ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பிரதமருக்கு எழுதும் கடிதங்களில் தமிழகத்தில் உரத்தட்டுப்பாடு கண்டிப்பாக இடம்பெறும். இதுபோன்றே பல முதல்வர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பார்கள்.
அழகிரி மத்திய உரத்துறை அமைச்சராக இருந்தபோது, தமிழகத்திற்கு மிகுந்த சிரமத்திற்கிடையே உரத்தை வழங்கியதை அப்போதைய பத்திரிகை செய்திகள் சிலாகித்து வந்தன!
உரத் தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் மறியலில் ஈடுபட்ட காலமெல்லாம் இருந்தது!
இதை வைத்து ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் போட்டி அரசியல் செய்தன! நானும், ஏன் இந்த நிலை என்று யோசித்ததுண்டு. உர உற்பத்தியை பெருக்கவோ, புதிய தொழிற்சாலைகளை நிறுவவோ முடியாதா என்று வியந்ததுண்டு!
ஆனால், தற்போது எந்த முதல்வரும் அப்படிப்பட்ட கோரிக்கையை வைத்து கடிதங்கள் எழுதுவதில்லை. விவசாயிகள் யாரும் போராடுவதில்லை. எல்லோருக்கும், தட்டுப்பாடின்றி உரம் கிடைக்கிறது!
விவசாயிகள் உரமையங்களில் முன்னிரவிலிருந்து காத்திருப்பதில்லை! இத்தனைக்கும், உர உற்பத்தி குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெறவில்லை. புதிய உரத் தொழிற்சாலைகளும் நிறுவப்படவில்லை! எப்படி நிகழ்ந்தது இந்த மாற்றம்?
பிரதமர் மோடி, அமெரிக்காவாழ் இந்தியர்கள் நடுவில் நேற்று ஆற்றிய உரையை கேட்கும்வரை எனக்கு இது புரியாமலேயே இருந்தது!
மோடி கூறியது இதுதான்: உரத்தொழிற்சாலையிலிருந்து உற்பத்தியாகி வரும் யூரியா, வேளாண் கூட்டுறவு மையங்களுக்கு செல்லாமல் வேறு தொழில்களுக்கு சென்று கொண்டிருந்தது. அதாவது, யூரியாவை மூலதனமாக கொண்ட தொழிற் சாலைகளுக்கு சென்றதால் நாட்டில் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டது. உரத் தொழிற் சாலைகள் மானியத்தையும் பெற்று, உரத்தையும் வழங்காமல் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. (அன்றைய ஆட்சியாளர்களுக்கு இதில் என்ன பங்கோ?)
இதை தடுக்க, யூரியாவில் வேப்பெண்ணெய் கலக்கும்படி உத்தரவிட்டார் பிரதமர். அதோடு, வேப்பெண்ணெய் கலந்த உரத்தை மட்டும் வாங்கும்படி விவசாயிகள் பணிக்கப்பட்டனர்!
(டி.வி.க்களில் இதுபற்றி விளம்பரங்கள் செய்யப்பட்டது அனைவருக்கும் நினைவிருக்கும்). ஏனெனில், வேப்பெண்ணெய் கலந்த யூரியாவை வேறு தொழில்களில் பயன்படுத்த முடியாது! விளைவு, தட்டுப்பாடற்ற யூரியா விநியோகம்!!
வேப்பெண்ணெய் கலப்பினால், உற்பத்தி சுமார் 7% வரை எட்டியது. வேப்பெண்ணெய் வியாபாரமும் பெருகியது. வேப்பெண்ணெய் ஒரு சிறந்த பூச்சுக்கொல்லி என்பது ஆண்டாண்டு காலமாக இந்த பூமி கண்டுவரும் உண்மை!! இந்த நடவடிக்கை மூலம், அரசுக்கு சுமார் 80000 கோடி ரூபாய் வீணாவது தடுக்கப்பட்டது!!
இந்த அரசின் நடவடிக்கைகளை கவனித்து வரும் என் போன்றோருக்கே பல விஷயங்கள் புரியாமல் இருக்கும்போது, பாமர மக்களுக்கு இதுபோன்ற நுண்ணிய விஷயங்கள் எங்கிருந்து விளங்கும்? இதை விளக்க பிரதமரின் உரை தேவைப்பட்டது, அதுவும் அமெரிக்காவிலிருந்து!
இந்த அரசின் மிகப்பெரிய பின்னடைவு, தங்கள் ஆட்சியைப் பற்றிய புரிந்துணர்வை அடித்தட்டு மக்களிடம் கொண்டு செல்லாமையே! அதனால், அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் சமூக அவலங்களை, ஆட்சியை எதிர்ப்பவர்கள் பெரிதாக சோடித்து, நாடே தத்தளிப்பது போல எளிதில் சித்திரிக்க முடிகிறது! ஆனால் இந்த செய்தி மக்கள் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்!
வேம்பு கலந்த யூரியா உரம் மண்வளத்தை பாதுகாக்கும்
மண் வளத்தைப் பாதுகாக்க வேம்பு கலந்த யூரியா பயன்படுத்தலாம் என்று வேளாண்மைத் துறை ஆலோசனை வழங்கியுள்ளது. இதுகுறித்து முன்னர் வேளாண்மைத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பயிர்களின் வளர்ச்சியில் தழைச்சத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. தழைச் சத்தானது பயிர்களுக்கு வளர்ச்சியையும் கூடுதல் மகசூலையும் அளிக்கிறது. பயிர்கள் மற்ற உரங்களைக் காட்டிலும் அதிகளவில் தழைச்சத்து உரங்களை எடுத்துக் கொள்கின்றன.
தழைச் சத்தினை பயிர்களுக்கு இயற்கை உரங்களை இடுவதன் மூலமும், உயிர் உரங்கள் மூலமும் மற்றும் ரசாயன உரங்கள் ஆகியவற்றின் மூலமாகவும் அளிக்கலாம். இவற்றில் ரசாயன உரங்களால் மட்டுமே பயிருக்குத் தேவையான தழைச் சத்தினை அதிகளவிலும், உடனடியாகவும் வழங்க இயலும். ரசாயன உரங்களில் யூரியா உரம் மூலம் 50 சதவீதம் தழைச்சத்து பயிருக்கு வழங்கப்படுகிறது.
பயிருக்குத் தேவையான தழைச் சத்தினை வேம்பு பூசாத யூரியா மூலம் அளிக்கும்போது பல்வேறு வழிகளில் ஆவியாகி விரயமாவதுடன், பயிருக்கு குறைந்த அளவே கிடைக்கிறது. மேலும், சுற்றுச் சூழலும் மாசுபடுகிறது. விவசாயிகளுக்கு உரச் செலவும் கூடுதலாகிறது.
யூரியா உரம் விரயமாவதைத் தடுக்க ஐந்து பங்கு யூரியாவை ஒரு பங்கு வேப்பம்புண்ணாக்கு கலந்து பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டது. இது எளிய முறை என்றாலும் விவசாயிகள் பல்வேறு நடைமுறை காரணங்களால் கடைப் பிடிப்பதில்லை.
இதனைக் கருத்தில் கொண்டு உரத் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் யூரியா உரத் தயாரிப்பில் 100 சதவீதம் வேம்பு பூசப்பட்ட யூரியாவினை உற்பத்தி செய்து விநியோகம் செய்ய மத்திய அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேம்பு பூசப்பட்ட யூரியா உபயோகிப்பதனால் பயிர்களுக்கு தேவைக்கேற்ப தழைச்சத்து கிடைக்கிறது. நிலத்தடி நீர் மாசுபடுவது குறைக்கப்படுகிறது.
வேம்பானது இயற்கை பூச்சிக் கொல்லியாக செயல்படுகிறது. விவசாயிகளுக்கு மானிய விலையில் கிடைக்கும் வேம்பு பூசப்பட்ட யூரியா, விவசாய உபயோகம் அல்லாமல் வேறு தொழிற்சாலை உபயோகம் அல்லது பால் பொருள்கள் உற்பத்திக்கு செல்வது தடுக்கப்படுகிறது. தற்போது விநியோகிக்கப்படும் யூரியா முழுவதும் வேம்பு பூசப் பட்டுள்ளதால் விவசாயிகள் தனியாக வேம்பு எண்ணெய் கலக்கத் தேவையில்லை.
எனவே, விவசாயிகள் வேம்பு பூசிய யூரியா உரங்களை மட்டுமே பயன்படுத்தி அதிக மகசூல் பெற்று மண் வளத்தினை பாதுகாக்கலாம்!





