![மகாத்மா காந்தியின் அஸ்தி திருட்டு பரபரப்பு.! 1 Ganthi 2](https://dhinasari.com/wp-content/uploads/2019/10/Ganthi-2.jpg)
மகாத்மா காந்தியின் 150 ஆம் பிறந்த நாள் அன்று அவருடைய அஸ்தி திருடப்பட்டு புகைப்படம் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய சுதந்திரத்துக்குப் பாடுபட்டவர்களில் மகாத்மா காந்தி முதன்மையானவர் ஆவார்.
இவர் தனது அகிம்சை போராட்டத்தின் மூலம் பிரிட்டிஷாரிடம் இருந்து இந்திய நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்தார்.
இவரைப் பல இந்திய மக்கள் தேசப்பிதா எனப் போற்றி வருகின்றனர்.
இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை மற்றும் அதன் பிறகு நடந்த கலவரங்களுக்குக் காந்தியே பொறுப்பு சில அமைப்புகள் காந்தியின் மீது குற்றசாட்டை சுமத்தி வருகிறது.
அவர் கோட்சே என்பவரால் 1948 ஆம் வருடம் ஜனவரி மாதம் 30 ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்,
இந்துக்களின் வழக்கப்படி அவரது அஸ்தி ஆற்றில் கரைக்கப்பட்டது.
அத்துடன் அஸ்தியில் பல பகுதிகள் நாட்டில் உள்ள பல நினைவிடங்களில் வைக்கப்பட்டது.
அவற்றில் மத்திய பிரதேச மாநிலம் ரேவா என்னும் பகுதியில் உள்ள பாபு பவன் என்னும் காந்தி நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்தது.
கடந்த 2 ஆம் தேதி காந்தியின் 150 ஆம் பிறந்த நாள் விழா நாடெங்கும் கொண்டாடப்பட்டது.
அதையொட்டி பாபு பவன் காலையில் திறக்கப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் நினைவகக் காப்பாளர் மங்கல் தீப் திவார் இரவு 11 மணிக்கு மூட வந்தபோது காந்தியின் அஸ்தி வைத்திருந்த கலசம் காணாமல் போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அங்கிருந்த அஸ்தியைத் திருடிய சில மர்ம நபர்கள், காந்தியின் புகைப்படத்துக்குக் கீழே `தேசத் துரோகி’ எனப் பச்சை மையால் எழுதிவிட்டுச் சென்றுள்ளனர்.
ரேவா மாவட்டத்தின் காங்கிரஸ் தலைவர் குர்மீத் சிங் நேற்று முன் தினம் தன் தொண்டர்களுடன் காந்தி அருங்காட்சியகத்துக்குச் சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த காந்தியின் அஸ்தி திருடு போயுள்ளதைப் பார்த்து அதிர்ந்துள்ளார்.
பின்னர் இது தொடர்பாக குர்மீத் சிங் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரை ஏற்ற காவல்துறையினர், சட்டப் பிரிவு 295-ன் (புனித தளத்தை அவமதித்தல்) கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் பற்றி பேசிய ரேவா மாவட்டத்தின் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சிவ்குமார் வர்மா, “பாபு பவனில் உள்ள காந்தியின் அஸ்தி திருடப்பட்டுள்ளதாக ரேவா மாவட்ட காங்கிரஸ் தலைவர் புகார் அளித்தார்.
அதன் பேரில் நாங்கள் வழக்கு பதிவு செய்துள்ளோம். அருங்காட்சியகத்தில் இருக்கும் சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் அஸ்தியைத் திருடியவர்களைக் கண்டுபிடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
திருட்டு தொடர்பாகப் புகார் அளித்த குர்மீத் சிங் பேசும்போது, “ காந்தியின் சித்தாந்தம் மீண்டும் இழிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த சட்டவிரோதச் செயலை, காந்தியைக் கொலை செய்த கோட்சேவின் ஆதரவாளர்களே செய்திருக்க வேண்டும். இது போன்ற செயல்கள் முற்றிலும் நிறுத்தப்படவேண்டும்” எனக் கூறியுள்ளார்.