
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது.
மூன்று மாணவர்கள் 720க்கு 720 என முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
இதில் தஞ்சாவூரை சேர்ந்த மாணவர் ஆர்.அரவிந்த் 720 மதிப்பெண்களுக்கு 710 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.
இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், கால்நடை மற்றும் ஆயுஷ் மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இந்த நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. இந்த படிப்புகளுக்கு 2021-22 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த செப்.12-ம் தேதி நாடு முழுவதும் 198 நகரங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் நடைப்பெற்றது.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், வேலூர் உட்பட 14 நகரங்களில் 224 மையங்களில் தேர்வு நடந்தது. தமிழகத்தில் 1.12 லட்சம் பேர் உட்பட இந்தியா முழுவதும் 16.14 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர்.
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்சாமி, வங்காளம், உருது உள்பட 13 மொழிகளில் நடைபெற்ற தேர்வில் விண்ணப்பித் தவர்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், தேசிய தேர்வு முகமையின் neet.nta.nic.in என்ற இணையதளத்திலும் முடிவுகள் வெளியிட்டுள்ளது. அத்துடன், இந்த முறை மாணவ, மாணவிகளின் இ-மெயில் முகவரிக்கு மதிப்பெண் பட்டியலை அனுப்பியுள்ளது.
அதில், மொத்தமுள்ள 720 மதிப்பெண்களுக்கு தேர்வர் பெற்ற மதிப்பெண், தரவரிசைப் பட்டியலில் பெற்றுள்ள இடம் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
தெலுங்கானாவின் ஐதராபாதைச் சேர்ந்த மிருணாள் குட்டேரி, டில்லியின் தன்மய் குப்தா, மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த கார்த்திகா ஜி.நாயர் ஆகியோர், 720க்கு 720 என முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்ட 15 மாணவர்களின் முடிவுகள் ரத்து செய்யப்பட்டன.
தஞ்சாவூரை சேர்ந்த மாணவர் ஆர்.அரவிந்த் 720 மதிப்பெண்களுக்கு 710 மதிபெண்களை பெற்று அகில இந்திய தரவரிசைப் பட்டியலில் 43-வது இடத்தைப் பிடித்துள்ளார்.