Home Blog Page 5924

12ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் : மருத்துவர் ராமதாஸ்

 
 
 
தமிழ்நாட்டில் வெள்ளம் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 12ஆம் வகுப்பு வரை தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் பொதுத்தேர்ச்சி வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியினர் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.
 
மேலும் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின் கூறியுள்ளதாவது: –
 
சென்னையில் வெள்ளம் வடிந்த பகுதிகளில் வீடுகளுக்கு உள்ளேயும், வெளியேயும் பல அடிக்கு வண்டல் மண் படிந்துள்ளது. வீடுகளில் இருந்த படுக்கை, தலையணைகள் போன்ற வீட்டு பயன்பாட்டு பொருட்களும், உணவுப் பொருட்களும் வெள்ள நீரில் ஊறி பாழாகி நாற்றம் எடுக்கத் தொடங்கிவிட்டன. இவ்வாறு பாழான பொருட்கள் சாலைகளிலும், தெருக்களிலும் கொட்டப்பட்டிருப்பதால் அவற்றிலிருந்து நோய்க்கிருமிகள் பரவும் ஆபத்து உள்ளது. அதேபோல் கிட்டத்தட்ட வெள்ளம் பாதித்த அனைத்துப் பகுதிகளிலும் கழிவு நீரும், குடீநீரும் கலந்திருப்பதால் அதன் மூலமாக நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.
 
வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகரின் சில பகுதிகளில் இன்னும் வெள்ளம் முழுமையாக வடியவில்லை என்றாலும், பெரும்பாலான பகுதிகளில் இயல்பு நிலை திரும்பத் தொடங்கியுள்ளது. வெள்ளம் வடியாத பகுதிகளில் இயல்பு நிலையை ஏற்படுத்தவும், மற்ற பகுதிகளில் தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டியது அவசியமாகும்.
 
நோய்கள் பரவுவதைத் தடுக்க வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் குவிந்து கிடக்கும் குப்பைகள் மற்றும் கழிவுப்பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டும். சென்னை மற்றும் வெளியூர்களில் இருந்து அழைத்து வரப்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர் என்ற போதிலும், சென்னையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு பார்க்கும்போது இது போதுமானது அல்ல. எனவே, தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இருந்து அதிக எண்ணிக்கையில் பணியாளர்களை அழைத்து வந்து துப்புரவு பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
 
அதுமட்டுமின்றி, வெள்ளம் பாதித்த அனைத்து பகுதிகளிலும் கொசு ஒழிப்பு புகைத் தெளித்தல், கிருமி நாசினி தெளித்தல், மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள், பாதாள குடிநீர் சேமிப்புத் தொட்டி உள்ளிட்ட அனைத்து குடிநீர் ஆதாரங்களிலும் குளோரின் சேர்த்தல், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் அரசும், சென்னை மாநகராட்சியும் மேற்கொள்ளவேண்டும். அனைத்து வட்டங்களிலும் மருத்துவ முகாம்களை நடத்தி நோய்த்தடுப்பு மருந்து வழங்க வேண்டும்.
 
தொடர்ந்து பெய்த மழையால் அனைத்து உடைமைகளையும் இழந்து விட்ட மக்கள், புதிதாக வாழ்க்கையைத் தொடங்க வழியில்லாமல் தவிக்கின்றனர். வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் அவர்கள் வாழ வழி காட்ட வேண்டியது தமிழக அரசின் கடமை என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
 
அதன்படி வெள்ளத்தில் சிக்கி மீண்ட மக்கள் இயல்பான வாழ்க்கை வாழ்வதற்கு வசதியாக அனைத்து குடும்பங்களுக்கும் தலா ஒரு மண்ணெண்ணெய் அடுப்பு, இரு பாய்கள் மற்றும் தலையணைகள், 25 கிலோ அரிசி, 10 லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவை கொண்ட தொகுப்பை பாதிக்கப்பட்ட மக்களின் இல்லங்களுக்கே கொண்டு சென்று வழங்க அரசு முன்வர வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன்.
 
மேலும் வெள்ள நிவாரணமாக அனைத்துக் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் நிதி உதவியை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு தடையாக இருப்பதாலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள சிறிதளவு பணமும் மதுக்கடைகளுக்கு செல்வதாலும் அனைத்து மதுக்கடைகளையும் இரு வாரங்களுக்கு மூட வேண்டும்.
 
இதற்கெல்லாம் மேலாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர்களின் நிலைமை தான் மிகவும் பரிதாபமாக உள்ளது. வெள்ளத்தின் கோரத் தாண்டவத்திற்கு உடைமைகள், ஆடைகள் ஆகியவை மட்டுமின்றி பாட நூல்களையும் மாணவர்கள் இழந்துள்ளனர்.
 
