுதான் பயன்படுத்துகிறார்கள்.

லுப்தன்ஸா விமானத்தில் 13 என்ற இருக்கை கிடையாது. 12க்குப் பிறகு 14தான்.

பார்முலா ஒன் கார் ரேஸில் கலந்து கொள்ளும் கார்களுக்கு 13ம் எண் வழங்கப்படுவதில்லை.

அப்போலோ 13 விண்கலம் வெற்றிகரமாகச் செயல்படாமல் திரும்பியதற்கு, 13 என்ற எண்ணை சேர்த்ததுதான் காரணம் என்கிறார்கள் அமெரிக்கர்கள்.

தொடர்ந்து 12 ஆண்டுகள் உலகின் முதல் பணக்காரராகக் கோலோச்சிய பில்கேட்ஸ், 13வது வருடம் அந்த அந்தஸ்தை இழந்துவிட்டதற்கு, 13 என்றே எண்ணே காரணமாம்.

அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் 13ம் தேதி அன்று பிறந்தாலோ அல்லது இறந்தாலோ அந்த எண்ணை பதிவேட்டில் பயன்படுத்தாமல் 12ஏ என்றே குறிப்பிடுகின்றனர்.

இப்படி 13ம் எண்ணைப் பற்றி வெளிநாடுகளில் நிறைய தகவல் கள் உண்டு.

13ம் நம்பர் வீடுன்னு ஒரு பேய் படம் கூட வந்துருக்கு…

சரி விஷயத்துக்கு வரேன்….

எடப்பாடி கே.பழனிசாமி தமிழகத்தின் 13வது முதல்வர்….

இது எப்படி இருக்கு?

அரும்புலியூரில் ஓர் அரும் உத்ஸவம்

ஊர் சுற்றல் … அரும்புலியூருக்கு!

ஆன்மிகக் கட்டுரைகளை எழுதி அறிமுகமாகி பின்னர் Fakebook.. பேக்புக், வாட்ஸப்புகளில் தொடர் தொடர்பில் இருக்கும் பொய்கைஅடியான் பார்த்தசாரதி ஸ்வாமி, தமது கிராமமான அரும்புலியூரில் உள்ள பெருமாள் கோயிலில் ஞாயிறு இன்று காலை பெருமாளுக்கு கல்யாண உத்ஸவம் செய்வதாகவும், தமது ஊருக்கு அவசியம் வருமாறும் அழைத்தார்.

பெங்களூரில் இருக்கும் நம் நட்பு வட்டத்தில் மேற்படி ஸ்வாமியும் ஒருவர். சரி.. இன்று நன்னேரம் போக்குவோமே என்று வழக்கம்போல் கிளம்பிவிட்டேன்.

காஞ்சிபுரத்து கிராமங்களின் அழகை, அதுவும் பாலாற்றுப் படுகை வயல்வெளிகளையும் பச்சை மண்ணையும் ரசித்துப் பார்க்க கொடுத்துவைத்திருக்க வேண்டும். தண்ணீர் வறண்டு வெறும் மணல் ஆறாய்ப் பாலாறு திகழ்ந்திடுனும், இறைவனின் மிச்ச சொச்ச கருணை இருப்பதால் அங்கங்கே பசுமை தலை காட்டுகிறது. பொத்தேரியில் இருந்து கிளம்பி செங்கல்பட்டு பைபாஸ் வழியே காஞ்சிபுரம் சாலையில் திரும்பி சற்று தொலைவில் இடப்புறம் திரும்பி பாலாற்றுப் பாலத்தின் வழியே பிரதம மந்திரி கிராம மேம்பாட்டுச் சாலைத் திட்டத்தில் போடப்பட்ட அழகான ஒற்றைச் சாலையில் பயணித்தேன். காவித்தண்டலம்.. பெயர் நன்றாகத்தான் இருந்தது. சாலையை ஒட்டி தலைகாட்டிய சிவன் கோவில் சுவரும் கோபுரம், வெள்ளைச் சுண்ணாம்புப் பசை கண்டு மாமாங்கம் ஆகியிருக்கும்போல். இன்னும் ஓரிரண்டு சிறு சிறு கோயில்கள்…

இன்றே இப்படியான தன்மையைக் கொண்டிருக்கும் பாலாற்றின் கரையைப் பார்த்தபடி பயணிக்கும் போது… பாண்டியனுக்கும் சோழனுக்கும் சவால் விட்ட பல்லவன் தன் நாட்டை எப்படி வைத்திருந்திருப்பான் என்பதை எண்ணிப் பார்த்தபோது மெய்யாலுமே மெய் சிலிர்த்தது. பாலாற்றை மட்டும் பல்லவன் திசை திருப்பி செழிப்பாக்கவில்லை, அங்கங்கே ஏரிகளை அமைத்து வழி நெடுக நீரைத் தேக்கி வைத்திருந்தான். ஏரிகளின் மாவட்டம் என்று இன்று நாம் பீற்றிக் கொள்ளும் பெருமையை, பிளாட்டுகளாக்கி வேட்டு வைத்துக் கொண்டிருக்கிறோம்… அது வேறு கதை!

