Home Blog Page 76

மலையேற்றம் உயிருக்கு ஆபத்தா? முன்னேற்பாடுகள் என்ன?

sathuragiri - 2026

மலையேற்றம் ஆபத்தானதா?

டாக்டர் B.R.J. கண்ணன், மதுரை

மலையேற்றம் உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்வு கொடுக்கும் விஷயம்தானே?

கண்டிப்பாக. அதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம். நம் முன்னோர்கள் எங்காவது குன்றோ, சிறிய மலையோ இருந்தால் அங்கெல்லாம் கோவிலைக் கட்டி வைத்துள்ளார்கள். கடவுளை வழிபடும் நோக்கத்திலாவது மக்கள் மலை ஏற வேண்டும் என்பதற்காகத்தான் அவ்வாறு செய்தார்கள்.

மலை உச்சிக்குச் செல்லும் போது ஆக்சிஜன் அளவு குறையும் என்கிறார்களே?

இது உண்மையல்ல. நாம் ட்ரெக்கிங் (trekking) செல்லத்தக்க பெரும்பாலான மலைகளின் உச்சி கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டருக்கும் குறைவான உயரத்தில்தான் உள்ளன. உதாரணத்திற்கு, வெள்ளியங்கிரி மலையின் உயரம் 1800 மீட்டர். ஆக்சிஜன் தட்டுப்பாடு ஒரு பிரச்சனை அல்ல.

சமீபத்தில் மலையேற்றம் செய்து பலர் உயிரிழந்திருக்கிறார்களே?

மலையேற்றத்தால் உயிர் இழப்பது என்பது அசாதாரண நிகழ்வு. ஆயிரக்கணக்கானோர் பல வருடங்களாகச் இது போன்ற மலைகளுக்குச் சென்று வந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர்கள் மனமும் உடலும் மேம்பட்டிருக்கிறது. அவைகள் எல்லாம் செய்திகள் ஆகாது. இதுபோன்ற விதிவிலக்காக நடப்பவைகள் தான் செய்திகளாக வெளி வருகின்றன. அவ்வப்பொழுது நடக்கும் விபத்துகளைக் காரணம் காட்டி பேருந்து பயணமோ இரயில் பயணமோ ஆபத்தானது, தவிர்க்கப்பட வேண்டியவை என்று கூறுவது அபத்தம் அல்லவா?

மலையேற்றம் அல்லது உடற்பயிற்சி விஷயங்களில் மக்கள் செய்யவேண்டியது என்ன?

முதலாவது, நம்மைத் தயார்படுத்திக் கொள்ளுதல். சிறிய மலைகளுக்கு, உதாரணமாக அழகர்மலையில் இருக்கும் பழமுதிர்சோலைக்குச் செல்ல தனியாகப் பயிற்சி எதுவும் தேவையில்லை. அதில் ஏற்றமும் குறைவு, தூரமும் குறைவு. ஆனால் சதுரகிரி, வெள்ளியங்கிரி போன்ற மலைகளுக்குச் செல்லும் முன் நம்மைத் தயார்படுத்திக் கொள்வது அவசியம். குறைந்தது ஒரு மாதமாவது நடைப்பயிற்சி, சிறிய ஓட்ட பயிற்சி போன்றவற்றைச் செய்து இதயத்தையும் கால் தசைநார்களையும் பழக்கப்படுத்த வேண்டும். ஐயப்பனுக்குப் பெரியப்பாதையில் செல்பவர்கள், அதிலும் முதல் முறையாக (கன்னிச் சாமியாக) செல்பவர்கள், ஒரு மண்டலம் தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறார்கள் அல்லவா?

இரண்டாவது, நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்று அறிந்து செயல்படுதல். மலை ஏறும் பொழுது நிதானமும் சீரும் ( ‘slow and steady’ ) என்பதே மந்திரமாக இருக்க வேண்டும். சாதாரணமாக ஒரு குறிப்பிட்ட தூரத்தை பலர் 20 நிமிடங்களில் கடப்பார்களானால் ஒரு சிலருக்கு 30 நிமிடங்கள் தேவை. திடீர் மரணம் என்று பேசப்பட்டாலும், அதற்குப் பல மணி நேரங்கள் முன்பாகவே நம் உடல் தன் இயலாமையைப் பல சமிக்ஞைகள் மூலம் தெரிவிக்கும். அதை உணர்ந்து போதிய ஓய்வு எடுத்து, அதன் பின்னரே பயணத்தைத் தொடர வேண்டியது அவசியம். அந்த உணர்வுகளைப் புறந்தள்ளிவிட்டு நானும் செய்து காண்பிக்கிறேன் பார் என்று உடலை வருத்துபவர்கள்தான் ஆபத்தில் மாட்டிக் கொள்கிறார்கள்.

மூன்றாவது உணவும் நீரும். நம் உடம்பிற்கு சக்தி தேவைப்படும் என்பதால் தின்பண்டங்களை அவ்வப்பொழுது எடுத்துக் கொள்ளலாம். அதைவிட முக்கியம் நம் உடம்பில் நீர்நிலை குறையாமல் பார்த்துக் கொள்வது. உப்பு கலந்த நீரையோ, மோரையோ, வேறு பழ ரசங்களையோ அவ்வப்பொழுது குடித்துக்கொண்டே செல்வது மிகவும் அவசியம்.

என்னென்ன நோய் உள்ளவர்கள் மலையேற்றத்தைத் தவிர்க்க வேண்டும்?

இதயம், நுரையீரல், நரம்பு மண்டலம், கால்களின் எலும்புகள் தசைகள் என்று எல்லாமும் நலமாக இருந்தால்தான் வெற்றிகரமாக மலையேறித் திரும்ப முடியும். இதில் ஏதேனும் பிரச்சனை இருக்கும் பட்சத்தில் அதற்கான மருத்துவரிடம் முறையாகக் கலந்தாலோசித்து மலையேற்றம் பாதுகாப்பானதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அப்படியானால் எல்லோரும் மருத்துவரிடம் சென்று சான்றிதழ் பெற வேண்டுமோ?

தேவையில்லை. ஒன்றிரண்டு மாதங்கள் நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது அல்லவா? அந்தச் சமயத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்றால், இளைஞர்கள் (40 வயதுக்குட்பட்டவர்கள்) எந்த ஒரு பரிசோதனையும் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அந்தச் சமயத்தில் ஏதேனும் பிரச்சனை தோன்றும் பட்சத்தில் மருத்துவரைக் கண்டிப்பாக அணுக வேண்டும். நாற்பது வயதிற்கு மேல் முதல் முறையாக உடற்பயிற்சி செய்யத் தொடங்குபவர்கள் இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு போன்ற அடிப்படைப் பரிசோதனைகளைச் செய்து கொள்ள வேண்டும். இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கு நாங்கள் இதய ஒலிப்படம் (ECHO), டி எம் டி (TMT) போன்ற பரிசோதனைகளைச் செய்து அறிவுரை வழங்குவோம்.

மலையேற்றத்தில் உங்கள் அனுபவம் என்ன?

