Home Blog Page 77

மழையால் பள்ளி திறப்பு தாமதமா?

school students going in rain - 2026
#image_title

மே மாத அக்னி நட்சத்திர வெயில் காலம் முடிந்து வழக்கம் போல் ஜூன் மாத முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும். அதன்படி, வரும் ஜூன் 2 திங்கள் கிழமை பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய மாவட்டங்களில் கன மழையும் மிக கன மழையும் பெய்து வருகிறது. இதன் முன்னோட்டமாக இந்திய வானிலை ஆய்வு மையத்தால் ஆரஞ்ச் அலர்ட், ரெட் அலர்ட் என்று விடப்பட்டிருந்தது.

இதனால் பள்ளித் திறப்பு ஜூன் 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படும் என்று சமூகத் தளங்களில் செய்தி பரவியது. இதற்கு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

பள்ளிகள் வருகிற 2-ம் தேதி திறக்கப்பட இருப்பதாக மாநில அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், கனமழை தொடர்வதால், பள்ளித் திறப்பு ஜூன் 9-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.

இதுகுறித்து தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் ஜூன் 2-ம் தேதி பள்ளித் திறப்பு உறுதி, ஜூன் 9 திறப்பு என்பது வதந்தி என்று தகவல் சரிபார்ப்பகம் கூறியுள்ளது.

இதனிடையே, சென்னை மற்றும் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்து சேவைகளை அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. கோடைக்கால விடுமுறை முடிந்து ஊர்களுக்குத் திரும்ப வசதியாக, பல்வேறு இடங்களில் இருந்தும் வார இறுதி நாட்களான இன்றும், சனிக்கிழமை நாளை மற்றும், ஞாயிற்றுக் கிழமையிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

சிறுநீரகக் கல் அகற்றுதலில் புதிய மற்றும் வெற்றிகரமான நடைமுறை!

madurai meenakshi mission cardiac dept - 2026

இதய நோய்களுக்காக தட்டணு எதிர்மருந்துகளை உட்கொள்ளும் நோயாளிகளில் பெரிய சிறுநீரக கற்களை அகற்றும் சிகிச்சையளிப்பதில் திறன்மிக்க ஒரே மருத்துவமனையாக திகழ்கிறது மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை என்று கூறினர்.

2 செ.மீ. வரையிலான அளவு கொண்ட சிறுநீரகக் கற்களை குணப்படுத்த ஆர்.ஐ.ஆர்.எஸ் எனப்படும் குறைவான ஊடுருவல் உள்ள சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், இரத்தத் தட்டு உறைதல் தொடர்பான மருந்துகளை உட்கொள்ளும் நோயாளிகளுக்கு ஆர்.ஐ.ஆர்.எஸ் சிகிச்சை மூலம் பெரிய அளவிலான சிறுநீரகக் கற்களை நீக்க அதிநவீன வசதிகளும் உயர் நிபுணத்துவமும் தேவைப்படும்.

மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், ரெட்ரோகிரேட் இண்ட்ரா-ரீனல் சர்ஜரி எனப்படும் சிகிச்சை மூலம் 62 வயதுப் பெண் நோயாளி ஒருவருக்கு சிறுநீரகத்தில் இருந்த இரண்டு பெரிய கற்கள் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளன. அவர், இரத்தக் கட்டி ஏற்படுவதைத் தடுப்பதற்கான இரு வெவ்வேறு வகையான மருந்துகளை உட்கொண்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக, ஆர்.ஐ.ஆர்.எஸ் என்பது, 2 செ.மீ வரையிலான அளவுள்ள சிறுநீரகக் கற்களை அகற்றப் பயன்படுத்தப்படும் குறைவான ஊடுருவல் சிகிச்சையாகும். பெரிய அளவிலான கற்களை நீக்க இம்முறை பயன்படுத்தப் பட்டாலும், இரத்தக் கட்டி ஏற்படுவதைத் தடுப்பதற்கான மருந்துகளை உட்கொண்டுவரும் நோயாளிகள் விஷயத்தில் அதிநவீன வசதிகளும் நிபுணத்துவமும் இருந்தால் மட்டுமே இம்முறையைப் பயன்படுத்த இயலும்.

இந்நோயாளிக்கு இதய நோய்க்கான சிகிச்சையில் ஒரு மாதத்துக்கு முன்பு ஸ்டென்ட் பொருத்தப்பட்டிருந்தது. அவரது வலது சிறுநீரகத்தில் 3.5 x 2.5 செ.மீ அளவுள்ள கல்லும், இடது சிறுநீரகத்தில் 2×1.5 செ.மீ கல்லும் இருந்தன. தற்போது, அவையிரண்டுமே அகற்றப்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு நோயாளி நலத்துடன் இருக்கிறார்.

இன்றைய நிலையில், இரத்தக் கட்டிக்கான மருந்துகள், இரத்த உறைதலைத் தடுக்கும் மருந்துகள் உட்கொள்வோர், கல்லீரல் நோயாளிகள், இயற்கையிலேயே பெரிய அளவிலான அசாதாரணமான சிறுநீரகங்கள் கொண்டோர் (அதிக இடர் கொண்ட அல்லது எவ்விதமான சிகிச்சையும் செய்ய முடியாது என்று கருதப்பட்டவர்கள்) ஆகியோருக்குக்கூட பெரிய அளவிலான சிறுநீரகக் கற்களை அகற்றுவதில் ஆர்.ஐ.ஆர்.எஸ் முறையில் சிகிச்சை தருவதில் மதுரை மாநகரிலேயே ஒரே மருத்துவமனையாக மீனாட்சி மிஷன் திகழ்கிறது. நாட்டில் செயல்முறைகளில் 90%-க்கும் அதிகமான வெற்றிகரமான சிகிச்சை விகிதங்களை கொண்டிருக்கும் பெருமை மிக்க மருத்துவமனைகளுள் மீனாட்சி மிஷனும் ஒன்று.

மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் யூராலஜி, ஆண்கள் நோயியல் பிரிவின் முதுநிலை மருத்துவ நிபுணர் மற்றும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர்.டி.பால் வின்சென்ட் தலைமையில் இந்த சமீபத்திய அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அவர் இதுகுறித்துப் பேசுகையில், ”ஆர்.ஐ.ஆர்.எஸ் சிகிச்சையில் பல படிநிலைகள் உண்டு. அதன்படி, நோயாளியின் சிறுநீரகத்தை நோக்கி யூரிட்டராச்கோப் எனும் நுண்ணிய-நெகிழ்தன்மையுடைய கருவி செலுத்தப்படும். இது சிறிய கேமரா, சிறு விளக்கு ஆகியவற்றை உள்ளடக்கிய மெலிதான சாதனம். இது, சிறுநீர்ப்பாதை, சிறுநீர்ப்பை வழியாக சிறுநீரகத்துக்கு செலுத்தப்படுகிறது.

அடுத்தபடியாக, ஒரு லேசர் மூலம் சிறுநீரகக் கல், சிறு துகள்களாக உடைக்கப்பட்டு, ஒரு சிறிய பை போன்ற அமைப்பின்மூலம் கவரப்பட்டு பின்னோக்கி இழுக்கப்பட்டு அகற்றப்படும். அல்லது துகள்கள் அனைத்தும் சிறுநீரின் வழியாகவே வெளியேறுமாறு செய்யலாம். வழக்கமாக ஆர்.ஐ.ஆர்.எஸ் முறையில் 2 செ.மீ வரை அளவுள்ள சிறுநீரகக் கற்களே அகற்றப்படும். ஆனால், சரியான நிபுணத்துவம் கொண்ட மருத்துவரால் பெரிய கற்களைக்கூட படிப்படியாக இம்முறையைப் பயன்படுத்தி அகற்ற முடியும். பொதுவாக இதய நோய், பக்கவாத நோயாளிகள் இரத்தத்தின் அடர்த்தியைக் குறைப்பதற்காக மருந்துகளை உட்கொள்வர்.

இவர்களுக்கும் கல்லீரல் செயல் இழந்த நிலையில் இருப்போர், மேலும், அசாதாரண நிலை சிறுநீரகங்களுடன் இருப்போர், இரத்த உறைதல் பிரச்சனையால் இரத்தக் கசிவு தொந்தரவைச் சந்திப்போர் ஆகியோருக்கு இந்த சிகிச்சை அளிக்கும்போது உயர்தர நிபுணத்துவம் தேவைப்படும்” என்றார்.

மேலும் அவர் பேசும்போது, ”ஆர்.ஐ.ஆர்.எஸ் முறையின் சிறப்பு என்னவென்றால், இதில் உடலைக்கீறி சிகிச்சை செய்யப்படுவதில்லை என்பதுதான். மேலும் இரத்தக் கசிவு, சிறிய தொந்தரவுகளுக்கான வாய்ப்பு இதில் மிகவும் குறைவு. இச்சிகிச்சை பெற்றவர், சிகிச்சை முடிந்த மறுநாளே பணிக்கு சென்றுவிடலாம். எனவே, இது வசதியான அதே நேரத்தில் உடலில் மிகக்குறைவான ஊடுருவலைச் செய்யக்கூடிய சிகிச்சை முறையாக இருக்கிறது” என்றார்.

சிறுநீரகக் கற்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வது குறித்துப் பேசிய மருத்துவர் பால் வின்சென்ட் , ”சிறுநீரில் உள்ள சில அம்சங்கள் அடர்த்தியாக ஆகி, சிறு சில்லுகளாக மாறிவிடும். அவை, நாளடைவில் சிறுநீரகக் கற்களாக ஆகிவிடுகின்றன. இதனைத் தடுக்க வேண்டுமென்றால் தினசரி 2 லிட்டர் சிறுநீர் வெளியேற்றப்பட வேண்டும். அந்த அளவிற்கு சிறுநீர் கழிக்க வேண்டுமென்றால் குறைந்தது 3 லிட்டர் நீர் பருக வேண்டும். அசைவ உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்” என்றார்.

இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் சிறுநீரகவியல் துறையின் தலைவரும் முதுநிலை மருத்துவர் ஆர்.ரவிச்சந்திரன், முதுநிலை நிபுணர், யூராலஜி துறை, ஆண்ட்ரோலாஜிஸ்ட் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்
டி.பால் வின்சென்ட், சிறுநீரகவியல் துறையின் முதுநிலை மருத்துவர் வேணுகோபால் கொனங்கி, மற்றும் மார்க்கெட்டிங் துறையின் பொது மேலாளர் சிவகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

அரசுப் பேருந்துகளா? அல்லது அலங்கார ஊர்திகளா?

madurai tnstc buyses - 2026

சோழவந்தானில் இயங்கும் பேருந்துகள் அரசு பேருந்துகளா அல்லது அலங்கார ஊர்திகளா என்று, பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சோழவந்தான் பகுதியில் இயங்கும் பேருந்துகளில் குறிப்பிட்ட சில பேருந்துகள் முழுவதும் தனியார் விளம்பரம் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு தகவல் பலகை முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் செல்வதால் பொதுமக்கள் பல்வேறு குழப்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

குறிப்பாக சோழவந்தானிலிருந்து மதுரை மாட்டுத்தாவணிக்கு செல்லும் பேருந்தானது தனியார் விளம்பரங்கள் மூலம் பேருந்தின் முன் பகுதி தவிர அனைத்து பகுதிகளிலும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு அலங்கார உறுதி செல்வது போல் வந்து செல்கிறது ஏற்கனவே பேருந்துகளின் தகவல்கள் பொதுமக்களின் பார்வைக்கு தெரியாத வண்ணம் இருப்பதாகவும் வேறு பகுதிகளில் இயங்கும் பேருந்துகளை சோழவந்தான் பகுதியில் இயக்குவதால் பின்புறம் உள்ள தகவல் பலகையில் ஒரு ஊரும் முன்னாள் உள்ள தகவல் போர்டில் ஒரு ஊருமாக பயணிகளை குழப்பும் வகையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உச்சகட்டமாக பேருந்து முழுவதும் தனியார் விளம்பரங்கள் மூலம் தகவல்கள் மறைக்கப்பட்டு பொதுமக்களை உச்சகட்ட குழப்பத்திற்கு ஆளாக்கி வருகின்றனர் அரசு பேருந்துகளில் தனியார் விளம்பரங்களை தவிர்த்து பொதுமக்கள் மற்றும் வயதானவர்கள் பேருந்துகளை பார்த்தவுடன் செல்ல வேண்டிய ஊர்களுக்கு சொல்லும் வகையில் ஊர்களின் பெயர்கள் சரியாக தெரியும்மாறும் பேருந்தின் தடம் எண் சரியாக இருக்குமாறு அறிவிப்பு செய்ய வேண்டும் என போக்குவரத்துக் கழகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது போன்ற பேருந்துகளால் வயதானவர்கள் பேருந்து புறப்படும் போது அருகில் இருப்பவர்களிடம் கேட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளதால் பேருந்து செல்லும்போது வயதானவர்கள் சென்று ஏற வேண்டிய நிலை ஏற்பட்டு அடிக்கடி விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது.

ஆகையால் போக்குவரத்து கழக அதிகாரிகள் அரசின் வருமானத்தை மட்டும் குறிக்கோளாக எண்ணாமல் பொதுமக்களின் நலன் மற்றும் உயிர் சார்ந்த விஷயங்களை கருத்தில் கொண்டு அரசு பேருந்துகளில் உள்ள விளம்பரங்களை உடனடியாக மறைத்து ஆரோக்கியமான தகவல்கள் மற்றும் அரசின் அறிவிப்புகளை பேருந்தில் அச்சிட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


ஊத்துக்குளி முதல் நாராயணபுரம் வரை சாலையை சீரமைக்கவும்

சோழவந்தான் அருகே ஊத்துக்குளி முதல் நாராயணபுரம் வரை சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்துக்குளி முதல் நாராயணபுரம் வரை சாலை பழுதடைந்த நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் விவசாய பணிகளுக்கு செல்வோர் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் குறிப்பாக ஊத்துக்குளி கிராமத்தில் அரசு பள்ளி மற்றும் அங்கன்வாடி இருக்கும் பகுதியில் சாலை மிகவும் சேதம் அடைந்த நிலையில் முழங்கால் அளவு பள்ளங்கள் உள்ளது.

இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக தண்ணீர் தேங்கி சேரும் சகதியமாக காணப்படுகிறது இதன் காரணமாக இந்தப் பகுதியில் விவசாய பணிகளுக்கு செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி மருத்துவமனை செல்லும் நிலை ஏற்படுவதாக கூறுகின்றனர்.

மேலும் அருகில் அங்கன்வாடி மையம் மற்றும் அரசு தொடக்கப்பள்ளி உள்ளதால் பள்ளிகளை திறக்கும் முன்பு சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சரி செய்ய வேண்டும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறுநீரகக் கல் வராமலிருக்க…

salt intake in food - 2026

சிறுநீரகக் கல்லும் கால்சியம் நிறைந்த உணவுகளும்!

— Dr. B.R.J. கண்ணன், மதுரை

ஒரு விருந்தில், நண்பர் ஒருவர் என்னை அணுகி, சிறுநீரகக் கற்கள் தன் குடும்பத்தில் பலருக்கும் இருப்பதால் தனக்கு வராதிருக்கக் கால்சியம் நிரம்பிய உணவுகள் மற்றும் கால்சியம் மாத்திரைகளைத் தவிர்ப்பதாகக் கூறினார். அவருடைய அணுகுமுறை சரியானதா என்பது குறித்து என்னிடம் கருத்து கேட்டார்.

ஒன்று சொன்னால் நம்புவீர்களா? கால்சியம் நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது சிறுநீரகக் கற்கள் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது. இது என்ன முரண்பாடாக இருக்கிறது என்றுதானே நீங்கள் நினைக்கிறீர்கள்?

சிறுநீரகக் கற்கள் பலவகைப்படும் என்றாலும் பெரும்பாலானவற்றில் உள்ளது கால்சியம் ஆக்ஸலேட் (calcium oxalate) ஆகும். சிறுநீரில் ஆக்ஸலேட் வெளியேற்றத்தைக் குறைப்பதே அவற்றைத் தடுப்பதற்கான முக்கிய வழி. அதற்கு உணவில் உள்ள ஆக்ஸலேட் குடலில் உறிஞ்சப்படுவதைத் தடுக்க வேண்டும்.

உணவில் உள்ள கால்சியம், குடலில் செரிமானம் ஆகிக்கொண்டிருக்கும் உணவில் உள்ள ஆக்ஸலேட்டுடன் பிணைக்கப்பட்டு, கரையாத கால்சியம் ஆக்ஸலேட்டை உருவாக்குகிறது. பின்னர் அது மலத்தில் வெளியேற்றப்படுகிறது. உணவில் கால்சியம் சத்து குறைவாக இருக்கும் பட்சத்தில், அதிக ஆக்ஸலேட் உறிஞ்சுதலுக்கு வழிவகுக்கிறது, இது சிறுநீரில் வெளியேற்றப்பட்டு, சிறுநீரகக் கல் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆக, உணவில் தேவையான அளவு கால்சியம் இருத்தல் அவசியம்.

பச்சைக் கீரை வகைகள், விதைகள், பழங்கள், பீட்ரூட், தேனீர், சாக்லேட் என அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளில் நம் உடலுக்குத் தேவையான பல நல்ல தாதுப் பொருட்கள் உள்ளன. கூடவே ஆக்ஸலேட்டும் உண்டு. காய்கறிகள், பருப்பு வகைகள், பாதாம், பால், தயிர், சீஸ், சில வகை மீன்கள் போன்ற பலவும் கால்சியம் நிறைந்த உணவுகள். இந்த உணவுகளில் உள்ள கால்சியம், ஆக்ஸலேட் உறிஞ்சுதலைத் தடுக்க உதவுகிறது. அதன் மூலம் சிறுநீரில் அதிகப்படியான ஆக்ஸலேட் வெளியேறாமல் தடுக்கிறது. கல் உருவாகும் அபாயத்தைக் குறைக்கிறது.

எனவே, சிறுநீரகக்கல் வராதிருக்கவும், ஏற்கனவே இந்த நோய் பாதிப்பு உள்ள நபர்களும் கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

சிலருக்கு யூரிக் அமிலம் (uric acid) கொண்ட கல் உருவாகும். அவர்கள் அசைவு உணவுகளைக் குறைக்க வேண்டும். குறிப்பாகச் சிவப்பு இறைச்சியைத் (ஆடு, மாடு – red meat) தவிர்க்க வேண்டும்.

கல் உருவாவதைத் தடுக்க சற்று அதிகப்படியான நீர் அருந்துவதும் அவசியமான ஒன்று.

ரத்தத்தில் உப்புச் சத்து கூடினால் உணவில் உப்பைக் குறைக்கலாமா?

salt intake in food - 2026

Dr. BRJ. Kannan, Madurai

உங்களுக்குச் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மருத்துவர் எவ்வாறு சொல்வார்? ‘உப்புச் சத்துக் கூடியிருக்கிறது’. உடனே நீங்கள் என்ன செய்கிறீர்கள்? உணவில் எடுத்துக்கொள்ளும் உப்பைக் குறைத்து விடுகிறீர்கள். சிலர் சுத்தமாக உப்பே இல்லாமல் சாப்பிட்டுகிறேன் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்வார்கள்.