குடிசைகள், ஆற்றங்கரையோரப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் கடந்த ஒரு மாதமாக அனுபவித்து வரும் துயரம் அவர்களை மனதளவில் மிக மோசமாக பாதித்திருக்கிறது. சில மாணவர்கள் தங்கள் கண் எதிரிலேயே குடும்ப உறுப்பினர்களை வெள்ளத்திற்கு பலி கொடுத்துள்ளனர்.
 
இதனால் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ள மாணவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப பல மாதங்கள் ஆகும். இம்மாணவர்களால் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அரையாண்டுத் தேர்வுகளை எழுதுவதோ, மார்ச்&ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள இறுதித்தேர்வுக்கு தயாராவதோ சாத்தியமில்லை.
 
கடந்த 1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் நச்சுவாயுக் கசிந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்; லட்சக்கணக்கானோர் பாதிக்கப் பட்டனர். மாணவர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாயினர். இதனால் போபால் மாவட்டத்தை பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவித்து அங்கு தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும்படி அப்போதைய மத்திய பிரதேச முதலமைச்சர் அர்ஜுன்சிங் ஆணையிட்டார். அதன்படி அங்கு அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்பட்டது.
 
அதேபோல், தமிழ்நாட்டிலும் வெள்ளம் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 12ஆம் வகுப்பு வரை தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் பொதுத்தேர்ச்சி வழங்க வேண்டும். அதற்கு முன்பாக அடுத்த மாதம் நடைபெறவுள்ள அரையாண்டுத் தேர்வுகளை வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மட்டும் ரத்து செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின் கூறியுள்ளார் .

இலங்கை கடலில் மிதப்பது தமிழகளின் சடலங்களா ?

 

இலங்கையின் கிழக்கு திருகோணமலை கடலில் 10 மைல்களுக்கு அப்பால் சில சடலங்கள் மிதந்து கொண்டிருப்பதாக உள்ளுர் மீனவர்கள் திருகோணமலை துறைமுக காவல் துறையினருக்கு 05-11-2015 அன்று தகவல் தெரிவித்துள்ளனர்.

கடற்பரப்பில் சில சடலங்கள் மிதந்து கொண்டிருப்பதாக கிடைத்துள்ள தகவல்களையடுத்து அந்நாட்டு கடற்படை அப்பகுதியில் இரண்டாவது நாளாக நேற்றும் தீவர தேடுதலில் ஈடுபட்டனர் .

இந்த தீவர தேடுதலில் ஒரு சடலம் மீட்கப்பட்டது. இலங்கை கடற்படைனரால் மீட்கப்பட்டவரின் சட்டைப் பையிலிருந்து சென்னை முகவரியிடப்பட்ட வாடகைக் கார் ஓட்டுநர் அடையாள அட்டை இருந்தது.அந்த சடலம் தற்போது திருகோணமலை இலங்கை அரசு மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சடலங்கள் சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ள இராமேஸ்வரம் மீனவர்களுடைய சடலங்களாக இருக்கலாம் அல்லது தமிழ் நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுடைய சடலங்களாக இருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளபோதிலும், அதனை உறுதிப்படுத்தும் வகையிலான தகவல்களை இலங்கை அரசு அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் திருகோணமலை நிலாவெளி கடலோரம் இந்தியப் பிரஜை என சந்தேகிக்கப்படும் சடலமொன்று கரை ஒதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

மேலும் இலங்கை கடற்படையினர் மூன்று டோரா படகுகள் தற்போது அந்த பகுதியில் தேடுதலில் ஈடுபட்டுள்ளதாகவும் இதுவரை வேறு சடலங்கள் எதுவும் மீட்கப்படவில்லை என இலங்கை கடற்படையின் ஊடகதுறை பிரிவு கூறுகிறது.கடல் தொடர்ந்து கொந்தளிப்பாக காணப்படுவதால் தேடுதல் பணிகளில் சிரமங்கள் ஏற்பட்டாலும்

தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக இலங்கை கடற்படை வாட்டாரம் தெரிவிப்பதாக செய்தி ஏஜென்சி தகவல் கூறுகிறது.

 

 

 

மழை வெள்ளத்தால் குடிசை வீடுகளை இழந்தோருக்கு நிரந்தர வீடுகள் : முதலமைச்சர் அறிவிப்பு

 
கனமழை வெள்ளத்தால் குடிசை வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 
முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :-
 
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் மிக அதிக அளவு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
 
மழை வெள்ளத்தால் பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகளை இழந்த பள்ளி மாணாக்கரது நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு புதிய பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் ஒரு ஜோடி சீருடை வழங்க ஆணையிடப் பட்டுள்ளது .
 
