
உத்தரப்பிரதேசத்தில் இளைஞர் ஒருவருக்கு மரத்தாலான உருவபொம்மையுடன் வினோத திருமணம் நடைபெற்றுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் குர்பூர் கிராமத்திலுள்ள பைத்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவ மோகன்பால். ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான இவருக்கு 9 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். இதில் 8வது மகனான பஞ்ச் ராஜ்-ஐ தவிர மற்ற அனைவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இந்நிலையிலேயே அவர் தனது கடைசி மகனுக்கு மரத்தாலான பொம்மையுடன் வினோத திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.

இந்த திருமணத்தில் மரத்தாலான உருவ பொம்மைக்கு மணப்பெண் போன்ற அலங்காரம் செய்யப்பட்டு, அதனருகில் மணமகன் அமர்ந்து சடங்குகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு, திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும் எளிமையாக நடந்த இந்த திருமணத்தில் நண்பர்கள், உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பஞ்ச் ராஜ்-க்கு சற்று மனநிலை சரியில்லாததால், இதுவரை திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் அவருக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்த மோகன்பால், வித்யாசமான முறையை பின்பற்றினார். அதாவது, சிலையுடன் மகனுக்கு திருமணம் நடத்தி வைத்துள்ளார்.

இது குறித்து மோகன்பால் கூறியதாவது: நான் இறப்பதற்கு முன்பு எனது 9 மகன்களுக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். எட்டு மகன்களுக்கு திருமணமாகிவிட்டது. ஆனால் கடைசி மகனிடம் எந்த சொத்தும் இல்லை. மேலும் அவன் அறிவாளியாகவும் இல்லாமல் இருந்தான்.

எனது மகன் சற்று மனநிலை பாதித்ததால் அவனுடைய சின்ன சின்ன வேலைகளை செய்வதற்கு கூட பிற நபர்களின் உதவித் தேவைப்படுகிறது. அதனால் அவனுக்கு திருமணம் செய்து வைத்து ஒரு பெண்ணின் வாழ்வை நான் சீர்குலைக்க விரும்பவில்லை.
ஆனால் அதேசமயம் எனது குடும்பத்தில் இவன் மட்டும் திருமணமாகாதவனாக இருப்பதையும் நான் விரும்பவில்லை. பூசாரிகளின் அறிவுரைப்படி அவனுக்கு ஒரு சிலையுடன் திருமணம் நடத்தி வைப்பதற்கு நாங்கள் முடிவு செய்தோம்.

முதலில் மறுத்த பஞ்ச்ராஜ், பின்னர் எனது மகிழ்ச்சிக்காக ஒப்புக்கொண்டான். மற்ற குழந்தைகளுக்கு எப்படி திருமணம் நடந்ததோ, அதே போல பஞ்ச் ராஜ்-க்கும் திருமண ஏற்பாடுகளைச் செய்தோம். எங்களது மதச் சடங்குகளின் படி பஞ்ச் ராஜ்ஜை வீட்டிலிருந்து அழைத்து, மண்டபத்திற்கு கொண்டு சென்றோம். திருமணத்தில் இசைக்கப்பட்ட பாடல்களுக்கு நடனமும் ஆடினான். மந்திரங்கள் ஓதப்பட்டு ராஜ்-க்கும் சிலைக்கும் திருமணம் நடைபெற்றது. இவ்வாறு அவர் கூறினார்.