டிஜிட்டல் உலகில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. யூசர்களின் பாதுகாப்பு மற்றும் யூசர்கள் பற்றிய தனிப்பட்ட தகவல் வெளிவராமல் தடுப்பது, முறைகேடான பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் / வீடியோக்களை புகார் அளிப்பது, நீக்குவது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் வெளிப்பாடாக, டேட்டா ப்ரைவசி காரணமாக ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் பேரண்ட் நிறுவனமான மெடா கடந்த அக்டோபர் மாதத்தில் கிட்டத்தட்ட 1.8 கோடி கண்டெண்டுகளை நீக்கியுள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்காணக்கான யூசர்களைக் கொண்ட சமூக வலைத்தள நிறுவனமான மெடா, அக்டோபர் 1 முதல் அக்டோபர் 31 வரை இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட இரண்டு கோடி பதிவுகளை நீக்கியுள்ளது.
ஃபேஸ்புக்கின் 13 பாலிசிகளின் அடிப்படையில் 1.8 கோடி கண்டெண்டுகளையும், இன்ஸ்டாகிராமின் 12 பாலிசிகளின் அடிப்படையில் 30 லட்சம் கண்டெண்டுகளையும் நிறுவனம் நீக்கியுள்ளது.
நிறுவனத்தின் மாதாந்திர அறிக்கையின் படி, தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 படி, இந்த செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளோம் என்று நிறுவனம் தனது மாதாந்திர அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
“தகவல் தொழில்நுட்ப விதிகள் அறிவித்துள்ள படி, அக்டோபர் 1 முதல் 31 வரை, கடந்த 31 நாட்களுக்கான எங்களின் ஐந்தாவது மாத இணக்க அறிக்கையை (Compliance report)சமர்ப்பித்துள்ளோம்.
யூசர்கள் புகார் செய்வது மட்டுமல்லாமல், தானியங்கியாக ஒரு சில கண்டெண்டுகளை நீக்கவும், AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி விதிகளுக்கு புறம்பான பதிவுகளை கண்டறியும் முறையின் வழியாகவும் கண்டெண்டுகளை நீக்கி வருகிறோம்” என்று மெடா நிறுவனம் சார்பாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூசர் அளித்த புகார்கள் காரணமாக நீக்கப்பட்டவை, தானியங்கு செயல்முறையால் நீக்கப்பட்ட பதிவுகள், மேலும், எவ்வகையான உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டன, அதற்கான காரணங்கள், உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இந்த அறிக்கையில் காணப்படும்.
இந்திய குறைதீர்ப்பு அமைப்பின் வழியே கடந்த மாதம் ஃபேஸ்புக்கில் 686 புகார்கள் பதிவாகியுள்ளன. ஃபேஸ்புக் நிறுவனம் அனைத்து புகார்களுக்கும் பதிலளித்து, உரிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதே அமைப்பின் வழியாக, இன்ஸ்டாகிராமிற்கு 652 புகார்கள் பதிவானதாகவும், அவற்றில் 420 புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், (புகைப்படம், வீடியோ) பாலியல் நடவடிக்கை சார்ந்த, அடல்ட் நியூடிட்டி, மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் சார்ந்த 20 லட்சம் உள்ளடக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் இந்தியாவில் மட்டுமே ஹேட்-ஸ்பீச் எனப்படும் தனிநபர் தாக்குதல், தரக்குறைவாக பேசுதல் உள்ளிட்ட காரணங்களுக்கு 1.7 லட்சம் பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மெடா நிறுவனம் மட்டுமல்லாமல், தொழில்நுட்ப உலகில் வலம் வரும் அனைத்து பெருநிறுவனங்களும் புதிய தொழில்நுட்ப சட்ட விதிகளின் படி, மாதந்திர இணக்க அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.