இதுவரை 37707 பள்ளி மாணக்கர்களுக்கு பாடப் புத்தகங்களும், 26865 மாணாக்கர்களுக்கு நோட்டுப் புத்தகங்களும், 9306 மாணாக்கர்களுக்கு பள்ளிச் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், மழை வெள்ளத்தால் குடும்ப அட்டைகளை இழந்த மக்களுக்கு, நகல் குடும்ப அட்டைகள் வழங்கவும் என்னால் ஆணையிடப்பட்டு, நகல் குடும்ப அட்டைகள் துரிதமாக வழங்கப்பட்டு வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வெள்ளத்தின் காரணமாக பொதுமக்கள் தங்களது நிலம் மற்றும் வீட்டு மனைப் பட்டா, கல்வி சான்றிதழ், எரி வாயு இணைப்பு அட்டை, ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்குப் புத்தகம், நிலம் / வீட்டு கிரையப் பத்திரம் உள்ளிட்ட மேற்சொன்ன ஆவணங்களை இழந்த பொது மக்களுக்கு அவற்றின் நகல்களை உடனடியாக வழங்க நான் உத்தரவிபட்டுள்ளன.
 
இதற்காக சிறப்பு முகாம்கள் வருவாய் வட்டங்களிலும், கல்வி சான்றிதழ்களுக்கு, பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் வருகின்ற 14.12.2015 முதல் இரண்டு வாரங்களுக்கு நடத்த நான் உத்தரவிட்டுள்ளேன். இம்முகாம்களில், தமிழ்நாடு அரசின் பல்வேறு துறை அதிகாரிகளும், மத்திய அரசின் தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று ஒரு வாரத்திற்குள்ளாக நகல் ஆவணங்களை கட்டணமின்றி வழங்குவர். சிறப்பு முகாம்களில் மட்டுமன்றி, பொதுமக்கள் விண்ணப்பங்களை பொது சேவை மையங்கள் மூலமாகவும் கொடுத்து நகல் ஆவணங்களைப் பெறலாம்.
 
தமிழ்நாடு பத்திரப் பதிவுச் சட்டம் 1908 பிரிவு 57(5)-ன்படி, இச்சிறப்பு முகாம்களில் விண்ணப்பித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிலம்/வீட்டுமனை சொத்து தொடர்பான பத்திர நகல்கள் யாவும் மூல ஆவணங்களாகக் கருதப்படும்.
 
ஆட்டோ ஒட்டுநர்கள் பலர் ஒட்டுநர் உரிமச் சான்று மற்றும் வாகனப் பதிவுச் சான்று ஆகியவற்றை இந்த மழை வெள்ளத்தால் இழந்துள்ளனர். இந்த ஆவணங்களும் இதே நடைமுறைப்படி வழங்கப்படும். மழை வெள்ளத்தால் சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.5000/-ம், குடும்பத்திற்கு 10 கிலோ அரிசியும் வழங்க நான் ஏற்கெனவே ஆணையிட்டதன் அடிப்படையில் இந்த நிவாரண உதவிகள் துரிதமாக வழங்கப்பட்டு வருகின்றன என
கூறப்பட்டுள்ளது .
 
கனமழை வெள்ளத்தால் பாதித்த மக்களின் துயர் துடைக்கும் வகையில் அவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு 5,000 ரூபாயும், ஒரு வேட்டி, ஒரு சேலை மற்றும் 10 கிலோ அரிசி ஆகியவற்றை சிறப்பு வெள்ள நிவாரணத் தொகுப்பாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். மேற்காணும் தொகையானது, பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். வேட்டி, சேலை மற்றும் அரிசி ஆகியவை சம்மந்தப்பட்ட நியாய விலைக் கடைகள் மூலம் தமிழக அரசால் வழங்கப்பட உள்ளன.
 
மேலும் வெள்ள பாதிப்பால் குடிசைகளை இழந்த குடும்பங்கள் குடிசை ஒன்றுக்கு 5,000 ரூபாய் மற்றும் சிறப்பு நிவாரணத் தொகையாக 5,000 ரூபாய் என மொத்தம் 10,000 ரூபாய் மற்றும் 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி மற்றும் ஒரு சேலை ஆகியவற்றை பெறுவர். நிரந்தர வீடுகளில் வசித்து வெள்ள பாதிப்புக்கு உள்ளானோர் 5,000 ரூபாய், 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி மற்றும் ஒரு சேலை ஆகியவற்றை நிவாரணமாக பெறுவார்கள்
 
மழையின் காரணமாக குடிசை வீடுகளை இழந்த அனைவருக்கும் பாதுகாப்பான வீடுகள் கட்டித் தரப்படும். சென்னை மாநகரில் அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றின் கரையோரங்களில் குடிசை வீடுகளில் தங்கி இருந்தவர்கள் தங்கள் வீடுகளை இழந்து விட்டனர். ஒக்கியம் துரைப்பாக்கம் மற்றும் பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் கட்டப்பட்டுள்ள 10,000 குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் இவர்களுக்கு உடனடியாக வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
 
பாதிக்கப்பட்ட குடும்பங்களை கணக்கெடுக்கும் பணிகளை உடனடியாக துவங்கவும் அந்த கணக்கெடுப்புகள் முடிந்தவுடன் ஒரு சில தினங்களில் உடனடியாக வெள்ள நிவாரணத்தை தமிழக வழங்கும் என முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

 

ரஜினிக்கு ரசிகர் எழுதிய விரக்தி மடல்

திரு.ரஜினி அவர்களுக்கு , இதுவரை உங்கள் ரசிகனாக இருந்ததற்கு வெட்கப்படும் மற்றும் உங்கள் ஒருதுளி வியர்வைக்கு பல பவுன் கொடுத்த தமிழ்நாட்டின் ஒருவனாகிய நான் சில கருத்துக்களை உங்களுக்கு சொல்ல நினைக்கிறேன். 

