கலைக்கு மதமில்லை..! ஆனால் கலைஞனுக்கு மதப் பாகுபாடு உண்டு! ஏ.ஆர்.ரகுமானின் தாயும் மகளும்!

Published:

AR Rahman Daughter Speech About her Father - 2026

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனைக் கொண்டாடும் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஹ்மானின் மகள் கதிஜா, ‘கடந்த 10 வருடங்களில் நீங்கள், எங்களுடன் செலவிடும் நேரம் குறைந்துள்ளதே தவிர, உங்களிடம் வேறு எந்த மாற்றமும் இல்லை’ என்று கூறினார். மேலும், ‘ஆஸ்கர் விருது உங்களிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. நீங்கள் எங்களுக்குத் தெரியாமல் நிறைய சமூக சேவை செய்கிறீர்கள். இது, உங்களிடம் நான் அதிகம் போற்றும் ஒரு குணம்’ என்றும் உணர்ச்சிப் பூர்வமாக பேசினார். 

இது சாதாரணமாக அல்லது உணர்ச்சி பூர்வமாக சொல்லும் விஷயம்தான். ஆனால், இந்தப் படத்தில் ஏ.ஆர்.ரகுமானின் மகள் வெளிப்படுத்திய வார்த்தைகளும் தோற்றமும் பலரது புருவங்களையும் உயர்த்தியுள்ளது. இதைப் போன்ற ஒரு தோற்றத்துடன் ஹிந்து ஆசாரத்தைப் பேணும் ஒருவரின் வீட்டுப் பெண் தங்களது பாரம்பரிய உடையிலோ, மொழியிலோ தன்னை வெளிப்படுத்தியிருந்தால்… இந்த சமூகமும் ஊடகங்களும் என்ன பாடு படுத்தியிருப்பார்களென்ற குரலை எழுப்புகின்றனர் சமூக வலைத்தளங்களில்! காட்சி ஊடகங்களால் ஒடுக்கப்பட்டவர்களின் குரலை ஒலிக்கச் செய்யும் சமூக ஊடகங்களில்!

எழுத்தாளர் ஹரன் பிரசன்னா தனது கருத்தாக இந்தப் படத்துக்கு முன்வைத்திருக்கும் கருத்தில்… “இந்தப் புகைப்படம்… ஆசாரவாதிகள் ஹிந்துக்களாக இருந்தால்தான் இந்த உலகம் விட்டுச் சாத்தும். வேற்று மதவாதிகளாக இருந்தால் மெல்லக் கடந்து போகும். இதில் ஏ.ஆர்.ரஹ்மானின் மதச் சுந்திரத்தையும் அவரது மகளின் தேர்வையும் நான் புரிந்துகொள்கிறேன், மதிக்கிறேன். நான் இதை ஏற்காவிட்டாலும், அவர்களது உரிமை என்ற வகையில் அதை ஒரு தரப்பாக ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இதையே ஹிந்துக்கள் செய்திருந்தால் இந்நேரம் அடிமைத்துவத்தின் அகராதியை வைத்துக்கொண்டு பெரும் அரசியலைச் செய்திருப்பார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் ரஹ்மான் என்பதால் தப்பித்தார்.” என்கிறார்.

ஒரு புறம் ஏ.ஆர்.ரகுமான் மகளின் ஆபிரஹாமிய மதச் சித்தாந்தங்களை வெளிப்படுத்தும் போக்கு ஒரு புறம் இருக்க, நெற்றியில் விபூதி குங்குமத்துடன் சக கவிஞர் ஒருவர் தன் மகனுடன் பணி செய்வதை அவரது தாயார் விரும்பவில்லை என்பதும், அதை விமர்சித்தார் என்பதும் கலைஞனுக்கு மதப் பாகுபாடு உண்டு என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ரசிகன் மதம் பார்த்து பாடலை ரசிக்கவில்லை, மதம் பார்த்து கலைஞனை ஏற்றுக் கொள்ளவில்லை! ஆனால், ஆபிரஹாமிய மதச் சிந்தனை உள்ளே புகுந்த ஒருவரால் இந்த நாட்டின் இயல்பான மதப் பெருந்தன்மையை வெளிக்காட்ட முடியவில்லை என்பதுதான் இந்தச் சம்பவங்கள் உணர்த்தும் செய்தி!

