
மதுரையில் ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டினார் மு.க. அழகிரி!மதுரையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தனது ஆதரவாளர்கள் கூட்டத்தில் பேசினார் முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக முன்னாள் தலைவர் மு. கருணாநிதியின் மகனும் ஆன மு.க. அழகிரி!
நான் பதவிக்கு ஆசைப்பட்டதில்லை; தொண்டனாகவே இருக்கத்தான் விரும்பினேன் என்று கூறினார் மு.க.அழகிரி!
தனது ஆதரவாளர்கள் கூட்டத்தில் மு.க.அழகிரி பேசியதாவது…
ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகை தந்துள்ள எனது ஆதரவாளர்களுக்கு நன்றி. வீட்டிலிருந்து ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் இடம்வரை ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சதிகாரர்கள் துரோகிகளின் வீழ்ச்சிக்கான முதற்படிக்கட்டு இந்த ஆலோசனைக் கூட்டம்.
1980ஆம் ஆண்டு கருணாநிதி கூறியதால்தான் மதுரை வந்தேன்! திமுகவில் இருந்த சில துரோக சக்திகள் கலைஞருக்கும், பொதுச்செயலாளர் அன்பழகனுக்கும் தெரியாமலேயே என்னை கட்சியில் இருந்து விலக்கி விட்டார்கள்

திமுகவில் நானும் தொண்டன் போல பணியாற்றினேன்; பதவிக்கு ஆசைப்பட்டதே இல்லை! மதுரையை திமுகவின் கோட்டையாக மாற்ற நான் உழைத்தேன். 1993ஆம் ஆண்டு கலைஞரை எதிர்த்து திமுகவை விட்டு வைகோ சென்றபோது திமுகவில் இருந்து ஒரு தொண்டன் கூட வெளியில் செல்லாமல் இருந்தார்கள்
விருதுநகரில் நடைபெற்ற முப்பெரும் விழாவின் போது என் மீது தவறான புகார்களைக் கூறியதால் கடந்த 2000 ஆம் ஆண்டு தலைமை என்னை நீக்கியது. 2001ல் மதுரை மாநகராட்சி தேர்தலில் திமுக மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் துணை மேயராக திமுக சின்னச்சாமியை வெற்றி பெறவைத்தேன்
2006ஆம் ஆண்டுகளில் மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தல், மேற்கு தொகுதி தேர்தலில் வெற்றி பெற்றேன்.
திருமங்கலம் இடைத்தேர்தல் தொகுதி பார்முலா என்றால் இந்தியாவிற்கு தெரியும் அப்படி ஒரு வெற்றியை பெற்றுக் கொடுத்தேன். திமுக பார்முலா என்பது பணம் என்றார்கள் ஆனால் பணம் வழங்கவில்லை, கடுமையாக எனது ஆதரவாளர்கள் கலைஞர் போல உழைத்ததுதான் திருமங்கலம் பார்முலா! திருமங்கலம் வெற்றியை பெற்றுக் கொடுத்ததால் தான் எனக்கு கருணாநிதி தென் மண்டல அமைப்பு செயலாளர் பதவியை வழங்கினார்கள்!

திருச்செந்தூர் இடைத்தேர்தலில் திமுகவை வெற்றிபெற வைத்தேன். இதுவெல்லாம் நான் திமுகவிற்கு செய்த துரோகமா?
மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் என கூறினேன்! மதுரையில், 9 தொகுதிகளிலும் திமுக வென்றது நான் பதவியில் இருந்தபோது தான்!
நாகர்கோவிலில் முதன்முறையாக திமுகவிற்கு தொகுதியை பெற்று வெற்றி பெறவைத்தோம். ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவி வேண்டும் என பரிசீலனை செய்ததால் அவர் பொருளாளர் ஆனார். எனக்கு தென்மண்டல அமைப்பு செயலாளர் பதவி கிடைத்ததால் பொறாமையில் பொருளாளர் பதவி கேட்டார் ஸ்டாலின்.
கருணாநிதிக்கு பின் நீ தான் எல்லாம் என ஸ்டாலினிடம் நான்தான் கூறினேன்! ஆனால், ஏன் தற்போது இப்படி துரோகம் செய்தார் என தெரியவில்லை!
நான் மத்திய அமைச்சர் ஆனபோது ஸ்டாலின் துணை முதல்வர் ஆக வேண்டும் எனக் கேட்டதாக கருணாநிதி கூறினார்! நான் அதற்கு உடனடியாக ஒப்புக்கொண்டேன். கழகத்திற்காக மட்டுமே நான் பணிபுரிந்தேன்!
திமுக உறுப்பினர்கள் பட்டியல் என்ற பெயரில் வாக்காளர்கள் பட்டியலில் உள்ள பெயரைக் காட்டி கருணாநிதியை ஏமாற்றியதை சுட்டிக் காட்டினேன்! எனது பிறந்தநாளிற்காக எனது ஆதரவாளர்கள் அடித்த நோட்டிசை வருங்கால முதல்வரே என நிரந்தரமாக திமுகவினர் போஸ்டர் அடித்து வைத்துள்ளார்கள்…
ஆனால், ஸ்டாலின் முதல்வர் ஆகவே முடியாது! 7ஆண்டுகளாக பொறுமையாக இருந்துவிட்டோம்! நான் எந்த முடிவு அறிவித்தாலும் அதனை எனது ஆதரவாளர்கள் ஏற்றுக் கொள்வார்கள்!
2016ல் கருணாநிதியை கட்டாயபடுத்தி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வைத்தார்கள் , வேண்டுமென்றே அவரை மேடையில் ஏற்றி அவரின் உடல்நலனை கெடுக்க வைத்தார்கள்! விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன்! எதையும் சந்திக்க தயாராக இருங்கள்! உங்களுக்காக நான் உழைப்பேன்!

என்னுடைய உழைப்பால் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆனவர்கள், எனக்கு துரோகம் செய்துவிட்டனர்! ஸ்டாலினைப் பார்த்து, கலைஞரையே மிஞ்சிவீட்டீர்கள் என்று கூறுவதை யார் ஏற்பார்கள்?!
கருணாநிதியை போல யாரும் உருவாக முடியாது அப்படிப்பட்ட கலைஞரையே மறந்து திமுக தற்போது செயல்படுகிறது! கருணாநிதியின் பெயரை நினைவுகூரும் வகையில் உச்சரிக்கும் வகையில் எனது முடிவு அமையும்! எனது முடிவு அப்படியும் இருக்கலாம், இப்படியும் இருக்கலாம் எப்படியும் இருக்கலாம்! எனது ஆதரவாளர்களுக்கு எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.. என்று பேசினார் மு.க. அழகிரி!