நாம் உணவில் சேர்க்கும் உப்பு சோடியம் என்பதாகும். மருத்துவர் சொன்ன உப்புகள் யூரியா கிரியாட்டினின் போன்றவை. இவை உடலில் எல்லோருக்கும் சாதாரணமாகத் தினசரி உற்பத்தியாகும் கழிவுகள். இவைகளை வெளியேற்ற வேண்டியது சிறுநீரகங்கள். அதன் செயல்திறன் குறையும்பொழுது இந்த உப்புகள் இரத்தத்தில் கூடும். சாதாரணமாக யூரியாவின் அளவு 40க்கு கீழேயும், கிரியாட்டினின் 1.2க்குக் கீழேயும் இருக்கும். எந்த அளவிற்கு இவைகள் கூடுகின்றனவோ அந்த அளவிற்குச் சிறுநீரகங்கள் பாதிப்பு அடைந்திருக்கின்றன என்று அர்த்தம்.

உணவில் உப்பைக் குறைப்பதன் மூலம் இரத்தத்தில் கூடியுள்ள யூரியாவைக் குறைத்துவிடலாம் என்று நம்புவது தவறு. மாறாக, உடல் பலகீனப்படும். சிலருக்கு சோடியம் மிகவும் குறைந்து நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு மயக்கமான நிலையில் வந்து மருத்துவமனையில் சேருவார்கள்.

சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் வெளியேறும் சிறுநீரின் அளவு குறையும் என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் ஆரம்பத்தில் ஒரு சிலருக்கு அளவுக்கு அதிகமாகச் சிறுநீர் வெளியேறும். அப்பொழுது நீர் மட்டும் வெளியே வருவதில்லை. அதனுடன் சோடியம் பொட்டாசியம் போன்ற நம் உடம்பின் அத்தியாவசிய உப்புகளும் சேர்ந்து வெளியேறும். உடலில் நீர் சத்து குறைந்து இரத்த அழுத்தமும் குறையும் பட்சத்ததில் உணவில் உப்பைக் கூட்ட வேண்டும். அவ்வாறில்லாமல் உடலில் நீர் சத்து அதிகரித்தாலோ (கால்கள் மற்றும் முகம் வீக்கம் அடைதல்) இரத்தஅழுத்தம் கூடினாலோ, அவர்களுக்குத்தான் உணவில் உப்பைக் குறைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

அடுத்து, பொட்டசியம் என்று ஒரு உப்பு இருக்கிறது. இது இரத்தத்தில் அதிகப்படியாகச் சேர்ந்துவிடாதிருக்க நம் உடல் சிறுநீர் மூலமாகவும் குடல் (மலம்) மூலமாகவும் அதனை வெளியேற்றுகிறது. சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் இரத்தத்தில் பொட்டாசியம் அளவு கூடும். அதனால் இந்த உப்பை அதிகமாக் கொண்டுள்ள உணவுகளைக் குறைத்து உண்ணவேண்டும். முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. வாழை, ஆரஞ்சு போன்ற பழங்கள், கீரைகள், தக்காளி, மீன், மாமிசம் போன்ற நாம் அன்றாடம் உண்ணும் உணவுகள் எல்லாமே பொட்டாசியம் சத்து நிரம்பியவைகள். கேரட், முட்டைகோஸ், வெள்ளரி, கத்திரிக்காய், ஆப்பிள், திராட்சை, அன்னாசி போன்றவைகள் பொட்டாசியம் சத்து குறைவாக உள்ள உணவுகள்.

சிறுநீரகப் பாதிப்பு உள்ள ஒருவருக்கு மலம் சரியாக வெளியேறவில்லை என்று வைத்துக் கொள்வோம். அவர் என்ன செய்வார்? இரண்டு வாழைப்பழங்களைச் சாப்பிடுவார். ஏற்கனவே சிறுநீரகம் வெளியேற்ற வேண்டிய பொட்டாசியம் வெளியேறவில்லை. இப்பொழுது மலம் மூலமாக அவர் உடம்பிலிருந்து வெளியே போக வேண்டிய பொட்டாசியமும் போகவில்லை. அதனால் இரத்தத்தில் பொட்டாசியம் அளவு கூடத் துவங்கும். இப்பொழுது அவர் சாப்பிட்ட வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியமும் உறிஞ்சப்பட்டு இரத்தத்தில் அதன் அளவை மிகவும் அபாயகரமான அளவிற்குக் கூட்டிவிடும் வாய்ப்பு உண்டு. ஆகையால், சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் மலம் கட்டிக்கொண்டால், அந்த நேரத்தில் பொட்டாசியம் நிரம்பிய உணவுகளை அறவே தவிர்த்தல் நலம்.

அடுத்து, புரதத்திற்கு வருவோம். உப்புச்சத்து கூடிவிட்டால் உணவில் புரதத்தை மிகவும் குறைத்துக் கொள்ளவேண்டும் என்ற ஒரு தவறான நம்பிக்கை பொதுமக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் மருத்துவர்கள் மத்தியிலும் நிலவுகிறது. நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் புரதத்தின் அளவு தேவையைவிடக் குறைவாகவே உள்ளது. சராசரியாக நமக்கு ஒரு நாளைக்கு 1g /kg என்ற அளவிற்குப் புரதம் தேவை. அதாவது 60 கிலோ எடையுள்ள நபர் 60 கிராம் புரதங்கள் ஒரு நாளைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் நாம் 40 கிராம் தொடுவதே சிரமம். உணவு வகைகளில் மாமிசங்களில்தான் அதிகப் புரதம் உள்ளது என்பது எல்லோரும் அறிந்ததே. மேற்கத்திய நாடுகளில் மூன்று நேரமும் அசைவம் உட்கொள்ளும் பழக்கம் இருக்கிறது. அந்த அதிகப்படியான புரதம் சிறுநீர் வழியாக வெளியேற்றப்படபொழுது சிறுநீரகத்தையும் பாதிக்கும். ஆக, உணவில் புரதத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்னும் அறிவுரை அவர்களுக்குத்தான். நம் மக்களோ வாரத்தில் ஒன்றிரண்டு நாட்கள் சிறிதளவு அசைவம் எடுக்கின்றனர். மற்ற நாட்களில் பெரும்பாலும் சைவ உணவுகள்தான். பருப்பு வகைகளைத் தவிர்க்க வேண்டுமா? கண்டிப்பாக இல்லை. வேண்டிய அளவு எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால், பருப்புகளில் உள்ள புரதங்களின் அளவு குறைவே. ஏற்கனவே தேவையை விடக் குறைவாகப் புரதம் எடுக்கும் இவர்களிடம் மேலும் புரதத்தைக் குறைக்கச் சொல்வது மிகவும் தவறு.

ஒருவர் வாரத்தில் இரண்டு மூன்று முறை டயாலிசிஸ் செய்து கொள்ள வேண்டிய நிலைமையில் இருக்கிறார் என்றால் அவருக்குச் சாதாரண மக்களைக் காட்டிலும் அதிகமாகப் புரதம் தேவைப்படும். அதாவது 1.2g /kg தேவை. ஏனென்றால், டயாலிசிஸ் செய்யும் பொழுது நமக்குத் தேவையற்ற யூரியா கிரியாட்டினின் போன்ற கழிவுகள் மற்றும் வெளியேறுவதில்லை, அமினோ ஆசிட் (புரதங்கள்), கால்சியம் போன்ற சில அத்தியாவசியச் சத்துகளும் வெளியேறும். ஆகையால், டயாலிஸிஸில் உள்ள நபர்களுக்கு நிறையப் பருப்புகளையும், வேண்டிய அளவு மாமிசங்களையும் எடுத்துக் கொள்ள அனுமதிப்பதுதான் முறை.

உணவில் முக்கியப் பங்கு வகிப்பது தண்ணீர். சாதாரண மக்கள் எவ்வளவு நீர் குடித்தாலும் தேவைக்கு அதிகமான அளவை சிறுநீரகங்கள் வெளியேற்றிவிடும். ஆனால் அது பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும்பட்சத்தில் அந்த உபரி நீர் உடம்பில் தங்கிவிடும். அப்படியானால் அந்த நபர் தான் குடிக்க வேண்டிய நீரை எப்படிக் கணிக்க வேண்டும்? எவ்வளவு சிறுநீர் வெளியேறுகிறதோ அதனுடன் 300 அல்லது 400 மில்லி சேர்த்துக் கொள்ளவேண்டும். உதாரணமாக ஒருவருக்கு 24 மணி நேரத்தில் 800 மில்லி அளவு சிறுநீர் வெளியேறுகிறது என்று வைத்துக் கொள்வோம். அவர் 1200 மில்லி நீர் (800+400) எடுத்துக் கொள்ளலாம். இது ஒரு தோராயமான அளவே. எந்த அளவு எடுக்க வேண்டும் என்று உங்கள் சிறுநீரக மருத்துவர் அறிவுறுத்தி இருக்கிறாரோ அந்த அளவே எடுக்க வேண்டும்.

ஆக, சிறுநீரகப் பாதிப்பு உள்ளானவர்கள் பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளைக் குறைத்துக் கொள்வதும், வேண்டியளவு நீர், சோடியம் (உணவில் சேர்க்கும் உப்பு) மற்றும் புரதங்களை எடுத்துக் கொள்வதும்தான் அவர்கள் தங்கள் உணவில் செய்து கொள்ள வேண்டிய மாற்றங்கள்.

நிகழ்கால குடும்ப அரசியலில் கட்சியின் எதிர்கால அரசியல் ’?’

anbumani ramadoss 2 16537188373x2 1 - 2026

பா.ம.க. குடும்ப அரசியல்: கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியா?

