
தெய்வீக தமிழக சங்கம்: தமிழகத்தில், ஹிந்து மக்களை ஒருங்கிணைக்க ‘தெய்வீக தமிழக சங்கம்’ துவக்கப்பட்டுள்ளது..
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடக்கவுள்ள நிலையில், ஹிந்துக்களை ஒருங்கிணைத்து பெரிய அளவில் ஓட்டு வங்கியை உருவாக்க வேண்டும் என பலரும் முயற்சித்து வருகின்றனர்.
முக்கியமாக ஆர்.எஸ்.எஸ்.,ன் சங்க பரிவார் அமைப்புகள் இந்த பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இதற்காக, ‘தெய்வீக தமிழக சங்கம்’ என்ற பெயரில் அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதில், ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் மட்டுமின்றி, ஹிந்து முன்னணி, பா.ஜ.., மற்றும் ஆன்மிகத்தில் ஈடுபாடுள்ளவர்களும் இணைந்து வருகின்றனர்.
இந்த அமைப்பு மூலம் தற்போது நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம் என அனைத்து உள்ளாட்சி தலைமையிடத்திற்கும், ஐந்து முதல், 10 நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அடுத்த கட்டமாக ஒவ்வொரு மண்டலம், வார்டு, கிராம ஊராட்சிகளுக்கு தனித்தனியாக பொறுப்பாளர்களை தேர்ந்தெடுப்பர். இந்த குழுதான் ஒவ்வொரு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், ஹிந்துக்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடுவர்.
இவர்கள் எந்த அமைப்பில் இருந்தாலும், இன்னும், மூன்று மாதங்களுக்கு இது மட்டுமே முக்கிய பணியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தெய்வீக தமிழக சங்கத்தை சேர்ந்த குழுவினர் ஒவ்வொரு வீடாக சென்று, ஹிந்து மதம், அதன் பெருமைகள், தற்போது ஹிந்து மதத்தை யார் யார் கேவலமாக பேசுகின்றனர், எந்த அமைப்பினர் ஹிந்து மக்களுக்கு எதிராக செயல்படுகின்றனர் என்பது குறித்து பேசுவர். அதுமட்டுமின்றி ஹிந்து மதம், தேசத்தின் வரலாறு குறித்த புத்தகங்களையும் விற்பனைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