மதுரையிலும் அதனைச் சுற்றியுள்ள ஏறக்குறைய எல்லா மலைகளிலும் ஏறி இருக்கிறேன். திருப்பரங்குன்ற மலையில் இருக்கும் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு ஏறும் பாதை சீனப் பெருஞ்சுவரை விட அருமையாகக் கட்டப்பட்டுள்ளது. கீழக்குயில்குடியில் இருக்கும் சமணர் மலையும் நான் அடிக்கடி சென்று வரும் ஓர் இடம். யானைமலை ஏற்றம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. வால் வழியாக ஏறினால் சிறிய ஏற்றம், பின்னர் மூன்றரை கிலோமீட்டர் ஏற்றமான நடையாக யானையின் தலை உச்சிவரை சென்று திரும்பலாம். தும்பிக்கை வழியாக ஏறினால், யானையின் கண் பகுதிவரை எளிதாகச் செல்லலாம். அதற்குமேல் தலைப் பகுதிக்குச் செல்வது சற்றுக் கடினம், ஆபத்தானது கூட.

மதுரையிலிருந்து 30 கி.மீ தொலைவில் செல்லம்பட்டியில் இருக்கும் திடியன் மலை 215 மீட்டர் உயரம் கொண்டது. வெள்ளியங்கிரி செல்ல நினைப்பவர்கள் இந்த மலையில் நான்கு முறையாவது ஏறி பயிற்சியும் அனுபவமும் பெறலாம். அதேபோல், 610 மீட்டர் உயரம் கொண்ட பிரான்மலையும் நாம் சென்றுவரலாம். இது மதுரையிலிருந்து 70 கி.மீ தொலைவில் உள்ளது. சதுரகிரிக்குச் சென்று சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசித்துள்ளேன்.

நானும் இன்னும் சில நண்பர்களும் நண்பர் மருத்துவர் கல்யாணசுந்தரம் தலைமையில் கொடைக்கானல், குரங்கணி, கொழுக்குமலை, என்று பல இடங்களுக்கு மலையேறியிருக்கிறோம். தென்னிந்தியாவிலேயே அதிக உயரம்கொண்ட ஆனைமுடியும் (2700 மீட்டர்) இதில் அடங்கும். இரண்டு நாட்கள் நடந்து, இரவில் மின்சார வசதியும் இல்லாத ஒரு மலையில் உறங்கி நாங்கள் சென்றுவந்த மீசப்புலிமலை (2640 மீட்டர்) பயணத்தை என்றென்றும் மறக்க முடியாது.

ஆக, மலை ஏற்றம் மனதிற்கும் உடலுக்கும் ஓர் இதமான அனுபவம். ஏன் நாம் எல்லோரும் இதை அனுபவிக்கக்கூடாது?

IPL 2025: பஞ்சாப் ஷ்ரேயாஸ் ஐயரின் தனிப்பட்ட வெற்றி!

ipl 2025 games - 2026

ஐபிஎல் 2025 – தகுதி ஆட்டம்-2 – 01.06.2025 – அகமதாபாத் – மும்பை vs பஞ்சாப்

ஐயரின் தனிப்பட்ட வெற்றி

— முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

மும்பை இந்தியன்ஸ் அணியை (203/6, சூர்யகுமார் யாதவ் 44, திலக் வர்மா 44, ஜானி பெயிர்ஸ்டோ 38, நமன் திர் 37, ஹார்திக் பாண்ட்யா 15, ரோஹித் ஷர்மா 8, அஸ்மத்துல்லா ஒமர்சாய் 2/43, கைல் ஜேமிசன், மார்கஸ் ஸ்டோயினிஸ், விஜயகுமார் வைஷாக், சாஹல் தலா ஒரு விக்கட்) பஞ்சாப் கிங்க்ஸ் அணி (207/5, ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 87, நெஹல் வதேரா 48, ஜோஷ் இங்கிலீஷ் 38, பிரியான்ஷ் ஆர்யா 20, அஷ்வினி குமார் 2/55, போல்ட், ஹார்திக் பாண்ட்யா தலா ஒரு விக்கட்) 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற பஞ்சாப் கிங்க்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் மும்பை அணி முதலில் மட்டையாட வந்தது. ஆட்டம் தொடங்குவதற்கு சற்று நேரம் முன்னதாக அகமதாபாத்தில் மழை பெய்தது. அதனால் ஆட்டம் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது.

மழை காரணமாக ஆட்டக்களத்தின் தன்மை மாறியிருக்குமோ என்ற அச்சத்தோடு பஞ்சாப் அணி களமிறங்க, மும்பை அணியின் தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்து பஞ்சாப் அணிக்கு நிம்மதியளித்தார்.

மற்றொரு தொடக்க வீரர் ஜானி பெயர்ஸ்டோ (24 பந்துகளில் 38 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் திலக் வர்மா (29 பந்துகளில் 44 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.

பெயர்ஸ்டோ ஏழாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அவருக்குப் பின் வந்த சூர்யகுமார் யாதவ் (26 பந்துகளில் 44 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்), ஹார்திக் பாண்ட்யா (13 பந்துகளில் 15 ரன், 1 ஃபோர்), நமன் திர் (18 பந்துகளில் 37 ரன், 7 ஃபோர்) ஆகியோர் மிகச் சிறப்பாக ஆடினர். இதனால் மும்பை அணி 20 ஓவர்களில் ஆறு விக்கட் இழப்பிற்கு 203 ரன் எடுத்தது.

          204 ரன் என்ற இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் (6 ரன்) மூன்றாவது ஓவர் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அவரை அடுத்து களமிறங்கிய ஜோஷ் இங்கிலீஷ் (21 பந்துகளில் 38 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் மற்றொரு தொடக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யா (10 பந்துகளில் 20 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்) இருவரும் இணைந்து சிறப்பாக ஆடினர்.

இவர்களுக்குப் பின்னர் வந்த ஷ்ரேயாஸ் ஐயர் (41 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 87 ரன், 5 ஃபோர், 8 சிக்சர்) இன்றைய ஆட்டத்தின் கதாநாயகன். பும்ரா வீசிய மிகச் சிறப்பான யார்க்கர்களைச் சமாளித்து, அவற்றை பவுண்டரிக்கு ஷ்ரேயாஸ் அனுப்பினார். அவருடன் இணைந்து நெஹல் வதேரா (29 பந்துகளில் 48 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்), சிறப்பாக ஆடினார். இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 207 ரன் எடுத்து, வெற்றி பெற்றது.

பஞ்சாப் அணியின் ஷ்ரேயாஸ் ஐயர்  ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி, பெங்களூரு அணியுடன் நாளை மறுநாள் அகமதாபாத்தில் விளையாடும்.

ஆபரேஷன் சிந்தூரில் இந்திய விமானம் வீழ்த்தப் பட்டதா?

operation sindoor contrinue - 2026

பாகிஸ்தான் உடனான மோதலில் நமது  விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக இந்திய ராணுவ அதிகாரி தெரிவித்ததாக ஒரு செய்தி வருகிறது. திரு அணில் சவுகான் ப்ளூம்பெர்க் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியை மேற்கோள்காட்டி பலர் செய்தி வெளியிட்டு வருகிறார்கள்.   

