சுவாமி நம்மாழ்வாரின் திருவிருத்தத்தில் முதல் பாசுரம்
ஆழ்வார், நமக்காக வேண்டுகிறார். நம் இயல்பைச் சொல்லி, நம் நிலையைச் சொல்லி, நமக்காக இறைவனிடம் வேண்டும் ஆசார்யராக, குருவாக இவ்வாறு வேண்டுகிறார்.
“பொய்ந் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும், அழுக்கு உடம்பும்,
இந் நின்ற நீர்மை இனியாம் உறவாமை உயிர் அளிப்பான்
எந் நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய்! இமையோர் தலைவா
மெய்ந் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே”
“கடவுளைக் கண்டவன் எவன் இருக்கிறான்?” என்று நாத்திகம் பேசும் மக்கள் சிலர். “இத்தனை நாட்களாக கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்கி வருகிறேன். ஆனால் இன்னும் கடவுள் கண்ணைத் திறந்து பார்க்கவில்லை. என் கஷ்டத்தைப் போக்கவில்லை”” என்று புலம்புபவர் பலர். இவர்களுக்கு கோடிட்டுக் காட்டும் விதத்தில், இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார் ஆழ்வார்.
மனிதனிடம் பொய் நிறைந்த ஞானம் உள்ளது. பொல்லாத ஒழுக்கம் உள்ளது. நல்லொழுக்கம் அவனிடம் இல்லை. அழுக்கேறிய உடல்தான் உள்ளது. சுத்தமான உடல் இல்லை. – இப்படிப்பட்ட மனிதப் பிறவியை வைத்துக்கொண்டு கடவுளைக் காண இயலவில்லை. எனவே அவன் “கடவுள் இல்லை’ என்று சொல்வது எவ்வளவு அபத்தம்.
எனவேதான் ஆழ்வார், “வானவர்களின் தலைவனே! இறைவனே! உலகினைக் காத்து அருளும் நீ, பல வகைப் பிறப்புகளை எடுக்கிறாய். நாங்களோ பொய்யே நிலைபெற்ற அறிவும் (ஞானமும்), தீய நடத்தையும், அழுக்குப் பதிந்த உடம்பும் கொண்ட மனிதப் பிறவியில் உழல்கிறோம். இப்படிப்பட்ட பிறவி அமையாதபடி நீதான் அருள வேண்டும்” என்று வேண்டுகிறார்.
டி.வி.க்களில் தோன்றும், அல்லது மேடைகளில் பேசும் சில சாமியார்களைப் பார்த்திருக்கிறேன்… நானே கடவுள் என்பது போல் பேசுவார்கள்… ஆனால் அப்படி நாம் தொடர்புபடுத்த முடியுமா? அதனால்தான் ஆழ்வார் ஒப்பிடுகிறார்… பெருமானின் பெருமை என்னே…! நம் சிறுமை என்னே… ! என்று.
இந்தப் பாசுரத்தில், மாபெரும் தவ யோகியான நம் ஆழ்வார், தன்னையும் இந்த மனிதக் கூட்டத்தில் ஒருவராக இருத்தி, பெருமானிடம் நமக்காக பிரார்த்தனையை நடத்துகிறார்…
நித்யசூரிகளின் தலைவனே.. உலகத்து உயிர்களைக் காக்க நீயே விருப்பமுடன் பலவகைப் பிறப்புகளை எடுக்கிறாய்… ஆனால் நாங்களோ பொய்யே நிலை பெற்ற அறிவு பெற்றிருக்கிறோம். தீய நடத்தை கொண்டுள்ளோம். அழுக்கு பதிந்த உடம்பைப் பெற்று மனிதப் பிறவியில் அழுந்தியுள்ளோம். இவ்வாறு நாங்கள் பிறவி அடையாதபடி, நீயே அருள் செய்ய வேண்டும். அடியேனின் இந்த விண்ணப்பத்தை செவி சாய்த்து அருள்வாய் பெருமானே…! என்று நமக்காக விண்ணப்பம் செய்கிறார்.