  • ‘செய்திக்கதிர்’ ஜி.எஸ். பாலமுருகன்

“அன்புமணியை 2026இல் முதலமைச்சராக்க பாடுபடுவோம்” என்று பா.ம.க. சமூக ஊடகப் பேரவையின் கூட்டத்தில் புதன்கிழமை பேசிய ராமதாஸ், ஓர் இரவுக்குப் பின் அவரது ‘குற்றச்சாட்டுகள்’, குடும்ப உறவுகள் மீது அரசியல் அதிகாரத்தின் தாக்கத்தை வெளிப்படுத்தின.

பா.ம.க.வில் தந்தை – மகன் இடையேயான மோதல் கட்சியின் எதிர்காலத்தையும், அதன் அடிப்படை மதிப்புகளையும் கேள்விக்கு உள்ளாக்குகிறது. “வளர்த்த கிடா மார்பில் உதைத்துவிட்டது”, “35 வயதில் அன்புமணியை மத்திய அமைச்சராக்கி தவறு செய்தேன்”, “அன்புமணிக்கு தலைமைத் திறன் இல்லை”, “எடுத்தேன், கவிழ்த்தேன்”, “அனைத்திலும் மருமகள் தலையீடு” – இவை அனைத்தும் கட்சியின் நிலையை பொது மக்கள் முன் சிக்கலாக்கும் வகையில் வெளிப்படையாகவே பேசிவிட்டார் ராமதாஸ்.

pmk ramadoss - 2026

“வன்னியர்களுக்கு செய்து கொடுத்த சத்தியத்தையும் மீறி, எனக்கு விருப்பம் இல்லை என்றாலும், எனது குடும்பத்தினரின் நெருக்கடியால் 35 வயதில் அன்புமணியை மத்திய அமைச்சராக்கி, நான்தான் தவறு செய்துவிட்டேன். ஒரு நாள் இரவு தூங்காமல், சுகாதாரத் துறையை பெற்று கொடுத்தேன்” என்று ராமதாஸ் சொல்கிறார். இந்த இடத்தில் ஒன்று குறிப்பிட்டாக வேண்டும். “அன்புமணி போன்று திறமையானவர் எவரும் இல்லை. அவரை ஊடகங்கள் ஆதரிக்க வேண்டும்!” என்று 2020 ஜுலையில் ஒரு கடிதம் எழுதினார் ராமதாஸ்.

தலைமைப் பண்பு இல்லாதவர் என்று விமர்சித்த ராமதாஸ்-க்கு, அவரது கடிதத்தில் இருந்து ஒன்றை மட்டும் சுட்டிக்காட்டுவது இப்போது பொருத்தமாக இருக்கும். “சுகாதாரத் துறையில் கடந்த 50 ஆண்டுகளில் செய்ய முடியாத பணிகளை 5 ஆண்டுகளில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் செய்து முடித்துள்ளார் என்று அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கும், மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஒரு நடமாடும் மருத்துவக் கலைக்களஞ்சியம் என்று அப்போதைய மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியும் பாராட்டி கவுரவித்தனர்” என்று குறிப்பிட்டிருந்தார்.

“நான்கு சுவரில் பேசி முடிக்க வேண்டியதை, நடுவீதிக்கு கொண்டு வந்துவிட்டார் அன்புமணி” என்று ராமதாஸ் குற்றம்சாட்டினார். ஆனால் அதே அவர், பத்திரிகையாளர்களை கூட்டி, “அன்புமணிக்கு தலைமைத் திறன் இல்லை” “தாயார் மீது பாட்டிலை வீசினார்” “காடுவெட்டி குருவை அவமதித்தார்” என்று பேசுவது, கட்சி தொண்டர்கள் மனதில் குழப்பத்தையும் அன்புமணி மீது மக்கள் கொண்டிருக்கும் நன்மதிப்பையும் சிதைக்கும் என்பது ராமதாஸ்-க்கு தெரியாமல் போய்விட்டதா? உண்மைகள் எவ்வாறிருந்தாலும், அதை சுவற்றுக்குள்ளும் பொதுமக்கள் முன்னிலையில் வெளியில் பேசுவதற்கும் இடையே ஒரு நேர்மையான சமநிலை தேவைப்படுகிறது.

sowmya anbumani - 2026

“பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்காவிட்டால் எனக்கு கொள்ளி வைக்க நேரிடும்” என கூறி என் காலைப் பிடித்து அன்புமணி அழுததாக ராமதாஸ் கூறியிருப்பது, வெறும் வாயில் அவல் மெல்பவர்களுக்கு வசதியாக போய்விட்டது. இதில் பா.ஜ.க. தந்திர அரசியலின் பின்புலம் குறித்து சிந்திக்க வைத்துள்ளதாக பலரும் பேசுகிறார்கள் அல்லது அப்படி ஒரு கருத்துருவாக்கம் ஏற்படுத்தப்படுகிறது.

பா.ஜ.க. நாடு முழுவதும் கட்சிகளை உடைத்து, புதிய கூட்டணிகளை உருவாக்கும் கதை, பா.ம.க. மீதும் அதே அழுத்தம் இருக்கக் கூடும் என்ற அரசியல் வட்டாரங்களின் ஊகங்களை ஒரேயடியாக நிராகரிக்க வேண்டியதும் அல்ல! பா.ஜ.க. மீதான இந்த சந்தேகம், இந்திய அரசியல் சூழலில் அனைத்து கட்சிகளும் உணர வேண்டிய ஒரு சூழலைதான் பா.ம.க. விஷயத்தில் இருந்து நாம் எடுத்து கொள்ள வேண்டியது.

அதேசமயம், இது முற்றிலும் தந்தை – மகன் இடையிலான அரசியல் மோதலாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. பா.ஜ.க. கூட்டணியை அன்புமணி விரும்பியதற்கும், அ.தி.மு.க. கூட்டணி வேண்டாம் என்று சொன்னதற்கும் பின்னணி இருக்கிறது.

சேலத்தில் (23/03/2024) பேசிய எடப்பாடி பழனிசாமி, “பாட்டாளி மக்கள் கட்சி வேடந்தாங்கல் பறவைபோல் அடிக்கடி கூட்டணி மாற்றிக் கொண்டுள்ளனர். ஏரியில் தண்ணீர் நிரம்பி இருக்கும்போது பறவைகள் வரும். தண்ணீர் வற்றினால் சென்றுவிடும். அது போலத்தான் பா.ம.க.” என பேசினார். இதன் பிறகே அதிமுக – பாமக கூட்டணி ஏற்படாமல் முறிந்து போனது. இதை பழனிசாமியும் பின்னாளில் உணர்ந்து பேசியிருக்கிறார்.

“இனி கட்சியை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்ற அன்புமணியின் வார்த்தைக்குப் பிறகு, என் கண்களில் இருந்து 2 சொட்டு கண்ணீர் விழுந்தது என ராமதாஸ் சொன்னது, குடும்ப அரசியல் சிக்கலைவிட கட்சியின் எதிர்காலத்தைப் பற்றிய கவலையாகவே கட்சியினர் பார்க்கின்றனர்.

இப்போது கட்சி இருக்கும் செல்வாக்கையும் எதிர்காலத்தையும் நினைத்து ராமதாஸ் ஆதங்கத்தை கொட்டி தீர்ப்பது புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இந்த வாரிசு அரசியல் சிக்கல்கள் இந்திய அரசியலில் பொதுவானவை. உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி, பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், கருணாநிதி இருந்தபோது திமுகவில் ஸ்டாலின் – அழகிரி மோதல், மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ், மாயாவதியின் பகுஜன் சமாஜ் – அவை அனைத்தும் அதற்கான சான்றுகள். ஆனால், அந்த குடும்ப அரசியல் சிக்கல்களை கடந்தே மக்களுக்கு சேவை செய்யும் நிலையை கட்சிகள் அடைய வேண்டும் என்பதை உணர வேண்டும்.

பேருந்து பயணங்கள் மூலமே 95 ஆயிரம் கிராமங்களுக்கு நடந்த ராமதாஸின் கால்கள் கட்சியை உற்சாகமாக கட்டியெழுப்பியது. கருணாநிதி, ஜெயலலிதா போன்ற மாபெரும் தலைவர்களுடன் இணைந்து அரசியல் களத்தை எதிர்கொண்டவர். பாமகவின் கூட்டணிக்காக இரு தலைவர்களையும் ஏங்க வைத்தவர். இவை அனைத்தும் அவரது அரசியல் ஆளுமைக்கு நம்பிக்கை அளிக்கின்றன. அதை வளர்த்தெடுக்கும் வகையில், “அரசியல் களத்தில் மருத்துவர் அய்யா அவர்களின் லட்சியங்களை வென்றெடுப்பதும், அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சியை வழிநடத்திச் செல்வதும் எனது முழு முதல் கடமை” என்று கடந்த மாதம் 12ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார் அன்புமணி.

அன்புமணி – தந்தையின் பாரம்பரியத்தை தொடரும் பொறுப்பில் இருக்கிறார். ஆனால் அவரது தலைமையின் திறனை அரசியலில் இன்னும் நிரூபிக்க வேண்டிய அவசியம் மிக முக்கியமான சவாலாக உள்ளது. அதை அன்புமணியும் நன்கு உணர்ந்திருப்பார் என்பதே அவரது சொல்லில் தெரிகிறது. அதற்கு அவர் முதுகில் தட்டிக் கொடுத்து உறுதுணையாகவே இருக்க வேண்டும்.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் தருணத்தில், இப்படி வெளிப்படும் குடும்ப அரசியல் மோதல், பாமக கூட்டணி பேச்சுகளையும், கட்சியின் எதிர்காலத்தையும் பலவீனப்படுத்தும் அபாயம் உறுதியாக இருக்கிறது.
கண்ணாடி உடைந்தாலும், ஒட்டிவைத்தும் பயன்படுத்தலாம்; அதற்கான முயற்சியை இருவரும் மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில், அது வரும் தேர்தலை மட்டுமல்ல – கட்சியின் எதிர்கால நம்பிக்கைக்கும் பெரும் சவாலாக மாறும்.