நீங்கள் உங்கள் மகள்கள் திருமணத்திற்கு எங்களை போன்ற அடுத்தட்டு ரசிகர்களை அழைக்காமல் , அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களை மற்றும் அழைத்து எங்களை அவமானபடுத்தியதை விகடன் பத்திரிக்கை தெளிவுபடுத்தியபோது கூட அது உங்கள் குடும்ப விசயம் என்றுஅதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விட்டு விட்டோம் . அப்போதும் உங்கள் ரசிகனாகவே இருந்தோம்.

 

குசேலன் படத்தில் எப்போதுதான் அரசியலுக்கு வருவீர்கள் ? , வரும்போது சரியாய் வருவேன் என்று பல ஆண்டுகளாக எல்லா திரைபடங்களிலும் சொல்லி வருகேறீர்களே என்று கேட்டதற்கு , அது சினிமா வசனமாக இயக்குனர் சொல்லிக்கொடுத்தது , அதை நீங்கள் நம்பினால் அதற்கு நான் என்ன செய்வது  என்று சொல்லி எங்களை அவமானபடுத்தியதை கூட அது உங்கள் சொந்த விசயம் என்று அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விட்டு விட்டோம் . அப்போதும் உங்கள் ரசிகனாகவே இருந்தோம்.

 

பாபா படம் வெளியானபோது திரு. ராமதாஸ் அவர்கள் பொதுவாக பேசும் போது சொன்ன ஒரு கருத்தை, உங்களை சொன்னதாக எங்களையும் கிளப்பிவிட்டு அப்போதைய நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சிக்கு எதிரான அலை வீசிகொண்டிருக்கும்போது எதிர் கூட்டணியில் இருந்து 6 தொகுதிகளில் போட்டயிட்ட பாமக வை தோற்படிப்பேன் என்று கோபத்துடன் சவால் விட்டது மட்டுமின்றி  , இந்திய அரசியல் சட்டதிட்டங்களை மீறி ஓட்டுசாவடியில் இருந்து வெளியே வரும்போது இரட்டை விரலை அசைத்து கொண்டு வெளியே வந்தீர்கள். அதில் மக்கள் உங்களை ஒட்டு மொத்தமாக ஓரங்கட்டி 6 தொகுதிகளிலும் பாமகவை வெற்றிபெற வைத்தார்கள். 

 

பின்னர் உங்கள் ஓடாத திரைபடங்களை பலமுறை திருப்பித்திருப்பி பார்த்து , அந்த படங்களை ஓரளவிர்காவது உங்கள் மானம் காக்க ஓடவைத்த எங்களை ஓரம்கட்டி விட்டு யாரை எதிரியாக அறிவித்தீர்களோ அவரின் மகன் திரு,அன்புமணிராமதாசை உங்கள்வீட்டுத் திருமணத்திற்கு அழைத்து வந்தீர்கள். 1996 ல் ஆளும் கட்சிக்கு  எதிராக பேசி எங்களையும் அக்கட்சி தொண்டர்களின் ஏச்சு பேச்சுக்கு ஆள்ளாக்கி விட்டு 2001 ல் அதே கட்சி பதவி ஏற்பில் முதல்ஆளாக கலந்துகொண்டு எங்களை அவமானபடுத்தியதை கூட அது உங்கள் சாதுர்யம் என்று அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விட்டு விட்டோம் . அப்போதும் உங்கள் ரசிகனாகவே இருந்தோம்.

 

நீங்கள் உடல்நிலை சரியில்லாமல் சிங்கப்பூரில் எலிசெபத் மருத்துவமனையில் இருந்தபோது , மனம் துடிதுடித்து எங்கள் உடலை வருத்திக்கொண்டு எல்லா வேண்டுதல்களையும் செய்து , கடவுள் அருளால் நீங்கள் உடல்நலம் தேறியபோது எல்லையாயில்லா ஆனந்தம் அடைந்து உங்களை பார்க்க நினக்கபோது , அனைவரும் வந்து பார்த்தால் உங்களுக்கு தொற்று ஏற்படும் என்று சொல்லப்பட்டு திருப்பி அனுப்பப்படும்போது கூட அது உங்கள் உடல்நலம் குணமானால் போதும் என்று அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விட்டு விட்டோம் . அப்போதும் உங்கள் ரசிகனாகவே இருந்தோம்.