“ஜெட் down ஆனதா என்பது முக்கியமில்லை, எதனால் அந்த நிலை ஏற்பட்டது என்பது.  அதை சரிசெய்து அடுத்த 2 நாட்களில் அனைத்து விமானங்களையும் மீண்டும் இயக்கினோம்”   

அடுத்த கேள்வி – 6 விமானங்கள் வீழ்த்தப்பட்டதா ?

இல்லை என்று திட்டவட்டமாக குறிப்பிடுகிறார்.

Down என்றால் வீழ்த்தப்பட்டது என்று பொருள் இல்லை. விமானம் Down என்றால் தரையில் நிற்கிறது (இயக்கப்பட முடியாமல் உள்ளது என்று பொருள்). பல காரணங்கள் இருக்கலாம், பறக்கும் உயரம், வேகம், கொண்டு செல்லும் ஏவுகணையின் எடை அல்லது வேறு காரணம் கூட இருக்கலாம்.  சேதம் ஏற்பட்டிருக்கலாம், ஆனால் அது சரி செய்யப்பட்டது என்பது தான் நாம் புரிந்துக் கொள்ள வேண்டியது.

இதற்கு முன்னரே கூட ‘எங்கள் விமானிகள் அனைவரும் பத்திரமாக உள்ளனர்’ என்று நமது ராணுவம் அறிவித்தது, பாகிஸ்தான் கூட ‘இந்திய விமானி யாரும் எங்கள் பிடியில் இல்லை’ என்று கூறியது. 

அடுத்த 2 நாட்களில், அதை சரி செய்து ‘அனைத்து விமானங்களையும்’ இயங்கினோம் என்கிறார்.  அப்படியானால் விமானங்களை இழக்கவில்லை என்பதே பொருள் .

கார், பஸ் பிரேக் டவுன் என்றால் எதோ பிரச்சனை என்று தான் பொருள்,  வண்டியே போய்விட்டது என்று பொருள் இல்லை. 

தற்போது வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி நாம் புரிந்துக் கொள்ள வேண்டியது இது தான்.

ஒருவேளை ஒன்றிரண்டு விமானங்கள் இழந்திருந்தாலும் கூட அது ஒரு பொருட்டு இல்லை. சண்டை என்றால் இழப்புகள் இருக்கவே செய்யும். இறுதி இலக்கை அடைந்தோமா என்பதே முக்கியம்.

இந்தியா விமானம் வீழ்த்தப் பட்டதா ஆப்பரேஷன் சிந்தூரில்?

இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து எழுதி வரும் ப்ளூம்பெர்க் chief of defense staff / பாதுகாப்புப் பணியாளர்களின் தலைவர் அனில் சௌஹானை நேர்காணல் கண்டிருக்கிறது சிங்கப்பூரில். அவரிடம், “இந்திய விமானங்களை பாக் வீழ்த்தியதா?” என்று கேட்க அவரும், “இதில் எது முக்கியம் என்றால், விமானம் வீழ்த்தப்பட்டதா இல்லையா என்பதில்லை. எதனால் அவை down (இயக்கப்படவில்லை? வீழ்த்தப்பட்டது?) என்பதே. நாங்கள் எங்கு தவறிழைத்தோம் என்பதை புரிந்து கொண்டு, அதை சரி செய்து, அதன் பிறகு மீண்டும் தாக்கினோம். அத்தனை விமானங்களையும் இயக்கினோம்.” என்று பதிலளித்திருக்கிறார். (கமெண்டில் வீடியோ).

மீண்டும் ப்ளூம்பெர்க், “பாக் 6 விமானங்களை வீழ்த்தியதாகச் சொல்கிறது” என்று கூற, அதற்கு சௌஹான், “முற்றிலும் தவறான தகவல்” என்கிறார்.

அதை விளக்கி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஹர்ஷா (Harsha Kakar) தன் பதிவில், “இதை ஏன் விமான இழப்பு என்று அழைக்கிறோம்? சௌஹான் தெளிவாகச் சொல்கிறார், ‘நாங்கள் தாக்குதல்களை சந்தித்தோம் (We had hits), எங்கள் தந்திரோபாயங்களை சரிசெய்து மீண்டும் இரண்டு நாட்களில் >அத்தனை< விமானங்களையும் பறக்கவிட்டோம்’ என்கிறார். அதாவது, சில தாக்குதல்கள் ஏற்பட்டன, ஆனால் அவை அவையும் அபாயகரமானவை அல்ல, வீழ்த்தப்படவில்லை.”

*** CDS சௌஹான் சொன்னதைத் தான் முன்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் விமானப்படை தளபதியும் சொன்னார். அலுவல் பாஷை (official communication) என்பது பல நுணுக்கங்களைக் கொண்டது. ‘எந்த விமானமும் வீழ்த்தப்படவில்லை’ என்பதும், ‘அனைத்து விமானங்களும் மீண்டும் பறந்தன’ என்பதும், ‘சில தாக்குதல்களை சந்தித்தோம்’ என்பதும் கணக்கில் கொள்ள வேண்டியது.

*** அரசு அனுமதி இல்லாமல் CDS பேசியிருக்க வாய்ப்பில்லை. சிங்கப்பூர் கூட்டத்தில் CDS பங்கெடுப்பது இதுவே முதல் முறை. எனவே…. இதன் மூலம் மெசேஜ் கொடுக்கப் பட்டிருக்கிறது.

*** CDS தன் பேச்சில், ‘பயங்கரவாதம் ஒடுக்கப்படும்’ என மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார்.

Why do we term this as loss of aircraft. The CDS’s words were clear. We had hits, rectified our tactics and flew all our aircraft again after two days. It means, some hits, none fatal, none which led to a crash. Denied Pak reports of six aircraft, indirectly terming @CMShehbaz @OfficialDGISPR and some Indian political handles claiming so as liars.

India’s military confirmed for the first time that it lost an unspecified number of fighter jets in clashes with Pakistan in May.

Anil Chauhan, chief of defense staff of the Indian Armed Forces, spoke to Bloomberg TV on Saturday, while attending the Shangri-La Dialogue in Singapore: https://bloomberg.com/…/india-confirms-it-lost-fighter…

தற்காலிகமாவே நிர்வாகத்தை ஓட்டிடலாம்னு நினைப்பா?: தினகரன் கேள்வி!

ops ttv in a function - 2026
#File Picture

காலி பணியிடங்களை நிரப்பாமல், தற்காலிக பணியாளர்களை வைத்தே நிர்வாகத்தை ஒட்டிவிடலாம் என்று திமுக., அரசு நினைக்கிறதா என்று, டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது சமூகத் தளப் பக்கத்தில் எழுதியிருப்பதாவது…

தமிழக அரசுப் பணிகளில் இருந்து இன்று ஒரே நாளில் 8,144 ஊழியர்கள் ஓய்வு – காலிப்பணியிடங்களை நிரப்பாமல் தற்காலிக ஊழியர்களையும், ஆலோசகர்களையும் வைத்தே அரசு நிர்வாகத்தை நடத்த திட்டமிட்டிருக்கிறதா திமுக அரசு ?

