இன்று புரட்டாசி மஹாளய அமாவாசை திதியை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள புனித நீர்நிலைகளில் மக்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து முன்னோரை வழிபட்டனர்.
தமிழகத்தின் முக்கியத் தலங்களான ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், காவிரி படித்துறை, திருச்செந்தூர் கடற்கரை, நெல்லை தாமிரபரணியின் முதல் தீர்த்தக் கட்டமான பாபநாசம், திருக்குற்றாலம் உள்ளிட்ட புனித நீர்நிலைகளில் இன்று அதிகாலை முதலே ஏராளமான மக்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
இன்று புரட்டாசி அமாவாசை நாளில், நவராத்திரி திருவிழாவுக்கான தொடக்கம். நாளை முதல் நவராத்திரி திருவிழாவின் முதல் நாள் தொடங்குகிறது. இதையொட்டி, வழிபாட்டுத் தலங்கள் திருவிழாக்கோலம் பூண்டுள்ளன.
மகாளய அமாவாசை நாளான இன்று நள்ளிரவு முதல் நவராத்திரி தொடங்குகிறது. துர்கா பூஜை அக்டோபர் 3ஆம் தேதியும், சரஸ்வதி பூஜை 7ஆம் தேதியும், விஜயதசமி 8ஆம் தேதியும் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விழாவின் தொடக்கத்துக்கு முன்னர் இன்றைய மகாளய அமாவாசை தினத்தில் முன்னோர் வழிபாடு இந்து மதத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது.