தமிழகத்திற்குள் ஊடுருவி உள்ள பயங்கரவாதிகள் என சந்தேகப்படும் நபர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு உள்ளது என்று வெளியான தகவல் சரியல்ல என்று மறுத்துள்ளார் டிஜிபி., திரிபாதி.
அண்மையில் இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 6 பேர் இலங்கை வழியே தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாகவும், இலங்கையைப் போன்று தமிழகத்திலும் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாகவும் தமிழக டிஜிபி திரிபாதிக்கு மத்திய உளவுத்துறை தகவல் ஒன்றை அளித்துள்ளது.
உளவுத்துறையின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும்படி அனைத்து மாவட்ட எஸ்.பி.க்கள் மற்றும் காவல் ஆணையாளர்களுக்கு டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் கடலோர பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான படகுகளை கண்காணிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி நேற்று இரவு முதலே அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே, தமிழகத்தில் ஊடுருவியிருக்கும் 6 பயங்கரவாதிகளும் கோவையில் பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து கோவை நகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உச்சபட்ச பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கோவை நகர் முழுவதும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். பொது இடங்கள் மற்றும் பதற்றமான இடங்களில் போலீசார் தொடர்ந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், பயங்கரவாதிகள் நெற்றியில் விபூதி, குங்குமம் அணிந்து மாறுவேடத்தில் ஊடுருவி உள்ளதாகவும், பயங்கரவாதிகளில் ஒருவன் பாகிஸ்தானைச் சேர்ந்தவனாக இருக்கலாம் என்றும், மற்ற 5 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் எனவும் உளவுத்துறை கூறி உள்ளது.
பயங்கரவாதிகள் என சந்தேகப்படும் நபர்களின் புகைப்படங்களை கோவை போலீசார் வெளியிட்டு உள்ளதாக தகவல் பரவியது. இந்த 6 பயங்கரவாதிகளில் 3 பேரின் படங்கள் வெளியிடப்பட்டு உள்ளதாகவும், இந்த புகைப்படத்தில் காணப்படும் நபர்களை பொதுமக்கள் கண்டால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ, ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாரிடம் தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
ஆனால், போலீஸார் அவ்வாறு எந்த படங்களையும் வெளியிட வில்லை என்று டிஜிபி., திரிபாதி மறுப்பு தெரிவித்துள்ளார்.