பா.ம.க. குடும்ப அரசியல் மேடையா? அல்லது பா.ஜ.க. அழுத்தத்தின் வெளிப்பாடா? அல்லது தலைமைச் சவாலின் வெளிப்பாடா? – இவை அனைத்தும் நுணுக்கமான அரசியல் சிக்கல்கள். ஆனால் கடைசியில், தமிழக அரசியல் வரைபடத்தில் தனி அடையாளம் கொண்ட பா.ம.க. போன்ற கட்சிகள் மக்களுக்கு, சமூக நலனுக்காக உயிரோட்டமாக இருக்க வேண்டும் என்பதே உண்மை.

ராமதாஸ் மற்றும் பாட்டாளிகளின் கடின உழைப்பால் தனித்த அடையாளம் கொண்ட பா.ம.க.வின் வளர்ச்சி ஒரு குடும்பத்தின் தாக்கத்தில் அல்ல; மக்களின் நம்பிக்கையில் தான் உறுதியடையும். இதற்கான பதிலை வரலாறே எழுதப்போகிறது!

அமைதியும் வீரமும் ஒன்றிணைந்த பாரதம்!

indrajaal - 2026

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

அமைதியும் அகிம்சையும் பாரத தேசத்தின் முக்கியமான குணங்கள். “அஹிம்ஸோ பரமோ தர்ம:” என்பது வேதங்களில் தொடங்கி இதிகாசம், புராணங்களின் வழியாக எடுத்துரைக்கப்பட்டு, பாரதத்தின் நீதியாகவும் வழக்கமாகவும் பரவியது. அதே நேரம், அமைதியையும் அஹிம்சையையும் குலைக்கும் எதிரிகளின் கூட்டத்தை வீரமும் பராக்கிரமும் காட்டி அமைதியின்மையையும், ஹிம்சையையும் துரத்துவதும் பாரத தேசத்தின் குணமே என்று காட்டுவோம். “அஹிம்சைக்காக ஹிம்சையும் தர்மமே” என்பது போர் நீதி.

அமைதியை விரும்பும் தேசமான பாரதம், ‘வசுதைவ குடும்பகம்’ என்ற எண்ணத்தோடு  அனைவரையும் சேர்த்துக் கொண்டு, பொறுமை, இணக்கம், சமசரம், கருணை, நட்பு ஆகியவற்றோடு நடந்து கொள்கிறது. இப்படிப்பட்ட புனித பாரத பூமியையும், இதில் பல யுகங்களாக வளர்ந்து வரும் தர்மத்தையும் சிதைக்க வேண்டுமென்று பார்க்கும் தீய சக்திகளுக்கு வீரத்தோடு பதில் கூறுவதற்கான சாமர்த்தியமும் பாரத தேசத்திற்கு உண்டு. போர்க்களத்தில் வேதாந்த போதனை செய்த ஜகத்குருவை வழிபடும் தேசம் இது. அதுவே இந்த தேசத்தின் ஆதர்சம்.

பதவிக்கு வந்த நாள் முதல் மீண்டும் தேர்தலில் வெற்றி பெறுவதொன்றையே குறியாகக் கொண்டு கவர்ச்சியான திட்டங்களை அறிவிப்பது, அரசியல் சதிகள் செய்வது என்று செயல்படும் தலைவர்களையே பார்த்துள்ளோம். ஆனால் அதிகாரத்திற்கு வந்தது முதல், தேச வளர்ச்சியின் மீதும் தேசப் பாதுகாப்பின் மீதும் மட்டுமே பார்வையைச் செலுத்தி, அரசியல் ஆதாயத்தை விட நாட்டு நலனே முதன்மையானது என்று உழைக்கும் தலைவர்களையே ‘உண்மையாக ஆட்சி புரிபவர்கள்’ என்று கூறவேண்டும். அப்படிப்பட்ட தலைவர்களைக் கொண்ட ஆட்சி, நீண்டகால நலனைக் கருத்தில் கொண்டு, எதிரிகளால் தாக்க முடியாத திடமான தேசப் பாதுகாப்பு அமைப்பினை ஏற்படுத்தி தேசத்தின் முன்னேற்றமே முக்கிய இலக்காகக் கொண்டு உழைத்து வருகிறது. அவ்விதமான ஆட்சித் திறன் பதினொன்று ஆண்டுகளாக அதிர்ஷ்டவசமாக நம் தேசத்திற்கு கிடைத்துள்ளது. 

சமரசம் செய்து கொள்ளாத விதத்தில் பாதுகாப்பு, கண்காணிப்பு ஆகியவற்றை திடப்படுத்தியதன் காரணமாகத்தான் பகைவர்களின் ஊடுருவல் தாக்குதலுக்கு  சாமர்த்தியமாக பதிலடி கொடுக்க முடிந்தது.

விடுதலை பெற்றபோது பாரத தேசம் இரண்டு துண்டுகளாகி, அதன் பின் மூன்றாகி புதிதாக எதிரி நாடுகளை சிருஷ்டித்துக் கொள்ளவேண்டி வந்தது. துண்டான பாரத தேசத்தின் பகுதி முதலில் இருந்தே மக்களின் நலன், தேசத்தின் முன்னேற்றம் ஆகியவற்றை விட பகைமைக்குக் வெறுப்புக்கும் முக்கியத்தும் அளித்து வன்முறையையும் பயங்கரவாதத்தையும் மத வெறியையும் மட்டுமே வளர்த்து வருகிறது. வியாபார நோக்கத்தோடு வெளிநாட்டு அமைப்புகள் செய்யும் ஆயுத விற்பனை பகைவர்களின் பயங்கரவாதத்தை வலுப்படுத்தி வருகிறது.

உலகில் பல தேசங்களில் அழிவையும், தாக்குதலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் பயங்கரவாதத்திற்குத் தம் தேசத்தைக் கோட்டையாக உருவாக்கிக் கொண்டது பகை தேசம். அந்தக் கொடுமைகளுக்கு பல்வேறு துல்லியமான தாக்குதல்கள் (சர்ஜிகல் ஸ்ட்ரைக்ஸ்) மூலம் பாரதம் புத்திசாலித்தனமாக பதிலளித்தது. பயங்கரவாத தாக்குதல்களை நடக்க விடாமல் முன்பு எப்போதும் இல்லாத விதமாக திறம்பட ஏற்பாடுகளை செய்தது.

ஆனால் அண்மையில் காஷ்மீருக்குள் புகுந்து பஹல்காமில் அங்கிருந்த மத வெறியர்களின் உதவியோடு சுற்றுலா வந்த மக்களை மதத்தின் பெயரால் கொடூரமாகக் கொலை செய்த பயங்கரவாதிகளின் அக்கிரமத்திற்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாரதம் சரியான பதிலடி கொடுத்தது. வளர்ந்த நாடுகளின் அகம்பாவம் அடங்கும் விதமாக, உலகம் முழுவதும் வாயைப் பிளக்கும் விதமாக பாரத தேசப் பெண் சக்தியின்  தலைமையில் முப்படை வீரர்கள் வீறு கொண்டெழுந்தார்கள். ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் எத்தனை வலிமையாகவும், தரமாகவும் பாரதம் தயாரித்து வைத்திருந்தது என்பதை உலகிற்கு நிரூபித்தார்கள்.  

பகை நாடு போர் நிறுத்தத்திற்குத் தானாகவே இறங்கிவந்தது. வாக்கை மீறி மீண்டும் இரு முறை தாக்குதல் நடத்தியது. பாரதம் முன்வைத்த காலைப் பின் வைக்காமல் கடினமாக  அடித்துத் துரத்தி, பகை நாட்டை மண்ணைக் கவ்வ வைத்தது. வீர பாரதம். வெற்றி பாரதம். பகைவர்களின் பலமான பயங்கரவாத தளங்களை துவம்சம் செய்து, “எங்களுடையது தர்ம யுத்தம். பயங்கரவாதிகளோடு மட்டுமே எங்கள் போராட்டம்” என்று அடித்துக் கூறி இலக்கை மட்டுமே குறிபார்த்துத் தாக்கியது. ஆனால் பகை தேசமோ  பயங்கரவாதம், தேசம், ராணுவம் மூன்றும் தமக்கு ஒன்றே என்று நிரூபித்தபடி எதிர்பாராத அடி வாங்கிச் சரிந்தது.

பாரதத்தில் சுகமாக இருந்து கொண்டு பகை நாடுகளுக்கு வக்காலத்து வாங்கும் சில தீய உயிரினங்களைத் தவிர எதிர்க்கட்சிகளும் மக்கள் அனைவரும் மெச்சிக் கொள்ளும்  விதமாக சமயத்திற்கேற்ப சாமர்த்தியமாக நடந்து கொண்ட ஆட்சி அமைப்பைப்  பாராட்டியே தீர வேண்டும்.

பொருளாதார முன்னேற்றத்தில் உலகின் முதன்மையிடத்தை நோக்கி விரைந்து செல்லும் பாரதம், தன்னைத் தான் பாதுகாத்துக் கொண்டு பகைவர்களை அழிக்கக் கூடிய அற்புதமான ராணுவ அமைப்பைப் பெற்றுள்ளது என்பதை உலகிற்குப் பெருமையோடும் தெளிவோடும் பிரத்தியக்ஷமாகக் காட்டியது.

கெஞ்சுவது, விட்டுக் கொடுப்பது போன்ற எதுவும் இல்லாமல் நேரத்திற்கேற்ப சரியான முடிவெடுத்து பகை நாட்டையும் அதை ஆதரிக்கும் நாடுகளையும் ஒரே நேரத்தில்  சங்கோஜம் சிறிதுமின்றி எச்சரித்தது.

