புளியரையில் இருந்து தென்காசி செல்லும் பேருந்தில் பயணம் செய்த மாணவர்கள் சாலையோரம் விழும் பதைபதைப்பு வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை, புளியரையில் இருந்து தென்காசி நோக்கி பயணம் செய்யும் அரசு பேருந்தில் மாணவர்கள் அதிகளவு பயணம் செய்துள்ளனர்.
இவர்களில் சிலர் வேண்டும் என்றே படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணம் செய்ததாக தெரியவருகிறது.
இவ்வாறு சென்ற மாணவர்கள் குறிப்பிட்ட சமயத்திற்கு மேல் கம்பிகளை பிடித்து தொங்க இயலாமல், சாலையின் ஓரத்தில் விழும் பதைபதைப்பு வீடியோ காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
நேற்று காலை புளியரையில் இருந்து தென்காசி நோக்கி சென்ற 31 ம் எண்ணை சேர்ந்த TN 72 N 1570 என்ற பேருந்தில் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் நிறைய பேர் பயணித்துள்ளனர்.
பேருந்தின் நடுப்பகுதியில் இடம் இருந்தபோதிலும்கூட, மாணவர்கள் பலர் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்துள்ளனர். இதனால் பேருந்து ஒருபக்கமாக சாய்ந்தபடியே சென்றுள்ளது.
அப்படி செல்கையில் பேருந்து செங்கோட்டை கட்டளை குடியிருப்பு ப்ரைவேட் மில் நிறுத்தம் அருகே சென்ற போது, படிக்கட்டில் சாகசம் செய்த மாணவர்கள் இருவர் ஒன்றன் பின் ஒன்றாக கால் இடறி கீழே விழுந்தனர்.
விழுந்த மாணவர்கள் சாலை ஓரத்தில் உருண்டதால் பின்னால் வரும் வாகனத்தில் சிக்காமல் தப்பினர். இருப்பினும் லேசான அடிபட்டது அவர்களுக்கு.
பேருந்தில் இருந்தவர்கள் சுதாரித்து ஓட்டுநர், நடத்துநரிடம் விஷயத்தை தெரிவித்து வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி சென்றுள்ளனர். பின்னால் வந்த வாகன ஓட்டிகளும் வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.
அனைவரும் இணைந்து காயம்பட்ட மாணவர்கள் இருவரையும் இரு சக்கர வாகனத்தில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இதில் ஒரு மாணவர் ஐடிஐ படிக்கும் மாணவர் முருகன் என்பது தெரியவந்துள்ளது.
இவர் செங்கோட்டையில் லேசான காயத்திற்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். மற்றொரு மாணவர் பற்றிய விவரங்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.