உங்கள் பள்ளிக்கூடத்தில் நடந்த நகைச்சுவை சம்பவத்தைச் சொல்லுங்களேன்?
(பொறுத்தது போதும் மனோகரா… பொங்கி எழு’ ரேஞ்சில் கபாலியின் துவம்ஸத்தை என் பாட்டியிடம் புகார் செய்தேன்)_
கிரேசி மோகன் சொல்கிறார்.
நான் பி.எஸ் பள்ளியில் எட்டாவது படிக்கும்போது என் வகுப்பில் கபாலி என்றொரு தாதா (எட்டாவதை எட்டாவது தடவையாக படித்துக் கொண்டிருக்கும் தாத்தா) இருந்தான். சிக்ஸ்-பேக், சிகரேட்-பேக் சகிதமாக ஆறடிக்கு ஓங்கி உலகளந்த அதமன் அவன். ‘பிற்காலத்தில் நீ என்னவாக ஆசைப்படுகிறாய்?’ என்று யாராவது பெருசு கேட்டால் நான் ‘கபாலியாகவே விரும்புகிறேன்’என்று கூறும் அளவுக்கு அவன் ஹீரோ.
அவன் சிக்ஸர் அடித்த டென்னிஸ் பந்துகள் புவி ஈர்ப்புக்கு சவாலாக இன்னமும் ஆகாசத்திலேயே உள்ளன. அந்தக் காலத்திலேயே பள்ளிக்கு ‘ஜாவா’ மோட்டார் பைக்கில் வந்து, ரஜினி ஸ்டைலில் வாசலில் இறங்கிக் கொள்வான். அந்த ‘ஜாவா’ கபாலிக்கு பயந்து… தானாகவே சென்று ஸ்டாண்ட் போட்டுக் கொண்டு சமர்த்தாக பார்க்கிங் செய்துகொள்ளும்.
கபாலிக்கு என் ஜியாமெட்ரி பாக்ஸில் ஒன்றரை கண். ‘தர மாட்டேன்’ என்று நான் சொல்ல, கபாலி என் வலது கையைத் துணி பிழிவது போல பின்பக்கம் திருப்பினான். நான் வலி தாங்காமல் கழுத்தை நிமிர்த்தி சூரியனைப் பார்த்தேன். பிஸியோதெரபி மாதிரி இந்த ‘பிழியோதெரபி’ எனக்கு தினமும் நடந்தது.
‘பொறுத்தது போதும் மனோகரா… பொங்கி எழு’ ரேஞ்சில் கபாலியின் துவம்ஸத்தை என் பாட்டியிடம் புகார் செய்தேன். மறுநாள் பாட்டி
கிளாஸ் ரூமுக்குள் வந்து தமிழ் வாத்தியாரிடம் கபாலியின் அட்டூழியத்தை அம்பலமாக்கிவிட்டாள். தமிழ் வாத்தியார் ‘இரணியன் வதம்’ நாடகத்தில் நரசிம்மராக மேக்கப் போடாமல் நடிக்கலாம். அப்படி ஆஜானுபாகுவாக இருப்பார் அந்த அழகிய சிங்கர். பரீட்சையில் பிட் அடித்தால் ‘பிட்டுக்கு மண் சுமக்க வைத்து பிரம்படி கொடுப்பார்’. கபாலியை இரு தொடைகளில் குப்புறக் கிடத்தி என் பாட்டிக்குத் திருப்தியாக கோட்டை கொத்தள அறை அறைந்தார்.
இத்தனை அடியிலும் கபாலி சொட்டு கண்ணீர்விடாமல் ‘தென் பாண்டி சீமையிலே… யாரடித்தாரோ யாரடித்தாரோ’ என்று என்னையே உற்றுப் பார்த்துக் கறுவிக் கொண்டிருந்தான்.
மறுநாள் பள்ளிக்குச் சென்றால் எங்கே கபாலியால் ‘சிசுபால வதம்’ஆவேனோ என அஞ்சி, தினமும் பள்ளிக்குச் செல்வதாகக் கிளம்பிப் போய் சாந்தோம் பீச்சில் சாயங்காலம் பள்ளி விடும்வரை ‘கல்யாணப் பரிசு’ தங்கவேலு ஆபீஸ் போகிறேன் என்று பூங்காவுக்குப் போய்விட்டு வருவது போல, ஆறு மாதங்கள் போய்க் கொண்டிருந்தேன். என் பாட்டி கூட ‘‘என்னடாது… உன் ஷூவுல இவ்வளவு மண்ணு?’ என்று கேட்பாள்.
‘‘பையனை கபாலிக்கு பயந்து ஸ்கூல் மாத்திடேளா பாட்டி?’’ என்று தமிழ் வாத்தியார் கேட்க, மந்தைவெளி மார்க்கெட்டில் என் குட்டு அம்பலமானது.
சமீபத்தில் ஒரு சினிமா கதை விவாதத்துக்காக சாந்தோம் பீச்சுக்குச் சென்றபோது, அங்கே என் கையை முறுக்கிய கபாலி ‘கை முறுக்கு’ விற்றுக் கொண்டிருப்பதை பார்த்தேன். நெற்றி நிறைய விபூதியோடு கபாலீஸ்வரராக சாந்தமாகக் கபாலி காட்சியளித்தான்