நிதானம் நிரம்பிய பெரும் தேசமான பாரதத்திற்குக் கட்டுப்பாடு, சாமர்த்தியம், பொறுப்போடு கூடிய தீர்மானம், நிர்வாகம் போன்ற நல்ல குணங்கள் எல்லாம் உண்டென்று கம்பீரமாக அறிவித்தது.

தர்மத்தில் உறுதி, தேசபக்தி, தளராத, ஓய்வில்லாத, தீட்சையோடு கூடிய உழைப்பு ஆகிய எல்லாம் ஓருருவமாகக் கொண்ட ஆளுமை, பாரத தேசத்திற்கு முதன்மையாக நின்று திறமையான பாதுகாப்பு, வெளியுறவு, ராணுவம் ஆகிய துறைத் தலைவர்களின் உதவியோடு நடத்திய ஆபரேஷன் சிந்தூர், பாரத மாதாவின் நெற்றியில் குங்கும ஒளிக் கிரணத்தைத் தீட்டி அதை மேன்மையோடு உலகிற்கு வெளிப்படுத்தியது.

அச்சமின்மை, வீரம், சிறந்த பாதுகாப்புணர்வு போன்றவற்றைத் தோற்றுவித்த அரசாங்கத்தை நாட்டுமக்கள் பாராட்டியே தீர வேண்டும். இந்த மாபெரும் யக்ஞத்தில் உயிர் துறந்து சுவர்க்கத்தை அலங்கரித்த வெற்றி வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியபடி விஸ்வ குருவாக, வீரத்திற்கு உதாரணமாக சஸ்திரத்திற்கும் சாஸ்திரத்திற்கும் ஐஸ்வர்யத்திற்கும் நம் தேசமே முதன்மையானது என்று நிரூபித்ததைப் பாராட்டிப் பெருமையோடு மகிழ்வோம்.

(தலையங்கம், ருஷிபீடம் மாத இதழ், ஜூன், 2025)

சமஸ்கிருத நியாயமும் விளக்கமும் (52): அஜ்கல் ந்யாய:

samskrita nyaya - 2026

சமஸ்கிருத நியாயமும் விளக்கமும் – 52
தெலுங்கில்: பி.எஸ். சர்மா 
தமிழில்: ராஜி ரகுநாதன்

அஜ்கல் (அச்+ஹல்=அஜ்கல்) ந்யாய:
அச் – உயிரெழுத்துக்கள். ஹல் – மெய்யெழுத்துக்கள்

இலக்கணத்தில் ஒரு கருத்தைக் கொண்டு ஒரு மகத்தான செய்தியை வெளியிடுவதற்கு ரிஷிகள் அளித்த நியாம் இந்த அஜ்கல் நியாயம்.

மொழி விஞ்ஞானம், இலக்கணம் ஆகியவற்றில் அறிமுகம் உள்ளவர்களுக்கு அ– ச், ஹ- ல் (அச், ஹல்) என்பது பழக்கமானதே. 

‘அச், ஹல்’ என்றால் என்ன? உயிரெழுத்துக்களை சமஸ்கிருதத்தில் ‘ஸ்வரம்’ என்பார்கள். ஸ்வரத்தை விளக்கும் சாஸ்திரம் இவ்வாறு கூறுகிறது. “ஸ்வரம் ராஜதே இதி ஸ்வர:”. தனக்குத் தானாகவே மலர்பவை. சுயமாக ஒளி வீசுபவை ‘அச்’ அதாவது உயிரெழுத்துக்கள்.

‘ஹல்’ என்னும் மெய்யெழுத்துக்கள் ‘ஸ்வ’ இல்லாதவை. அதாவது தனியாக வாழமுடியாதவை. ‘அச்’ என்னும் உயிரெழுத்தைச் சார்ந்திருந்தால்தான் ‘ஹல்’ என்னும் மெய்யெழுத்துக்கு முழுமை கிடைக்கும். 

சுலோகம்:

“ஏகாதினோsபி ராஜந்தே ஸாரஸத்த்வா: ‘ஸ்வரா’ இவ
‘வ்யஞ்ஜனா’னீவ நி:சத்த்வா: பரேஷாமனுகாமின:”

இதில் உவமான அலங்காரத்தைக் கொண்டு ‘அச்’ களையும், ‘ஹல்’ களையும் மிக சமத்காரமாக ஒப்பிட்டுள்ளார்கள். 

அறிவில் இரு விதம்:

உலகில் இரண்டு வித மனிதர்கள் இருப்பார்கள். (ஸ்வ) சுயபலம் கொண்டவர்கள் ஒருவகை.. இவர்கள் சுய புத்தியால் வழிகாட்டிக் கொண்டு முன்னே செல்வார்கள். பிறருக்கு உதவும் திறன் கொண்டவர்கள். இந்த முதல் ரகம் மனிதர்கள் தலைவர்களாக பிரகாசிப்பார்கள். இவர்களை உயிரெழுத்துக்களோடு ஒப்பிட்டார்கள்.

மற்றொரு வித மனிதர்கள் வலிமையற்றவர்கள். இவர்கள் சுதந்திரமில்லாதவர்கள். தம் சொந்தக் காலில் நிற்க இயலாதவர்கள். இவர்களுக்குப் பிறருடைய ஆதரவு தேவை. பிறரைச் சார்ந்திருப்பார்கள். சுய புத்தி இல்லாத இவர்கள் தலைவர்களாக முடியாது. பிறர் எழுதிக் கொடுத்ததைப் படிப்பார்கள். அதில் இருக்கும் கருத்தையும் புரிந்து கொள்ள இவர்களால் இயலாது. யாராவது கேள்வி கேட்டால் தடுமாறுவார்கள். பிறருடைய புத்தியைச் சார்ந்திருக்கும் இவர்களை ‘ஹல்’ எனப்படும் மெய்யெழுத்துக்களோடு மேற்கண்ட சுலோகம் ஒப்பிடுகிறது.

இரு வேறு மனிதர்களின் இயல்பில் எதனால் இந்த வேறுபாடு? படைப்பில் எந்த அநியாயமும் இல்லை. கடவுளை நிந்திக்க வேண்டாம். சுய பலத்தை முயற்சித்துப் பெற வேண்டும். தேசமானாலும் தனிமனிதர் ஆனாலும் இயல்பாகத் தனக்குள்ள சக்தியைப்  பிறரோடு பகிர்ந்து கொண்டால்தான் மதிப்புடையவர் ஆக முடியும் என்பதே இந்த நியாயம் கூறும் செய்தி.

‘அச்’ என்னும் உயிரெழுத்தில் இருக்கும் வேதாந்தம்:

வேதாந்தத்தின்படியும் ‘அஜ்கல்’ நியாயத்தை விளக்கியுள்ளனர் அறிஞர்கள். இதில் உயிரெழுத்துக்களை உயிர், சைதன்யம். ஆத்மா ஆகியவற்றோடு ஒப்பிட்டனர். மெய்யெழுத்துக்களை (சரீரம்) உடலோடு ஒப்பிட்டார்கள்.

ஆத்ம சைதன்யம் உள்ள உடலை ‘உயிரினம்’ என்பார்கள் ஆத்மா பறந்து போய்விட்டால், மீதி உள்ளது சைதன்யமற்ற வெறும் உடல் சவமே. ‘அஜ்கல்’ நியாயத்தில் கூறுவது என்னவென்றால், உயிரெழுத்து இல்லாவிட்டால் மெய்யெழுத்தை உச்சரிக்க முடியாது. அதே போல் பரமாத்மா இல்லாவிட்டால் ஜீவன் இல்லை. உயிரெழுத்து இருந்தால்தான் மெய்யெழுத்து ஒரு நிலையான எழுத்தாகப் பயன்படும். பரமாத்மாவை அறிந்தவருக்கு ஞானோதயம் பிறக்கிறது. ஞானி எவ்விதமாக சுதந்திரமானவராக ஆவாரோ அதே போல் ஸ்வரங்கள் (உயிரெழுத்துக்கள்) சுதந்திரமானவை என்று கூறுகிறது இந்த நியாயம்.

அரசியலிலும் இத்தகைய திண்மையை உள்ளீடாகப் பெற்றவரே தலைவராக ஒளிவீசுவார்கள். மக்களின் பாராட்டைப் பெறுவார்கள். அர்ஜுனன் சுய முயற்சியால் திறமையை வளர்த்துக் கொண்டான்.  சிவனை மகிழ்வுறச் செய்து பாசுபத அஸ்திரத்தைப் பெற்று விஜயனானான். ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளும் அவற்றின் திறமையால் உயிரெழுத்துக்களைப் போல சுதந்திரமானவை. பயங்கரவாதிகளின் நாடான பாகிஸ்தான், மெய்யெழுத்துக்களைப் போல எப்போதும் பிறரைச் சார்ந்தே இருக்கிறது.

மொழி விஞ்ஞானம்:

சிவபெருமான் வாசித்த டமருவில் இருந்து தோன்றிய ‘மாஹேஸ்வர சூத்திரங்கள்’ எனப்படும் பதினான்கில் இருந்து வந்த ஒலிகளை ‘அச்’, ‘ஹல்’ என்று பிரித்தார்கள்.

அச் (உயிரெழுத்துக்கள்):

அ இ உ ண்
று அலு க்
ஏ ஓ ஜ்
ஐ ஔ ச்

இவ்விதம் ‘அ முதல் ச் வரை’ இருக்கும் எழுத்துக்கள் சுதந்திரமான உயிரெழுத்துக்கள்.

