
துத்தி மூலிகை பொதுவாக இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது.
துத்தி இலை, அழற்சியைப் போக்கும்; மலக்கட்டு, ஆசனவாய் எரிச்சல் ஆகியவற்றை குணமாக்கும். நோய் நீக்கி உடலைத் தேற்றும்; கருமேகம், உடல் சூடு போன்றவற்றைக் குணமாக்கும்; சிறுநீலைப் பெருக்கும். துத்தி பூ, இரத்தப் போக்கை அடக்கும்; காமம் பெருக்கும்; இருமலைக்குறைக்கும்; ஆண்மையைப் பெருக்கும்; குளிர்ச்சி உண்டாக்கும். துத்தி விதை இனிப்புச் சுவையுடையது. சிறுநீர் எரிச்சல், ஆசனக் கடுப்பு, வெள்ளை படுதல், கரும்புள்ளி, போன்றவற்றைக் குணமாக்கும்.
துத்தி குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. துத்தி இதயவடிவமான இலைகளையும் பொன் மஞ்சள் நிறமான சிறு பூக்களையும் தோடு வடிவமான காய்களையும் கொண்டது.
துத்தி 2 செமீ வரை உயரமானது. தாவரம் முழுவதும் மென்மையான உரோமங்கள் உண்டு. இவை நமது தோலில் பட்டால் அரிப்பு ஏற்படும். துத்தி இலைகளின் அடிப்பாகம் மெழுகு பூசியது போன்று காணப்படும். சில நேரங்களில் 3 மடல்களாகப் பிரிந்திருக்கும். தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் களைச் செடியாக வளர்கின்றது. கடற்கரை ஓரங்கள், சமவெளிகளில் அடர்ந்து காணப்படும்.
துத்தி இலை, பூ, விதை, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை. பசும் துத்தி, பெருந்துத்தி, பணியாரத்துத்தி, கருந்துத்தி, நிலத்துத்தி என்னும் பல வகைகள் உண்டு.
மூலம் குணமாக துத்தி இலையை விளக்கெண்ணைய் விட்டு வதக்கி மூலம், பவுத்திரம், ஆசனவாய் கடுப்பு ஆகியவற்றின் மீது வைத்துக் கட்ட வேண்டும். அல்லது இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி ஒற்றடம் கொடுத்து பொறுக்கும் சூட்டில் வைத்துக் கட்ட வேண்டும். அல்லது இலைகளுடன் பருப்பு சேர்த்து சமையல் செய்து சாப்பிடுவது வீட்டு வைத்திய முறையாகும்.
துத்தி இலைச்சாற்றுடன் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூச புண்கள் குணமாகும். துத்தி இலைச் சாற்றை பச்சரிசி மாவுடன் கலந்து கிண்டி கட்டிகளின் மீது வைத்துக் கட்ட கட்டிகள் உடையும்.
வெள்ளை படுதல் குணமாக துத்தி இலைகளை நெய்யில் துவட்டி சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம். அல்லது இலையை காரமில்லாமல் பொரியலாகச் செய்து சாதத்துடன் பிசைந்து, 40 முதல் 120 நாட்கள் வரை சாப்பிட வேண்டும். இந்தக் காலத்தில், புளி, காரம், மாமிசம் நீக்கிய உணவைச் சாப்பிட வேண்டும், புகைப்பிடித்தல் கூடாது.
20 மி.லி. பூச்சாற்றுடன், சிறிதளவு கற்கண்டு சேர்த்துச் சாப்பிட இரத்த வாந்தி கட்டுப்படும். துத்தி பூக்களை உலர்த்தி, தூள் செய்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு தூள், ஒரு டமளர் பாலில் கலந்து இரவில் மட்டும் குடித்துவர உடல்சூடு குணமாகும்.
துத்தி விதைச்சூரணம் ஒரு தேக்கரண்டி, கற்கண்டு ஒரு தேக்கரண்டி, தேனில் கலந்து உட்கொள்ள மேகநோய் குணமாகும். துத்தி இலைகளை கொதிநீரில் போட்டு வேகவைத்து, அந்த நீரில் துணியை தோய்த்துப் பிழிந்து, வலியுள்ள இடத்தில் ஒற்றடம் கொடுக்க உடல்வலி குணமாகும்.
முக பருக்கள் எண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுவதாலும், மலச்சிக்கல் பிரச்சனை இருந்தாலும் முகத்தில் பருக்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது முகப்பருக்கள் ஏற்படுவதால் முகத்தின் அழகு கெட்டு விடுகிறது இப்படிப்பட்டவர்கள் துத்தி செடி வேரின் மேல்பட்டையை நன்றாக அரைத்து, நல்லெண்ணெயில் கலந்து, நன்றாகக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு முகப்பருக்களின் மீது தடவினால் முகப்பருக்கள் நீங்கி விடும்.
