spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்அறப்பளீசுர சதகம்: உயர் பிறப்பு அரிது!

அறப்பளீசுர சதகம்: உயர் பிறப்பு அரிது!

- Advertisement -

அறப்பளீசுர சதகம் என்பது சதுரகிரியென்னும் திருப்பதியில் உள்ள
அறப்பள்ளி என்னுந் திருக்கோயிலில் எழுந்தருளிய சிவபெருமானை
வாழ்த்தும் முறையில் உலகியல்பற்றிக் கூறும் நூறு செய்யுட்களையுடைய சிறு
நூல்.

அறப்பள்ளி + ஈசுரன் : அறப்பளீசுரன். அறப்பள்ளியில் எழுந்தருளிய
ஈசுரன் : ஏழாம் வேற்றுமைத்தொகை. அறப்பளீசுரன் + சதகம் :
(அறப்பளீசுரனது சதகம்) : ஆறாம் வேற்றுமைத்தொகை. ஆகவே, மூன்று
சொற்களும் இரண்டு சந்திகளுங் கொண்ட தொடர் அறப்பளீசுர சதகம்.

அறப்பள்ளி

இது கொல்லிமலைச் சார்பிலுள்ள சதுரகிரியில் உள்ள திருக்கோயில்.

சதுரகிரிக்கே அறப்பள்ளியெனப் பெயருண்டென்றும் கூறுகின்றனர்.

சதகம்

“விளையும் ஒருபொருள் மேல்ஒரு நூறு
தழைய வுரைத்தல் சதகம் என்ப.” – இலக்கண விளக்கம்.

ஒரு பொருளென்பது அகப்பொருள் புறப்பொருள்களில் ஒன்றைக் குறிக்கும். இந்நூல் புறப்பொருளைப் பற்றியது.

புறப்பொருளாவது மக்களுடைய வீரம், கொடை, ஒழுக்கம் முதலியவற்றைக் குறிக்கும்.

சதம் – நூறு; சதகம் – நூறு கொண்டது, (1 : பிரத்தியயம்).

நூலாசிரியர்

இந்நூலின் இறுதிச் செய்யுளில், ‘அம்பலவாண கவிராயனாகும்’

எனத் தம்மைக் குறிக்கிறார். இவர் சோழ நாட்டில் தில்லையாடி என்னும்
ஊரில் வேளாளர் குலத்திற் சுமார் முந்நூறு ஆண்டுகளுக்குமுன் பிறந்து,
சீகாழியில் தங்கியிருந்த – இராம நாடகம் பாடிய – சிறப்புப்பெற்ற
அருணாசலக் கவிராயரின் மூத்த புதல்வர்.

இந்நூலின் முடிவுதோறும்,

‘அருமை மதவேள், அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் அறப்பளீ சுரதே வனே’

எனவும்,

முதற் செய்யுளில், ‘மோழைபூ பதிபெற்ற அதிபன் எமதருமை மதவேள்’ எனவும்,

3ஆவது செய்யுளில்,

‘நீதிசேர் அரசன் எமதருமை மதவேள்’
எனவும்,

7ஆவது செய்யுளில்,
‘கங்கா குலத்தலைவன் மோழைதரும் அழகன் எமதருமை மதவேள்’

எனவும்,

10 ஆவது செய்யுளில்,

‘கற்பதரு வாகுமெம தருமை மதவேள்’
எனவும்,

47 ஆவது செய்யுளில்,

‘அவனிபுக ழருமை மதவேள்’ எனவும்,

73 ஆவது செய்யுளில்,

‘ஆழிபுடை சூழுலகில் வேளாளர் குலதிலகன் ஆகும் எமதருமை மதவேள்’ எனவும்,

குறிப்பிட்டிருப்பதால், இந்நூலாசிரியரை ஆதரித்தவர் வேளாளர் குலத்தைச்
சார்ந்த மோழை பூபதி யென்பவரின் புதல்வர் மதவேள் எனப்படுபவரென்றும்
அவர் சிறந்தவர் என்றும் கங்கை குலத்தவரென்றும் அறியலாம்.