தமிழக அரசின் குரூப் ஏ, குரூப் பி, குரூப் டி உள்ளிட்ட பணியிடங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 144 அரசுப் பணியாளர்கள் இன்று ஒரே நாளில் ஓய்வுபெறுவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள 3.5 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும், ஆண்டுதோறும் பத்து லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்தும், அந்த வாக்குறுதியில் 25 சதவிகிதத்தை கூட நிறைவேற்றவில்லை என்பதற்கு அரசுத்துறைகளில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையே சாட்சியாக அமைந்திருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெறுவார்கள் என்பது முன்கூட்டியே தெரிந்திருந்தும், அதற்கு ஏற்ப அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் போதுமான எண்ணிக்கையில் அரசு ஊழியர்களை நியமிக்கத் தவறிய அரசு நிர்வாகத்தின் அலட்சியப் போக்கிற்கு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் என்ன பதில் சொல்லப்போகிறார் ?

அரசுப்பணி கனவில் லட்சக்கணகான இளைஞர்கள் இரவு, பகலாக போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், ஓய்வுபெற்ற ஊழியர்களையும், ஆலோசகர்களையும் மறைமுகமாக நியமித்து இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை சீரழிப்பது தான் திராவிட மாடல் அரசின் சமூக நீதியா ? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

கோடை விடுமுறை முடிந்து அரசுப்பள்ளிகள் நாளை மறுநாள் திறக்கப்பட உள்ள நிலையில், இன்று ஒரே நாளில் ஏராளமான ஆசிரியர்கள் ஓய்வுபெறுவது பள்ளி மாணவ, மாணவியர்களின் கல்வித்திறனுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, அரசுப்பணியாளர்களின் காலிப்பணியிடங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு நலத்திட்டங்களும் உரிய நேரத்தில் சென்றடைவதும் கேள்விக்குறியாகியுள்ளது.

எனவே, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் அரசுத்துறைகளில் நிலவும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, திமுக ஆட்சிக்கு வந்த பின் அரசுத் துறைகளில் இதுவரை நிரப்பப்பட்ட காலிப்பணியிடங்களின் விவரங்களை வெளிப்படைத் தன்மையோடு வெளியிட வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

ராகுலால் POKஐ மீட்க முடியுமா? ஏன் இந்தக் கதை?

jugalbandi rahul yatra - 2026
  • பாலாஜி வெங்கட்ராமன்

காங்கிரஸ் கட்சி 2008-2014 காலகட்டத்தில் ஆறு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்குகள் நடத்தியதாகக் கூறியுள்ளது. அவர்கள் குறிப்பிடும் ஆறு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்குகளில், 6 ஜனவரி 2013 அன்று நடந்த ஒரு நிகழ்வுக்கு மட்டுமே சில ஆதாரங்கள் உள்ளன, ஆனால் அது கூட முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை. மற்ற ஐந்து நிகழ்வுகளுக்கு (19 ஜூன் 2008, 30 ஆகஸ்ட்-1 செப்டம்பர் 2011, 27-28 ஜூலை 2013, 6 செப்டம்பர் 2013, 14 ஜனவரி 2014) தெளிவான ஆதாரங்கள் இல்லை.

ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் (MoD) RTI அறிக்கைகள், 2016-க்கு முன்பு இதுபோன்ற சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்குகள் நடந்ததற்கு ஆதாரம் இல்லை என்று கூறுகின்றன.

பொய்யே உன் பெயர் காங்கிரஸ் என்பது போல இருக்கு,.

இதுல தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, “ராகுல் காந்தி பிரதமராக இருந்திருந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) இந்தியாவால் திரும்பப் பெறப்பட்டிருக்கும்” என்று அடிச்சி விடுறார்.

ஆனால், உண்மையில் அது சாத்தியமா என்றால் வரலாற்று பின்னணி பார்த்தால் PoK 1947-ல் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது உருவானது. இந்தியாவும் பாகிஸ்தானும் இப்பகுதியை தங்கள் பகுதியாகக் கருதுவதால், இது ஒரு நீண்டகால மோதல் பிரச்சனையாக உள்ளது.

இராணுவ மற்றும் அரசியல் சவால்கள்: PoK-ஐ மீட்பது என்பது இராணுவ நடவடிக்கைகள், பன்னாட்டு உறவுகள், மற்றும் உள்நாட்டு அரசியல் ஆதரவு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சிக்கலான செயல்முறை. இதற்கு வலுவான தலைமை, துல்லியமான உத்தி, மற்றும் பன்னாட்டு ஆதரவு தேவை. இந்த நிலையில் தற்போதைய காங்கிரஸ் கட்சியின் நிலை, மற்றும் அதன் தலைவர்கள் யாரும் வலுவானவர்கள் இல்லை என்பதை உறுதியாக சொல்ல முடியும்.

இதில் பாகிஸ்தான் PoK-ஐ தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது, மேலும் இது சீனாவின் செல்வாக்கு உள்ள பகுதியாகவும் உள்ளது (சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம்). இதனால், PoK-ஐ மீட்பது இராணுவ ரீதியாக மட்டுமல்லாமல், பன்னாட்டு அரசியல் ரீதியாகவும் சவாலானது என்பது நிதர்சனம்.

இந்த நிலையில் ராகுல் காந்தி , அவரது தலைமையில் இந்தியா PoK-ஐ மீட்கும் திறன் இருக்குமா என்பது விவாதத்திற்குரியது. மேலே காங்கிரஸ் கட்சி கூறிய உண்மைக்கு மாறான சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்குகளில் அதாவது மன்மோகன் சிங் முந்தைய ஆட்சி காலமான 2004-2014 காலகட்டத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, PoK-ஐ மீட்பதற்கு எந்தவொரு தீவிர முயற்சியும் மேற்கொள்ளப் படவில்லை. என்பது புலனாகிறது, தற்போது ராகுல் காந்தியின் தலைமையில் இதற்கு வாய்ப்பு இருந்திருக்குமா என்ற கேள்விக்கு பதில் , நிச்சயமாக இல்லை என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

PoK-ஐ மீட்பது என்பது ஒரு தனி நபரின் தலைமைத்துவத்தை மட்டும் சார்ந்தது அல்ல. இது இராணுவ, பொருளாதார, மற்றும் பன்னாட்டு உறவுகளை உள்ளடக்கிய ஒரு பன்முகப் பிரச்சனை. தற்போதைய சூழல் மற்றும் பாஜக அரசின் நிலைப்பாடு மத்திய இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், PoK மக்கள் தாமாக இந்தியாவுடன் இணையும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று கூறியுள்ளார். இது, தற்போதைய அரசு PoK பிரச்சனையை தீர்க்க பிரச்சனையை கவனமாக கையாளுகிறது.