ஆண்மை குறைபாடு தவறான உணவுப் பழக்கம், மலச்சிக்கல், நரம்பு தளர்ச்சி மற்றும் உடல் அதிகம் வெப்பமடைவது போன்ற காரணங்களால் இக்காலங்களில் ஆண்கள் பலருக்கு விந்து நீர்த்து போய், உயிரணுக்கள் குறைந்து குழந்தை பாக்கியம் ஏற்படாமல் போகிறது.
இப்படிப்பட்ட ஆண்கள் துத்திப் பூக்களை ஒரு கைப்பிடியளவு சேகரித்து, பசும்பாலில் போட்டுக் மிதமான பதத்தில் காய்ச்சி சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், உடல் வெப்பம் தணிந்து, தாது விருத்தி ஏற்படும். விந்து உற்பத்தி அடர்த்தியாகும்.
தோல் வியாதிகள் உடலின் சுகாதாரத்தில் முதன்மையாக வருவது நமது உடலில் மேற்போர்வையாக இருக்கும் தோல் சுகாதாரமாகவும், எப்போதும் சுத்தமாக வைத்துக் கொண்டால் பெரும்பாலான தோல் சம்பந்தமான வியாதிகள் ஏற்படாமல் தடுத்து விட முடியும்.
ஒரு சிலருக்கு கிருமித்தொற்று மற்றும் பிற காரணங்களால் படர்தாமரை, கருமேகம் போன்ற தோல் சம்பந்தமான நோய்கள் ஏற்படுகின்றன. இவர்கள் துத்தி விதைகளை பொடி செய்து 10 கிராம் அளவில் எடுத்து கொண்டு, 120 மில்லி காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், உடம்பில் ஏற்பட்ட கருமேகம், படர்தாமரை நீங்கும்.
அஜீரணம், வயிற்று போக்கு சாப்பிடும் உணவுகள் நன்றாக செரிமானம் ஆவது என்பது உடல் ஆரோக்கியத்திற்கான அறிகுறியாகும். ஆனால் ஒரு சிலர் நேரம் தவறி உடலுக்கு ஒவ்வாத உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் அஜீரணம் ஏற்பட்டு வயிற்றுப்போக்கும் ஏற்படுகிறது.
இத்தகைய பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் துத்தி இலைகளை இடித்துச் சாறு தயாரித்து அதற்குச் சமமாக நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால், அஜீரணத்தால் ஏற்பட்ட வயிற்றுப் போக்கு குணமாகும். சிறுநீர் பிரிய நமது உடலில் இதயத்தை போல முக்கியமான உறுப்புகளாக இரண்டு சிறுநீரகங்களும் செயல்படுகின்றன.
ஒவ்வொரு மனிதனும் ஒரு நாளில் சரியான இடைவெளியில் சிறுநீர் நன்றாக கழிப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஒரு சிலர் தண்ணீர் குறைவாக அருந்துவதாலும், அதீத உடல் வெப்பத்தாலும் சிறுநீர் கழிப்பதில் பிரச்சினைகள் ஏற்படுகிறது.
சரியாக சிறுநீர் பிரியாமல் இருந்தால் எதிர்காலங்களில் சிறுநீரக நோய் வர வாய்ப்புள்ளது. துத்தியிலையை இரசம் செய்து அருந்தி வந்தால் நீர் நன்கு பிரியும். சிறுநீரக நோய் வராது. மலச்சிக்கல் மாமிசம், மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகளை குறைத்து, நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளையும் சரியான அளவில் தண்ணீரும் பருகி வந்தால் மலச்சிக்கல் ஏற்படாமல் தவிர்க்க முடியும். அவசர யுகமான இன்றைய நாட்களில் பலருக்கும் மலம் கழிக்கக் கூட நேரமில்லாத காரணத்தால் நாளடைவில் மலச்சிக்கல் குறைபாடு உண்டாகிறது.
இத்தகைய நபர்கள் துத்திக் கீரைகளை நன்கு சுத்தமாகக் கழுவி, அதனுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து சிறிது நெய்சேர்த்து சாப்பிட்டு வந்தால் நாட்பட்ட மலச்சிக்கல் தீரும்.
பற்கள், ஈறுகள் பற்கள் மற்றும் ஈறுகளை சுத்தமாக வைத்துக்கொள்ளாத காரணத்தாலும், உணவில் வைட்டமின் சத்துக்களின் குறைபாடு இருந்தாலும், ஜலதோஷம் ஏற்பட்டிருந்தாலும் சிலருக்கு ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டு, பல் வலி போன்றவற்றை உண்டாக்குகிறது. இச்சமயங்களில் துத்தி இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தால் பல் ஈறுகளில் ஏற்படும் வலி, வீக்கம் மற்றும் இதர நோய்கள் தீரும்.
