தினசரி ஒரு வேத வாக்கியம்: 21. நான் யார்? உடலா?

Published:

dhinasari oru veda vaakyam

21. நான் யார்? உடலா?

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன் 

“அஹம் சைதன்யமேவ ஹி!!” – யஜுர் வேதம் 

“நான் சைதன்யம் மட்டுமே!”

இது கிருஷ்ண யஜுர் வேதத்தில் கூறப்படும் தேசபிந்தூபநிஷத்தில் உள்ள வாக்கியம். உபநிடதங்கள் அனைத்தும் முற்றுரைத்த உத்தம சத்திய வாக்கியம் இது.

விசாரணையில் இதனை சோதித்தால் ‘நான்’ என்றால் என்ன என்பது தெரிந்து போகும். இந்த தத்துவ ஞானத்தை ஏற்படுத்துவதற்கு உபநிஷத் விஞ்ஞானம் பல சோதனைகளையும் ஆன்மீக சாதனைகளையும் கூறியுள்ளது. கொஞ்சம் மனம் ஒன்றி யோசித்தால் எளிதாக புரிய கூடிய கருத்து இது.

‘நான்’ என்ற உடனே நமக்குத் தெரிவது நம் உடல், நம் பெயர், அவற்றோடு தொடர்புடைய உறவுகள். நான் இந்த நிறம் கொண்டவன். இந்த பெயர் உள்ளவன். நான் ஏழை. நான் பணக்காரன். நான் அரசன். நான் இந்தப் பதவி வகிக்கிறேன்  என்றிவ்வாறு ‘நான்’ என்ற சொல்லை பல பெயரடைகளோடு சேர்த்து பயன்படுத்துகிறோம்.

சற்று யோசித்தால் இந்த பெயரடைகளோடு கூட இவற்றுக்கு நிலைத்தன்மை இல்லை என்பது புரியவரும். ‘நான்’ என்ற ஸ்புரணையால்தான் இந்த ‘பல’எல்லாம் இருக்கின்றனவே தவிர அவற்றுக்கு ‘நான்’ என்ற ஸ்புரணை இல்லை. நான் சிறுவன் என்று நினைப்பவன் சிறிது காலத்திற்குப் பிறகு ‘நான் முதியவன்’ என்பான். சிறுவனாக இருந்தபோதைய நடத்தைக்கும் முதியவனான பின் நடத்தைக்கும் வேறுபாடு இருக்கும். ஆனால் இரண்டு நிலைகளிலும் ‘நான்’ என்பதில் மாற்றமில்லை.

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

புலன்களில் ஓடும் சைதன்யத்தை விழித்திருக்கும் போதுதான் அறியமுடியும். கனவின்போது புலன்களின் சைதன்யம் மனோ வடிவில் ஸ்புரிக்கும். ஆழ்ந்த உறக்கத்தில் இந்த இரண்டுமே உறக்கத்தில் அடங்கிவிடும். ஆனால் மீண்டும் விழித்த பின் ‘நான் ஆழ்ந்து தூங்கினேன்’ என்று கூறுகிறோம். விழிப்புக்கும், கனவுக்கும், ஆழ்ந்த உறக்கத்திற்கு அப்பாற்பட்டதாக ‘நான்’ என்ற சைதன்யம் உள்ளது. அது அனைத்து அவஸ்தைகளுக்கும் அனைத்து பந்தங்களுக்கும் அதீதமானது.

‘நான்’ என்ற ஸ்புரணை எந்த சைதன்யத்தால் ஏற்படுகிறது என்பதை கவனிக்க வேண்டும். அவ்வாறு கவனிப்பதே தியானம். இதனையே அந்தர்முக பிரயாணம் என்பர். இது தொடர்ந்து நடந்தால், மின்கருவியில் இருக்கும் மின்சாரம் போல… உடல் மனம் பிராணன் இவற்றில் பாயும்  சைதன்யம் அவற்றில் இருந்தபடியே அவற்றுக்கு அப்பாற்பட்டு இருக்கிறது என்பது புரியும். கருவிகளை இயக்கும் மின்சாரம் கருவிகளுக்கு அதீதமாக இருக்கிறது அல்லவா?