கூகுள் மேப் புண்ணியத்தில் அரும்புலியூர் செல்லும் சாலை மனத்தில் பதிந்து விட்டது என்றாலும், பயணத்தினூடே கிராம மக்களிடம் எதை முன்னிட்டு உரையாடுவது? வழி கேட்பதில்தானே! தென்பட்ட ஓரிரு பெரியவர்களிடம் ஐயா… அரும்புலியூர் போற ரோடு இதானேன்னு உறுதிப் படுத்திக் கொண்டு, அவர்களின் காஞ்சி பிரதேச தொண்டை மண்டல பேச்சு மொழியை ரசித்தவாறே பயணித்தேன்.

அரும்புலியூர்… அழகிய கிராமம்தான்! சுற்றிலும் பசுமை வண்ணம் மட்டுமே தெரிந்த வயல்வெளிகள். நடுவே கோயில். பொய்கையடியான் புன்னகைத்தவாறே… வாரும் வாரும் என்று வரவேற்றார். முதல்முறை நேரில் பார்க்கிறார் என்றாலும் என் முகம் பளிச்சென்று தெரிந்திருக்கிறது மனிதருக்கு! (இதுக்குதான் அப்ப அப்ப நாம வேலை பாக்கற பத்திரிகைகள்லயே போட்டோக்களெல்லாம் போட்டு… எடுபிடிகள் மூலம் பேனர் வைத்து, ஐயா வர்றார் ஐயா வர்றார்ன்னு முன்னேற்பாடெல்லாம் செய்து, மூஞ்ச பிரபலப் படுத்திக்கணும்ங்கிறதுன்னு திபிக., தானைத் தலைவர் மானசீகமா வந்து ஓரமா காதுல கிசுகிசுத்தார்… இல்லயா பின்னே! அப்பத்தானே அங்க இங்க நிகழ்ச்சி நடத்துறவங்க.. எங்க ப்ரோக்ராமுக்கும் வாங்க வாங்கன்னு குமிப்பாங்க… இன்விஷ்டேஷனா! 1f642 - 2026🙂 )

பெருமாள் மாலைகளை மூங்கில் தட்டில் சுருட்டி எடுத்து முதுகில் சுமந்து கொண்டு, ஆடியாடி அகம் தணிந்து, இசை பாடிப்பாடி இசைவாய்ச் சுருண்டு, தரை தொட்டு, முழந்தாளிட்டு நடந்து ஆடி … கொஞ்சம் எண்டர்டெய்ன்மெண்ட் கொடுத்தார் ஒரு பெரியவர்… ருசிகரமாகத்தான் இருந்தது.

மாலை மாற்றல் முடிந்து வந்தவரிடம்

ஸ்வாமி.. அடியேன். உம் திருநாமம்.. என விசாரித்தேன்.

குப்புஸ்வாமி என்றார்.

தப்பா நெனச்சிக்கப்டாது.. உம் வயஸ்ஸு என்னவோ? – கேட்டேன். 78 என்றார்.

ஊர்…? வினவினேன். பொன்விளைந்தகளத்தூர் என்றார்… தொடர்ந்து ஒவ்வொரு சன்னிதியாகச் சொல்லி, அங்கெல்லாம் போய் இந்தக் கைங்கர்யத்தைச் செய்வதை கண்களில் அவ்வளவு ஆர்வம் பொங்கக் கூறினார். கேட்டு பிரமிப்பாக இருந்தது. (ஃபோட்டோவில் இருப்பவர்…)

arumbuliyur2 - 2026தொடர்ந்து வழக்கமான சடங்குகள்… மாங்கல்யதாரணம், வாரணமாயிரம், சாத்துமுறை என்று நிறைந்தது.

கிராமத்து மக்கள் அதிகம் தலைகட்டினர். கிராமத்துச் சிறுவர்கள், தூக்கிக் கட்டிய பாவாடை சட்டை, டிராயர் சட்டை என கபடற்ற சிறுவர் சிறுமியர்… வாரிப் பின்னலிட்டும், தலை சொறிந்து ஒழுங்கற்ற தலைமுடியும் என அப்பழுக்கற்ற நம் கிராமக் குழந்தைகளின் முகம் காணும் போது … நன்றாய்த்தான் இருக்கிறது.

