வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
மனிதர்களிடையே பரவி வரும் கொரோனா வைரஸ், விலங்குகளுக்கும் பரவியிருப்பதாக கடந்த ஆண்டே செய்தி வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கடந்த வருடம் கொரோனா பரவத் தொடங்கிய நேரத்தில், அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் 8 சிங்கங்களுக்கும், ஹாங்காங்கில் நாய், பூனைகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
கடந்த மாதமும்கூட, இந்தியாவில் ஐதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் 8 புலிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப் பட்டது. தற்போது, சென்னை, வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 11 சிங்கங்களுக்கு பசியின்மை, சளித் தொந்தரவு என இருந்துள்ளது. இதை அடுத்து, மாதிரிகள் எடுத்து ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. அதில், 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவல் இருக்கும் காரணத்தால், கடந்த மே 26ஆம் தேதி முதல் பூங்கா காலவரையரை இன்றி மூடப்பட்டுள்ளது. பூங்காவினுள் செல்ல பூங்கா பணியாளர்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டனர். எனவே, பூங்கா பணியாளர்கள் மூலமாக விலங்குகளுக்கு கொரோனா தொற்று பரவியதா என விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
இந்நிலையில், ஹைதராபாத் உயிரியல் பூங்காவில் இருந்து சிகிச்சைக்கான ஆலோசனைகளை வண்டலூர் பூங்கா அதிகாரிகள் கேட்டுள்ளதாகவும், அதுபோல், உயர் பாதுகாப்பு விலங்கின நோய்களுக்கான தேசிய இயக்ககத்தில் இருந்தும் ஆலோசனைகளைக் கேட்டுள்ளதாகவும் கூறப் படுகிறது.
இதனிடையே, ஒரு சிங்கம் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியானது. தற்போது வண்டலூர் உயிரியல் பூங்காவில் 13 சிங்கங்கள் உள்ளன. அவற்றில் ஆறு ஆண் சிங்கங்களும் ஏழு பெண் சிங்கங்களும் அடக்கம். சிங்கக் குட்டிகள் எதுவும் தற்போதைக்கு பூங்காவில் இல்லை.