புண்கள், வீக்கங்கள் உடலை அளவிற்கு அதிகமாக வருத்திக் கொண்டு செயல்பட்டால் தசைகளில் பிடிப்பு ஏற்பட்டு, வலி உண்டாகிறது. மேலும் எதிர்பாராமல் உடலில் அடிபடுவதால் புண்கள் ஏற்பட்டு, வீக்கங்கள் உண்டாகவும் செய்கிறது. இத்தகைய பாதிப்புகளை அனுபவிப்பவர்கள் துத்தி இலைகளையும், துத்திப் பூக்களையும் சம அளவில் எடுத்து, மை போல் அரைத்து வலி ஏற்படும் இடங்கள், வீக்கம் மற்றும் புண்களின் மீது பற்று போல் போட்டால் வலி குறையும். புண்கள் மற்றும் வீக்கங்கள் விரைவில் நீங்கும்.
நீர் கடுப்பு, வயிற்று உபாதைகள் மிக அதிகமான வெப்பத்தை வேலி இடம் கோடைக்காலங்களில் பலருக்கு வயிற்று கடுப்பு ஏற்படுகிறது மேலும் உடலில் நீர்சத்து குறைந்து நீர்க்கடுப்பு மற்றும் ரத்த பேதி போன்றவை ஏற்படுகிறது இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டு அவதிப்படுபவர்கள் சில துத்தி விதைகளை காலையில் 10 கிராம் அளவில் ஊறவைக்க வேண்டும். இதை மாலையில் சிறிது கற்கண்டு சேர்த்துச் சாப்பிட வேண்டும். இதே போல் மாலையில் ஊற வைத்து மறுநாள் காலையில் சாப்பிட வேண்டும். இவ்வாறு சில நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் மேற்கூறிய உடல்நலக் குறைபாடுகள் விரைவில் நீங்கும்.
இருமலால் துன்பப்படுத்தும்போது, இதன் பூக்களை நெய்விட்டு வதக்கிச் சாப்பிட விரைவில் நிவாரணம் கிடைக்கும்
நீரிழிவு நோய் உண்டாக்கப்பட்ட ஆய்வு விலங்குகளில், இன்சுலின் சுரப்பைத் துத்தி இலைச்சத்து அதிகரித்திருக்கிறது. துத்தியிலிருந்து பிரித்தெடுக்கப்படும் சத்துக்கள், மூளையில் ஏற்படும் புற்றுநோய் செல்கள் (Glioblastoma cells) மற்றும் பெருங்குடல் புற்று செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தியதை ஆராய்ச்சிப் பதிவு செய்கிறது.
மனப் பதற்றத்தைக் குறைக்கும் தன்மையும் (Anxiolytic) துத்தி இலைகளுக்கு இருக்கிறது. ஆய்வகங்களில் கொசு இனங்களை அழிப்பதற்காக நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், துத்தி இலைகள் சிறந்த பலனைக் கொடுத்திருக்கின்றன. ஒவ்வாமை ஏற்படுத்தும் காரணிகளைக் கட்டுப்படுத்துவதால் (Mast cell stabilization), ஆஸ்துமா நோயின் குறிகுணங்களைக் குறைக்கப் பயன்படும்.
துத்திச் செடியி வேரை நன்றாகக் கழுவி நீரில் ஒரு பதினைந்து நிமிடம் கொதிக்கவிட்டு வடிகட்டி பருகிவந்தால் உடலின் நரம்பு மண்டலம் பலமடையும்.துத்தி வேருடன் மூக்கிரட்டை வேரையும் சேர்த்து காய்ச்சி சிறிது தேன் கலந்து பருகிவர சிறு நீரக கோளாருகள் சுகமாகும்.
துத்தி இலையையும் வேலிப்பருத்தி இலையையும் சமஅளவில் எடுத்து அதனை சாறு பிழிந்து (200 மில்லி அளவுக்கு) அந்தச் சாற்றால் பல் கூச்சம்,பல் வலி,ஈறுகளில் ரத்தம் கசிவது போன்ற துண்பங்களில் இருந்து விடுதலை பெறலாம்.
துத்தி பூ.இதை நிழலில் நன்றாக உலர்த்தி பொடியாக்கி அதனுடன்,பாலும் பனங்கற்கண்டும் சேர்த்து பருகிவந்தால் நுரையீரல் கபம், இருமல், இரைப்பு, காசநோய்,இரத்த வாந்தி முதலியவை குணமாகும்
துத்திக்காயில் உள்ள விதைகளை இடித்து பொடியாக்கி,அதனுடன் கற்கண்டும், தேனும் சேர்த்து சாப்பிட்டு வர வெண்மேகம்,உடற்சூடு,கைகால்களில் படரும் சரும நோய்கள்,வெள்ளை படுதல் ஆகியவையும் குணமாகும்.
முக்கியமான விஷயம், துத்திபூவை, காம்பு, மொக்குகளோடு சேர்த்து பறித்து அதை சிறிது கருப்பட்டி சேர்த்து கஷாயமாக்கி குடித்தால் ஆண்மை பெருகும்.