பத்து ரூபாய் பணத்தை கீழே போட்டு கவனம் திருப்பும் நூதன கொள்ளையர்கள்!

Published:

kolkatta meeting mamta banarjee - 2026

வங்கியில் பணம் எடுக்கப் போகிறவர்களிடம் கொள்ளையடிக்கிற கும்பலின் வழிமுறை என்ன தெரியுமோ?

பணப்பை வைத்திருப்பவரிடம் ஒரு திருடன்,’சார், உங்க பத்து ரூபாய் கீழே கிடக்கிறது,” என்று சொல்லுவான். உடனே, “ஐயோ, என் பத்து ரூபாயா?” என்று குனிந்து எடுக்க எத்தனிக்கிற சமயத்தில் இன்னொரு திருடன் பணப்பையை கபளீகரம் செய்துவிட்டு அங்கிருந்து ஓடிவிடுவான். காலம் காலமாக கடைபிடிக்கப்படுவது இந்த நடைமுறைதான்; எல்லா வங்கிகளிலும் கார்ட்டூன் போல விளக்கச்சித்திரம் வரைந்து தொங்க விட்டிருக்கிறார்கள். இருந்தாலும், இன்றளவிலும் பத்து ரூபாய்க்காகக் குனிந்து பணப்பையைத் தொலைக்கிறவர்கள் தொடர்ந்து தொலைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

பாஜக ஆட்சி குறித்து விமர்சிக்கிறவர்களைக் கூர்ந்து கவனித்தால், அதில் பல சில்லறை விமர்சகர்களும் அவர்களது ஒத்துழைப்போடு நம்மைச் சூறையாடக் காத்திருக்கிற ஆபத்தான தேசவிரோதிகளும் இருப்பதைக் கவனிக்க முடியும்.

ஒரு டைரக்டர் ‘இனிமேல் காவி கட்டிக்கொண்டுதான் சுற்ற வேண்டும்,’ என்று சொல்லுகிறார். இன்னும் சில நடிகர்கள் ‘மோடி பிரதமராவதை ஏற்க முடியாது,’ என்று சொல்லுவார்கள். சில அறிவுஜீவிகள் மக்களின் ‘அறியாமை’யை ஏகடியம் செய்வார்கள்.

இவர்கள் எல்லாம் யார் தெரியுமோ?

ALSO READ:  கல்வி அமைச்சரின் ராஜினாமா - மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

வங்கியில் பத்து ரூபாய் கீழே கிடப்பதாகச் சொல்லி உங்களது கவனத்தைத் திருப்பினானே ஒரு திருடன், அவனுக்கு ஒப்பானவர்கள்; சில்லறை விமர்சகர்கள்.
உண்மையில், உங்களது பணப்பையைத் திருடப்போகிற திருடர்கள் உங்களுக்கு மிக அருகாமையில், உங்கள் கண்களுக்கும் கைகளுக்கும் தட்டுப்படாமல் பறித்துக்கொண்டு போகிற சாதுரியத்தோடு நின்று கொண்டிருக்கிறார்கள். நீங்கள் கவனிக்காமல் இருப்பது அவனது வெற்றி; நீங்கள் குனிந்து பத்து ரூபாயை எடுப்பீர்கள் என்ற பலவீனம் அவனது மூலதனம். உங்களால் அவனைப் பிடிக்க முடியாது என்ற இயலாமைதான் அவனது உத்திக்கான வித்து; நம்பிக்கை.

