குமாரபாளையம் அருகே வேகமாகச் சென்ற அரசுப் பேருந்து வளைவில் திரும்பும்போது, பேருந்துக்குள் நின்று கொண்டிருந்த பெண் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு, சாலையில் விழுந்து அதே வேகத்தில் சாலையோரம் இருந்த கால்வாயில் விழுந்த சம்பவம் பொதுமக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கால்வாயில் விழுந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பெண் சிகிச்சை பெற்று வருகிறார்
இது தொடர்பான விடியோ தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியானதைப் பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
குமாரபாளையம், அன்னை சத்யா நகரைச் சோந்த இளங்கோ என்பவரின் மனைவி கோகிலா (55). இவா், சேலத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக திருப்பூா் செல்லும் அரசுப் பேருந்தில் கத்தேரி பிரிவு அருகே புதன்கிழமை காலை ஏறியுள்ளார்
இச்சாலையில் கோட்டைமேடு பிரிவில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில், வேகமாகச் சென்ற பேருந்து நெடுஞ்சாலையிலிருந்து அணுகுசாலை வழியாகத் திரும்பிச் சென்றது.
அப்போது, பேருந்தில் நின்றுகொண்டிருந்த கோகிலா, எதிர்பாராமல் தவறி வெளியே விழுந்தார் இதில், பலத்த காயமடைந்த கோகிலாவை மீட்ட அப்பகுதியினா் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனா். அங்கு, முதலுதவி சிகிச்சைக்குப் பின்னா், சேலம் அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து, குமாரபாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.