ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை நீக்குவதற்கான தீா்மானம், ஜம்மு-காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்பு மசோதா – 2019 ஆகியவை மாநிலங்களவையில் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டன. அதற்கு மறுநாள் மக்களவையிலும் இந்த மசோதாவும், தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
அப்போது, ஜம்மு-காஷ்மீரும், லடாக்கும் தனித்தனி யூனியன் பிரதேசங்களாக, அக்டோபா் 31-ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவையுடனும், லடாக் சட்டப் பேரவை இல்லாமலும் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, ஜம்மு-காஷ்மீா் மாநிலம் புதன்கிழமை நள்ளிரவுக்குப் பின் ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களானது. இவ்விரு யூனியன் பிரதேசங்களிலும் காவல் துறையும், சட்டம் – ஒழுங்கும் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் வந்துள்ளன.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நாளில், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் இரண்டு புதிய யூனியன் பிரதேசங்கள் நடைமுறைக்கு வந்ததை அடுத்து, காஷ்மீரில் உள்ள வானொலி நிலையங்களும் மறுபெயரிடப்பட்டுள்ளன.
ஜம்முவில் அமைந்துள்ள வானொலி நிலையம் ‘அகில இந்திய வானொலி, ஜம்மு’ என மறுபெயரிடப்பட்டது. ஸ்ரீநகர் மற்றும் லே ஆகிய வானொலி நிலையங்கள் முறையே ‘அகில இந்திய வானொலி, ஸ்ரீநகர்’ மற்றும் ‘அகில இந்திய வானொலி, லே’ என மறுபெயரிடப்பட்டுள்ளன.
விரைவில் இந்த இரண்டு யூனியன் பிரதேசங்களையும் நிர்வகிக்க கவர்னர்கள் நியமிக்கப்படவுள்ளனர். குடியரசுத் தலைவர் கவர்னர்களை நியமிப்பார்.