 

ஆனால் கிட்டத்தட்ட 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட இந்த வெள்ளநிவாரணத்திற்காக 10 லட்சத்தை ஒரு கடமைக்காக பிச்சை போடுவதுபோல , அதுவும் அதில் வருமானவரி பிடித்தம் இல்லாமல் இருப்பதற்காக உங்கள் அறக்கட்டளை மூலமாக அதுவும் நடிகர் சங்கம் மூலமாக அளித்ததை எப்படி யோசித்தாலும் எங்களின் யார் மனமும் ஏற்க மறுக்கிறது.

 

உங்கள் 20 வருட ரசிகனாக தலைவணங்கி தங்கள் கால்பிடித்து கேட்டுகொள்ளுகிறேன். தயவுசெய்து 10 லட்சத்தை திருப்பி வாங்கி கொள்ளுங்கள் . உங்களின் இந்த அவமானபடுத்தலை எங்களாலும் சரி , எந்த தமிழானாலும் சரி முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இதற்கான எந்த விளக்கமும் கொடுத்து இனியும் எங்களை ஏமாற்ற நீங்கள் தயவுசெய்து முயற்சிக்கவேண்டாம். 

 

இனியாவது உங்கள் குருவான சுவாமி ராகவேந்தரின் உண்மையான பக்தரான திரு.ராகவா லாரன்சை பார்த்தாவது மக்கள்பணி என்றால் என்னவென்று கற்றுக் கொள்ள இனியாவது முயற்சியாவது செய்யுங்கள்.

 

உங்களின் கபாலி பட தோல்வி என்பது 100 சதவிகிதம் உறுதியான ஒன்று. உங்கள் அவமானபடுதல்களுக்கு உங்கள் ரசிகர்களாகிய நாங்களும் , ஒட்டுமொத்த தமிழர்களும் கபாலி பட வெளிவரும்போது நல்ல பதிலடி கொடுப்போம்.

 

அன்பு ரஜினி ரசிகர்களுக்கு உளமார்ந்த வேண்டுகோள் , உங்களுக்கு மனிதநேயம் , தமிழ்மக்கள் மீது உண்மையான பாசம் , இதயம் என்று ஒருவேளை ஒன்று இருந்தால் நான் மேற்சொன்ன அனைத்தையும் நன்கு படித்து ஆராய்ந்து சரி எனப்பட்டால் உடனடியாக ரசிகர்மன்றங்களை இனியும் அவரை நம்பி ஏமாறாமல் கலைத்து விடுமாறு கேட்டு கொள்கிறேன்.

 

இப்படிக்கு

 

உங்கள் ரசிகனாக இத்தனை நாள் இருந்ததற்காக வெட்கித்தலைகுனியும்  ஒரு தமிழன்

வெள்ளத்தில் பாஸ்போர்ட்டை இழந்தவர்களுக்கு புதிய பாஸ்போர்ட் இலவசம் : சுஷ்மா ஸ்வராஜ்

 
தமிழகத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த அல்லது தொலைந்து போன பாஸ்போர்ட்டுகளுக்கு பதிலாக மத்திய அரசு இலவசமாக புதிய பாஸ்போர்ட்டுகளை வழங்கும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவரது ட்விட்டர் கணக்கு பதிவில் தெரிவித்துள்ளார்
 
தமிழகத்தில் வரலாறு காணாத தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், நகரின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. வெள்ளத்தில் சிக்கி மக்கள் குடும்ப அட்டை , பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை இழந்து தவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் வெள்ளத்தால் உங்களின் பாஸ்போர்ட் சேதம் அடைந்திருந்தாலோ அல்லது தொலைந்துவிட்டாலோ சென்னையில் உள்ள 3 பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்களுக்கு தயவு செய்து செல்லுங்கள். அங்கு உங்களுக்கு இலவசமாக புதிய பாஸ்போர்ட் அளிக்கப்படும்.”என்று சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

 

2000 உணவு பொட்டலம் கேட்டு மிரட்டி அட்டூழியம் செய்த அதிமுக கட்சியை சேர்ந்த கவுன்சிலரின் கணவர்

 

மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த அனைத்து இடங்களிலும் உடனடியாக உதவி செய்தது யார் என்றால் ஜாதி, மத, வேறுபாடுகள் இன்றி பொதுநல நோக்கத்தில் பல்வேறு தன்னார்வ தொண்டு அமைப்புகள்தான்.

வெளி மாவட்டங்களில் இருந்து உணவு மற்றும் தேவையான அத்தியாவசியப் பொருட்களை தொடர்ந்து கொண்டு சென்றும், இலவசமாக வழங்கியும் சேவையாற்றி வருகின்றனர். பல தன்னார்வ தொண்டு அமைப்புகள் வெள்ளத்தால் பாதிப்படைந்த பொது மக்கள் இருக்கும் பகுதியிலேயே உணவுகளை தயார் செய்து மனித நேயத்துடன் வழங்கி வருகின்றனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளியூரிலிருந்து கொண்டு வரப்படும் நிவாரணங்களை, உள்ளூரில் உள்ள சமூக விரோதிகள் தடுத்து எடுத்துச் செல்வதாக பல இடங்களில் புகார் எழுந்துள்ளது.

