
இன்று தமிழ் மன்னன் ராசராசனின் மேன்மையை எடுத்துக் காட்டிய தஞ்சைப் பெரிய கோயிலின் குடமுழுக்கு வைபோகம் சிறப்பாக நடைபெற்றது. இந்தக் குடமுழுக்கு என்றுமில்லாத வகையில் பெரும் விளம்பரத்துடனும் சிறப்பாகவும் நடைபெற காரணமாக அமைந்தது, தமிழ் அமைப்புகள் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட பிரசாரம்தான்!
தஞ்சைக் கோயிலுக்கு தமிழில் குடமுழுக்கு நடைபெற வேண்டும் என்று கொடி பிடித்தார்கள் சிலர். அதற்காக நீதிமன்றத்தின் கதவையும் தட்டினார்கள். ஆனால் நீதிமன்றமோ, அறநிலையத்துறை ஒப்புக் கொண்டபடி, தமிழ், சமஸ்க்ருதம் என ஆலயத்தின் பாரம்பரிய மகுடாகமத்தின் அடிப்படையில்தான் கும்பமுழுக்கு நடைபெறும் என்று கூறியது. அதன்படி, இன்று குடஅபிஷேகமும் நடைபெற்றது.
ஆனால், இதற்காக அதிகம் அரசியல் குரல் எழுப்பிய திமுக., மற்றும் திக., தரப்பின் தலைவர்கள் எவரும் இன்று கோயில் பக்கம் வரவில்லை. குறிப்பாக, ஆளும் அரசின் சார்பில் முதல்வர் வந்திருக்க வேண்டும், ஆனால் வரவில்லை! பக்திப்பழமான துணைமுதல்வர் ஓபிஎஸ்,ஸாவது வந்திருக்க வேண்டும். ஆனால் அவரோ திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் குடமுழுக்குக்கு சென்றுவிட்டார். அமைச்சர் பெருமக்கள் வந்திருக்க வேண்டும். வரவில்லை.

பெரிதாக சவுண்டு விட்ட சுடாலின் வகையறாக்களாவது வந்திருக்க வேண்டும்! ஆனால் அவர்களின் தமிழ் அரசியல் பேச்சால் இப்போது மக்கள் தான் நொந்திருக்கிறார்கள். பகுத்தறிவு பேசி பல்லிளித்துக் கொண்டிருந்த திராவிடர் கழக வகையறாக்களாவது தமிழ் தமிழ் என்று கூவியதற்காக, தங்கள் பகுத்தறிவை நிரூபிக்க வந்திருக்க வேண்டும் … ஆனால் வரவில்லை! சரி இப்படி எல்லாம் ஏன் அவர்கள் புறக்கணித்தார்கள்?! எல்லாம் பகுத்தறிவுதான் காரணம்!
தஞ்சை பெரியகோவிலுக்குப் போனால் பதவி போகுமா?.. அரசியல் வாதிகள் பீதி அடைவது இன்று நேற்றல்ல… வெகுகாலமாகவே ஓடிக் கொண்டிருக்கிறது…!
தஞ்சை பெரியகோவிலுக்கு வரும் அரசியல் தலைவர்களுக்கு பதவி பறிபோகும் என்கிற வதந்தி இப்போதும் உயிர்ப்புடன் இருக்கிறது.1970 களில் கருணாநிதி ராஜராஜ சோழனுக்கு கோவிலுக்குள் சிலை வைக்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால், பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களுக்கு உள்ளே புதிய கட்டுமானத்துக்கு அனுமதி இல்லை என்ற விதியை காரணம் காட்டி அனுமதி மறுத்தது தொல்லியல் துறை.
அதே நேரத்தில் பெரிய கோவிலுக்குள் உள்ள வாராகியம்மன் கோவிலுக்கு ஒரு முன்மண்டபம் கட்டும் பணி நடந்துவந்தது, அதைச் சுட்டிக் காட்டிய கருணாநிதி, வாராகிக்கு ஒரு நியாயம், கோவிலைக் கட்டிய ராஜராஜனுக்கு ஒரு நியாயமா என்று கேட்டார். இதனால் எரிச்சலான மத்திய அரசு வாராகி கோவில் கட்டுமானத்தை இடிக்க உத்தரவிட்டது. அப்போது இந்திராகாந்தி இந்தியாவின் பிரதமராக இருந்தார். அவர் காலத்தில்தான் அவசர நிலை பிரகடனம், 1976 ஜனவரி 31-ல் கருணாநிதியின் ஆட்சி கலைப்பு முதலிய சம்பவங்கள் நடந்தன. அதுதான் இந்த மூடநம்பிக்கையின் ஆணிவேர். பெரிய கோவிலுக்குள் நுழையப் பார்த்ததால்தான் கருணாநிதி பதவி போயிற்று என்று பேசி பரப்பப் பட்டது. அதன் பிறகு எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது 1983-ல் ராஜராஜனின் 1000மாவது பிறந்தநாளை ஒரு ஆண்டு முன்பே கொண்டாட்ட முடிவு செய்தது தமிழக அரசு.