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

இதை கவிஞர் பிறைசூடன் தனது பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியிருக்கிறார். இது குறித்த பி.எஸ். நரேந்திரன் என்ற எழுத்தாளரின் பதிவு இது…

கவிஞர் பிறைசூடன் என்கிற திரைப்பட பாடலாசிரியரை பெரும்பாலான தமிழர்கள் அறிந்திருக்கமாட்டார்கள். அப்படியே அறிந்திருந்தாலும் ஃப்ராடுகளைப் போற்றிப் புகழுகிற, தலைமேல் தூக்கி வைத்து ஆடுகிற தமிழர்கள் அவருக்குரிய மரியாதையை இதுவரை அளிக்கவில்லை.

இளையராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன் , ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற பிரபல இசையமைப்பாளர்கள் பணியாற்றிய, பல ஹிட்டான திரைப்படப் பாடல்களை எழுதியவர் கவிஞர் பிறைசூடன். உங்களுக்கு மிகவும் பிடித்ததொரு பாடலை அவர் எழுதியிருக்க வாய்ப்பிருக்கிறது என்றாலும் மிக ஆச்சரியமான வகையில் அதை எழுதியவர் பிறைசூடன் என்பதனை நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள் என்று உறுதியாகச் சொல்கிறேன்.

கண்ணதாசன், வாலி போன்றவர்களின் காலம் வேறு, இன்றைய காலம் வேறு. கவிதைக்கும், கவிஞர்களுக்கும் உண்மையான மதிப்பிருந்த காலம் அவர்களுடையது. இன்றைக்கு தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத, சுய தம்பட்டம் அடித்துக் கொள்ளாதவர்களை தமிழர்கள் பொருட்படுத்துவதில்லை. துரதிருஷ்டவசமாக பிறைசூடன் தன்னை முன்னிருத்தி டமாரமடித்துக் கொள்ளாததால் அவரை அதிகம்பேர் தெரிந்து கொள்ளவில்லை என்றாலும் கவிஞருக்கு இழப்பில்லை.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

திரவிடப் புண்ணாக்குச் சிந்தனை கொண்ட குடும்பப் பின்னனியிலிருந்து, தனது கடின உழைப்பால் திரைப்படப் பாடலாசிரியாரக முன்னேறிய கவிஞர் நெற்றியில் நீறு துலங்காமல் வெளியில் செல்லாத ஆன்மீகர். வாழ்க்கை கடினமாயிருந்த ஆரம்ப காலத்தில் ஒரு பிரபல கவிஞரின் வீட்டிற்குப் பாட்டெழுதச் செல்கிறார். அப்போது இளவதுடையவராக இருந்த அந்த இசையமைப்பாளர் ஒரே திரைப்படத்தின் மூலம் உச்சத்திற்குச் சென்றிருந்தார். திறமையானவர் என்பதில் சந்தேகமில்லை.

குடும்பச் சூழ்நிலையாலோ அல்லது வேறு நிர்பந்தங்களாலோ அந்த இசையமைப்பாளரின் குடும்பம் வேறொரு மதத்திற்கு மதம் மாறியிருந்தது. அதனைக் குறித்து எனக்குப் பிரச்சினையில்லை. அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு. ஆனால் அந்த எண்ணம் எல்லார்க்கும் இருப்பதில்லை என்பதுதான் பிரச்சினை.

ஏதோ ஒரு பாடல் எழுதுவதற்கு அவர் வீட்டிற்கு வழக்கம் போல நெற்றியில் நீறு துலங்க சிவப்பழமாக பாடலெழுதச் செல்லும் கவிஞரை நோக்கி இசையமைப்பாளரின் தாய், “இந்த மாதிரி விபூதி குங்குமம் வெச்சிக்கிட்டு இங்க வரக்கூடாது” எனச் சொல்கிறார். இதனைக் கேட்டுக் கொண்டே அந்த இளம் இசையமைப்பாளர் ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடிக் கொண்டிருந்தார் என்கிறார் பிறைசூடன் (ஆதாரத்தோடுதான் சொல்கிறேன்).