பெரும்பாலும் அதிமுக கட்சியை சேர்ந்த ஒரு சிலர் அராஜகமாக நிவாரணப் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை அந்தந்த ஊர்களில் வழிமறித்து திசை திருப்பி அனுப்புகின்றனர் என பரவலாக சொல்லப் படுகிறது. கையில் கோலுடன் மிரட்டி வாகனங்களை வழிமறிக்கும் அவர்களை காவல்துறையும் கண்டு கொள்வதில்லை என்கின்றனர். காரணம் அவர்கள் அந்த ஊரில் செல்வாக்கான மனிதர்களாம்.

பொதுநல நோக்கம் இன்றி லஞ்சம் பெற்றும், ஊழல் செய்தும், பொதுமக்களின் வரிப் பணத்தை அரசாங்க பொதுநல திட்டங்களுக்கு முறையாக செலவிடாமல் கொள்ளையடித்து சொத்து சேர்க்கும் பேராசையில் தொடர்ந்து சுற்றி திரிந்து வரும் சுயநல அரசியல்வாதி கரைவேட்டி கொள்ளையர்களே அவர்கள் என பொதுமக்களால் குற்றம் சாட்டப்படுகிறது.

அவ்வாறு பொதுமக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து சொத்து சேர்த்து வைத்ததில் இருந்து சிறிய தொகையை எடுத்துக் கூட பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்ய மனம் இல்லாத சுயநல அரசியல்வாதி சமூக விரோதி கரைவேட்டி கொள்ளையர்களும் வெட்கமில்லாமல் உலகில் வலம் வந்து கொண்டுதான் உள்ளனர்.

அவ்வாறு அந்தந்த மாவட்டத்தில் பாதிப்படைந்தவர்களுக்காக பொதுமக்கள் வழங்கிய நிவாரணப் பொருட்கள்மீதும் ஜெயலலிதா புகைப்படத்தை ஒட்டி இலவச சுய விளம்பரம் தேடுவது தொடர்ந்து அரசியல் ஆதாயம் அடையும் செயல் என தமிழக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பொதுமக்கள் வழங்கிய நிவாரணப் பொருட்கள் மீதும் ஜெயலலிதா புகைப்படத்தை ஓட்டி இலவச சுய விளம்பரம் தேடிக்கொள்வதற்கு என்ன உரிமையுள்ளது? எனும் கேள்வியுடன் புகைப்பட பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் ஓட்டு கேட்டு வந்தால் செருப்பாலும், துடைப்பத்தாலும் அடிப்போம் எனும் மக்கள் குமுறலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டு இருக்கும் அதிமுக கட்சியின் சார்பில் சொந்த செலவில் வெள்ளத்தால் பாதிப்படைந்தவர்களுக்கு என்ன நிவாரண உதவி செய்தார்கள் எனும் கேள்வியை பலர் எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை மாநகரின் ஒரு பகுதியில் தன்னார்வ தொண்டு அமைப்பினர் மனித நேயத்துடன் வெள்ளத்தால் பாதிப்படைந்தவர்களுக்கு பொதுமக்கள் இருக்கும் பகுதியிலேயே 5000 உணவுப் பொட்டலங்களை தயார் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வந்துள்ளதாம்.

அதிமுக கட்சியை சேர்ந்த அந்த பகுதி கவுன்சிலரின் கணவர் பார்த்திபன் என்பவர் அதிமுக கட்சியின் சார்பில் வழங்க 2000 உணவு பொட்டலங்களை தன்னார்வ தொண்டு அமைப்பினரிடம் கேட்டு மிரட்டி அட்டூழியம் செய்ததாக சமூக ஊடகங்களில் தகவல் பதிவிடப்பட்டு காணொளி வைரலாக பரவிவருகிறது.

வைரலாக பரவிவரும் அந்த காணொளி இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா அரசியல்வாதியா ? விளம்பரவாதியா ? : கேள்வி எழுப்பும் பொதுமக்கள்

 
 
தமிழக அரசு சார்பில் இலவசமாக இயக்கப்படும் பேருந்துகளில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் படம் ஒட்டப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என பொதுமக்கள் பரவலாக கண்டனகுரல் எழுப்பி வருகின்றனர்.
 
மேலும் தமிழக பொதுமக்கள் கூறுவதாவது :-
 
அண்டை மாநிலமான கேரள அரசாங்கம் கூட தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ள பாதிப்பால் தமிழமக்களின் மீது பெருத்த மனிதாபத்துடன் 60 இலவச பேருந்துககளை தமிழகத்தில் இயக்கிவருகிறது.
 