அந்த விழாவிற்கு பிரதமர் இந்திரா காந்தியையும் அழைப்பதாக திட்டமிடப்பட்டது. அந்த விழா நடந்த மேடையில்தான் எம்ஜிஆரின் உடல்நிலை திடீரென மோசமடைந்து அவசரமாகச் சென்னை கொண்டு வரப்பட்டார், அதற்குப் பிறகு அவர் மீளவே இல்லை.
அதுமட்டுமல்ல, அந்த விழாவில் கலந்து கொண்டவரும், பெரிய கோவிலுக்குள் இருந்த வராஹி மண்டபத்தை இடிக்க உத்தரவிட்டவருமான இந்திராகாந்தி அவரது இல்லத்திலேயே, அவருடைய பாதுகாவலர்கள் கையாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.
இத்தனைக்கும் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்த கருணாநி பெரிய கோவில் குடமுழுக்கு நடத்தவும் உத்தரவிட்டார். 1997 ஜூன் 7-ம் தேதி குடமுழுக்குக்காக இடப்பட்டு இருந்த யாகசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 48 பேர் உடல் கருகி இறந்து போனார்கள். இது பெரிய கோவில் பற்றிய வதந்திகளை மேலும் உறுதி செய்தது.
பிரமாண்டமான இந்தக் கோவிலுக்குள் கேரளாந்தகன் நுழைவு வாயில், ராஜராஜன் நுழைவு வாயில் வழியாக மூலவர் சந்நிதிக்கு எதிரே உள்ள படிகளின் வழியாக வந்து தரிசிப்பவர், பிரபலமானவராக இருந்தால், அவர் பதவி பறிபோகும், அல்லது உயிர் பறிபோகும் என்று ஒரு மூடநம்பிக்கை (அல்லது) சென்டிமென்ட் உள்ளது.
இந்தப் பட்டியலில் முன்னாள் குடியரசுத் தலைவர்கள் ஜெயில்சிங், எஸ்.டி.சர்மா, முன்னாள் பிரதமர் இந்திரா, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், கருணாநிதி என சிலர் இடம்பெற்றிருக்கின்றனர்.
கோவிலுக்குள் சென்று வந்தால், பதவி போகும் இல்லை எனில் உயிர் போகும் என்ற அச்சத்தையும் சென்டிமென்ட்டையும் உடைக்கிறேன் பேர்வழி என பெரிய கோவிலின் 1,000வது ஆண்டு விழா கொண்டாடிய போது, முதல்வர் கருணாநிதி, ஆ.ராசா, கனிமொழி, கோ.சி.மணி, பழனிமாணிக்கம் உட்பட தி.மு.க.,வின் சிலர் கலந்து கொண்டனர். ஆனால் சொல்லி வைத்தது போல், அடுத்தடுத்த ஆண்டுகளில் அவர்கள் அத்தனைபேரின் பதவியும் பறிபோனது. திகார் சிறைக்கு சென்று வந்தனர் கனிமொழியும் ஆ. ராசாவும்.

தஞ்சை பெரிய கோவிலின், 1,000வது ஆண்டு விழா 2010ல் நடைபெற்ற போது, பெரிய கோவிலின் உட்புறம், நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் தலைமையில், 1,000 பேர் நடனமாடினர். இந்நிகழ்ச்சியை காண, முதல்வர் கருணாநிதி பட்டு வேட்டி, சட்டை அணிந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால், பழைய செண்டிமென்ட்டை மனத்தில் கொண்டு, நேர்வழியான பிரதான வழியில் வராமல், ராஜராஜசோழன் சிலை வழியாக, சிவகங்கை பூங்கா வழியாக கோவிலுக்குள் நுழைந்து, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடன நிகழ்ச்சியை பார்வையிட்டார். இதற்காக தனி வழி ஏற்படுத்தப் பட்டது. கோயில் சுவரை சிதைத்து!

ஆனால், அடுத்து வந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., படுதோல்வி அடைந்தது. அதன் பின்னர் அவர் மீண்டும் அரியணை ஏற இயலவில்லை. அடுத்தடுத்த இரு தேர்தல்களிலும் திமுக, தோல்வி அடைந்தது. மீண்டும் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த படியே உயிரை விட வேண்டும் என்று நினைத்த கருணாநிதியின் கனவு நிறைவேறவில்லை.
இந்நிலையில், அந்த செண்டிமெண்டை உடைக்க விரும்பாத ஆளும் தரப்பு அமுக்கமாக மற்ற இடங்களுக்குச் சென்றுவிட்டதே ஒழிய தஞ்சையைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை!
இன்று தஞ்சையில் நடக்கும் குடமுழுக்கு விழாவில் எத்தனை அமைச்சர்கள், ஆளும் கட்சிப்பிரமுகர்கள், தமிழ்க் குரல் எழுப்பிய திமுக,வினர் கலந்து கொள்கிறார்கள் பார்ப்போம் என்று தொலைக்காட்சிப் பெட்டியின் நேரலையிலேயே கவனமாக இருந்தார்கள் பலர். ! ஆனால்… எதிர்பார்த்தது நடந்தது!