2025 மே மாதம் நடந்த இந்தியா-பாகிஸ்தான் மோதல் (Operation Sindoor) PoK-இல் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பை இலக்காகக் கொண்டது, ஆனால் அது PoK-ஐ முழுமையாக மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை இல்லை. இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது இப்பிரச்சனையின் சிக்கலையும், இராணுவ நடவடிக்கைகளின் வரம்புகளையும் மட்டுமே.

PoK-ஐ மீட்பது என்பது இராணுவ, இராஜதந்திர, மற்றும் உள்நாட்டு ஆதரவு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சியைப் பொறுத்தது, மேலும் இரண்டு நாடுகளிலும் ஆணு ஆயுதம் உள்ள நிலையில் இது எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் பெரும் சவாலாக இருக்கும்.

ஆக, இவர்கள் கூறிய உண்மைக்கு மாறான ஆறு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்குகளில் மீட்க முடியாத PoK-ஐ மீட்பது என்பது ராகுல் காந்தி பிரதமராக இருந்திருந்தாலும், இதை சாதிக்க முடியுமா என்பது நிச்சயமற்றது.

மு.க.ஸ்டாலினுக்கு இதெல்லாம் தெரியுமா..?!

mkstalin chess.jpeg - 2026

திமுகவுக்கு 1971 இல் உதவிய அன்றைய ஜன சங்கம் இருந்த இன்றைய பாரதிய ஜனதா.

மறைந்த முன்னாள் மேயர் மதுரை முத்து அவர்களின் சிலையைத் திறந்து வைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் செல்ல இருக்கிறார் என்கிற செய்தியைப் பார்த்தேன்.

கலைஞர் காலத்தில் சென்னை மாநகராட்சி போலவே தமிழகத்தின் இரண்டாவது மாநகராட்சியாக 1971 மே மாதம் மதுரையை ஆக்கினார். மதுரையில் மிகப்பெரிய அந்த மாநகராட்சி கட்டிடம் ஏறக்குறைய மேயர் முத்துவின் அலுவலக அறைக்கு அருகே வரை தனது காரைக் கொண்டு செல்லும்படியான விதத்தில் அமைக்கப்பட்டிருந்தது.1970 களில் இந்தக் கட்டிடம் சிறப்பாகப் பேசப்பட்டது அதேபோல் திருநெல்வேலி மேம்பாலத்தையும் மிகச் சிறப்பாக கலைஞர் கட்டினார்.

அன்றைக்கு ஜன சங்கமாக இருந்த இன்றைய பாரதிய ஜனதாவின் வேட்பாளர் மதுரை மக்களால் மாநகராட்சி மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சேஷாத்திரி என்பவர் தனது ஒற்றை வாக்கை மதுரை முத்துவிற்கு அளிக்காவிட்டால் அன்றைக்கு முத்து மேயராகவே ஆகியிருக்க முடியாது.

அந்த ஒற்றை வாக்கை வாங்குவதற்குக் கலைஞர் வாஜ்பாயிடம் பேசினார். ஜனா கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினார். அப்போது நாங்களெல்லாம் ஸ்தாபனக் காங்கிரஸில் இருந்த நேரம். நெடுமாறன் மதுரை மாவட்டத்தின் தலைவர். ஸ்தாபன காங்கிரசின் பொதுச் செயலாளரும் கூட.

எப்படியாவது மாநகராட்சித் தேர்தலில் மதுரை முத்துவைத் தோற்கடித்தாக வேண்டும் என்று நெடுமாறன் நினைத்தார். மதுரை முத்துவிற்கும் நெடுமாறனுக்கும் தொடர்ந்து அரசியல் ரீதியான போட்டிகளும் முரண்பாடுகளும் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. .

நெடுமாறன் ஏற்கனவே திமுக.,வில் இருந்தவர்தான். அண்ணாவுடனான முரண்பாடுகளால் சம்பத் வெளியே வந்த போது அவருடன் வெளியேறி வந்தவர். மதுரையின் உள்ளூர் அரசியலில் நெடுமாறனும் மதுரை முத்துவும் அடிக்கடி மோதிக் கொள்வார்கள்.

இப்படியான சூழ்நிலையில் எப்படியாவது மதுரை முத்துவை ஜெயிக்க வைக்க வேண்டும் என்று முயன்ற கலைஞர், ஜனா கிருஷ்ணமூர்த்தியை அழைத்து உங்க ஜனசங்க சேஷாத்திரி என்பவரை நீங்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னார். ஏனெனில் அந்த சேஷாத்திரி என்பவர் அளித்த ஒரு வாக்கைத்தான் கூடுதலாகப் பெற்று மதுரை முத்து ஜெயித்தார்.

இன்றைய திமுகவில் இதெல்லாம் எத்தனை பேருக்கு தெரியும்? அன்றைக்கு ஜன சங்கமாக இருந்து இன்றைக்கு பாரதிய ஜனதாவாக மாறி உள்ள அரசியல் அமைப்பைத் தொடர்ந்து எதிர்த்து பேசுபவர்கள் அன்றைக்கு மதுரை முத்து மேயர் ஆவதற்கு இவர்கள்தான் அடித்தளமாக இருந்தார்கள் என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள்.

இன்றைக்கு மதுரை முத்துவின் சிலையை திறக்கச் செல்லும் முதல்வர் இதையெல்லாம் மேடையில் குறிப்பிட்டுப் பேசுவாரா? பார்க்கலாம்! அவருக்கு இது எங்கே தெரியப் போகிறது!

  • கே.எஸ். இராதாகிருஷ்ணன்

IPL 2025: தான் யார் என்று கெத்து காட்டிய ரோஹித் சர்மா!

ipl 2025 games - 2026

ஐபிஎல் 2025 – எலிமினேட்டர் ஆட்டம் 30.05.2025 – சண்டிகர் – மும்பை vs குஜராத்

ரோஹித் ஷர்மாவின் கலக்கல் ஆட்டம்

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

மும்பை இந்தியன்ஸ் அணி (228/5, ரோஹித் ஷர்மா 81, ஜானி பெயிர்ஸ்டோ 47, சூர்யகுமார் யாதவ் 33, திலக் வர்மா 25, ஹார்திக் பாண்ட்யா 22, நமன் திர் 9, பிரசித் கிருஷ்ணா 2/53, சாய் கிஷோர் 2/42, சிராஜ் 1/37) குஜராத் டைடன்ஸ் அணியை (208/6, சாய் சுதர்ஷன் 80, வாஷிங்க்டன் சுந்தர் 48, ரூதர்ஃபோர்ட் 24, குசல் மெண்டிஸ் 20, ராகுல் திவாத்தியா ஷாருக் கான் 13, போல்ட் 2/56, பும்ரா, கிளீசன், சாண்ட்னர், அஷ்வினி குமார் தலா ஒரு விக்கட்) 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற மும்பை இந்தியன் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜானி பெயர்ஸ்டோ (22 பந்துகளில் 47 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் ரோஹித் ஷர்மா (50 பந்துகளில் 81 ரன், 9 ஃபோர், 4 சிக்சர்) ஆகியொர் சிறப்பான தொடக்கம் தந்தனர். முதல் 6 பவர்பிளே ஓவர்களில் அந்த அணி விக்கட் இழப்பின்றி 79 ரன் எடுத்தது. பெயர்ஸ்டோ எட்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

அவருக்குப் பின் வந்த சூர்யகுமார் யாதவ் (20 பந்துகளில் 33 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்), திலக் வர்மா (11 பந்துகளில் 25 ரன், 3 சிக்சர்), ஹார்திக பாண்ட்யா (9 பந்துகளில் 22 ரன், 3 சிக்சர்), நமன் திர் (6 பந்துகளில் 9 ரன், 1 சிக்சர்) ஆகியோர் மிகச் சிறப்பாக ஆடினர். இதனால் மும்பை அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கட் இழப்பிற்கு 228 ரன் எடுத்தது.