இவர் (மதவேள்) கொல்லிமலையிலுள்ள குண்டுணி நாட்டுத்தலைவராகிய கருமக் கவுண்டர் என்றும், இவர் தந்தையார் மோழைக்
கவுண்டர் என்றும் சில அறிஞர்கள் கூறுகின்றனர்.

காப்பு
நேரிசை வெண்பா

உம்பர்கோன் எம்பெருமான் ஓங்கறப்ப ளீசுரன்மேற்
பைம்பொருள்சே ருஞ்சதகம் பாடவே – அம்புவியோர்
ஆக்கும் துதிக்கையான் அன்புடையார்க் கின்பருளிக்
காக்கும் துதிக்கையான் காப்பு.

(இதன்பொருள்) – வானவர் தலைவனும் எம் இறைவனுமாக உயர்ந்த
அறப்பள்ளி யென்னுந் தலத்தில் எழுந்தருளிய இறைவனைக் குறித்து, புதிய பொருள் அமைந்த சதகத்தைப்
பாடுவதற்கு, உலகத்தவர் செய்யும்
வாழ்த்துக்களை உடையவனும், அன்புடையவர்களுக்கு இன்பத்தையீந்து காப்பாற்றும்
தும்பிக்கையனும் (ஆகிய) மூத்த பிள்ளையார், காவல்.

1. உயர் பிறப்பு

கடலுலகில் வாழும்உயிர் எழுபிறப் பினுள்மிக்க
காட்சிபெறு நரசன் மமாய்க்
கருதப் பிறத்தலரி ததினும்உயர் சாதியிற்
கற்புவழி வருதல் அரிது;
வடிவமுடன் அவயவம் குறையாது பிழையாது
வருதலது தனினும் அரிது;
வந்தாலும் இது புண்யம் இதுபாவம் என்றெண்ணி
மாசில்வழி நிற்றல் அரிது;
நெடியதன வானாதல் அரிததின் இரக்கம்உள
நெஞ்சினோன் ஆதல் அரிது;
நேசமுடன் உன்பதத் தன்பனாய் வருதல்இந்
நீள்நிலத் ததினும் அரிதாம்;
அடியவர்க் கமுதமே! மோழைபூ பதிபெற்ற
அதிபன்எம தருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

விளக்கம்: அடியவர்களின் துன்பத்தை
நீக்குபவனே!’ மோழை எனப்படும் தலைவன் ஈன்ற தலைவன், எம் அரிய
மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு – எப்போதும் உள்ளத்தில்
வழிபடுகின்ற, சதுர கிரியில்
எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!’

கடலாற் சூழப்பட்ட நிலத்தில் வாழ்கின்ற எழுவகையாகத்
தோன்றிய உயிர்களுள்; மிகுந்த அறிவையுடைய மக்கட்பிறப்பாய் நினைக்குமாறு பிறப்பது
அரிது, அப்பிறப்பினுள்ளும் உயர்குண
முடைய இனத்திலே கற்பொழுக்கமுடைய மரபிலே தோன்றுதல் அரிது,

அதுதனினும் அவ்வாறு பிறப்பவர்களுள்ளும் அழகுடன் உறுப்புக் குறையாமலும்
பிழை இல்லாமலும் பிறப்பது அரிது, அவ்வாறு பிறப்பினும் இது
நன்று இது தீது என நினைத்துக் குற்றமில்லாத நெறியில் நிற்றல் அரிது, அதனினும் பெரிய செல்வனாவது
அரிது, அதனினும்
அருட்பண்புடைய உளத்தோன் ஆவது அரிது, அதனினும்
உன் திருவடிகளிலே அன்பு தவழும் அடியவனாக வருதல் இப் பேருலகிலே அரிதும் அருமையுமாகும்.

தங்களுக்கு உதவிய வள்ளல்களைப் பூபதியென்று புகழ்தல் அக்காலப் புலவர் வழக்கம்.

(கருத்து) அறிவுடைய மக்கட் பிறப்பாகப் பிறந்து அழகு, செல்வம், ஒழுக்கம், கடவுள் வழிபாடுகள் உடையவராக இருப்பது அரிதானதும் அருமையானதுமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe