
மத்திய அரசின் ‘வீடு மற்றும் நகர்புற விவகாரங்கள்’ அமைச்சகத்தின், ‘வீட்டுவசதி மற்றும் நாகர்புற வளர்ச்சி கழகத்தின்’ தனி இயக்குனராக தமிழக பாஜகவை சேர்ந்த படுகர் சமூக பெண் சபிதா போஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் நியமனத்திற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சபிதா போஜன் சமூகவியலில் எம்.ஏ, மனித வளத்தில் எம்பிஏ பட்டம், கூட்டுறவு துறையில் டிப்ளமோ முடித்தவர் ஆவர்.கார்ப்பரேட், கல்வி மற்றும் மேலாண்மைத் துறையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நிறுவனங்களில் மாநில மற்றும் பிராந்தியத் தலைவராக முக்கியப் பதவிகளை வகித்த அனுபவம் கொண்டவர்.
கவிஞரும், எழுத்தாளருமான அவருக்கு 2019 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் ‘தமிழ்ச் செம்மல்’ விருது கிடைத்தது. இதுமட்டுமின்றி சமூக பணியாற்றும் இவர், பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இளைஞர்கள், பெண்கள் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டிற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இவர் தமிழக பாஜக பிரிவில் முக்கிய பணியாற்றியவர் ஆவர்.
இந்நிலையில், இந்த ஹட்கோ தனி இயக்குநர் பதவி குறித்து உற்சாகமாக தனது பேஸ்புக் பக்கத்தில் சபிதா போஜன் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘இந்திய அரசின், ‘வீடு மற்றும் நகர்புற விவகாரங்கள்’ அமைச்சகத்தின், ‘வீட்டுவசதி மற்றும் நாகர்புற வளர்ச்சி கழகத்தின்’ தனி இயக்குனராக என்னை நியமித்த மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிஜிக்கும், குறிப்பிட்ட துறையின் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கும் மனதார நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

என்னை பரிந்துரைத்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், கட்சியின் தலைமைக்கும், ஏனைய பிரதிநிதிகளுக்கும் நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன்.
என் அரசியல் இறைவனாம் பிரதமரின் தேச மேம்பாட்டில் நானும் அங்கம் வகிக்க வழிகாட்டிய எம் முன்னோர் ஆசிக்கும், குலதெய்வத்திற்கும், இறைவனுக்கும், இயற்கைக்கும், இனத்திற்கும் என்றும் உரியவளாய் இருப்பேன்.
என்மேல் நம்பிக்கை வைத்த அத்தனை நல்லுள்ளங்களின் நம்பிக்கையை காப்பாற்றி என் கடமையை செவ்வனே செய்வேன் என உறுதியளிக்கிறேன்.
நன்றி!!! சிவார்ப்பணம்!!! ‘ என குறிப்பிட்டுள்ளார்.