229 ரன் என்ற கடினமான இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் (1 ரன்) முதல் ஓவர் நாலாவது பந்தில் ஆட்டமிழந்தார். அவரை அடுத்து களமிறங்கிய குசல் மெண்டிஸ் (10 பந்துகளில் 20 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் வாஷிங்க்டன் சுந்தர் (24பந்துகளில் 48 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்) இருவரும் மற்றொரு தொடக்க வீரரான சாய் சுதர்ஷன் (49 பந்துகளில் 80 ரன், 10 ஃபோர், 1 சிக்சர்) உடன் இணைந்து ஆடி 56 பந்துகளில் அணிக்கு 100 ரன்கள் சேர்த்தனர்.

இருப்பினும் இவர்களுக்குப் பின்னர் வந்த ரூதர்ஃபோர்ட் (15 பந்துகளில் 24 ரன், 4 ஃபோர்), ராகுல் திவாத்தியா (11 பந்துகளில் 16 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்), ஷாருக் கான் (7 பந்துகளில் 13 ரன்) ரஷீத் கான் (பூஜ்யம் ரன்) ஆகியோரால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 208 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.  

மும்பை அணியின் ரோஹித் ஷர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி பஞ்சாப் அணியுடன் மற்றொரு தகுதி ஆட்டத்தில் ஆடும்.

கம்யூனிஸ்ட்களின் ‘இந்த’ ஆர்பாட்டம்… தமிழகத்துக்கு பெரும் ஆபத்து!

kadeswara subramaniam hindu munnani - 2026

ஜனநாயகத்திற்கு எதிரான, மக்கள் விரோத நக்சல் பயங்கரவாத ஒழிப்பிற்கு
எதிராக கம்யூனிஸ்டுகள் ஆர்ப்பாட்டம் நடத்தியது, தமிழகத்திற்கு ஆபத்து… என்று, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

1967-ல் ஆரம்பிக்கப்பட்ட நக்சல்பாரி அமைப்புகள் நமது நாட்டின் வளர்ச்சியை முடக்கி வந்தது. ஆயுத புரட்சி எனும் வன்முறை மூலமாக இளைஞர்களை மூளைச்சலவை செய்து வன்முறையில் ஈடுபட வைத்தது.

கடந்த காலங்களில் நக்சல்கள் முழுவதுமாக அழிக்கப்படுவார்களா எனும் கேள்வி மக்களிடையே எழுந்தது. மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் 2026 மார்ச் 31-க்குள் நக்சல்கள் வேரோடும் வேரடி மண்ணோடும் களை எடுக்கப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் அறிவித்தார்.

அதன்படி செயல்பட்டு நக்சல் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தர் பகுதியில் மே மாதம் 21 ஆம் தேதி, நமது பாதுகாப்பு படையினர் நக்சல் இயக்கத்தின் முதுகெலும்பாக செயல்பட்டு வந்த நம்பாலா கேசவராவ் என்கின்ற பரசவராசு உள்ளிட்ட 27 பயங்கரவாதிகளை
சுட்டுக் கொன்றனர்.

நக்சல் தாக்குதல்களால் கடந்த 25 ஆண்டுகளில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதைப்பற்றி கவலைப்படாத கம்யூனிஸ்டுகள் நக்சல்களுக்கு ஆதரவாக ‘போலி என்கவுண்டர்’ என்ற வார்த்தையை பயன்படுத்தி மக்களை குழப்ப தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடுகின்றனர். நக்சல் பயங்கரவாத அமைப்புகளால் அந்தந்த மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் வராமல் தடுக்கின்றனர்.

நக்சல்கள் ஆக்கிரமித்த பகுதிகளில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, பள்ளிக்கூடம் போன்ற அடிப்படை கட்டமைப்புகள் ஏற்படுத்த விடாமல் தடுத்து, பொதுமக்களை மிகுந்த கஷ்டத்தில் தள்ளுகின்றனர். உள் கட்டமைப்பு இல்லாததால் வளர்ச்சி ஏற்படாமல் அப்பகுதி மக்கள் ஏழ்மையில் வாடுகின்றனர். நக்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் கல்வி கற்போர் எண்ணிக்கையும் குறைவாக இருந்து வந்தது. வளர்ச்சித் திட்டங்களை முடக்கி மக்களை ஏழ்மையாகவே வைத்திருக்கும் நக்சல் அமைப்புகளை முற்றிலும் ஒழித்திட மத்திய அரசு முனைந்து செயல்பட்டு வருகிறது.

நக்சல் தலைவன் பசவராசு சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு அவன் பிறந்த கிராமத்தில் தற்போது மின்சார வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதே கிராமத்தில் தார் சாலை போடும்போது கன்னிவெடி வைத்து நக்சல்கள் அதை தகர்த்தனர். ஆனால் தற்போது நிலைமை சீராகி வருகிறது. இந்த ஆண்டு இதுவரை 25 நக்சல்கள் சரணடைந்துள்ளனர்.

அதே வேளையில் மொபைல் இணைப்பு மத்திய அரசு உதவி திட்டம், சிறப்பு உட்கட்டமைப்பு திட்டம், ஊரக வேலை வாய்ப்பு திட்டம் உள்ளிட்ட மக்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வேலைகளையும் மத்திய மாநில அரசுகள் இணைந்து விரைவாக செயல்படுத்தி வருகின்றன.

106 மாவட்டங்கள் நக்சல்களின் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கருதப்பட்ட நிலையில் தற்போது அது 16 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நடவடிக்கையால் விரைவில் நக்சல்கள் இல்லாத தேசமாக பாரதம் உருவெடுக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

தமிழகத்திலும் எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது காவல்துறை அதிகாரி வால்டர் தேவாரம் தலைமையில் ஒட்டுமொத்தமாக நக்சல் பயங்கரவாதத்தை ஒழித்தார். தெலுங்கானா பகுதியில் பெருகி வந்த நக்சல் இயக்கம் ஒழிக்கப்பட்டது. இப்போது மீண்டும் கேரள மாநில எல்லைப் பகுதியான தேனி மலைப் பகுதிகளில் நக்சல் பயிற்சிகள் நடப்பதாக உளவு துறை எச்சரிக்கை செய்துள்ளது.

