#ஆசிரியர் வேலைநிறுத்தம் |Sri #APNSwami #Trending

Published:

WhatsApp Image 2018 12 30 at 9.13.30 AM 10 - 2026

  ஆசிரியர் வேலைநிறுத்தம்

    “உடனடியாக ஆசிரியர் பணிக்குத் திரும்ப வேண்டும்.   பிள்ளைகளின் எதிர்காலம் ஆசிரியர்களின் கைகளில்தான் உள்ளது.   வேலை நிறுத்தத்தில் ஆசிரியர்கள் ஈடுபடுவது சட்டத்திற்குப் புறம்பானது.   அரசாணையை மீறும் ஆசிரியர்கள் தண்டனைக்கு உள்ளாவார்கள்” என்று அசுரகுல வேந்தன் இரண்யகசிபு அரசாணை பிறப்பித்தான்.

     ஏன்?   என்னவாயிற்று?   பணி நிரந்தரம், ஓய்வூதியம், விடுமுறை அதிகரிப்பு, ஊதிய உயர்வு, அகவிலைப்படி இதுபோன்ற காரணங்களுக்காக பாடசாலை ஆசிரியர்கள் எவராவது போராட்டம் நடத்துகிறார்களா?

     இரண்யகசிபுவை எதிர்க்கும் துணிவு எவர்க்கும் கிடையாதே! பின் எதற்காக இந்த அரசாணை?

     விஷயம் இதுதான்…. இரண்யகசிபு, உக்ரமான தவம் செய்து ப்ரம்மதேவனை ஆராதித்தான்.   அகமகிழ்ந்த பிரமனும் விசித்ரமான வரமொன்றை அவனுக்கு அளித்தார்.   இதனால் கர்வம் கொண்ட அவன், தன்னை எதிர்ப்பவர் எவரும் இலர் என இறுமாந்தான்.   அகந்தையும், ஆணவமும் தலைதூக்கிய காரணத்தால், வேத நன்னெறியினை மறந்தான்.   வேதவொலி எங்கும் கேட்கக்கூடாது; எவரும் வைதிகமான காரியங்களைச் செய்யக் கூடாது என ஆணையிட்டான்.

     குறிப்பாகப் பாடசாலைகளில் வேதாத்யயனம் செய்விப்பதற்குப் பதிலாக, தனது சரித்ரத்தையும், தனது புகழையுமே பாடமாக போதிக்க வேண்டும் என்றான்.   ஆசிரியர்கள் சுதந்திரமாக மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை தயார் செய்யாமல், நாஸ்திகனான தனது பெருமை பேசுவதாகவே அட்டவணை தயாரிக்க நிர்பந்தம் செய்தான்.   இதனால் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியானது.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

     இரண்யகசிபுவின் அடக்குமுறைக்கு பயந்தும், காசுபணத்திற்கு ஆசைப்பட்டும் சண்டா, மர்கர் எனும் சில ஆசிரியர்கள் மட்டும் இதற்குக் கட்டுப்பட்டனர்.   ஏனென்றால், அவர்களுக்குத், தங்களின் வாழ்க்கை முக்யமே தவிர படிக்கும் பிள்ளைகளை குறித்து கவலைப்படவில்லை.

     ஆனால், மகரிஷி, மகாத்மா சுக்ராசார்யார், இந்த அரசாணையை எதிர்த்தார். “மாணவர்களுக்கு நன்னெறியை போதிக்க வேண்டுமேயன்றி நாஸ்திகனான மன்னனின் கதையை பாடமாக போதிக்க முடியாது” என வாதிட்டார்.

     வேதநெறியிலிருந்து விலகி மனம்போனபடி வாழும் மன்னனின் கொள்கையை மறுத்தார்.   “கவனிப்பும், கண்டிப்பும் இல்லாதுபோனால், மாணாக்கர்களின் மனோநிலை சிதைந்துவிடும். நாகரிகமற்ற பாடத்திட்டங்களை செயல்படுத்த இயலாது!” என துணிந்து பேசினார்.

     ஏனைய ஆசிரியர்கள், காசு பணத்திற்கு அடிமையாகி தங்களது கொள்கைகளை தனது காலடியில் சமர்ப்பித்து சரணாகதி செய்துள்ள போது, சுக்ராசார்யர் மட்டும் இதை எதிர்ப்பதை இரண்யனால் ஏற்க முடியவில்லை.

      அதனால்தான் இந்த அரசாணையை பிறப்பித்தார்.   தெய்வநிந்தனை செய்யும் அரசரிடம் கைகட்டி சேவகம் செய்வதை விரும்பாத சுக்ரர் தனது அரசுப்பணியை தூறந்தார்.   “சுக்ர நீதி சாஸ்த்ரம்” எனும் ஒப்புயர்வற்ற நூலினை இயற்றினார்.   தனது தனிப்பட்ட பங்களிப்பினால்,  சமூகத்திற்கு சிறந்த வழிகாண்பித்தார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

    அசுர குருவாகவிருந்தும் ஆத்மகுணம் கொண்ட மகாத்மா சுக்ராசார்யரைப் போற்றுவோம். அவர் காட்டிய வழி நடப்போம். அவரின் வேலை நிறுத்தம் மாணவர்களின் மேன்மைக்காகவே என்பதினை உணர்ந்திடுவோம்.

    இப்படி காசுக்காக விலைபோகும் ஆசிரியர்களை இனம் கண்டுகொண்டு, அவர்களை விடுத்து, நல்வழி காட்டும் நல்லாசிரியர்களையே நாம் நாடி, ஆத்ம ஜ்ஞானத்தைப் பெற வேண்டும் என்கிறார் சுவாமி தேசிகன்.

அன்புடன்

ஸ்ரீஏபிஎன் சுவாமி

Sri APN Swami.

இது போன்ற கட்டுரைகளைப் படிக்க…
https://apnswami.wordpress.comமேலும்… நாட்டு நடப்புகளுடன் சுவையான ஸம்ப்ரதாய விஷயங்களை அறிந்திட https://apnswami.wordpress.com/blogpages/
மற்றவர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்… உங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களையும் பதிவு செய்யுங்கள்…

Related articles

Recent articles

spot_img