உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருச்சியில் நூதன பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர் ஒரு தம்பதியினர்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரம் வளர்த்து மனித நலம் காக்க அழைப்பிதழ் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் திருச்சி யோகா ஆசிரியர் விஜய குமார், சித்ரா விஜயகுமார் தம்பதியினர்.
மரம் வளர்ப்போம் மனித நலன் காப்போம் தலைப்பில் அழைப்பிதழ் அச்சிட்டு பொது மக்களிடம் வழங்கி வருகின்றார்கள். அழைப்பிதழில் தமிழ்நாட்டில் 17.59 சதவீத பரப்பளவு அதாவது 22,877 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு தான் வனப் பகுதியாக உள்ளது.
ஒரு நாடு வளமான பகுதியாக இருக்க வேண்டுமென்றால் 33.3 சதவீதம் அடர்த்தியான வனங்களாக இருக்க வேண்டும். விளை நிலங்கள் விற்கப்பட்டு காங்கிரீட் கட்டிடங்களாக மாறி வருகின்றன.
காட்டு வளமும் மளமளவென மாய்ந்து வருகின்றன. மர அழிப்பால் நிழற்பாங்கு குறைதல், மண் அரிப்பு ஏற்படுதல், வெள்ளப் பெருக்கு, வெப்பமூட்டம் அதிகரித்தல், மழை பொழிவு குறைதல், மண்ணில் நீர் தக்கவைப்பு குறைதலுடன் வறட்சி ஏற்படுகிறது.
அது மட்டுமல்ல மரங்களை சார்ந்து வாழும் புழு, பூச்சி, பறவைகள், விலங்குகள் இன்று இடம் பெயர்ந்தும், காணாமலும் போய்விடுகின்றன. ஒருவர் ஒரு மரம் வளர்த்தால் மனித சமூகம் வளரும். சமுதாயம் வளரும். வரும் சந்ததியினருக்கு பசுமையான சூழலை கொடுக்கலாம்.
நாம் ஒரு நிமிடத்திற்கு 15 முதல் 18 முறை சுவாசிக்கிறோம். ஒருமுறைக்கு 0.5 லி காற்றை உள் சுவாசிக்கிறோம். ஒவ்வொரு நாளும் 22,000 முறை சுவாசித்து 16 கி.கி. ஆக்சிஜனை சுவாசித்து உயிர்வாழ்கிறோம். மனித சமுதாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கு சேவை செய்யும் மனப்பான்மையுடன் நமது தேவைக்காக
மரம் நட்டு வளர்ப்போர் என்கிற வரணும்
சுற்றுச்சூழல் மேம்பட, மாசுபாட்டினை குறைத்திட, பறவையினங்களுக்கு புகலிடம் அளித்திட, மண்ணில் ஈரப்பதத்தையும், வளத்தையும் தக்க வைத்திட, மண் அரிப்பைத் தடுத்திட, மழைப்பொழிவு ஏற்பட்டிட காடு வளம் வேண்டி
மரம் வேண்டும் என்கிற வரனும்
இணைந்து பசுமை தமிழகமாக்க உள்ளார்கள். மரம் தானம் வழங்கி நட்டு நாட்டின் நலன் காக்கும் நல்லோர்களும், அறிஞர்களும், பொதுமக்களும் , மகளிர்களும், இளைஞர்களும், திருநங்கையர்களும், கல்லூரி தோழர்களும், தோழியர்களும் மற்றும் சுற்றமும் நட்பும் சூழ உறுதி ஏற்போம் என
அழைப்பிதழ் அச்சிட்டு
தங்கள் அன்புள்ள
வழக்கறிஞர்
சித்ரா விஜயகுமார்
அவ்வண்ணமே கோரும்
விஜயகுமார்
திருச்சி
என அழைப்பிதழ் வழங்கி வருகிறார்கள்!