கேரள அரசாங்க இலவச பேருந்துகளில் கூட கேரள மாநில முதலமைச்சரின் படம் ஒட்டப்படவில்லை.மேலும் தமிழக அரசு பேருந்து பொது மக்களின் வரிபணத்தில் வாங்கப்பட்டது. ஜெயலலிதாவின் சொந்த பணத்தில் அல்ல,
 
இந்த நிலையில் மக்களின் வரிப்பணத்தில் தமிழக அரசு பேருந்திலும், தமிழக அரசாங்கத்தினால் கொடுக்கப்படும் அணைத்து நலதிட்டங்கள் மற்றும் அரசாங்க விளம்பரங்களில் முதலமைச்சர் ஜெயலலிதா இலவச சுய விளம்பரம் தேடிகொள்ள என்ன உரிமையுள்ளது ? என்றும் ஜெயலலிதா அரசியல்வாதியா ? அல்லது விளம்பரவாதியா ? எனும் கேள்வியுடன் பொதுமக்கள் பரவலாக கண்டனகுரல் எழுப்பி வருகின்றனர் .
 

 

சிங்கப்பூர் அரசாங்கம் ரூ.50 லட்சம் தமிழக வெள்ள நிவாரண நிதி உதவி அளிப்பதாக அறிவிப்பு

 

சிங்கப்பூர் அரசாங்கம் ரூ.50 லட்சம் தமிழக வெள்ள நிவாரண நிதி உதவி அளிப்பதாக அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எழுதி யுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:-

தமிழகத்தில் சென்னையிலும் மற்ற மாவட்டங்களிலும் ஏற்பட்ட வெள்ளத்தினால் ஏற்பட்ட நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்ததற்கும் வெள்ளச் சேதங்களுங்கும் மிகுந்த கவலை தெரிவித்துக் கொள்கிறேன்.

வெள்ள நிவாரண நிதியாக 50 லட்சம் ருபாயை அளிக்கிறோம். விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று நம்புகிறேன் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை வெள்ள சேதம்: ஆத்திகர் பின்பற்ற வேண்டியவை குறித்து வேளுக்குடி கிருஷ்ணன் விளக்கம்

சென்னையில் ஏற்பட்ட வெள்ளச் சேதம் குறித்தும் பின்பற்ற வேண்டிய முறைகள் குறித்தும் ஆன்மிக ரீதியான விளக்கத்தை அளித்துள்ளார் உபந்யாசகர் வேளுக்குடி கிருஷ்ணன்.

உயிருக்கு உயிரான சீதாதேவியை, மழைக்காலம் துவங்கிய படியாலே காத்திருந்து, 4 மாதம் கழித்து மீண்டும் துவக்கினான் ராமன் என்று கூறும் வேளுக்குடி  கிருஷ்ணன், மழைக்காலத்தில் செய்ய வேண்டியவை குறித்தும் எடுத்துரைத்துள்ளார்.

 

எச்சரிக்கை செய்திகள் எதற்காக?

 

ஈக்காட்டுத்தாங்கல் – இக்காட்டில் தங்கல் என்பதன் மருவு என்று ஒரு முறை கூறியிருந்தேன். அவ்வாறு காட்டில் தங்கல் என்பதாக ஆகிவிட்டதோ எனும்படி அடையாற்றின் கரையோரம் ஆகிவிட்டிருந்தது.

அலுவலகம் சென்று வெள்ள நீரின் ஆக்ரோஷத்தால் சந்தித்த இழப்புகளைப் பார்த்து மனம் வருந்தியபடியே அடுத்துள்ள குடியிருப்புகளுக்குச் சென்று பார்த்தேன். காசி திரையரங்கு தொடங்கி இடதுபுறம் ராமாபுரம் நோக்கிச் செல்லும் ஒரு நீண்ட சிறு சாலைக்கும் அடையாற்றுக்கும் இடையே எத்தனை குறுக்குச் சாலைகள்! எல்லா வீடுகளின் தரைத் தளங்களிலும் கரை கடந்த ஆற்று நீர் தஞ்சம் புகுந்திருந்தது. குடிசைகள், மாடிக் கட்டடங்கள், பலசரக்குக் கடைகள், பெட்டிக் கடைகள் எல்லாம்தான்!

ஒவ்வொரு வீட்டின் முன்னும் பொத்திப் பொத்திப் பாதுகாத்த ஷோபா, பெட், தலையணைகள், துணிமணிகள் என… எல்லாம் குப்பைகளாய்க் குவிந்திருந்தன. ஆற்று நீர் சேற்றையும் சாக்கடையையும் சேர்த்து அங்கே தள்ளியிருந்ததால்… துர்நாற்றம், சகதி.

வீடுகள் பலவும் பூட்டப்பட்டிருந்தன. பலர் வெளியூர்களுக்குச் சென்றிருந்தார்கள். தெருக்கள் பலவும் வெறிச்சோடிக் கிடந்தன.