விளம்பரத்துக்காகவோ வயிற்றெரிச்சல் காரணமாகவோ அல்லது காழ்ப்புணர்ச்சி காரணமாகவோ, பெரும்பாலான மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்துகிற சினிமாக்காரர்கள், நமது கவனத்தை எளிதில் திசை திருப்புகிறார்கள். நாமும் உடனே உணர்ச்சிவசப்பட்டு, ‘இனிமேல் உன் படம் பார்க்க மாட்டேன் போ,’ என்று அந்த நிமிடத்தில் ஒரு பதிவு போட்டுவிட்டு அவனது குலம், கோத்திரம் ஆகியவற்றைத் தோண்டியெடுத்து நாலைந்து வசவுக்குப் பிறகு அடுத்த வேலையைக் கவனிக்கப் போகிறோம். ஒரு விதத்தில், இவர்கள் எதை எதிர்பார்க்கிறார்களோ அதை நாமே அவர்கள் திருப்திக்குச் செய்து முடித்து விடுகிறோம். அடுத்து வரப்போகிற பெரிய தாக்குதல் குறித்து பெரும்பாலும் நாம் உஷாராக இருப்பதில்லை; காரணம், நமது கவனம் திசைதிருப்பப் பட்டுவிட்டது; கொஞ்சம் அசந்து போய் விடுகிறோம்.

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

இப்போது என்ன நடக்கிறது?

மே.வங்கத்தில் ஒரு பாஜக தொண்டர் ஏகே-47 துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். ஒரு அரசியல் கட்சியின் தலைவர், மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆயுதம் ஏந்தவும் தயங்க மாட்டோம் என்று அறிவித்திருக்கிறார். 23ம் தேதிக்குப் பிறகு, நாட்டில் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்களை அரங்கேற்ற எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதாகச் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி, மக்களின் தீர்ப்பைத் தடுத்து நிறுத்துவதற்கான ஆயத்தங்களும் செவ்வனே நடந்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன. இத்தனை ஊகங்கள், ஹேஷ்யங்களுக்கு அப்பால், யாரும் எதிர்பாராத ஒரு பேராபத்துக்கான வரைபடம் எங்கேயோ தயாராகிக் கொண்டிருக்கலாம்.

இவர்கள்தான் உண்மையில் உங்களது பொக்கிஷத்தைத் திருடிக்கொண்டு ஓடப்போகிற பெரிய திருடர்கள். நாம் கவனம் செலுத்த வேண்டியது இவர்கள்மீது தான். நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது இந்த அபாயகரமான தேசவிரோத கூட்டத்திடமிருந்துதான். நமது கவனம் சிதறாமல் இவர்கள்மீது வைத்த கண்களை இம்மியளவும் அகற்றாதிருப்போமாக!

கூத்தாடிகள் கூத்தாடட்டும்! ’சீ போடா,’ என்று உதறிவிட்டு நாம் அரசியல் களத்திலிருந்து ஏவுவதற்குத் தயாராக இருக்கிற தாக்குதல்களுக்குத் தயாராகி நிற்போம். இந்த சினிமாக்கூட்டம் என்ற சாக்கடையில் கல்லெறிந்து நமது சட்டைகளை அசிங்கப்படுத்திக் கொள்ள வேண்டாம். அரசியல் களத்திலிருந்து நமது கண்கள் அகலாதிருக்கக் கடவது. அதுதான் அபாயத்தின் உற்பத்திசாலை!

ALSO READ:  இடதுசாரிகளின் இரட்டை வேடம்: தியானமென் சதுக்கமும் ஜன்தர்மந்தரும்!

நம்மை ஏமாற்றி முட்டாளாக்குவதற்காக, யாரோ நம் காலடியில் போட்டிருக்கிற பத்து ரூபாய்க்காக நாம் குனியாதிருப்போம். நமது முதுகில் மூச்சு படுமளவுக்கு அருகில் பெருந்திருடர்கள் ஆயுதங்களுடன் நின்றிருக்கிறார்கள். ஆகவே நமது பொக்கிஷம் பாதுகாப்பாகும் வரைக்கும் கவனமாக இருப்பதே நமக்கும் நாட்டுக்கும் நல்லது.

நம்பிக்கையுடன் இருப்போம்; அதே சமயம் கவனம் சிதறாமல் இருப்போம்.

Related articles

Recent articles

spot_img