
கூர்கானில் இருந்து 1,200 கி.மீ., தூரத்தில் உள்ள சொந்த ஊருக்கு, காயமடைந்த தந்தையை சைக்கிளில் பின்னால் அமர வைத்து அழைத்து வந்த 15 வயதான சிறுமிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
பீஹார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தை சேர்ந்தவர் மோகன் பஸ்வான். இவர், டில்லி அருகேயுள்ள கூர்கானில் இ ரிக்ஷா ஒட்டி வருகிறார். அவரது மனைவி, தர்பங்காவில் அங்கன்வாடி ஊழியராக உள்ளார். அவர்களுக்கு ஜோதி(15) மற்றும் 4 வயதில் மகன் உள்ளனர். கடந்த மார்ச் மாதம் டில்லியில் மோகன் சாலை விபத்தில் சிக்கி காயம் ஏற்பட்டது. இதனால், ஜோதி தந்தையை பார்க்க வந்துள்ளார்.
அதே நேரத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், சிறுமி தனது தந்தையுடனேயே தங்க நேரிட்டது. ஊரடங்கு காரணமாகவும், விபத்தில் சிக்கியதாலும், மோகனால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால், கைகளில் இருந்து பணம் செலவாகிவிட, அடுத்து என்ன செய்வது என தெரியாமல் தவித்துள்ளார். மோகனும், ஒரு வேலை மாத்திரை வாங்குவதை நிறுத்தி, அதில் மிச்சமாகும் பணத்தை கொண்டு ஒரு வேளை சாப்பிட்டுள்ளனர்.
அதேநேரத்தில், வீட்டு உரிமையாளரும், இருவரையும் உடனடியாக காலி செய்யும்படி மிரட்டல் விடுத்தார். இருவரும் எவ்வளவு கெஞ்சியும் அவர் மசியவில்லை. இதனால், ஜோதி சொந்த ஊர் திரும்ப முடிவெடுத்தார். அதேநேரத்தில் ஊர் சென்றால், தனது தந்தையுடன் தான் என்பதில் முடிவு செய்தார். ஊரடங்கு காரணமாக ரயில் மற்றும் பஸ் போக்குவரத்து இல்லாததால், சைக்கிள் மூலம் ஊர் திரும்ப முடிவு செய்தார்.
இதற்காக தெரிந்தவர்களிடம் பணம் கடனாக வாங்கி, சைக்கிள் ஒன்றை வாங்கினார். அதில் ஊர் திரும்ப ஜோதி தயாரானார். ஆனால், அதில் சிக்கல் மற்றும் ஆபத்து அதிகம் என தந்தை எடுத்து கூறியும். ஆனால் அதனை பொருட்படுத்தாத ஜோதி, தந்தையை அழைத்து கொண்டு சொந்த ஊருக்கு கிளம்பினார். ஜோதி சைக்கிள் ஓட்ட, பின்னால் மோகன் அமர்ந்து கொண்டார்.
கூர்கானில் இருந்து 1,200 கி.மீ., தூரத்தில் உள்ள சொந்த ஊருக்கு, எட்டு, நாள் சைக்கிள் பயணத்திற்கு பின்னர் வந்து சேர்ந்தார். தினமும் 50 அல்லது 60 கி.மீ., தூரம் சைக்கிள் ஓட்டிய ஜோதிக்கு, வழியில் லாரி டிரைவர்கள் உதவியுள்ளனர். இந்த பயணத்தின் போது ஒரு சில வேலைகளில் அவர்களுக்கு சாப்பிட உணவு கிடைக்கவில்லை.
சைக்கிளில் சொந்த ஊர் திரும்பிய ஜோதியின் கதை கேட்டதும், அப்பகுதி மக்கள் கொண்டாட துவங்கியுள்ளனர். அப்பகுதியை சேர்ந்த ராணுவ வீரர்கள், சிறுமியை பாராட்டி 5 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பரிசாக வழங்கியுள்ளனர். ஊரடங்கு முடிந்த பின்னர் ஜோதிக்கு உதவுவதாக மாவட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது. 9 ம் வகுப்பில் சேர்த்து படிக்க வைக்கவும், நிதியுதவி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த பயணம் குறித்து ஜோதி கூறுகையில், பயணத்தின் போது, வெளிமாநில தொழிலாளர்களுக்காக இலவசமாக உணவு வழங்கப்படும் இடங்களில் மட்டும் சாப்பிட பயணத்தை நிறுத்தினேன். கடைசியாக எட்டு நாள் பயணத்திற்கு பின்னர் சொந்த ஊர் வந்து சேர்ந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.
சிறுமியின் பயணத்தை அறிந்த தேசிய சைக்கிளிங் அமைப்பு, இந்த சாதனையை நிகழ்த்திய சிறுமி நிச்சயம் திறமை மிக்கவராக தான் இருப்பார். அவருக்கு ஒரு வாய்ப்பு அளிக்க விரும்புகிறோம். ஜோதி போன்ற ஒரு திறமையாளரை தேடி வருகிறோம். சர்வதேச போட்டிகளில் பங்கேற்பவர் ஒரு நாளைக்கு 100 கி.மீ., சைக்கிள் ஓட்டினால், அவரை சிறந்த பயிற்சி எடுத்துள்ளார் என நாங்கள் கருதுவோம் என தெரிவித்தார்.