அண்ணா நினைவு நாளில் ஆலயங்களில் பொதுவிருந்து நடத்துவதற்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, ஒரு கோரிக்கை புகார் மனுவையும் அளித்துள்ளது.
இது குறித்து இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்ததாவது..
தமிழக முதல்வருக்கு அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் வாயிலாக இந்து மக்கள் கட்சி அனுப்பி வைத்துள்ள புகார் மனுவில்….
ஓவ்வொரு வருடமும் பிப்ரவரி 3ஆம் தேதி முன்னாள் முதல்வர் C.N.அண்ணாதுரை நினைவு நாளில் தமிழக இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான திருக்கோயில்களில் பொதுவிருந்து நடத்துவது கண்டனத்திற்குரியது.
திராவிட இயக்கங்களின் நாத்திகக் கொள்கைகளில் பிடிப்புக் கொண்ட அண்ணாதுரை, தி.மு.கவின் நிறுவனர். தம் வாழ்நாள் முழுக்க இறை மறுப்புக் கொள்கையை கடை பிடித்தவர்! கோயில் வழிபாடுகளை விரும்பாதவர். அவரது நினைவு நாளில் கோயில்களில் பொதுவிருந்து நடத்துவது அண்ணாதுரையை அவமதிப்பது ஆகும்.
கோயில்களில் மனிதர்களின் நினைவு நாள் (திவசம்) செய்வது திருக்கோயில் வழிபாட்டு முறைகளுக்கு விரோதமானது. ஆனால் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் அண்ணா நினைவு நாளை ஆலயங்களில் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டிருப்பது அவர்களது கொள்கை இரட்டை வேடத்தை காட்டுகின்றது.
அண்ணா நினைவு நாளில் மசூதியிலோ, சர்ச்சிலோ பொதுவிருந்து நடத்த முடியுமா? கோயில்களில் பக்தர்களின் காணிக்கை பணத்தில் அண்ணா நினைவு நாள் நடத்துவது தமிழர்களை அவமதிப்பதாகும். இந்துக் கோயில் பணத்தில் இந்து கடவுளை மட்டுமே இழித்தும் பழித்தும் பேசிய அண்ணாதுரை நினைவு நாளுக்கு பொதுவிருந்து நடத்துவதை வன்மையாக கண்டிக்கின்றோம்.
வரும் காலங்களில் இந்நிலை தொடர்ந்தால் இ.ம.க ஜனநாயக அறப்போராட்டங்களை நடத்தும் என எச்சரிக்கின்றோம். இன்று பழநி உள்ளிட்ட பல இந்து திருக்கோயிகளில் பொது விருந்து நடந்துள்ளது. இதனை இ.ம.க. வன்மையாக கண்டிக்கிறது… என்று குறிப்பிடப்பட்டுள்ளது.