தமிழகத்தில் கம்யூனிஸ்ட் அமைப்புகள் நக்சல்களை ஆதரித்தும் ‘போலி என்கவுண்டர்’ என்ற பிம்பத்தை உருவாக்கி மக்களை குழப்பவும் ஜூன் இரண்டாம் தேதி ராஜரத்தினம் திடலில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரியுள்ளனர்.

நக்சல் இயக்கம் என்பது கம்யூனிஸ்ட்களின் துணை அமைப்புதான் என்பதை இதன்மூலம் தெள்ளத் தெளிவாக அறிய முடியும். தேசத்திற்கு எதிரான வன்முறையாளர்களை ஆதரிக்கும் கம்யூனிஸ்ட்கள் குறித்து மாநில அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் மக்கள் கலை இலக்கிய கழகம், மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகள் நகர்புற நக்சல்ளாக மாறி தமிழகத்தில் குழப்பத்தை விளைவித்து வருகின்றன. இதனுடன் விடுதலை சிறுத்தைகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கைகோர்த்துள்ளது.

தமிழகத்தில் வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் எந்த தொழிற்சாலைகள் வந்தாலும் அதை ஏதோ ஒரு காரணம் காட்டி முடக்கி வருகிறது கம்யூனிஸ்டு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நக்சல் வன்முறை இல்லாத நாடாக பாரதம் உருவாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் இந்த வேளையில், கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் நக்சல் ஆதரவு நிலையை ஏற்படுத்தும். தமிழகத்தில் நக்சலைட்கள் பரவ தமிழக அரசே துணைபோகும் ஆபத்தையும் சுட்டிக்காட்டுகிறோம்.

நக்சல்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்களை மத்திய, மாநில உளவுத்துறை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.

மதுரை: ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி!

swamy vimurthananda in madurai thapovanam ladies schools - 2026

மதுரை சிம்மக்கல், ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் ஸ்ரீ சாரதா வித்யாவனம் பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை, சோழவந்தான், திருநெல்வேலி பள்ளிகள் சார்பில் 186 ஆசிரியர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி வழங்கப்பட்டது. ஆசிரியர்களின் ஓரங்க நாடகம், குழுச் சிந்தனை, அது தொடர்பான அமர்வு, தியானப் பயிற்சி ஆகியவை நடைபெற்றன.

தஞ்சாவூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர், சுவாமி விமூர்த்தானந்தர் ‘உயிரோட்டம் உள்ள ஆசிரியர்களாக விளங்கி, மாணவர்களுக்கு உயிரூட்ட வாருங்கள்’ என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

பிற்பகலில் இளம் ஆசிரியர்கள் மூத்த ஆசிரியர்களின் சிறப்பு குணங்கள் மற்றும் அவர்களிடம் கற்றவை குறித்தும் பாராட்டிப் பேசினார்கள். மொத்தத்தில் அனைத்து ஆசிரியர்களும் ஆனந்தமும் ஆற்றலும் பெற்று விரைவில் ஒரு நல்ல சமுதாயத்தை நோக்கிப் புறப்பட்டனர்.

ஆஞ்சியோ…ன்னா இதான்! தெரிஞ்சுக்குங்க!

coronary angiography test stunt - 2026

Dr. BRJ கண்ணன், மதுரை

ஆஞ்சியோ என்றால் என்ன?

இதயத்தின் மேல்புறத்தில் ஓடும் ரத்தக்குழாய்களில் (கொரோனரி தமனிகள்) உண்டாகும் அடைப்புகளால்தான் இதயம் தொடர்பான நெஞ்சு வலியும் மாரடைப்பும் ஏற்படுகின்றன. அடைப்பு உள்ளதா என்பதை ஈ.சி.ஜி, எக்கோகார்டியோகிராம் போன்றவை உறுதியாகச் சொல்லாது. அதற்காகச் செய்யப்படும் ஒரு சிறப்புப் பரிசோதனைக்குப் பெயர் தான் ஆஞ்சியோகிராம். அதில் அடைப்பு கண்டறியப்பட்டால் அந்த அடைப்பை நீக்குவதற்குப் பெயர் ஆஞ்சியோபிளாஸ்டி என்பதாகும். பெரும்பாலான சமயங்களில் அந்த இடத்தில் மெல்லிய கம்பிகளாலான ஒரு ஸ்பிரிங் போன்ற சாதனத்தைப் (ஸ்டென்ட்) பொருத்துவோம். சில சமயம் பலூன் கொண்டு அடைப்பை நீக்கிய பின் ஸ்டென்ட் பொருத்த வேண்டிய அவசியம் வருவதில்லை.

ஆக, யாராவது “நான் ஆஞ்சியோ செய்து கொண்டேன்” என்று கூறினால் அந்த வாக்கியத்தில் முழுமையான செய்தி இல்லை. பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் ‘ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்’ என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் ‘ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்’ என்றும் சொல்ல வேண்டும்.

ஸ்டென்ட் பொருத்தப்பட்ட நபர் அது உள்ளே இருப்பதை உணர முடியுமா?

இல்லை. உணர முடியாது.

உடம்பு அசையும் பொழுதோ, ஏதேனும் ஒரு பக்கம் திரும்பிப் படுக்கும் பொழுதோ, உடற்பயிற்சி செய்யும் பொழுதோ ஸ்டென்ட் நகன்று விட வாய்ப்புள்ளதா?

இல்லை. தமனியில் சிறிதளவும் நகல முடியாது.

அவர்கள் ஏதேனும் தனிப்பட்ட முறையில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டுமா?

பெரிதாக ஒன்றும் இல்லை. பரிந்துரைக்கப்பட்ட மாத்திரை மருந்துகளைத் தவறாமல் உட்கொள்ள வேண்டும். ரத்தம் கட்டி பிடிக்காமல் இருக்கத் தட்டை அணுக்களின் செயல்பாடுகளைக் குறைக்கும் ஆன்ட்டி பிளேட்லெட்ஸ் (anti platelets) எனப்படும் மருந்துகளை மறக்கும் பட்சத்தில் ஸ்டென்ட்டின் உள்ளேயே ரத்தக்கட்டி உருவாகி உயிருக்கே ஆபத்தாக முடியும் வாய்ப்பு உண்டு.

ஸ்டென்ட் கரைந்து விடுமா?

இல்லை. அது தமனியுடன் ஐக்கியமாகிவிடும்.

கரையும் ஸ்டென்ட் என்று ஏதேனும் உள்ளதா?

உண்டு. ஆனால் தற்சமயம் மிகவும் வெறுசிலருக்கே அம்மாதிரியான ஸ்டென்ட் பொருத்துகிறோம்.

ஒன்றோ இரண்டோ அடைப்புகள் இருந்தால் ஆஞ்சியோபிளாஸ்டி என்றும் மூன்று அல்லது மேற்பட்ட அடைப்புகளோ இருந்தால் பைபாஸ் சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்களே, உண்மையா?

