ஓணம் பண்டிகை: விமானக் கட்டணம் 10 மடங்கு அதிகரிப்பு?!..

Published:

images 88 - 2026

திருவோணம் பண்டிகையையொட்டி விமானங்களில் பயணச்சீட்டின் விலை 10 மடங்கு வரை அதிகரித்து விற்கப்படுவதாக கேரள எம்.பி. சிவதாசன் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

கேரளத்தில் ஓணம் பண்டிகை மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதற்காக வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் வசித்து வரும் கேரளாவை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து வருவோரின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது.
இந்நிலையில், கரோனா கட்டுப்பாடுகள் இல்லாமல், மிக பிரமாண்டமாக இந்தாண்டு ஓணம் பண்டிக்கை கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன்காரணமாக விமான பயணச்சீட்டின் கட்டணம் 10 மடங்கு உயர்த்தி விற்பனை செய்யப்படுவதாக கேரள எம்.பி. குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
“ஓணம் பண்டிக்கையை கொண்டாட அனைத்து கேரளத்தினரும் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். ஆனால், இந்த மகிழ்ச்சிகரமான நிகழ்வை விமான நிறுவனங்கள் பணம் சம்பாதிப்பதற்கான நிகழ்வாக மாற்றியுள்ளனர்.

குறிப்பிட்ட சில வழிதடங்களில் மட்டும் விமானக் கட்டணங்களை திடீரென உயர்த்தியுள்ளனர். இதனால், சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் மூலம் வீடு திரும்புவோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஓணம் முடிந்து கேரளத்திலிருந்து அதிகமானோர் கிளம்பவுள்ள நிலையில், திருவனந்தபுரத்திலிருந்து புறப்படும் விமானங்களின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

விமானங்களின் பயணச்சீட்டு கட்டணமானது 8 முதல் 10 மடங்கு வரை உயர்த்தி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. விமான நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பயணக் கட்டணப் பட்டியலை உடனடியாக மத்திய அரசு வெளியிட வேண்டும். இது பயணிகளின் உரிமை. இந்த பிரச்னையில் நீங்கள் உடனடியாக தலையிட்டு தீர்வுகாண வேண்டும்.” என்று குறிப்பிட்டிருந்தார்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img