தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த நண்பரின் வீட்டுத் திருமணத்தை பொறுப்புடன் நடத்தி முடித்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது
கடந்த ஆண்டு காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சைலேந்திர பிரதாப் சிங் என்ற காவலர் உயிரிழந்தார். அவரது சகோதரி ஜோதியின் திருமணம் நேற்று உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்றது.
அந்தத் திருமணத்தை மறைந்த காவலர் சைலேந்திர பிரதாப் சிங்கின் நண்பர்கள் சகோதரர் ஸ்தானத்தில் இருந்து நடத்தி வைத்தனர்.
ட்விட்டரில் சிஆர்பிஎஃப் பகிர்ந்த திருமண புகைப்படம் வைரலாகி வருகிறது.
புகைப்படத்துடன் பகிரப்பட்ட ட்வீட்டில், “சிஆர்பிஎஃப் 110 பட்டாலியனைச் சேர்ந்த கேப்டன் சைலேந்திர பிரதாப் சிங் மறைந்திருக்கலாம். ஆனால் அவரை நாங்கள் யாரும் மறக்கவில்லை. பிரதாப் சிங் மறைந்தார், மறக்கப்படவில்லை. அதனால் தான் இன்று ஜோதியின் திருமணத்தை நடத்துகிறோம்” என்று பதிவிடப்பட்டிருந்தது.