
கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இப்போது ஓரளவுக்கு கொரோனா பாதிப்புகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு பொதுமக்களும் இப்போது தங்களது அன்றாட வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.
இதற்கு மத்திய அரசின் கொரோனா தடுப்பூசி திட்டமும் மிக முக்கியமான காரணமாகும். நாடு முழுவதும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போட்டதற்கு சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.
சர்வதேச அளவிலும் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளதால் பல்வேறு நாடுகளில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு சில நிபந்தனைகளும் உள்ளன. சுற்றுலா வரும் பயணிகள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயமாகும்.
எனவே, நீங்கள் வெளிநாடு செல்ல விரும்பினால் உங்கள் பாஸ்போர்ட்டில் கொரோனா தடுப்பூசி சான்றிதழைக் கட்டாயம் இணைக்க வேண்டும். அது சுலபமான ஒன்றுதான். வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் ஈசியாக இணைக்கலாம்.

இதற்கு, www.cowin.in என்ற வெப்சைட்டில் சென்று லாகின் செய்ய வேண்டும். அதில் ‘support’ என்ற வசதியில் மூன்று ஆப்ஷன்கள் இருக்கும். அதில் ‘Certificate Correction’ என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான ஸ்டேட்டஸை அதில் பார்க்க முடியும்.
அங்கே ‘Raise an Issue’ என்பதைத் தேர்ந்தெடுத்து ‘Add Passport details’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். உங்கள் பாஸ்போர்ட் நம்பர், பெயர் போன்ற விவரங்களை பதிவிட்டு ‘submit’ கொடுக்க வேண்டும். இதன் பிறகு உங்களுடைய மொபைல் நம்பருக்கு உறுதிப்படுத்துதல் SMS வரும்.
இந்த வழிமுறைக்கு பிறகு கோவின் வெப்சைட்டிலேயே உங்களது கொரோனா தடுப்பூசி சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதில் உங்களுடைய பாஸ்போர்ட் விவரங்கள் அப்டேட் செய்யப்பட்டிருக்கும்.