ஹல் (மெய்யெழுத்துக்கள்):

ஹ ய வ ர ட்
ல ண்
(இன்ன பிற)

“அச்” என்னும் உயிரெழுத்தோடு சத்சங்கம்:

உயிரெழுத்தோடு சேர்ந்த மெய்யெழுத்துக்கள் ஒரு உறுதியான வடிவத்தைப் பெற்று எழுத்தாக சுதந்திரம் அடைகின்றன. இந்த சத்சங்கத்தில் உயிரெழுத்து என்னும் குருவின் சந்நிதியில் ஞானியாக மாறிய அறிவு பெறும் ஆர்வமுள்ள ஜிஞ்ஞாசியான மனிதன் சுதந்திரமாக நிலைபெறுகிறான். ‘அஜ்கல்’ நியாயத்திற்கு ஞானியின் சத்சங்கத்தால் பெற்ற  பயன் என்பது ஒரு உதாரணம்.

உயிரெழுத்தில் பரமாத்மா:

உயிரெழுத்துக்களை அடைக்கலம் கொடுக்கும் பரமாத்மாவாகக் கருதலாம். நாம் வழிபடும் தெய்வங்கள், குருமார்கள் உயிரெழுத்து போல ஆதாரமானவர்கள். ஜீவர்கள் என்ற மெய்யெழுத்துக்கள் உயிரெழுத்துக்களோடு சேரும்போது, பக்தானகவும் ஞானியாகவும்   மாறுவது சிறப்பு.

‘அச்’ என்னும் சுயம் பிரகாசனான சூரியன், ‘ஹல்’ என்னும் சந்திரன் முதலான கிரங்களுக்கு ஆதாரமாக உள்ளான். சூரியனோடு சேர்ந்திருந்தால்தான் பிறவற்றுக்கு இருப்பு இருக்கும். அப்போதுதான் அது சூரிய குடும்பமாக மலரும். 

அதேபோல் சமர்த்தனான யஜமானன் இருந்தால்தான் குடும்பம் அழகாக விளங்கும். வீடு என்றால் சம்பாதிப்பவர், அவரைச் சாந்திருப்பவர் என்று இருவர் இருப்பர். அதேபோல் கல்வி நிலையங்கள், வியாபார அமைப்புகள், சேவை சங்கங்கள் போன்றவற்றை சாமர்த்தியமாக நிர்வாகம் செய்யவேண்டுமென்றால் உயிரெழுத்து போன்ற மனிதர்கள் முக்கிய இடத்தில் இருக்க வேண்டும். அப்போது தான் வெற்றியை சாதிக்க முடியும். அப்படியின்றி அனைவரும் மெய்யெழுத்தாக இருந்தால் அந்த நிறுவனம் ‘பூச நட்சத்திரத்தில் பிறந்து மக நட்சத்திரத்தில் காணாமல் போய்விடும்’. (அற்பாயுளில் மறைந்து விடும்).   

உயிரெழுத்துக்களில் கணிதம்:

உயிரெழுத்துக்கள் எண்கள். மெய்யெழுத்துக்கள் பூஜ்யம். பூஜ்ஜியத்திற்கு மதிப்பு இல்லை. எண்களோடு சேர்ந்தால்தான் மதிப்பு அதிகரிக்கும்.

உயிரெழுத்துக்களில் தலைமைப் பண்பு:

திறமையான தலைமையும், திடமான அமைச்சரவையும் அரசியல் கட்சிகளுக்கு உயிரெழுத்து போன்றவை. இவர்களைச் சார்ந்திருக்கும் செயல் வீரர்களும் பிறரும் மெய்யெழுத்து போன்றவர்கள். இவற்றின் விகிதம் சரியாக இருந்தால் கட்சியின் எதிர்காலம் நன்றாக இருக்கும். ஒரு கட்சியில் தலைமைக் குறைபாடும், மெய்யெழுத்துக் கூட்டம் போன்ற அங்கத்தினர்களும் இருந்தால் அந்தக் கட்சி நாளடைவில் குலைந்து போகும். கடந்த கால வைபவங்களையே சொல்லிக் கொண்டு காலம் கழிக்க வேண்டி வரும். பேராசையும் சுயநலமும் கொண்ட, சாமர்த்தியமற்ற அசத்துகளான மெய்யெழுத்துக்களை மக்களின் மீது ஏவிவிடக் கூடாது என்ற கருத்தை இந்த நியாயம் தெரிவிக்கிறது.

உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் இணைந்தால்தான் அட்சரங்கள் உருவாகும். சாமர்த்தியமான சரியான தலைவர்கள் இருந்தல்தாம் வெற்றி கிட்டும். இதுவே ‘அஜ்கல்’ நியாயம் அளிக்கும் செய்தி.

IPL 2025: பெங்களூரு அணி சாதனை வெற்றி!

ipl 2025 games - 2026

ஐபிஎல் 2025 – தகுதி ஆட்டம் 1 – 29.05.2025 – முல்லன்பூர் – பஞ்சாப் vs பெங்களூரு

பெங்களூரு அபார வெற்றி

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பஞ்சாப் கிங்க்ஸ் அணியை (14.1 ஓவர்களில் 101, மார்கஸ் ஸ்டோயினிஸ் 26, ஒமர்சாய் 18, பிர்சிம்ரன் சிங் 18, ஹேசல் வுட் 3/21, சுயேஷ் ஷர்மா 3/17, யஷ் தயாள் 2/26, புவனேஷ் குமார், ஷெப்பர்ட் தலா ஒரு விக்கட்) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (10 ஓவர்களில் 106/2, பில் சால்ட் 56, மாயங்க் அகர்வால் 19, ரஜத் படிதர் 15, கோலி 12, ஜேமியான், முஷீர் கான் தலா ஒரு விக்கட்) 60 பந்துகள் மீதமிருக்க, 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் முதலில் மட்டையாட வந்த பஞ்சாப் அணியின் வீரர்களில் மார்கஸ் ஸ்டோயினிஸ் (17 பந்துகளில் 26 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்)), பிரப்சிம்ரன் சிங் (10 பந்துகளில் 18 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்), மற்றும் அஸ்மத்துல்லா ஒமர்சாய் (12 பந்துகளில் 18 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்) மட்டுமே இரட்டை இலக்க ரன் சேர்த்தனர். மற்ற வீரர்களான பிரியான்ஷ் ஆர்யா (7 ரன்), ஜோஷ் இங்கிலீஷ் (4 ரன்), ஷ்ரேயாஸ் ஐயர் (2 ரன்), நெஹல் வதேரா (8 ரன்), ஷஷாங்க் சிங் (3 ரன்), முஷீர் கான் (பூஜ்யம் ரன்), ஹர்பிரீத் ப்ரார் (4 ரன்) என் அனைவருமே பெங்களூரு பந்துவீச்சாளர்களின் பந்துகளை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் பஞ்சாப் அணி 14.1 ஓவர்களில் 101 ரன்னுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.

          102 ரன் என்ற மிக எளிய இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர் விராட் கோலி (12 பந்துகளில் 12 ரன், 2 ஃபோர்)  நாலாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அவரை அடுத்து களமிறங்கிய மாயங்க் அகர்வால் (13 பந்துகளில் 19 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் ரஜத் படிதர் (8 பந்துகளில் 15 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்) இருவரும் பெரிய இன்னிங்க்ஸ் ஆடவில்லை எனினும் மற்றொரு தொடக்க வீரரான பில் சால்ட் (27 பந்துகளில் 56 ரன், 6 ஃபோர், 3 சிக்சர்) உடன் இணைந்து ஆடி 10 ஓவர்களில் அணியை வெற்றி இலக்கை அடையவைத்தனர்.

பெங்களூரு அணியின் சுழப் பந்துவீச்சாளர் சுயேஷ் ஷர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி நேரடியாக இறுதி ஆட்டத்திற்குச் செல்கிறது. பஞ்சாப் அணிக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது. 60 பந்துகள் மீதமிருக்கையில் பெங்களூரு அணி வெற்றிப் பெற்றது ஒரு சாதனையாகும்.

          2011இல் இப்போதுள்ள பிளேஆஃப் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடத்தில் இருக்கும் அணிகள் மோதும்போது இரண்டாவது இடத்தில் உள்ள அணியே எப்போது முதல் தகுதி ஆட்டத்தில் வெல்வது வழக்கம். இம்முறையும் அதுவே நடந்துள்ளது.   

ஸ்டாலின் வர்ற ரோடு பளிச்னு இருக்குது; மக்கள் போற ரோடு மட்டமா இருக்கு!

rp udayakumar maduraii - 2026

மதுரையில் ஸ்டாலின் வரும் சாலைகள் எல்லாம் பளீச்,பளிச்சாக உள்ளது ஆனால் மக்கள் செல்லும் பாதை குண்டும் குழியுமாக உள்ளது: என்று, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டினார்.

கடந்த 4 ஆண்டுகளில் யாரும் குறை சொல்ல முடியாத ஆட்சியை திமுக நடத்தி வருகிறது. ஆனால் திமுக ஆட்சியை பற்றி குறை கூறுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியாருக்கு எதுவும் கிடைக்கவில்லை. இதனால், திமுக அரசை குறை சொல்லி அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைத்துக்
கொண்டு இருக்கிறார் என்று ஸ்டாலின் கூறுகிறார்.

எடப்பாடியார், ஜனநாயக கடமை ஆற்றும் வகையில், மக்கள் மீது அக்கறையிலேயே மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக, கேள்விக்
கணைகளை ராமன் வில்லில் இருந்து புறப்படுகிற அம்பை போல இன்றைக்கு எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக மக்கள் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் மக்கள் தொண்டே, மகேசன் தொண்டு என்று உழைத்துக் கொண்டிருக்கிற எடப்பாடியார். எடப்பாடியாரின் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என்று ஸ்டாலின் கூறுகிறார்.

கோரிக்கைகளை நிறைவேறாததை கண்டித்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள், உங்கள் ஆட்சியின் சாதனை என்று சொல்லுகிற மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத பெண்கள் எல்லோரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள் எல்லாம் உங்கள் அரசை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று யாரோ உங்களுக்கு தப்பும் தவறுமாக தகவல்களை கொடுத்திருக்கிறார்கள்.

