“ஸ்ரீவித்யா மந்திரம் கேட்டு வந்த இளைஞனுக்கு ‘ஸ்ரீ’யே ‘வித்யை’ காட்டிவிட்டாள்!

Published:

“ஸ்ரீ வித்யா மந்திரம் கேட்டு வந்த வாலிபனுக்கு ‘ஸ்ரீ’யே (பெரியவா) ‘வித்யை’ (வித்தை) காட்டி விட்டாள்”

(ஆணவமாக வந்த வாலிபன்,பாலகனாக மனமகிழ்ச்சியுடன் சென்ற நிகழ்ச்சி)

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-122
தட்டச்சு-வரகூரான் நாராயணன்2a2e8509fd23bfc926c95dc57ee8f945 2 - 2026
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்

இளம் வயதுப் பையன். பழத்தட்டுடன் வந்து பவ்யமா நமஸ்காரம் செய்தான்.பெரியவாளுக்கு.

“நீங்கதான் என்னோட குரு” என்றான்.

ரொம்பப் பேர், அப்படி சொல்லிண்டிருக்கா!” உதடு பிரியாத புன்னகையுடன் பெரியவா.

“நான் அப்படியில்லே. உங்களைக் குருவாக வரித்து விட்டேன். எனக்கு ஸ்ரீ வித்யா ஷோடசி மந்த்ரம் உபதேசம் பண்ணணும். என்னைப் பரம சாக்தனாக ஆக்கணும். ஜான் வுட்ராஃபின் தந்திர நூல்களையெல்லாம் படிச்சு முடிச்சுட்டேன். Serpent Power எனக்கு நெட்டுருவே ஆயிடுத்து…”

பெரியவாள், நிதானமாகக் கேட்டார்கள்.;

“நீ இப்போ என்ன சாதனை பண்ணிண்டிருக்கே?”

“லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம், சௌந்தர்யலஹரி, மூக பஞ்சசதி,ஆனந்த ஸாகர ஸ்தவம்,சியாமளா தண்டகம்…”

“இதுபோறும்.அம்பாளைத் தியானம் செய்…”-பெரியவா

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.15 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

பையனுக்கு எரிச்சலாக வந்தது. சாக்தத்தில், தான் இவ்வளவு ஊறியிருந்தும் பெரியவா,மந்திரோபதேசம் செய்ய ஏன் மறுக்கிறார்? என்பது புரியவில்லை .தன்னைப்போன்று,தகுதி வாய்ந்த அபூர்வமான பாத்திரம் வெகு அருமையாகத்தானே கிடைக்கும்.

“பெரியவா எனக்குக் கட்டாயமா மந்திரோபதேசம் செய்யணும். அதற்காகவே நாள் பார்த்துக்கொண்டு இன்றைக்கு வந்திருக்கேன் உபதேசம்      பெறாமல் போகமாட்டேன்”என்றான் கடுமையான குரலில்.

பெரியவாள் சிறிது நேரம் மௌனமாக இருந்தார்கள்.

“உனக்குப் பசிக்கிறதா?”–பெரியவா

“இல்லே..”–பையன்

“பசி எடுத்தா என்னென்ன சாப்பிடுவே?”

“சாதம்,குழம்பு, கூட்டு,கறி, அவியல், அப்பளம்,ரசம்,மோர்..”

“உங்கம்மா, நீ பிறந்த அன்றைக்கே சாதம் போட்டாளா?”

“இல்லை. பால்தான் கொடுத்தா…”

“அப்புறம்,கொஞ்சம் கொஞ்சமா சாதத்தையும் பருப்பையும் வெழுமூணா பிசைஞ்சு ஊட்டினாள். அப்புறமா இட்லி, தோசை. சாம்பார், வெண்டைக்காய் கறி ,புடலங்காய்க் கூட்டு.. இப்படித்தானே?”–பெரியவா.

“ஆமாம்..”–பையன்.

“ஏன், அப்படிச் செய்தா? பொறந்த உடனேயே சாதம் ஊட்டியிருக்கலாமே?”–பெரியவா

“ஜீரணம் ஆகாது; குழந்தைகளுக்கு ஒத்துக்காது; கெடுதல் பண்ணும்…”–பையன்.

இடையில்,யார் யாருக்கோ பிரசாதம் கொடுத்தார்கள்; குறைகளைக் கேட்டு ஆறுதல் கூறினார்கள்; ஸ்ரீ மடம் அலுவல்களை உத்தரவிட்டார்கள். பின்னர், பையனைப் பார்த்தார்கள்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.16 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

“மந்திரங்களுக்கு ஜீவசக்தி உண்டு; கண்ணுக்குத் தெரியாத தெய்விக அலையாக தேகம் முழுவதும் பரவும். அதை, குழந்தைகளாலே தாங்கிக்க முடியாது.பால் குடிக்கிற அதே குழந்தை, தக்க வளர்ச்சி ஏற்பட்டதும் சாதம், சாம்பார் சாப்பிடும்.”–பெரியவா

“உனக்கு இப்போது பால பருவம்; பால் பருவம்; காத்திண்டிரு. சாதப் பருவம் வரும்.அப்போது உனக்குச் சாதம் ஊட்டுவதற்கு, ஒருவர் வந்து சேருவார்.”–பெரியவா.

ஸ்ரீ வித்யா மந்திரம் கேட்டு வந்த வாலிபனுக்கு ஸ்ரீ’யே (பெரியவா) ‘வித்யை’ (வித்தை) காட்டி விட்டாள்.

ஆணவமாக வந்த வாலிபன்,பாலகனாக மனமகிழ்ச்சியுடன் சென்றான்.

Related articles

Recent articles

spot_img