
இராஜபாளையம் பகுதியில் காலை 7 மணிக்கு பழக்கடை திறக்கும் போதே, அபராதம் விதித்து பழங்களை கீழே தள்ளிவிட்டனர் காவல்துறையினர்!
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மாடசாமி கோவில் தெரு பகுதியில் ராஜேஷ் என்பவர் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் அரசு உத்தரவிட்டுள்ள காலை ஆறு மணி முதல் பத்து மணிவரை வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்
அதே போல் இன்று காலை 7 மணிக்கு டாடா ஏஸ் வாகனம் மூலம் தனது கடைக்கு பழங்களை கொண்டு வந்து இறக்கி வைத்த போது இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் பழக்கடை திறக்க அனுமதி இல்லை எனக் கூறி 200 ரூபாய் அபராதம் விதித்து பழங்களை கீழே தள்ளி விட்டுள்ளனர்.
தமிழக அரசு உத்தரவிட்ட நேரத்தில் கடைகள் திறக்க அனுமதி உள்ள போதும் ஏன் திறக்கக் கூடாது என போலீஸாரிடம் கேள்வி எழுப்பியத்தற்கு காவல்துறையினரிடமே கேள்வி கேட்கிறாயா என்று கடையில் இருந்த பழங்களை கீழே தள்ளி விட்டுள்ளார்கள்.
இதனால் வியாபாரிகள் அனைவரும் காவல்துறையினரின் இந்தச் செயல் கண்டிக்கத் தக்கது; இதுபோல் நடத்துகொண்டால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்; ஆகையால் உரிய நேரத்தில் நாங்கள் கடை திறக்க போலீசார் இடையூறு செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து இராஜபாளையம் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப் போவதாக அவர்கள் கூறினர்.
- செய்தி: வி. காளமேகம்