இதனைக் கேட்கையில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதனையே இளையராஜாவோ அல்லது எம்.எஸ்.வி.யோ சொல்லியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன். சிரிப்புதான் வந்தது. இசை என்கிற மகா சமுத்திரத்தில் நீ இப்படி இருந்தால்தான் உனக்குப் பாட்டெழுத சந்தர்ப்பம் கொடுப்பேன் என்பது கீழ்மையின் உச்சகட்டம். ஆனால் அப்படித்தான் உலகம் இருந்திருக்கிறது. இருந்து கொண்டிருக்கிறது.

அப்படியான சிந்தனை கற்பனைகளைக் குறுக்கிவிடும். தனக்கென ஒரு வட்டம் வரைந்து அதிலேயே சுற்றிச் சுழல வைத்துவிடும். விடும் என்ன விடும்? அப்படித்தானே ஆகிப்போனது? அந்த ‘பிரபல’ இசையமைப்பாளரின் பாடல்களை ஒருதரம் கேட்டபிறகு மறுதரம் கேட்க யோசிக்க வேண்டியிருக்கிறது. இல்லையா? கட்டுப்பாடு களற்ற காட்டாறுகளாக வாழ்ந்த, வாழும் எம்.எஸ்.வி.யும், இளையராஜாவும் இன்றைக்கல்ல என்றைக்கும் இனித்துக் கொண்டிருப்பார்கள்.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

கலைஞர்கள் ஒருபோதும் தங்களை, ஜாதி, மத, இன உணர்வுகளுக்குள் குறுக்கிக் கொள்ளக்கூடாது. அப்படிக் குறுக்கிக் கொள்பவன் கலைஞனே அல்ல.

மேற்கண்ட இந்த விஷயங்களை எழுதியவர் Narenthiran PS  – பி.எஸ். நரேந்திரன்.

பிறைசூடனின் இந்த பேட்டியில் குறிப்பிடப் படுபவர் ஏ.ஆர்.ரஹ்மானின் தாய். தமிழகத்தின் வினோதமான சமூகச் சூழல் இதிலிருந்து தெரியும். நாத்திகரான வைரமுத்துவுடன் மகன் வேலை செய்வதில் அவருக்குப் பிரச்சனை இல்லை; ஆனால் ஹிந்து ஆன்மீகவாதியான பிறைசூடனுடன் மகன் வேலை செய்யும்போது அவரின் விபூதி குங்குமம் உறுத்துகிறது. இதுதான் தமிழகத்தில் நாத்திகர்களுக்கும், ஆப்ரஹாமிய மதத்தவர்க்கும் இருக்கும் வினோதமான கூட்டணி.

மேலும் இளையராஜா சாதாரணமாகச் சொல்லும் விஷயங்களைக் கூட திரித்து அவரைத் தவறானவராகக் காட்டும் தொலைக்காட்சி ஊடகங்கள் இந்த பேட்டி பற்றிப் பேசவே இல்லை. இதிலிருந்தே தமிழகத் தொலைக்காட்சி ஊடகங்கள் ஹிந்துக்களுக்கு எதிரானவை என்பதும் விளங்குகிறது.

மேற்கண்ட வீடியோவில், முழு பேட்டியும் சுவாரஸ்யமாக இருப்பதுதான்! இதில், ஏ.ஆர்.ரஹ்மான் பற்றிய பகுதி முப்பது நிமிடங்களுக்குப் பிறகு வருகிறது. அதில் அவரது தாயின் வார்த்தைகளையும் பிறைசூடன் வெளிப்படுத்துகிறார்… என்கிறார் ஜகன்னாத் ஸ்ரீனிவாசன் (Jagannath Srinivasan)

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img