சித்ரா பவுர்ணமியையொட்டி நினைத்தாலே முக்தி தரும் மலை திருவண்ணாமலையில் இரு ஆண்டுகளுக்குப்பின் இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அண்ணாமலையார் உண்ணாமலையம்மனை தரிசித்து செல்கின்றனர்.
12 மாதங்களில் வரும் பவுர்ணமிகளில் சித்ரா பவுர்ணமி முக்கியத்துவம் வாய்ந்ததாக பக்தர்களால் கருதப்படுகிறது.இன்றைய தினம் அக்னி திருத்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சென்று சாமி தரிசனம் செய்து கிரிவலம் செல்வது வாழ்வில் பல நல்ல பலன்களைத் தரும் என்று கூறப்படுகிறது. மேலும் சித்ரா பவுர்ணமி தினத்தில் சித்தர்கள் ஆசியும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாச்சல ஈஸ்வரர்
திருக்கோயில்.
எம்பெருமான் ஈசனே மலையாய்க் காட்சி தரும் தலம் என்றும், நினைத்தாலே முக்தி தரும் மலை என்றும் பக்தர்களால் போற்றப்படும் சிறப்புமிக்கது இந்தத் தலம். சிவபெருமான், அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையவளாகிய பார்வதிதேவிக்கு உடலில் சமபங்கு இடமளித்து அம்மையப்பனாய்க் காட்சித்தரும் தலமாகவும் திகழ்கிறது. 14 கி.மீ சுற்றுப்பாதையைக் கொண்ட இத்திருக்கோயிலில், அருணாச்சலேஸ்வரரை மனதில் நினைத்து, மனமுருக வேண்டி, இந்த மலையில் கிரிவலம் வருவது பக்தர்களிடையே சிறப்பாகப் பார்க்கப்படுகிறது.
இரே ஆண்டு கொரோனா வாட்டி எடுத்த நிலையில்
இந்த ஆண்டு தான் கிரிவலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கத்துக்கு அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று காலை திருவண்ணாமலை நகரம் பக்தர்களின் கூட்டத்தால் திணறியது.
அலைகடல் புகுந்தது போல் பக்தர்கள் கூட்டம் கண் கொள்ளா காட்சியாக இருந்தது. கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கிரிவலப் பாதையில் இடைவெளியின்றி பக்தர்கள் சென்று வருகின்றனர்.நாளை ஞாயிறு அதிகாலை வரை பக்தர்கள் சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்லலாம் என்பதால் திருவண்ணாமலை க்கு மிக அதிகளவில் பக்தர்கள் வந்து கிரிவலம் செல்கின்றனர்.