பெரும்பாலான சமயங்களில் இது உண்மைதான். ஆனால் சில சமயங்களில் நான்கு அடைப்பு உள்ள நபருக்கும் ஆஞ்சியோபிளாஸ்ட்டி மூலமாகச் சரி செய்திருக்கிறோம். ஒரே அடைப்பு உள்ள நபருக்குப் பைபாஸ் சிகிச்சையும் செய்திருக்கிறோம். அடைப்பின் தன்மையைப் பொறுத்து நாங்கள் இவ்வாறு முடிவு எடுக்கிறோம்

ஸ்டென்ட் வைத்த இடத்தில் மறுபடியும் அடைப்பு வர வாய்ப்புள்ளதா?

உண்டு. ஸ்டென்ட் வைத்த இடத்திலும் அதற்கு மேலும் கீழும் மற்ற எந்த இடத்திலும் மீண்டும் அடைப்பு வரலாம். பைபாஸ் செய்தாலும் செய்த இடத்திலும் அதற்கு மேலும் கீழும் மீண்டும் அடைப்பு வரலாம்.

பைபாஸ் செய்து கொண்டால் அடைப்பு பின்னர் வராது என்று கூறுகிறார்களே?

அது உண்மையல்ல. ஆஞ்சியோ பிளாஸ்டியோ பைபாஸ் சிகிச்சையோ ஏற்கனவே உள்ள அடைப்பு எனும் பிரச்சனைக்கு ஒரு தீர்வு. அவ்வளவுதான். அந்த அடைப்பை உருவாக்கிய நோய் அவர்கள் உடலில் அப்படியேதான் இருக்கும். அதனால் புகைப் பழக்கத்தை விடுதல், இரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு போன்றவற்றிற்கான சிகிச்சைகளை வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும். அவைகளை முழுமையாக கட்டுக்குள் வைத்தால்தான் மீண்டும் மாரடைப்பு வருவதைத் தடுக்க முடியும்.

ஆஞ்சியோ பற்றிய சந்தேகங்கள்

1. இரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால் நம் உடல் தானாகச் சரி செய்து கொள்ள வாய்ப்பு உள்ளதா?

இல்லை. முறையான மருத்துவத்தால் அடைப்புகள் மேற்கொண்டு கூடாமல் ஓரளவு தடுக்க முடியும். ஏற்கனவே ஏற்பட்டு விட்ட அடைப்பை கரைக்க முடியாது.

2. எனக்கு எட்டு வருடங்களுக்கு முன் ஸ்டென்ட் வைக்கப்பட்டது. நன்றாக இருக்கிறேன். மறுபடியும் ஆஞ்சியோ எடுத்துப் பார்க்க வேண்டுமா?

அவசியம் இல்லை. 20 – 22 வருடங்களுக்கு முன் ஸ்டென்ட் வைத்துக் கொண்ட பலரும் நலமாக இருக்கிறார்கள். இரத்த அழுத்தம் சர்க்கரை போன்றவற்றைச் சீராக வைத்துக் கொண்டு, மாத்திரைகளைத் தவறாமல் உட்கொண்டாலே போதும். சில காலம் கழித்து ஒரு சிலருக்கு ஏற்படும் நெஞ்சுவலி அல்லது மற்ற தொந்தரவுகளைப் பொறுத்தே மறுபடியும் ஆஞ்சியோ பரிசோதனையைப் பரிந்துரைப்போம்.

3. ஸ்டென்டுக்கு காலாவதி என்று ஏதேனும் உண்டா? (expiry date)

அப்படி எதுவும் இல்லை. கொரோனித் தமனிகளில் பொருத்தப்பட்ட பின் ஸ்டென்ட்டில் பூசப்பட்டிருந்த மருந்து மெதுவாக வெளிவரும். ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் அந்த மருந்து தீர்ந்துவிடும். பின்னர் ஸ்டென்ட்டின் மேல் நம் உடம்பு செல்களால் ஆன ஒரு மெல்லிய போர்வையைப் போர்த்தி விடும் (endothelialization). ஸ்டென்ட் அந்த இரத்தக்குழாயுடன் ஐக்கியமாகிவிடும்.

வயிற்றில் பித்தப்பைக் கல் மற்றும் சிறுநீரகக் கல் இருந்தாலும் மருத்துவர்கள் ஸ்டென்ட் வைப்பார்கள். அது வேறு விதமானது தற்காலிகமானது. ஒரு சில வாரங்கள் கழித்தோ மாதங்கள் கழித்தோ அதனை வெளியே எடுத்து விடுவார்கள்.

கொரோனரி தமனிகளில் ஸ்டென்ட் நிரந்தரமானது. பொருத்தப்பட்ட பின் நாம் நினைத்தாலும் அதனை வெளியே எடுக்க முடியாது.

4. இது உலோகத்தால் ஆனது என்று சொல்கிறீர்களே, உள்ளே துருப்பிடித்துவிடாதா?

(இது உண்மையிலேயே ஐடியில் படித்து அமெரிக்காவில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு பெண் எழுப்பிய கேள்வி)

இரும்பு தான் துருப்பிடிக்கும். ஸ்டென்ட் கோபால்ட் குரோமியம் (Cobalt Chromium) அல்லது அது போன்ற உலோகக் கலவைகளால் ஆனது. இது ரத்தத்துடனோ நம் உடம்பின் திசுக்களுடனோ வினைபுரியும் தன்மையற்றது.

5. ஸ்டென்ட் வைத்தால் ஏன் வாழ்க்கை முழுவதும் மாத்திரை எடுக்கச் சொல்கிறீர்கள்?

அது ஸ்டென்ட்டிற்காக அல்ல. மேற்கொண்டு அடைப்பு வராமல் தடுக்கவும் உடலில் உள்ள மற்ற நோய்களைக் கட்டுப்படுத்தவும் தான்.

6. மாத்திரைகளைத் தவறாமல் எடுக்கிறேன், நன்றாக இருக்கிறேன். மருத்துவரை சென்று பார்க்க வேண்டிய அவசியம் என்ன?

வேறு பிரச்சனை இல்லாத பட்சத்தில் வருடத்தில் ஒரு முறையாவது மருத்துவரை சென்று பரிசோதித்துக் கொள்வது நல்லது. உடம்பின் திசுக்களோ, இரத்த அழுத்தமோ, சர்க்கரையோ நிலையானது அல்ல, கூடக் குறைய ஆகும். அதற்கேற்றவாறும், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட உப்புகளையும் கொழுப்புகளையும் பரிசோதித்து, அதைப் பொருத்தும் மருத்துவர் மருந்துகளில் மாற்றங்கள் செய்வார்.

7. மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்தால் சிறுநீரகப் பிரச்சினை வரும் என்கிறார்களே, உண்மையா?

அப்பட்டமான பொய். சர்க்கரை அல்லது மற்ற பிரச்சினையால் சிறுநீரகப் பிரச்சனை வருவதைத் தடுக்கும் வல்லமை கொண்டவை மாத்திரைகள். எனக்குத் தெரிந்து 25 வருடங்களுக்கு மேலாக இந்த மாத்திரைகளை எடுத்துக்கொண்டு பலரும் நலமாக இருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால், மாத்திரைகளைத் தவறாமல் எடுத்துக்கொண்டதால்தான் இதய நோய் தாக்கியும் 25 வருடங்களாக நலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் மிகையாகாது.