நைஜீரியா நாட்டில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஒருபுறம் தீராப்பகையும் மோதல்களும் அதிகரித்து வருகிறது.
இதுதவிர, முஸ்லிம் மக்களுக்குள்ளும் ஷியா-சன்னி பிரிவினரிடையே உட்பகையும் மோதல்களும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டில் நடைபெற்ற ஒரு பேரணியின்போது கைது செய்யப்பட்ட ஷியா தலைவர் இப்ராகிம் ஜக்ஜக்கி என்பவரை சிறையில் அடைத்தது.
சிறையில் அடைக்கப்பட்ட இபராகீம்ஜக்ஜக்கியை விடுதலை செய்யக்கோரி அந்நாட்டின் பல பகுதிகளில் ஷியா பிரிவினர் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
சிறையில் அடைக்கப்பட்டு்ள்ள நைஜீரியா இஸ்லாமிய இயக்க தலைவா் இப்ராகிம் ஜக்ஜக்கிக்கு தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவ காரணங்களுக்காக ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என கடுனா மாநில நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.
இவரது விடுதலையை முன்வைத்து அபுஜா நகரில் நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது.
இந்நிலையில், வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த நைஜீரியா இஸ்லாமிய இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்து தடை விதித்து அதிபர் முகமது புகாரி இன்று உத்தரவிட்டுள்ளார்.
‘நைஜீரியா இஸ்லாமிய இயக்கத்தை தற்போது வழிநடத்துபவர்கள் வன்முறை பாதையில் அதிகமான விருப்பம் கொண்டவர்களாக இருப்பதால் நாட்டில் அமைதி மற்றும் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட இந்த தடையை விதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இந்த தடை ஷியா பிரிவு முஸ்லிம் மக்கள் மீதான தடையல்ல. நீதிமன்றத்தின் கருத்தை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அதிபர் மாளிகை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.