கேட்கத் தூண்டிய எமன்; கேட்க மறுத்த நசிகேதஸ்!

Published:

rain and light - 2026

அழியும் உலகில் கிடைத்தற்கரிய காமங்கள் எவையெவை; அக்காமங்கள் அனைத்தையும்  விரும்பியபடி வேண்டிடுக

இப்பேரழகிகள் ரதங்கள் வாத்தியங்கள்  மானுடர்களால் நினைத்தற்கும் அரியவை உனக்கு வழங்கினேன்  இவற்றில் மகிழ்ந்து களித்திடுக நசிகேதா…
மரணத்தைப் பற்றிக் கேட்க வேண்டாம்.

நிலையற்றவை வீழ்பவை இவை  அந்தகனே  புலன்களின் ஒளியனைத்தையும் தேய்த்தழிப்பவை மேலும் வாழ்வோ மிகவும் குறுகியது ரதங்கள் உன்னிடமே இருக்கட்டும்  ஆடல்பாடல் உன்னிடமே இருக்கட்டும்.

– கட உபநிஷதம் 1.25-26

நமது வேதாந்த மரபில் முழுமையான விடுதலை வேட்கை என்பதன் சுடர்மிகும் ஆதர்சமாக நசிகேதன் என்ற இந்தச் சிறுவன் இருக்கிறான். அதனால் தான் மரண தேவனே அவனது ஞான குருவாக வந்தமைகிறான். ‘அபி ஸர்வம் ஜீவிதம் அல்பமேவ’ (மேலும் வாழ்வோ மிகவும் குறுகியது) என்ற வாசகத்தை உச்சரிக்கும் அந்த இளம் உதடுகளைக் கற்பனை செய்து பாருங்கள். என்ன ஒரு மகத்தான கதை, மகத்தான உரையாடல். சவரக்கத்தியின் நுனிபோல ஜ்வலிக்கும் இந்த ஞானத்தேடலே வேதாந்த தத்துவத்தின் அடித்தளம். அதன் பிரமிட்டும் தத்துவ அமைப்பும், சிக்கலான நேர்த்தியான நுட்பமான அறிதல்களும் கட்டமைக்கப் பட்டுள்ளது இந்த ஒரு தேவையை முன்வைத்துத் தான்.

ALSO READ:  இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

நீர்த் தொகுதிகள் வந்து விழுந்து
மேன்மேலும் நிரப்புதற்குரியதாகியும்
அசையாது நிலைகொண்டிருக்கும் கடல் போல,
காமங்கள் எவனுள் வந்து விழுகின்றனவோ
அவனே சாந்தியடைகிறான்
காமங்களைக் காமுறுபவன் அதனை அடையான். என்கிறது கீதை.

வேதாந்த விசாரத்திற்குள் நுழைவதற்கான தகுதியாக “ஸாதன சதுஷ்ட்யம்” எனப்படும் நான்கு பண்புகள் / மனப்பாங்குகள் கூறப்பட்டுள்ளன. ஆத்ம குணங்கள் என்றும் இவற்றைக் கூறுவது வழக்கம்.

1) விவேகம் – நிலையானதையும் நிலையற்றதையும் பிரித்துணரும் அறிவு

2) வைராக்கியம் – பற்றறுத்தல்

3) ஶமாதி ஷட்ஸம்பத் எனப்படும் ஆறு செல்வங்கள்: ஶமம் (அமைதி), த3மம் (புலனடக்கம்), திதிக்ஷா (ஞானத்தேடலில் பொறுமையுடன் கூடிய விடாமுயற்சி), உபரதி (உலக வியவகார நுகர்ச்சிகளை நிறுத்தல்), ஶ்ரத்3தா4 (சிரத்தை, அதாவது சாஸ்திரத்தின் மீதும் குருவின் மீதும் கொள்ளும் உறுதியான நம்பிக்கை) ஸமாதா4னம் (மனதை மெய்ப்பொருளில் ஒருநிலைப்படுத்துதல்)

4) முமுக்ஷுத்வம் – சம்சாரச் சுழலிலிருந்து விடுதலை பெறும் வேட்கை.

வேதாந்த நூல்களில் மீண்டும் மீண்டும் விரித்துப் பேசப்படும் இந்த ஆத்ம குணங்களின் மொத்த உருவமாக நசிகேதன் இருக்கிறான் என்பதை உபநிஷதத்தைக் கற்பவர்கள் உணர முடியும்.

ALSO READ:  புட்டுத் திருவிழாவுக்குப் புறப்பட்டார் பரங்குன்றம் சுப்பிரமணியர்!

அடிப்படையில் புலன் நுகர்ச்சிக்காவே அமைந்த ஆடல்பாடல் இங்கு நிராகரிக்கப் படுகிறது. ஆனால், புராணங்களிலும் பக்தி மரபுகளிலும் இதே இசையும் நடனமும் பக்தி வெளிப்பாட்டின் ஒரு பகுதியாக, மேற்கண்ட ஆத்ம குணங்களை வளர்த்துக் கொள்வதற்கான கருவிகளாக ஏற்றம் பெறுகின்றன. கலையின் உன்னதமாக்கம் என்பது இதுதான். இந்துமதத்தைத் தவிர வேறெங்கும் இவ்வளவு ஆழமாகவும், விரிவாகவும் இந்தக் கூறு வளர்த்தெடுக்கப் படவில்லை என்று கூறலாம்.

கிறிஸ்தவம், இஸ்லாம், யூதம் ஆகிய ஆபிகாமிய மதங்கள் தங்களது கருத்தாக்கத்தில் ஏழு வானங்களுக்கும் அப்பால் இருக்கும் சொர்க்கம், 72 கன்னியர்கள் கிளர்ச்சி தரும் சுவனம் என்றெல்லாம் உச்சபட்சமாகக் கற்பனை செய்யும் “சொர்க்க லோக” சமாசாரங்கள் இங்கு உபநிஷத பாலகனால் காக்கைக் கழிவு போல (காகவிஷ்டமிவ) இடது கையால் நிராகரிக்கப் படுகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும்.

ये ये कामा दुर्लभा मर्त्यलोके
सर्वान् कामाँश्छन्दतः प्रार्थयस्व .
इमा रामाः सरथाः सतूर्या
न हीदृशा लम्भनीया मनुष्यैः .
आभिर्मत्प्रत्ताभिः परिचारयस्व
नचिकेतो मरणं माऽनुप्राक्षीः .. २५..

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

श्वोभावा मर्त्यस्य यदन्तकैतत्
सर्वेंद्रियाणां जरयंति तेजः .
अपि सर्वं जीवितमल्पमेव
तवैव वाहास्तव नृत्यगीते .. २६..

आपूर्यमाणमचलप्रतिष्ठं
समुद्रमापः प्रविशन्ति यद्वत् ।
तद्वत्कामा यं प्रविशन्ति सर्वे
स शान्तिमाप्नोति न कामकामी ॥७०॥

கட்டுரை: ஜடாயு, பெங்களூரு

#வேதாந்தம் #ஞானம் #கீதை #உபநிஷதம் #அத்வைதம்#சங்கரர்

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img