ஆலய மண்டபத்தில் இடப்புறம் வேத பாராயணத்தில் சிலர் என்றால்… வலப்புறம் இருக்கும் பிராகார சிறு இடத்தில் பாண்டி ஆடிய சிறுமிகள்… ஒரு பயல் பக்கத்திலேயே பம்பரம் விட்டான்.

மலர் மாலைகள் சூடி தெம்பாக இருந்தார் பெருமாள். பாவம் அவர் தோள் கனக்கிறது என்று பரிவு காட்டி, கைங்கர்ய ஸ்வாமி பெருமாள் மாலைகளைக் கழற்றி வந்திருந்தவர்களுக்குப் போட்டு… சிலவற்றை சிறிதாக்கி ஊர்ப் பெரியவர்களை அழைத்து எல்லோருக்கும் மாலைகளை கழுத்திலிட்டு.. (ஒவ்வொருவர் முகத்திலும்தான் என்ன பெருமிதம்…!) பெருமாளை வெறும் முத்துக் கொண்டை சகித கவசபூஷிதனாக்கிவிட்டார்!

கோஷ்டி முடிந்து வரிசையாக ததியாராதனை…

கொஞ்சம் கூட கரைச்சலோ சத்தமோ குழப்பமோ இன்றி.. சிறார்களில் இருந்து ஊர்ப் பெரியவர்கள் வரை எல்லோரும் வரிசையாக அமர்ந்து…சர்க்கரைப் பொங்கல், சாம்பார் சாதம் தயிர்சாதத்தை உண்டு…

அந்த ஒழுங்கைப் பார்க்கும்போது பல வித எண்ணங்கள் மனத்தில்!

ஆனால்… ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தெள்ளத் தெளிவாக இந்த சமூகத்துக்குச் சொல்ல விழைகிறேன்..

நம் முன்னோர்களின் சமூகக் கட்டமைப்பு …

ஒவ்வொரு கிராமத்துக்கும் வழிபாட்டுக்கென சிவன் கோயிலோ பெருமாள், அம்மன் கோயில்களோ… அல்லது கிராமத்து முப்பிடாதி, சுடலை மாடன் வகையறா கோயில்களோ என.. இருந்து…

கிராமத்தின் நன்மைக்காக, ஊர் சுபிட்சமுடன் திகழ, விவசாயம் செழிப்பாக இருக்க, மழை நன்றாகப் பொழிய, ஆற்றில் நீர் வர, நோய் நொடியற்று கிராமத்தினர் நலமுடன் திகழ… என்று சங்கல்பித்து இறை வழிபாட்டுடன் அந்த எண்ணத்தை மக்கள் மனத்தில் நன்றாக ஊன்ற வைத்து எல்லாம் சரியாக இருந்தவரை… கிராமங்களில் எல்லாம் சரியாகத்தான் இருந்தது. அவ்வப்போது வரும் வறட்சி, பஞ்சத்துக்கும் வழிபாட்டைச் சொல்லி ஒரு கூட்டம் தன்னை முழுதுமாய் ஈடுபடுத்தியது. இப்போது எல்லாமே வெளியேற்றம்…

பயனை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்!

5 கோப்புகளில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் பழனிசாமி

முக்கிய 5 கோப்புகளில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் பழனிசாமி
►மேலும் 500 மதுக்கடைகள் மூடப்படும்
►மகப்பேறு நிதியுதவி ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்வு
►மீனவர்களுக்கான தனிவீடு வசதித் திட்டம் செயல்படுத்த ரூ.85 கோடி ஒதுக்கீடு
►உழைக்கும் பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க 50% மானியம்
►வேலையற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை இரு மடங்காக உயர்த்தப்படும்

TET தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு: செங்கோட்டையன்

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளிவரும்.பள்ளிக்கல்வி துறையில் சிறந்து விளங்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

எத்தனை திட்டங்களை வெளியிட்டாலும் மக்கள் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை: தமிழிசை

முதலமைச்சர் எத்தனை திட்டங்களை வெளியிட்டாலும் மக்கள் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். இன்று தலைமை செயலகத்தில் 5 திட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட்டார். 500 மதுக்கடைகள் மூடல், வேலை செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகங்களுக்கு 50 சதவீதம் மானியம் உள்ளிட்ட திட்டங்களுக்கு அவர் கையெழுத்திட்டார்.*

நடிகை பாவனா மீது தாக்குதல்: மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கண்டனம்

நடிகை பாவனா கடத்தப்பட்டு தாக்கப்பட்டதற்கு மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற குற்றங்களை தடுக்க முன்னுதாரணமாக தண்டனை வழங்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் குற்றம் செய்தவர்களை விரைந்து விசாரித்து தண்டனை வழங்க புதிய மசோதாவை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.*