பல துளைகள் உள்ள பானையை ஒரு விளக்கின் மீது கவிழ்த்து வைத்தால் அனைத்து துளைகளில் இருந்தும் தீப ஒளி தென்படும். ஆனால் எத்தனை துளைகள் உள்ளனவோ அத்தனை தீபங்கள் இல்லை. பானையில் உள்ள பல துளைகளால் பல வடிவங்களாகத் தென்படுகிறது. அதே போல் நம்மில் உள்ள அனைத்து புலன்களின் வழியாகவும் பலவிதங்களில் வெளிப்பட்டாலும் ‘அது ஒன்றே!’ என்று ஆதிசங்கரர் தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரத்தில் கூறுகிறார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

இந்த சைதன்யம் ‘நான்’ என்பதாக ஸ்புரித்து, அந்த ‘நான்’ எதனோடு சம்பந்தம் கொள்கிறதோ அதுவாக தோற்றமளிக்கிறது. 

ஸ்படிகத்தை எந்த பொருளின் அருகில் வைத்தாலும் அந்த நிறமாகத்  தோற்றமளிக்கும். ஆனால் ஸ்படிகத்திற்கு எந்த நிறமும் கிடையாது. அதே போல் நம்மில் இருக்கும் சைதன்யம் சுத்தமானது, நிர்மலமானது.  புலன்களுக்கு அப்பாற்பட்டது. ‘நான்’ என்ற ஸ்புரணைக்கு ஆதாரமான சைதன்யத்தில் இந்த ‘அஹம்’ (நான்) என்ற பாவனை லீனமானால் அதுவே ‘சிவோஹம்’. என்றாகிறது. அதுவே ‘அஹம் பிரம்மாஸ்மி’.

இந்த சைதன்யம் கொசு முதல் யானை வரை, புல் முதல் பிரம்மதேவன் வரை ஒன்றே. உடல் வேற்றுமைகளைப் பொறுத்து பல விதங்களில் வெளிப்பட்டாலும் சைதன்யம் ‘ஏகம்’. இதனை உணரும் போது, இதோடு பேதமற்ற இணைப்பு ஏற்படும் போது உலக விவகாரங்களை நடத்தினாலும் எதிலும் ஒட்டாத இயல்பு ஏற்படும்.

உடலின் மூலம் வெளிப்படும் ‘நான்’ என்ற எண்ணத்தை சிறிது சிறிதாக மூல சைதன்யமாக அடையாளம் காண முடிந்தால் எங்குமுள்ள ஏக சைதன்யத்தில் லீனமாவோம். சிறப்பான தியானத்தாலும் விசாரணையாலும் இதனை சாதிக்க இயலும்.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

அனைவரிலும் என்னைப் பார்க்கவும், என்னில் அனைவரையும் பார்க்கவும் வேண்டும். இதுவே யோகப் பார்வை.

“சர்வ பூதஸ்ய மாத்மானாம் சர்வபூதானி சாத்மனி ஈக்ஷதே யோக யுக்தாத்மா” என்று கீதையில் கூறியுள்ளது இதுவே.

‘நான்’ என்ற எண்ணத்தை தனியாகப் பார்ப்பவன் ஜீவன். எங்கும் நிறைந்த ‘நானோடு’ தன்மயம் அடைந்தவன் யோகி. எத்தனை அலைகள் இருந்தாலும் அத்தனையிலும் இருக்கும் சமுத்திர சைதன்யம் ஒன்றுதான். அதேபோல் விஸ்வத்தில் வெவ்வேறாக தென்படுபவற்றில் நிறைந்திருப்பது ஒரே சைதன்யமே. இதனை அறிந்தால் ஆத்மாவோடு நாம் ஏகமாவோம்.

இந்த விசாரணையே நம் வேதாந்த சித்தாந்தங்கள் அனைத்திற்கும் மூலமான உயர்ந்த நோக்கம்.

Related articles

Recent articles

spot_img