சென்னையில் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் எம்ப்டன் குண்டு போடப்போகிறார்கள் என்று வதந்தி பரவி, ஒட்டுமொத்த சென்னையே அச்சத்தால் வெளியேறியதைப் போன்ற நிலைமை இது!

காரணத்தை அங்கிருந்த பெண்மணிகளிடம் பேசிக் கொண்டிருந்தபோது புரிந்துகொண்டேன்.

டிசம்பர் 2 வெள்ளம் வந்துள்ளது. மறுநாள் மாலை ஓரளவு வடிந்துள்ளது. சிலர் தங்கள் வீட்டின் விலையுயர்ந்த பொருள்களை மேல்மாடிகளில் அங்கும் இங்கும் வைத்து எடுத்து ஏதோ பாதுகாத்து வந்துள்ளனர்.

திடீரென 4ம் தேதி ஒரு பெண்மணி நெஞ்சிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு… தெருவின் முனையில் இருந்து தெரு முழுக்க ஓடி வந்திருக்கிறார். செம்பரம்பாக்கம் ஏரி உடைஞ்சிடுச்சாம்.. நாம எல்லாரும் செத்தோம். வீட்டின் ஒரு கல்லு கூட மிஞ்சாது. எல்லாம் அடிச்சிட்டு போகப்போவுது… ஐயோ அம்மா என்று குய்யோமுறையோ என கத்திக் கொண்டு சென்றுள்ளார். அந்தக் கூக்குரல் அங்கிருந்தவர்களின் ஈரக்குலையை பதம்பார்த்து நெஞ்சத்தில் திகிலூட்டியுள்ளது. அடுத்த நிமிடமே எல்லாரும் அடித்துப் புரண்டு ராமாவரம் செல்லும் மேடான அந்த சாலைக்கு ஓடியுள்ளனர். அங்கே ஏற்கெனவே ஆயிரத்துக்கும் அதிகமானோர் கூடி நின்று அலறிக் கொண்டிருந்தனராம்.

இந்த சந்தடி சாக்கில் திருட்டு கும்பல் ஒன்று வீடுகளுக்குள் புகுந்து தங்கள் கைவரிசையைக் காட்டத் தொடங்கியதாம். இதை கவனித்து விட்ட இளைஞர்கள் சிலரின் விரட்டலில் நிலைமை ஒருவாறு சரியாகியுள்ளது.

இதே போன்ற கலவர நிலவரம் சைதாப்பேட்டையிலும் நடந்துள்ளது. திருட்டு கும்பல் கட்டி விட்ட கதை, ஏதோ எச்சரிக்கை மணி அடிப்பது போல் பரப்பப் பட்டுள்ளது..

அது ஜாபர்கான்பேட்டை! கரண்ட் இல்லை, தண்ணி இல்லை, குளித்து 5 நாளாச்சு, போன் இல்லை, ஒரே சகதி. துர்நாற்றம். கொசுக்கடி, யாருமே வந்து பாக்கல தம்பி. ஏதோ புள்ளைங்க போய் சாப்பாடு பெட்ஷீட்டு வாங்கிட்டு வருதுங்க… என்று என்னைக் கண்டதும் புலம்பினார் ஒரு பெண்மணி. அங்கங்கே ராணுவ வீரர்கள், போலீஸார், மாநகராட்சியினர், தொண்டு செய்யும் இளைஞர்கள் என… வண்டிகளில் சாப்பாடு, குடிநீர், பிஸ்கட்டுகளை விநியோகித்துக் கொண்டிருந்தனர். நிலவேம்பு கஷாயம் கொடுக்கப்பட்டது ஓரிரு இடங்களில். குப்பைகளை அகற்ற சேலம், ஈரோடு என மற்ற மாநகராட்சி வண்டிகள் பேனர்கட்டி அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்தன. ஏ.டி.எம்.களில் வரிசை நீண்டிருந்தது.

வீடுகளை பலர் தாற்காலிகமாக பூட்டிக் கொண்டு காலி செய்துவிட்டிருக்கிறார்கள். இருப்பினும் சிலர் வேறு வழியின்றி மேல் மாடிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

கே.கே.நகர் செல்லும் சாலையில் முக்குக்கு முக்கு மட்டுமல்ல… வீட்டுக்கு வீடு குப்பைகள் குவிக்கப்பட்டிருந்தன. மூட்டை மூட்டையாய் அரிசி, பருப்பு, கோதுமை… பல இடங்களில் அவை சாலையில் சிதறிக் கிடந்ததைப் பார்த்தபோது மனம் வலித்தது.

எத்தனை எச்சரிக்கை அறிவிப்புகள்! வானிலை ஆய்வு மையம் அலறிக் கொண்டிருந்தும், முன் எச்சரிக்கையாய் இருப்பதில் கோட்டை விட்டுவிட்டோம்.