வெளி நாட்டு நாகரிகம்தான் உயர்ந்தது என்று எண்ணி பகவத் கீதையை எள்ளி நகையாடும் தற்காலத்தில் இளைஞர்களை பகவத் கீதை என்றால் என்ன என்று கேட்டால் இறந்தவர் வீட்டில் ஸ்பீக்கரில் போடுவாங்களே அது தானே என்று கேட்கிறார்கள்.
கீதையின் சிறப்பு என்ன என்று தெரியாமல் இருக்கும் இத்தகைய நாட்களில் வேற்று மதத்தவர் ஆன ஒரு பெண் மதம் யாதாயினும் தெய்வம் அளிக்கும் செய்தி ஒன்றுதான் என்று நிரூபிக்கிறார்.
ஹிபா பாத்திமா என்ற இந்த இளம்பெண் பகவத் கீதையில் உள்ள ஸ்லோகங்களை உருதுவில் மொழி பெயர்த்துள்ளார்.
முதலில் எனக்கு தெலுங்கு சரியாக வராது. ஹிந்தி கூட சுமாராகத்தான் வரும். நான் உருது மீடியத்தில் படித்தேன். ஆங்கிலமும் அதிகம் வராது. எங்கள் வீட்டில் ஒரு தெலுங்கு பகவத் கீதை உள்ளது. ஒரு ஹிந்தி பகவத்கீதையும் உள்ளது. நான் இங்கிலீஷ் பகவத் கீதையை டவுன்லோட் செய்து கொண்டேன். இம்மூன்று மொழிகளின் உதவியோடு கீதையை உருதுவில் மொழி பெயர்த்தேன் என்கிறார் பாத்திமா.
மேலும், மனித நேயம் ஹ்யூமானிடி இருக்கணும். கடவுள் ஒருவரே. முஸ்லிம்களுக்கும் அவரே கடவுள். ஹிந்துக்களுக்கும் அவரே பகவான். நாம் அனைவரும் பகவானின் பார்வையில் சமமே. இந்த மெயின் பாயிண்ட் பகவத் கீதையில் இருந்து நான் கற்றுக் கொண்டேன் என்கிறார்.
நிஜாமாபாத் மாவட்டம் போதன் மண்டலம் ராயசிகிபேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஹிபா பாத்திமா கல்லூரியில் தற்போது ஆங்கில மீடியத்தில் படித்து வருகிறார்.
இவர் தந்தை அஹமத்கான் சிறு வியாபாரி. இவர் தன் பிள்ளைகளுக்கு மத வேறுபாடின்றி மனிதநேயத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறுவது வழக்கம்.
பாத்திமா யூடியூப் சேனலில் கூட மத ஒருமைப்பாடு குறித்து பேசி வருவதாக கூறுகிறார். தற்போது கீதைக்கும் குரானுக்கும் இடையே உள்ள ஒற்றுமை குறித்து நூல் எழுதி வருவதாக தெரிவித்தார்.