உங்களுடைய அயலக அணியை சேர்ந்த ஜாபர்சேட் போதை பொருள் கடத்தியதால், போதை பொருள் கடத்தி அதன் மூலம் மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது என்று மக்கள் கூறுகிறார்கள். பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெறுவதை பார்த்து இந்த அரசின் அலங்கோல அரசுக்கு அரக்கோணமே சாட்சி என்று மக்கள் புலம்புவது உங்களுக்கு யாரும் சொல்லவில்லையா?

நீட் தேர்வு ரத்து என்று சொன்னதை மறந்து விட்டு நீங்கள் அமைதியாக கடந்து போவதை மக்கள் துயரத்தோடு கண்ணீரோடு உள்ளார்களே? நீங்கள் உயர்த்திய மின்சார கட்டணதால் மக்கள் துன்பப்படுகிறார்கள், துயரப் படுகிறார்கள் நீங்கள் உயர்த்திய சொத்து வரியினாலே மக்கள் துன்பப்படுகிறார்கள், துயரப் படுகிறார்களே இதையெல்லாம் யாரும் உங்களிடத்தில் சொல்லவில்லையா? பால்விலை உயர்வு, பத்திர பதிவு உயர்வு இப்படி பல்வேறு வரி உயர்வுனாலே மக்கள் துன்பப்படுவதை உங்களிடத்திலே யாரும் சொல்லவில்லையா? அல்லது இவர்களெல்லாம் உங்களை பாராட்டுகிறார்களா?

இன்றைக்கும், மதுரையே அலுவலப்பட்டுக் கொண்டிருக்கிறது 10 தொகுதியில் இருக்கிற மதுரை மக்கள் உங்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் ,அதை திசை திருப்புகிற, மடை மாற்றம் செய்கிற வகையில் தலைவர் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியை என்பதை போல ஒரு ஆடம்பர, ஆர்ப்பாட்ட விழாவை மதுரையிலே கடந்த ஒரு வாரமாக, இன்றைக்கு ரோடு ஷோ என்கிற பெயரில் இந்த அலங்கோலத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள் .

பொதுக்குழு நடத்துவதில் யாருக்கும் எந்த வருத்தமும் இல்லை. அது கட்சியின் அடிப்படையிலே உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், நீங்கள் நடத்துற அந்த கட்சி கூட்டத்திற்காக மக்களின் உரிமை பறிப்பது நியாயம் தானா?

முதல்வர் எந்த சாலையிலே செல்கிறாரோ அந்த சாலை மட்டும் பளீச் ,பளிச்சாக தயார் செய்யப்படுகிறது, ஆனால் மக்கள் பயன்படுத்துகிற நடமாடுகிற அந்த சாலைகள் எல்லாம் குண்டு குழியுமாக காட்சியளிக்கிறது. முதலமைச்சருக்கு ஒரு சட்டமா? மக்களுக்கு ஒரு சட்டமா? வாக்களித்த மக்களுக்கு எல்லாம் குண்டும், குழியுமான சாலையை பரிசாக தந்துவிட்டு, அந்த வாக்குகளை பெறுவதற்காக வருகிற முதலமைச்சர் சாலைகளை எல்லாம் விமான ஓடுதளம் போல பளீச்சாக என்று உள்ளது முதலமைச்சரை ஏமாற்றவா? மக்களை ஏமாற்றவா?

நிர்வாகம் என்பது எல்லோருக்கும் பொதுவானது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் அனைவரும் சமம். வாக்களித்த மக்களுக்கெல்லாம் கொடுத்த வாக்குறுதிகளை நீங்கள் காப்பாற்றவில்லை. அது குறித்து யாரும் உங்களிடத்தில் சொன்னார்களா என்று தெரியவில்லை.

இப்போது நீங்கள் மதுரையில் கூட்டத்தில் பங்கேற்க வருகிற போது அவசர கதியில் பட்டா வழங்குகிறோம் என்று தேடிப் பார்த்தார்கள் ஆனால் அவசர கதியில் அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்காத காரணத்தால் அந்த விழா ரத்து என்கிற செய்தி வெளியாகியிருக்கிறது.

மக்களுக்காக திட்டமா?அல்லது திட்டங்களுக்காக மக்களா? மக்களுக்காக அரசா? அல்லது அரசுக்காக மக்களா? மக்களுக்காக மந்திரிகளா? அல்லது மந்திரிகளுக்காக மக்களா என்கிற கேள்வி மதுரையில் இருந்து எழுகிறது.
இவ்வளவு ஆடம்பர ஆர்ப்பாட்டம் பிரம்மாண்டங்களை இதுவரை பார்த்ததில்லை.
இந்த ஆர்ப்பாட்டம்,ஆரவாரம் மக்களுக்கு எந்த பயனும் இல்லை.

மதுரைக்கு எடப்பாடியார் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார் எய்ம்ஸ் மருத்துவமனை,லோயர் கேம்பில் இருந்து குடிநீர் திட்டம்,சுற்றுச்சாலை திட்டம், 1000கோடியில் பறக்கும் பாலம், மதுரை ராஜாஜி மருத்துவமனை தரத்தை மேம்படுத்தி மல்டி மருத்துவமனை உருவாக்கம் புதிய மாவட்ட ஆட்சியர் கட்டிடம், புதிய கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், வைகை ரையோர சாலையில் பாலங்கள், திருமங்கலம் கொல்லம் நான்கு வழி சாலை, மதுரை தூத்துக்குடி எக்கனாமிக் காலிடர் இதுபோன்ற மதுரை மக்களுக்கு வளர்ச்சித் திட்டங்களை என்னால் பட்டியலிட்டு சொல்ல முடியும்.

ஆனால், முதலமைச்சர் வீர விளையாட்டான ஜல்லிகட்டை விளம்பர விளையாட்டக மாற்றியதோடு அதை காட்சி பொருளாக கண்காட்சி விளையாட்டாக மாற்றியது ஒரு சாதனை.இன்றைக்கு தன் தந்தையார் பேரிலே நூலகம் அமைத்து அது ஒரு சாதனை, இந்த சட்டசபையில் தொடரில் ஸ்டாலின் கூறுகிறார் .

கலைஞர் இருந்திருந்தால் ஸ்டாலின் என்றால் உழைப்பு உழைப்பு என்றும், ஸ்டாலின் என்றால் சாதனை, சாதனை என்று சொல்லுவார் என்று சொன்னார் அதை நினைக்கிற போது தமிழக மக்கள் சிரிப்பதா? அழுவதா என்று தெரியவில்லை .

இன்றைக்கு தமிழ்நாடு தான் இந்தியாவில் அதிக கடன் வாங்கி இருக்கிற சாதனை, தமிழ்நாடு தான் போதை பொருள் நடமாட்டத்தின் கேந்திரமாக இருக்கிற சாதனை, தமிழ்நாடு தான் பாலியல் வன்கொடுமை அதிகமாக நடக்கிற மாநிலம் என்கிற சாதனை, தமிழ்நாடு மின்சார கட்டணத்தில் வரி உயர்விலே பின்தங்கி இருக்கிற சாதனை. ஆகவே, வேதனைகளை எல்லாம் ஸ்டாலின் சாதனை என்று மாற்றிக் கொள்வது யார் பேச்சைக் கேட்டு அப்படி சொல்லுகிறார் என்று நமக்கு தெரியவில்லை உண்மை நிலவரம் இதுதான். மதுரை திமுக ஆட்சியில் பின்தங்கி சென்று விட்டது என்று மக்களே கூறுகிறார்கள் .

மதுரைக்கு வரும் ஸ்டாலின் மதுரை, தூத்துக்குடி எக்கனாமிக் காரிடார் சாலையை மேம்படுத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கு முன் வருவாரா?
கடந்த சட்டசபை தேர்தலில் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என திமுக வாக்குறுத்தியை கொடுத்துவிட்டு, நான்காண்டு ஆகியும் எந்த மதுக்கடைகளும் குறைக்கப்
படவில்லை என்ற விவரம் தான் நமக்கு கிடைத்திருக்கிறது.

நாளுக்கு, நாள் கொலை கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்து வருகின்றன மது கஞ்சா போதையை காரணம் என்றாலும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதால் குற்றங்கள் அதிகரித்து விட்டதாக குற்றங்கள் கூடுகின்றன என, சட்ட அமைச்சரும், டிஜிபியும் கூறி குற்றத்தை நியாயபடுத்தி மடைமாற்றம் செய்கிறார்கள்.

தமிழகத்தில், இனி பூரண மதுவிலக்கு அமலாக வாய்ப்பில்லை என அரசு கருதும் பட்சத்தில் பக்தர்கள் அதிக அளவில் வந்து சில முக்கிய நகரங்களில் மட்டுமாவது டாஸ்மாக் இல்லாத நகரங்களாக அறிவிக்கலாமே என்கிற யோசனை மக்களிடத்திலிருந்து வருகிறது.

எடப்பாடியாரு ஆட்சியில் பல்வேறு சாலை திட்டப் பணிகள் தமிழக முழுவதும் சிறப்பாக நடைபெற்றது இனியாவது சாலை வசதிகளில் இந்த அரசு கவனம் செலுத்த முன்வருமா? என்று கேட்கப்படுகிறது. போதுமான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் பல சாலைகள் குண்டு குழியுமாக இருப்பதால் விபத்து ஏற்படுகிறது.

மதுரைக்கு வரும் முதலமைச்சர் மதுரை மக்களுக்காக கவனம் செலுத்துவாரா அல்லது எப்போதும் போல கைகாட்டி விட்டு கைகழுவி விட்டு செல்வாரா என கேள்வி எழுப்பி உள்ளார்.