ஒரு சிறுவனால் என்ன செய்துவிட முடியும் என்று அலட்சியமாக பேசுபவர்கள் பலருண்டு. இப்படி ஆணவத்தோடு பேசுபவர்களின் வாதத்தை, அடித்து நொறுக்கியிருக்கிறான், 5 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளி சிறுவன்.
தென்கிழக்கு இங்கிலாந்தின் கென் பகுதியைச் சேர்ந்தவன் சிறுவன் டோனி. டோனி ஹெட்கெல் என்ற முழு பெயரை கொண்ட டோனி, குழந்தை பருவத்தில் அனுபவித்த கொடுமைகள் சொல்லி மாளாதவை. குழந்தை பிறந்த சில வாரங்களுக்குள்ளாகவே டோனியின் பெற்றோர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி தாக்குதலாக மாற, அந்த சம்பவத்தில் பிஞ்சு குழந்தை டோனியின் இரண்டு கால்களும் பாதிக்கப்பட, எல்லோரையும் போல எழுந்து நடந்திருக்க வேண்டிய சக்தியை இழந்தான் பாலகன் டோனி. இதுதொடர்பான வழக்கில் பெற்றோர் இருவரும் சிறையில் அடைக்கப்பட, ஆதரவற்ற நிலையில் கைவிடப்பட்டான் குழந்தை டோனி
தொடக்கமே இத்தனை வலிகள் நிறைந்த வாழ்க்கையை அனுபவித்த டோனியின் கருப்பு பக்கங்கள், அவனது வளர்ப்பு பெற்றோரால் கொஞ்சம் கொஞ்சமாக துடைத்தெறியப்பட்டது. ஆடி பாடி மகிழ வேண்டிய பருவத்தில், நடக்க கூட முடியாமல் சிரமப்பட்ட டோனியை, 2016 ஆம் ஆண்டு பவுலா ஹெட்கெல் தம்பதியர் தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தனர்.
எழுந்து நடக்க முடியாத நிலையில் இருந்த 2 கால்களும் கடந்த 2017ம் ஆண்டு அகற்றப்பட்டது. அத்துடன் இடுப்பு எலும்பு பாதிப்பு, காது கேளாமை என அடுத்தடுத்த பாதிப்புகளால் துவண்டு போன பிஞ்சு உள்ளத்துக்கு தன்னம்பிக்கை ஊட்டினர் வளர்ப்பு பெற்றோர். இதனை அடுத்து கடந்த பிப்ரவரி மாதம் டோனிக்கு செயற்கைக் கால் பொருத்தப்பட்டது.
செயற்கை கால் கிடைத்ததால் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்ற டோனி, ஆசை ஆசையாக நடந்து பார்த்திருக்கிறான். தன்னை நடக்க வைத்த மருத்துவர்களுக்கு நன்றி கூறினால் போதாது., அந்த மருத்துவமனைக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என யோசித்திருக்கிறான் அந்த சிறுவன். அப்போதுதான், 100 வயதான முன்னாள் ராணுவ வீரர் டாம் மூர், கொரோனா களத்தில் பணியாற்றியவர்களுக்காக நிதி திரட்டியதை கேள்விப்பட்டிருக்கிறான். உடனே தாமும் அதே போன்று நிதி திரட்டி, தன்னை காப்பாற்றிய லண்டன் ஈவ்லினா குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொடுத்துதவ வேண்டும் என்ற எண்ணம் உதித்திருக்கிறது.
வளர்ப்பு பெற்றோரின் உதவியுடன் செயற்கைக் கால்களால் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று, கொரோனாவால் பாதித்தவர்களுக்காக நிதி திரட்டியிருக்கிறான் டோனி. ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதே சிறுவனுக்கு பெரும் சவால் எனும் போது, இந்த சவாலையும் எதிர்கொண்டுதான் வெற்றிபெற்றிருக்கிறான் டோனி.
டோனியின் முயற்சியால் இந்திய மதிப்பில் சுமார் 2 கோடியே 74 லட்சம் ரூபாய் நன்கொடை சேர்ந்துள்ளது. இதனை அந்த மருத்துவமனைக்கு வழங்கியிருக்கிறான் டோனி.
டோனியை செயலை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் உள்ளிட்ட பலரும் பாராட்டியுள்ளனர். நாம் எந்த இடத்தில் என்னவாக இருக்கிறோம் என்பதல்ல முக்கியம். என்ன செய்கிறோம் என்பதே முக்கியம் என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்திருக்கும் சிறுவன் டோனியை, இன்று இங்கிலாந்து தேசமே கொண்டாடுகிறது.
WATCH: Five-year-old Tony Hudgell has raised more than $1.2 million for the hospital that saved his life by walking more than six miles on his new prosthetic legs after being inspired by @captaintommoore's record-breaking endeavors https://t.co/47ddRbRF2Y pic.twitter.com/1RC9dbCF1U
— Reuters (@Reuters) July 4, 2020