
ஆன்லைன் நிறுவனங்களிடம் பாஸ்டேக் மின்னணு அட்டைகளை வாங்கி ஏமாற வேண்டாம் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த வாகனங்கள் காத்திருப்பதைத் தவிர்க்கும் பொருட்டு, பணமாகக் கொடுத்து செல்வதற்கு பதில், மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் பாஸ்டேக் திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. பாஸ்டேக் மின்னணு அட்டைகளை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் www.ihmcl.co.in என்ற, இணையதளம் மூலமும், MyFastag மொபைல் ஆப் மூலமும் வழங்கி வருகிறது.
இதுதவிர, பல்வேறு வங்கிகள், தொலைதொடர்பு நிறுவனங்கள், பண வங்கிகள் மூலமும் பாஸ்டேக் அட்டைகள் வழங்கப் படுகின்றன. இந்த பாஸ்டேக் மின்னணு அட்டையை வாகனத்தின் முன்புற கண்ணாடியில் ஒட்டிக்கொண்டால், சுங்கச் சாவடிகளைக் கடக்கும் போது, கட்டணம் நம் வங்கிக் கணக்கில் இருந்து கழித்துக் கொள்ளப்படும். இதற்கான மெசேஜ், பதிவு செய்யப்பட்ட மொபைல்போன் எண்ணுக்கு வரும். இதன் மூலம் பெரும்பாலான வாகனங்கள் தற்போது பாஸ்டேக் அட்டை பெற்று இந்த நடைமுறைக்கு மாறிவிட்டன.

இந்நிலையில் ஆன்லைன் வழியே பாஸ்டேக் அட்டைகள் வழங்கப்படுவதாக விளம்பரங்கள் வருகின்றன. இதனை நம்பி சிலர் ஆன்லைனில் பாஸ்டேக் வாங்க பணம் கட்டி ஏமாற்றம் அடைகின்றனர். எனவே இது குறித்து விழிப்பு உணர்வு ஊட்டும் வகையில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
தங்களுக்கு வந்த புகார்களை அடுத்து ஆன்லைன் வாயிலாக எவரும் பணம் கட்டி ஏமாற வேண்டாம் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எச்சரித்துள்ளது. இதுபோன்ற முறைகேடுகள் குறித்த புகார்களை ஆணையத்தின் உதவி எண் 1033 வாயிலாக அவசர கட்டுப்பாட்டு அறைக்கும், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தெரிவிக்கலாம் என்று அது தெரிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பும் அதன் இணையதளத்தில் பெரிதாக பதிவிடப் பட்டுள்ளது.