காவியின் பலம் கறுப்பினால் மறைந்து விடக்கூடாது-தமிழிசை சௌந்தரராஜன்..

Published:

1777967 tamilisai - 2026

கன்னியாகுமரி தமிழகத்தில் இந்தியை திணிப்பதாக கூறி அரசியல் செய்கிறார்கள்- சமூகத்தின் அவலங்களை எடுத்துச்சொல்ல எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. தேசியகல்வி கொள்கையில் தாய்மொழி கல்வியை ஊக்கப்படுத்தச் சொல்கிறார்கள். இதைச் சொன்னால் ஆளுநர் அரசியல் பேசலாமா என்கிறார்கள் என்றார் நாகர்கோயில் அருகே நடந்த விழாவில் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்.

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலை இந்து தர்ம வித்யா பீடம் சார்பில் கொல்லம்விளையில் நடந்த சமயவகுப்பு மாணவர்களுக்கான வித்யாஜோதி பட்டமளிப்பு விழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார். வித்யாஜோதி பட்டத்தை வெள்ளிமலை ஆசிரம சுவாமி சைதன்யானந்தஜீ மஹராஜ் வழங்கினார். பட்டம் பெற்ற மாணவிகளுக்கு கேடயம் வழங்கி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

தமிழகத்தில் இந்து தர்மத்தைப்பற்றி பேசுவதும், ஆன்மீகத்தை பற்றி பேசுவதும் ஏதோ தவறான ஒரு நிகழ்வு போலவும், பேசக்கூடாத ஒன்றை பேசுவதுபோலவும் மாயத்தோற்றம் இருக்கிறது. இந்த மாயத்தோற்றம் நிச்சயமாக அகற்றப்பட வேண்டும். குமரியில் நம் பலத்தை காட்டிக்கொண்டிருக்கிறோம். இதே பலம் மற்ற இடங்களிலும் வரவேண்டும். ஆன்மீகம் தான் நம் அடிப்படை.

ஆனால், காவியின் பலம் கறுப்பினால் மறைந்து விடக்கூடாது. ஆளுநர் இப்படி பேசலாமா என ஒரு பெரிய கேள்வி கேட்பார்கள். ஆளுநராக இருந்தாலும் நான் தமிழகத்தின் மகள் என்பதை நினைவுபடுத்துகிறேன். எல்லோரின் தர்மங்களையும், நம்பிக்கைகளையும் மதிக்க வேண்டும். ஒருவரின் எழுச்சி மற்றவரின் வீழ்ச்சி அல்ல. எல்லோரின் நம்பிக்கையும் மதிக்கப்பட வேண்டும். ஆனால் பெரும்பான்மையினரின் நம்பிக்கை மட்டும் அவமதிக்கப்படும்போது நாம் எழுச்சிக்கொள்ள வேண்டும். நமது நாட்டின் பண்பாட்டை, பழக்கவழக்கங்களை சொல்லிக்கொடுப்பதில் என்ன பிரச்சினை இருக்கிறது. அவர்கள் கருத்தை ஏன் திணிக்க வேண்டும். நாம் எதாவது பேசினால் இவர்கள் எப்படி பேசலாம் என அம்புக் கணைகளை வீசுகிறார்கள். வேறு யார் பக்கமும் அந்த அம்பு எய்யப்படுவதில்லை.

நாம் நமது கலாச்சாரத்தை மீட்டெடுப்போம். நம் கலாச்சார அடையாளங்கள் மறுக்கப்படும்போது எதிர்த்து குரல் கொடுப்போம். பட்டமும், பட்டயங்களும் வாங்கிய மாணவிகளுக்கு பாராட்டுக்கள்”. இவ்வாறு அவர் பேசினார். தி.மு.க.வின் இந்தி திணிப்பு போராட்டம் பற்றி நிருபர் கேட்டதற்கு பதிலளித்து பேசிய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், “எங்குமே இந்தியை திணிக்கவில்லை. பாராளுமன்ற நிலைக்குழுவினர் ஒரு சிபாரிசு செய்திருக்கிறார்கள். அதில் எங்குமே மாநில மொழியை குறைத்து மதிப்பிடவேண்டும் என்றோ, மாநில மொழியை மீறி இந்தியை கொண்டு வர வேண்டும் என்றோ சொல்லவில்லை. இதை வைத்து மட்டும்தான் அரசியல் செய்யமுடியும் என்பதற்காக இதை மறுபடியும் கையில் எடுக்கிறார்கள்.

தமிழ் தமிழ் என நாம் சொல்கிறோம். இன்றைக்கு மத்திய பிரதேசத்தில் அவர்களின் மாநில மொழியான இந்தியில் மருத்துவக்கல்வி கொண்டு வந்திருக்கிறார்கள். நீங்கள் அரசியலுக்காக மட்டும்தான் பேசுகிறீர்கள். தமிழ் மீது அக்கறை இருந்தால் அதுபோல முயற்சி செய்து ஒரு தாய்மொழி மருத்துவக்கல்வியை இங்கு கொண்டுவந்திருக்கலாமே.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

தேசியகல்வி கொள்கையில் தாய்மொழி கல்வியை ஊக்கப்படுத்தச் சொல்கிறார்கள். இதைச் சொன்னால் ஆளுநர் அரசியல் பேசலாமா என்கிறார்கள். இது அரசியல் இல்லை. சமூகத்தின் அவலங்களை எடுத்துச்சொல்ல எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. பிரதமர் திருக்குறள் சொன்னால் திருக்குறள் மட்டும் சொன்னால் போதுமா என்கிறார்கள். இதற்கு முந்தைய ஆட்சியாளர்கள் எத்தனை திருக்குறள் சொன்னார்கள்.

உங்களுக்கு எவ்வளவு தாய்மொழிப் பற்று இருக்கிறதோ அதே தமிழ்ப்பற்று தமிழிசைக்கும் இருக்கிறது. நியாயப்படுத்தி பேசினால் இந்தி இசை என நீங்கள் பேசுவதை நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். நீங்கள் இத்தனை நாள் ஆட்சியில் ஒரு புத்தகம் கொண்டு வந்து தமிழ் மொழியில் மருத்துவக் கல்லூரி கொண்டுவர முடியாதா” என்றார்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img